சமுத்திரன்
May2017
தனது அணியைச் சேர்ந்த நாடுகளின் செலவில் தனது மேலாதிக்க நலன்களுக்காகச் சில குறிப்பிட்ட நாடுகள் மீது ஆக்கிரமிப்பு யுத்தங்களைத் தொடுக்கும் ஒரு உபாயத்தைத் திறனுடன் கையாண்டு வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்தத் திட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்காளிகளாயிருக்கும் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுடன், ஜப்பான், தென் கொரியா, தைவான், அவுஸ்திரேலியா மற்றும் குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகளும் அடங்கும். அமெரிக்காவிற்கும் இந்த நாடுகளுக்குமிடையிலான உறவுகளின் ஒரு பரிமாணம் அந்த நாட்டின் அரசாங்கம் இவற்றிடமிருந்து தொடர்ச்சியாகப் பெறும் கடன்களாகும். அமெரிக்க அரசின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடனுக்கும் அதன் இராணுவ மற்றும் போர்ச் செலவுகளுக்கும் நெருங்கிய உறவு இருப்பதை நீண்டகாலப் புள்ளிவிபர ஆதாரங்களுடன் ஆய்வுகள் காட்டியுள்ளன. அமெரிக்கா உலகரீதியில் பாரிய போர் இயந்திரத்தைக் கொண்டுள்ளது. எழுபது நாடுகளில் 800 மேற்பட்ட இராணுவத் தளங்களை வைத்திருக்கிறது. இவற்றின் பராமரிப்பும் அபிவிருத்தியும், ஆக்கிரமிப்பு யுத்தங்களும் பெருஞ் செலவுகளுக்கான காரணங்கள். நீண்ட காலமாக அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை (trade deficit) ஒரு பிரச்சனை. வெளிநாட்டுக் கடனை அமெரிக்க அரசாங்கம் தனது திறைசேரிப் பிணைமுறிப் பத்திரங்களை (US Treasury Bonds ஐ) அமெரிக்க டொலர்களைப் பெருமளவில் வைத்திருக்கும் நாடுகளுக்கு விற்பதன் மூலம் பெறுகிறது. தனது நாட்டுச் செலாவணியிலேயே சுலபமாகக் கடன் பெறுவதும் அதைத் திருப்பிக் கொடுப்பது பற்றி அலட்டிக் கொள்ளாதிருப்பதும் அமெரிக்காவின் வரப்பிரசாதம் போலும். அமெரிக்க டொலரின் உலக நாணய அந்தஸ்து அமெரிக்காவிற்கு மற்ற நாடுகளின் மத்திய வங்கிகள்மீது செல்வாக்குச் செலுத்தும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. சமீப காலங்களில், உலக அரங்கில் அமெரிக்க வல்லரசுடன் போட்டி போடும் எழுந்துவரும் வல்லரசான சீனாவும் பெருமளவில் அமெரிக்க பிணைமுறிப் பத்திரங்களை வாங்கிவருகிறது. ஆனால் சீன-அமெரிக்க உறவு வேறுவகையானது. இது பற்றிப் பின்னர்.
