இலங்கை தேசிய இனப் பிரச்சனை ஏதிர்காலம் பற்றிய மீள்சிந்திப்பு – சில குறிப்புகள்

சமுத்திரன்

12 09 2020 Zoom கலந்துரையாடல் – Notes

 கடந்த பல தசாப்தங்களாகப் பல காரணங்களால் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை மாற்றங்களைக் கண்டுள்ளது என்பதால் அதை ஆழ ஆராய்ந்து எதிர்கால நோக்கில் மீள்சட்டகமாக்குவது பற்றிய கருத்தாடல்களின் தேவையை நாம் உணர்கிறோம். தற்போது விசேடமாக கடந்த பொதுத்தேர்தலின் முடிவுகளின் பின் தாயக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகங்களில் இலங்கை வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் நிலவரம் பற்றிய உரையாடல்களும் விவாதங்களும் உத்வேகம் பெற்றுள்ளன போல் தெரிகிறது. வடக்கு கிழக்கில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதற்கு மாற்றாகத் தம்மைத் தீவிர தமிழ்த்தேசியவாதிகளாகக் காட்டிக்கொண்டோரின் கட்சிகள் சில ஆசனங்களைப் பெற்றுள்ள போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய இழப்பின் எதிர்ப்பக்கத்தில் இலாபம் பெற்றவர்கள் கடும் பேரினவாதக் கொள்கையின் அடிப்படையில் தெற்கிலே பெரு வெற்றியைப் பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜனப் பெரமுனவிற்குச் சார்பான தமிழ் வேட்பாளர்களே.  

தேர்தலில் தமிழ் வாக்காளரின் கணிசமான பகுதியினரின் தேர்வுகள் தமிழ்த் தேசியவாதிகளுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளன. வடக்கிலும் கிழக்கிலும்  ஒரு பகுதித் தமிழர்கள் ‘அபிவிருத்தி வாக்குறுதிகளையும்’ ‘சலுகை அரசியலையும்’ நம்பித் ‘தமிழ்த் தேசியத்திற்கு’ முன்னுரிமைக் கொடுக்கத் தவறிவிட்டார்கள் எனத் தமிழ்த் தேசியவாதிகள் ஆதங்கப்படுகிறார்கள் போல் தெரிகிறது. இது ஒரு எதிர்காலப் போக்கின் ஆரம்பத்தின் குறிகாட்டியா எனும் ஏக்கமும் இந்த ஆதங்கத்திற்கு உரமூட்டலாம். இதனால் உந்தப்படும் உரையாடல்கள் நீண்டகாலமாக தமிழ் சமூகத்தில் மேலாட்சி செலுத்திவரும் தமிழ்த் தேசியவாதக் கதையாடல் கட்டமைப்பின் குறுகிய அரசியல் தளத்தில் உணர்ச்சிகள் மிகுந்த மேலோட்டமான பார்வைகளுக்கப்பால் செல்வதாகத் தெரியவில்லை. 

ஆயினும் இன்றைய தாயகத்தின் அரசியல் நிலைமை தேசிய இனப் பிரச்சனை பற்றியும் நீண்டகாலமாகத் தமிழ் சமூகத்தில் மேலாட்சி செலுத்தும் தமிழ் தேசியவாதம் பற்றியும் ஆழமான கலந்துரையாடல்களுக்கும் விவாதங்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தவகையில் இன்றைய கருத்தமர்வு ஒரு ஆரம்பமே. ஒரு அமர்வில் அலசி ஆராய்ந்து முடிவுக்கு வரக்கூடிய விடயமல்ல இது.

இலங்கை தேசிய இனப்பிரச்சனை / ஏதிர்காலம் பற்றிய மீள்சிந்திப்பு எனும் தலைப்பில் சில முக்கியமான ஒன்றோடொன்று தொடர்புள்ள விடயங்கள் பற்றிய ஒரு முதற்கட்டக் கலந்துரையாடலைச் செய்வதே இந்த அமர்வின் பிரதான நோக்கம். இங்கு தரப்பட்டுள்ள எல்லா விடயங்களையும் இந்த ஒரு அமர்வில் ஆழ ஆராயமுடியாது.

  • உள்நாட்டுப் போரும் போருக்குப்பிந்திய தசாப்தமும்
  • உலகமயமாக்கலின் தாக்கம்
  • பிராந்திய அரசியல்
  • சிறுபான்மை இனங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
  • அரசியல் தீர்வின் சாத்தியக்கூறுகள்

இன்றைய அமர்வில் உள்நாட்டுப்போரும் போருக்குப்பிந்திய தசாப்தமும் பற்றிக் கலந்துரையாடுவது ஒரு ஆரம்பமாக இருக்கும். இதை நாம் செய்யும்போது மற்றைய விடயங்களுடன் தொடர்புடைய கருத்துக்களும் வெளிவரலாம். போருக்குப் பிந்திய காலத்தின் அரசியல் மற்றும் சமூக, பொருளாதார போக்குகள் பற்றிப் பார்ப்பது அவசியம். தேசிய இனப்பிரச்சனையின் மீள்சிந்திப்புக்கும் அதற்கூடாக அதன் மீள்சட்டகமாக்கலுக்கு உதவக்கூடிய வகையிலும் நமது கருத்துப் பரிமாறல் அமையும் என எதிர்பார்க்கிறோம்.