பொருளாதார பலம் மிக்க கடன் கொடுக்கும் நாடாக இருந்து பின்னர் கடன் வாங்கும் நாடாக மாறியபோதும் பெற்ற கடனைத் திருப்பிக் கொடுப்பதில் அக்கறையின்றித் தொடர்ந்தும் கடன் வாங்கித் தனது ஏகாதிபத்திய அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அமெரிக்க அரசின் போக்கினைக் ‘கடன் ஏகாதிபத்தியம்’ (debt imperialism) என அழைக்கிறார் அந்த நாட்டின் பொருளியலாளர் மைக்கேல் ஹட்சன் (Michael Hudson). அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ‘மாஏகாதிபத்தியம்’ (super imperialism) எனப் பெயர் சூட்டியுள்ளார்.[i] இரண்டாம் உலகப் போருக்குப்பின் இந்தோசீனத்தில், மத்திய கிழக்கில் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் நடத்திய அல்லது நடத்தும் யுத்தங்கள் எல்லாமே அமெரிக்க அரசைக் கடனாளி அரசாக்கியுள்ளன. ஆயினும் நாட்டின் உயர் செல்வந்த அந்தஸ்து, உலகரீதியான இராணுவ அதிகாரம், பல நாடுகளுடன் செய்துள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள், பல்பக்க நிறுவனங்கள் (உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக ஸ்தாபனம், ஐ. நா. சபை) மீதான ஆதிக்கம், மற்றும் அமெரிக்க டொலரே மிகச் செல்வாக்குமிக்க உலக நாணயம் எனும் அந்தஸ்து ஆகியவற்றால் தனது வல்லரசு ஸ்தானத்தைத் தொடர்ந்தும் பல பிரயத்தனங்களுக் கூடாகத் தக்கவைத்துக் கொள்கிறது அமெரிக்கா.
அமெரிக்கா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படுதோல்வியைத் தழுவிக்கொண்ட வியட்நாம் யுத்தம் பற்றிப் பலருக்கு – குறிப்பாக எனது சந்ததியினருக்கு – நினைவிருக்கலாம். 1955 பிற்பகுதியிலிருந்து 1975 நாலாம் மாதத்தின் இறுதிவரை தொடர்ந்த இந்தப் போர் வியட்நாமை மட்டுமன்றி அதன் அண்டை நாடுகளான லாஓஸ் மற்றும் கம்போடியாவையும் உள்ளடக்கியது. இந்த நீண்ட இந்தோசீனப் போரின் செலவினால் அமெரிக்க மாவல்லரசு கடனாளியாகியது. அமெரிக்க பொருளாதாரத்தின் சென்மதி நிலுவையில் (balance of paymentல்) பெரிய விழுக்காடு தொடர்ச்சியான ஒரு பிரச்சனையாயிற்று.[ii] அந்த நாட்டின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்கும் நோக்கில் 1971 எட்டாம் மாதம் 15ம் திகதி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் உலகை அதிர்ச்சியிலாழ்த்தும் ஒரு முடிவினை அறிவித்தார். வெளிநாடுகளில் வைப்பிலிருக்கும் அமெரிக்க டொலர்களைத் இனிமேல் தங்கமாகப் பரிமாற்றம் செய்யமுடியாது என்பதுதான் அந்த அறிவிப்பு. அந்த எதிர்பாராத முடிவு 1930 களிலிருந்து சர்வதேச அங்கீகாரத்துடன் நடைமுறையிலிருந்து வந்த அமெரிக்க டொலருக்கும் தங்கத் தராதரத்திற்கும் (Gold Standard) இருந்த இணைப்பைத் துண்டித்தது. இதற்குப் பின்னர் வெளிநாட்டு மத்திய வங்கிகள் தமது டொலர்களை அமெரிக்க திறைசேரிக் கடன் பத்திரங்களுடனேயே பரிமாற்றம் செய்யும் நிலை ஏற்பட்டது. சென்மதி நிலுவை விழுக்காடுக்கூடாக இழந்த டொலர்களை அமெரிக்கா மீட்க இது உதவுகிறது. மறுபுறம் ஏற்றுமதியின் வளர்ச்சியால் கிடைக்கும் வர்த்தக உபரியை மற்றைய நாடுகள் (அவற்றின் மத்திய வங்கிகள்) அமெரிக்கத் திறைசேரிப் பிணைமுறிப் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இது அமெரிக்க அரசுக்கும் மற்றய அரசுகளுக்குமிடையிலான நிதிரீதியான பரிவர்த்தனையாகும். மைக்கேல் ஹட்சனின் கருத்தில் இந்த உறவு அமெரிக்க அரசாங்கம் மற்ற அரசாங்கங்களைச் சுரண்டும் உறவாகும். அவர் இந்த ஏகாதிபத்தியத்தை தனியார் கூட்டுத்தாபனங்களுக்கூடான ஏகாதிபத்திய பொருளாதார உறவிலிருந்து வேறுபடுத்துகிறார். இன்றைய ஏகாதிபத்தியம் பற்றி வேறு விளக்கங்களுமுள்ளன.[iii]
அமெரிக்காவிற்குப் பெருமளவில் கடன் வழங்கிய நாடுகளில் ஜப்பானும் தென் கொரியாவும் அடங்கும். இரண்டாம் உலகப் போருக்குப்பின், பனிப்போர் (அல்லது நிழற்போர்) காலகட்டத்தில், இவ்விரு நாட்டு ஆட்சியாளர்களும் அமெரிக்காவின் அரசியல்-இராணுவரீதியான ஆதிக்கத்தை ஏற்று அந்த மாவல்லரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. ஜப்பான் போரில் தோல்வியடைந்து அமெரிக்காவிடம் சரணடைந்து அந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தனது கொலொனிகளாயிருந்த கொரியா, மற்றும் தைவான், மஞ்சு போன்ற சீனாவின் பகுதிகளை இழந்தது. அத்துடன் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் வரலாறு முடிவுக்கு வந்தது. உலகப் போரின் முடிவுக்குப்பின் இடம்பெற்ற கொரியப் போர் அந்த நாட்டின் பிரிவினையில் முடிந்தது. வட கொரியா ´சோஷலிச´ முகாமிலும் தென் கொரியா அமெரிக்க முகாமிலும் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக ஜப்பானிலும் கொரியாவிலும் பல பெரிய அமெரிக்க இராணுவத் தளங்கள் இன்றும் உள்ளன. அமெரிக்காவைத் தமது காவலனாக ஏற்று துரித முதலாளித்துவப் பொருளாதார விருத்திக்கூடாக செல்வந்த நாடுகளாகிவிட்ட இவ்விரு நாடுகளும் அந்தநாட்டுக்கு தாம் கொடுத்த கடனைத் தமது இராணுவரீதியான பாதுகாப்பினை மேலும் உறுதி செய்யும் ஒரு உபாயமாகக் கருதக்கூடும். இது உண்மையில் கடனா அல்லது அமெரிக்க வல்லரசு பெற்றுக் கொள்ளும் பாதுகாப்புப் பணமா? மறுபுறம் பொதுமக்களின் எதிர்ப்புக்கும் மத்தியில் அமெரிக்க இராணுவத் தளங்களைத் தொடர்ந்தும் இருக்க அனுமதிப்பது இந்த அரசாங்கங்களுக்கு அமெரிக்காவுடன் பேரம்பேசும் பலத்தைக் கொடுக்கிறது. அத்துடன் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் இவை விரும்பமாட்டா. ஏனெனில் அவற்றின் உயர் பெறுமதி ஏற்றுமதிகளின் ஒரு முக்கிய சந்தை அமெரிக்காவாகும். இந்த ஏற்றுமதிகளுக்கூடாக இவற்றின் உபரி டொலர்களும் வளர்ந்துள்ளன. இங்கு ஜப்பான், தென்கொரியா பற்றிக்கூறியது தாய்வானுக்கும் பொருந்தும். சீனப்புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து சியாங்கை ஷேக்கும் அவரது கோமின்டாங்க் கட்சியினரும் தைவான் தீவுக்குத் தப்பியோடி அங்கே அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி அமைத்தனர். ஆகவே ஜப்பான், தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய மூன்றும் அமெரிக்காவின் கொம்யூனிச எதிர்ப்புக் கூட்டின் கிழக்காசிய அரண்களாயின. நிழற்போர் (பனிப்போர்) முடிந்த பின்னரும் இந்த நாடுகள் பாதுகாப்பெனும் பெயரில் அமெரிக்காவிலேயே தங்கியுள்ளன. ஒரு வல்லரசாகச் சீனா துரிதமாக எழுச்சிபெறுவது இந்த தங்கிநிற்பினை மேலும் வலுவூட்டியுள்ளது போல் படுகிறது.