சில சிறு குறிப்புகளுடன் இன்றைய கலந்துரையாடலை ஆரம்பித்து வைக்க விரும்புகிறேன்.

சில முக்கியமான தகவல்கள்:

  • கடந்த நான்கு தசாப்தங்களில் – குறிப்பாக உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் – இலங்கை அரசின் பேரினமயமாக்கல், அதாவது ethnocratisation, இனத்துவ மேலாதிக்கமயமாக்கல், தீவிரமாக ஆழமாக்கப்பட்டுள்ளது.
    • அரசின் இராணுவமயமாக்கல் நிரந்தரமாகியுள்ளது. இதன் நேரடித் தாக்கத்தை வடக்கு, கிழக்கில் காணலாம்.
    • அதிகாரவாதத்தின் பலமூட்டல்
    • 20ஆவது யாப்புத் திருத்தம் / ஜனாதிபதியைச் சர்வ அதிகாரமுடையவராக்குகிறது
    • புதிய யாப்புக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன
  • வடக்கு, கிழக்கின் சனத்தொகையியல் மாற்றங்கள் தொடர்கின்றன 
  • போருக்குப்பின் வடக்கு-கிழக்கு தமிழ் சமூகம் போருக்கு முன்னர் இருந்ததைவிட அரசியல்ரீதியில் பலவீனமாக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்தப் போக்குத் தொடரும் அறிகுறிகள் பலமாகத் தெரிகின்றன.
  • இன்றைய இலங்கையின் அரசியல் அமைப்பில் இனரீதியில் பாதிக்கப்படும் சமூகங்களாக வடக்கு கிழக்கில் தமிழர் மற்றும் முஸ்லிம்கள், மலையகத் தமிழர் மற்றும் தெற்கிலே வாழும் தமிழ் பேசும் மக்களை இனங்காணலாம்.  இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை அணுகும்போது இந்த யதார்த்தத்தைத் தவிர்க்கமுடியாது. 

இவற்றை மனதில் கொண்டு –

வடக்கு, கிழக்கு நிலைமைகளைச் சற்று ஆழமாகப் பார்ப்போம் (இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை, போருக்குபின்னான நிலமைகள் தொடர்பான எனது கட்டுரைகளை இந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்samuthran.net)

  • தேசிய இனப்பிரச்சனை உள்நாட்டுப் போராக மாறியதற்குக் காரணிகள் இருந்தன. அதே போன்று 30 வருடப் போரினால் பல விளைவுகள் ஏற்பட்டன. இந்த விளைவுகள் போரின் காரணிச் சங்கிலியுடன் (causal chain உடன்) பின்னூட்டப் போக்கினால் (feedback process) இணைந்தன. விளைவுகளும் காரணிகளாகும் போக்குத் தொடர்ந்தது, இன்றும் தொடர்கிறது. இந்த காரணி -விளைவு இருவழித் தொடர்பும் பின்னூட்டமும்  (cause-consequence interaction and feedback) பல கட்டங்களுக்கூடாக தேசிய இனப்பிரச்சனைக்குப் புதிய அம்சங்களைச் சேர்க்கிறது. இப்படியாக தேசியப் இனப் பிரச்சனை போர்க்காலத்தின் பல்வேறு போக்குகளின் முரண்பாடுகளினால் அரசியல் பொருளாதார, இனத்துவப்புவியியல்ரீதியில், கலாச்சார மற்றும் இவற்றுடன் தொடர்புள்ள பல்வேறு அம்சங்களில்  மாற்றங்களுக்குள்ளாகிறது. இதனால் தேசிய இனப்பிரச்சனை தன்மைரீதியான மாற்றங்களைக் கண்டுள்ளது எனக் கருதலாமா?  (எனது அபிப்பிராயத்தில் தேசிய இனப்பிரச்சனை தன்மைரீதியான மாற்றங்களைக் கண்டுள்ளது.)
  • விளைவுகளை நான் பட்டியலிடத் தேவையில்லை ஆயினும் சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறேன்:வாழ்வாதார அழிவுகள்,  இடப்பெயர்வுகள் (not always unintended, often deliberately, carried out by both the state´s military and the LTTE) நிரந்தரமான புலப்பெயர்வுகள் (internal and international ), வடக்குக் கிழக்கின் போர்பொருளாதாரம், புலப்பெயர்வுடன் வந்த காசாதாரப் பொருளாதாரமும் அதன் விளைவுகளும், நீண்டகாலமாக முகாம்களில் / மனிதாபிமான உதவியில் தங்கியிருத்தல் / சந்ததிகளையும் ஊடறுக்கும் இடப்பெயர்வு வாழ்க்கையும் சமூக விளிம்புமயமாக்கல் /
  • போர்க்காலத்துக்கு முன்பிருந்தே  தொடரும்  குடியேற்றத் திட்டங்கள்
  • ´காரணிச் சங்கிலி – விளைவுகளின்´ இயங்கியல் பற்றி மேலும் தொடரமுன் இன்று தாயகத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் ஒரு விடயம் பற்றி ஒரு அவதானிப்பு.

கடந்த நான்கு தசாப்தங்களாகப் போரின் சமூக, பொருளாதார, மனிதப் பாதுகாப்புரீதியான விளைவுகள் எப்போதும் முக்கியத்துவம் பெற்றபோதும் இவற்றைத் தற்காலிக மனிதாபிமான அவசரகாலப் பிரச்சனைகளாகப் பார்க்கும் போக்கும் நடைமுறையுமே மேலோங்கிய நிலையில் தொடர்ந்துள்ளது. இதில் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் பிரதான பங்கினை வகித்து வந்துள்ளன. இங்கு ஒரு முக்கியமான யதார்த்ததைப் புரிந்து கொள்ளவேண்டும். கடந்த நான்கு தசாப்தங்களாக அதாவது போர்க்காலத்திற்கும் அதற்குப் பின்னரும் வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தில் ஒரு பகுதியினர் பல்வேறு அவலங்களால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரப் பாதுகாப்பின்மை (livelihood insecurity), மற்றும் மனித மேம்பாட்டுச் சந்தர்ப்பங்களின்மை ஆகியவற்றினால் தொடர்ச்சியாக இன்னலுக்குள்ளாகியுள்ளனர். இந்த மக்களில் விளிம்புநிலையில் வாழ்பவர்கள் மட்டுமன்றி கீழ்நடுத்தர மட்டத்தினர் எனக் கருதப்படுவோரும் சமூக நகர்ச்சிச் சந்தர்ப்பங்களற்ற நிலையிலுள்ள மற்றயோரும் அடங்குவர். போருக்குப் பின்னர் இந்த மக்களின் நிலைமைகள் பற்றி விசேடமாக பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் பிரச்சனைகள் பற்றிச் சில ஆய்வறிக்கைகள் வெளிவந்துள்ளன.

போருக்குப்பின் வடக்கில் மக்கள் நலனுக்குப் பாதகமான நிதிமயமாக்கல் துரிதமாக இடம்பெற்றது என்பதை மறுக்கமுடியாது. இன்றைய நவதாராள உலகில் வறியவர்களைப் பொறுத்தவரையில் நுண்கடன் என்பது சமூகப் பாதுகாப்புவலையின் ஆபத்துமிக்க பிரதியீடாகும் (அதாவது நவதாராளப் பொருளாதாரக் கொள்கையின் விளைவான சமூகப்பாதுகாப்பற்ற நிலைமைகளில்). ஏனெனில் அது வறியோரை மேலும் நலிவுக்குள்ளாக்கும் நுண்கடன் எனப் பெயரிடப்பட்ட கடன்பொறிக்குள் இட்டுச் செல்கிறது,  இந்த ஆபத்துப் பலரைத் தற்கொலைக்குத் தள்ளுமளவிற்குப் பயங்கரமானது என்பதையும் கண்டுள்ளோம்.

 (For discussion: 1977 – Militarisation of the NQ; Neoliberalisation of the economy)

ஆயினும் போருக்குப்பின் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாக வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நிரந்தரமாக விளிம்புமயப்படுத்தபட்ட நிலையில் வாழும் மக்களின் சமூக முன்னேற்றம் பற்றியோ அல்லது போருக்குப்பின்னான வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி பற்றியோ எதுவிதமான கொள்கையும் இருக்கவில்லை. அரசியல் தீர்வுக்கு முதல் முன்னுரிமையென்ற பெயரில் அபிவிருத்தியை, குறிப்பாக பாதிக்கப்பட்டோரின் சமூக முன்னேற்றத் தேவைகளை, முற்றாகக் கைவிட்டனர். இந்த வகையில் வடமாகாணத்தின் முதலாவது மாகாண சபையின் கொள்கையற்ற போக்கும் செயல்திறன் குறைபாடும் அவலத்தில் வாழும் மக்களுக்கும், மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காககொண்ட ஒரு மாகாண அபிவிருத்திக் கொள்கையையும் செயற் திட்டத்தையும் எதிர்பார்த்திருந்தோருக்கும் பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்திருந்தால் ஆச்சரியமில்லை. கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயல்திறன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. 