இன்று கிழக்காசியாவில் இரு கொரியாக்களுக்கு மிடையைலான முரண்பாட்டையும் அதில் அமெரிக்காவின் பங்கினையும் புரிந்து கொள்ள இந்தப் பின்னணியைப் புரிந்து கொள்ளல் அவசியமாகும். வடகொரிய அரசமைப்பும் அதன் தலைமையும் பிரச்சனைக்குரியவை. அந்த அமைப்பு சோஷலிச அமைப்பல்ல. ஆயினும் அந்தப் பிராந்தியத்தின் சிக்கலுக்கு ஒரு வரலாறுண்டு. இரு கொரியாக்களும் அமைதியான வழியில் தமது பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாதிருப்பதற்கு இந்த வரலாறும் அமெரிக்காவின் ஆதிக்கப்போக்கிலான தலையீடும் பெரும் தடைகளாயுள்ளன. இன்றைய அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒரு புதிய போர் தேவைப் படலாம் ஆனால் அமெரிக்காவின் துணைநாடுகள் அதற்குத் தயாராயில்லை. அவை அனுபவத்திற்கூடாகச் சில கசப்பான பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளன போல் படுகிறது.
அமெரிக்க அரசு கடனுக்கூடாகப் பெறும் டொலர்கள் அதன் செலவுக்கான பற்றாக்குறையை நிரப்ப உதவும் அதேவேளை அதன் பாதுகாப்பு, மற்றும் நேரடி ஆக்கிரமிப்புத் தொடர்பான செலவுகள் அந்த நாட்டின் தனியார் கூட்டுத்தாபனங்களுக்குப் பெரும் இலாபம் தரும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கின்றன. அத்துடன் அமெரிக்க அரசு தனது பிராந்திய அரசியல் நலன்களுக்கேற்ப வளர்முக நாடுகளுக்குக் கடன் மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குகிறது.
அமெரிக்க டொலரே உலக நாணயமாக அரசோச்சுகிறது. பின்னர் வந்த யூரோ (Euro) வால் இதுவரை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு முன்னேற முடியவில்லை. ஆசியாவிலிருந்தும் இன்னும் டொலருக்கு ஒரு மாற்று நாணயம் சர்வதேசரீதியில் எழவில்லை. ஆனால் அமெரிக்காவின் உலகரீதியான இராணுவ பலமும் அதிகாரமும் வீழ்ச்சியடையும் போது இந்த நிலை மாறும். அப்போது அந்த நாடு பெற்ற கடன்களை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறது எனும் கேள்வியும் எழும்.
கடன் பொறிகளில் சிக்கித்தவிக்கும் நாடுகளும் அமெரிக்காவும்
இன்றைய உலகில் செல்வந்த நாடுகள் சுலபமாகக் கடன் பெறுகின்றன. செல்வந்தருக்குக் கடன் கொடுக்க வங்கிகள் போட்டி போடுவது போல் செல்வந்த நாடுகளுக்குக் கடன் வழங்க நாடுகள், வங்கிகள், செல்வந்தர்களான தனிமனிதர்கள் தயங்குவதில்லை. கிரேக்கமும் அமெரிக்காவும் கடனாளி நாடுகள் ஆனால் முன்னையது பொருளாதார வீழ்ச்சியில், கடன் பொறிக்குள் அவஸ்தைப் படுகிறது, மேலும் கடன் பெறும் ஆற்றலற்ற நாடாகக் கணிக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனாலும், சர்வதேச நாணய நிதியத்தாலும் தொடர்ந்து மிரட்டப்படுகிறது. அமெரிக்கா பாரிய பொருளாதாரச் சிக்கலால் பாதிக்கப்பட்டதாயினும் அதற்கு வெளிநாட்டுக் கடன் பெறுவதில் பிரச்சனையில்லை.
தான் பெற்ற கடன்களைத் திருப்பிக் கட்டும் அழுத்தங்களின்றி இருக்கும் அமெரிக்கா சர்வதேசக் கடன் பளுவில் அகப்பட்டுள்ள வளர்முக நாடுகள் தமது கடன்களைத் திருப்பிக் கொடுக்கவேண்டுமெனப் பலவழிகளால் நிர்ப்பந்திகிறது. இது அமெரிக்காவின் வழமையான இரட்டை நியமம். விசேடமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற நிறுவனங்களுக்கூடாக இத்தகைய அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது. இந்த நிறுவனங்கள், விசேடமாக IMF, கடன் பொறிக்குள் மாட்டிக் கொண்ட வளர்முக நாடுகளுக்கு மிகவும் இறுக்கமான நிபந்தனைகளுடன் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் கொள்கையைக் கொண்டுள்ளன. இந்த நிபந்தனைகள் பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டிருப்பினும் பல பாதகமான சமூக விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இது பல நாடுகளின் அனுபவம்.
சமீப காலங்களில் இலங்கை உட்படப் பல வளர்முக நாடுகள் சீனாவிடம் பெருமளவில் கடன் பெறுகின்றன. இதிலும் பல பிரச்சனைகள். மறுபுறம் சீனா தனது பொருளாதாரத்தில் ஏற்றுமதிக்கூடாகக் குவியும் உபரி டொலர்களை மத்திய வங்கிக்கூடாகத் தேசிய நாணயத்தைப் (renminbi ஐப்) பயன்படுத்திக் கொள்வனவு செய்து அமெரிக்க பிணைமுறிப் பத்திரங்களில் பெரிய அளவில் முதலீடு செய்கிறது. இந்த வழிக்கூடாக renminbi ன் பெறுமதி மிதமிஞ்சி ஏறாதவாறு பார்த்துக் கொள்கிறது. அப்படி ஏறவிடுவது சீனாவின் ஏற்றுமதிப் பண்டங்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும். இது சர்வதேச ஏற்றுமதிச் சந்தைப் போட்டியில் சாதகமானதல்ல. சீனாவின் உயர் பெறுமதி ஏற்றுமதிகளின் பிரதான சந்தைகளில் அமெரிக்கா முக்கியமான இடத்தை வகிக்கிறது. எழுந்து வரும் வல்லரசுகளில் ஒன்றான சீனா வளர்முக நாடுகளுக்குக் கடன் வழங்கும் கொள்கையின் அரசியல் வேறாக ஆராயப்படவேண்டிய விடயம்.
[i] இதுபற்றி ஹட்சன் பல நூல்களையும் கட்டுரைகளையும் 1972 லிருந்து இன்றுவரை எழுதிவந்துள்ளார். இந்தக் கட்டுரைக்குப் பின்வரும் நூல் உதவியுள்ளது. Hudson, Michael, 2003, Super Imperialism – The origins and fundamentals of US world dominance, Pluto Press. இந்த நூல் 1972 அவர் எழுதிய நூலின் புதிப்பிக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட பதிப்பு ஆகும். ஹட்சனின் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்த வேறு ஆய்வுகளில் பின்வரும் நூல் அமெரிக்காவின் கடனுக்கும் அதன் சர்வதேச ஆதிக்கத்திற்குமிடையிலான உறவுகள் பற்றிக் கூறுகிறது. David Graeber, 2014, Debt The First 5000 Years, Melville House Publishing. இந்த நூல் கடனின் வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களை மானிடவியல் நோக்கில் அணுகுகிறது.
[ii] இந்தப் பிரச்சனை இரண்டாம் உலகப் போருக்குபின் வந்த கொரியப்போரின் போதே இருந்தது என ஹட்சனின் ஆய்வு காட்டுகிறது (Hudson, 2003)
[iii] உதாரணமாக – David Harveyன் பின்வரும் நூல்கள், 2005, The New Imperialism, Oxford University Press. 2005, A Brief History of Neoliberalism, Oxford University Press. 2010, The Enigma of Capital and the Crises of Capitalism, Profile Books. 2014, Seventeen Contradictions and the End of Capitalism, Oxford University Press.