உண்மையில் இது தமிழ்த் தேசியத் தலைமையின் வர்க்கத்தன்மையையும், நமது சமூகத்தின் அதிகார உறவுகளில் வர்க்கம் – சாதி – பால் ஆகியவற்றின் ஊடறுப்பினையும் தோலுரித்துக் காட்டுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக நிற்கும் தமிழ்த் தேசியவாதத் தலைமைக்கும் இது முற்றிலும் பொருந்தும்.  இந்தச் சூழலில் கடந்த தேர்தலில் தமிழ் வாக்காளர்களில் ஒரு கணிசமான பகுதியினர் பிரதான தமிழ்த் தேசியவாத அமைப்புக்களை நிராகரித்து ‘வேலைவாய்ப்பு, சமூக நலன்’ போன்ற வாக்குறுதிகளைப் பிரச்சாரப் பொருளாக்கிய, அரசாங்கத்திற்குச் சார்பான கட்சிகளுக்கு ஆதரவு வழங்கியிருப்பது அதிர்ச்சிதரும் விடயமல்ல. 

இதெல்லாம் தரும் பாடமென்னவெனில் அரசியல் தீர்வுக்கும் மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட அபிவிருத்திக்குமிடையே ஒரு சீனச் சுவர் கிடையாது. இரண்டிற்குமிடையிலான உறவை எப்படிப் புரிந்து கொள்வது? இது கலந்துரையாடலுக்கான ஒரு முக்கிய கேள்வி.

அபிவிருத்தியை அரசியல் தீர்வைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக அரசாங்கம் பயன்படுத்துவதை எதிர்ப்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றலுடைமைகளை வளர்க்கவல்ல அபிவிருத்திக்கான கோரிக்கையை நிராகரிப்பதாகாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகள் போரின் விளைவுகள், தொடரும் இராணுவமயமாக்கல், மற்றும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடையவை.  ஆகவே போருக்குப் பின்னான வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதார விருத்திக்கும் மனிதமேம்பாட்டிற்கும் முன்னுரிமை கொடுக்கும் அபிவிருத்திக் கொள்கையொன்றினை மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்படுவது அரசியல் தீர்வுக்கான போராட்டத்துடன் இணைந்த ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படவேண்டிய ஒரு காலகட்டத்திலேயே நாம் இருக்கிறோம். (see, samuthran.net)

தேசிய இனப் பிரச்சனையின் தன்மைரீதியான மாற்றம் தொடர்பாக / முக்கியத்துவமிக்க சில அம்சங்கள்

  • அடையாளம் – ஆள்புலம் இணைப்பின் (identity-territory nexus ன்) உடைப்பு அல்லது பலவீனமாக்கல்

வடக்கு கிழக்குத் தமிழரின் தாயகம் எனக் கோரப்பட்ட பிரதேசத்தின் தொடர்ச்சி மீட்க முடியாதவாறு (irreversibly) உடைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தின் இன்றைய புவியியல் 1970களில் இருந்ததைவிடப் பலவகையில் பாரதூரமாக மாறிவிட்டது. ஆள்புலத்துக்காக இரண்டு இனத்துவ தேசியவாதங்களுக்கு இடையிலான மிகவும் அசமத்துவமான போட்டியின் முடிவு அந்த ஆள்புலத்தின் பேரினமயமாக்கலே.

அரச காணிகளில் குடியேற்றத் திட்டங்கள், நில அபகரிப்பு, இராணுவ வலயங்கள், பொருளாதார மாற்றங்கள், மற்றும் தமிழரின் பெருமளவிலான நிரந்தரப் புலப்பெயர்வு போன்றவற்றால் அந்தப் பிரதேசத்தின் இனக்கூறுகளின் விகிதாசாரம், நிலச் சொத்துரிமைகள், நிர்வாகக் கட்டுமானம், பௌதிக உட்கட்டுமானம், நிலத்தோற்றங்கள் அடிப்படையான மாற்றங்களைக் கண்டுள்ளன. போர்க்காலத்தில் அரச குடியேற்றத் திட்டங்களும் இராணுவமயப்படுத்தப் பட்டன. இன்று வடக்கு கிழக்கு முன்பைவிட பல்லினமயமாகியுள்ளது, அரச காணிகளில் சிங்கள மக்களின் குடியேற்றம் தொடர்கிறது. அதேவேளை இனங்களுக்கிடையே முரண்பாடுகளும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன.

அதிகாரப் பகிர்வு பற்றிப் பார்க்கும்போது வடக்கு-கிழக்கு மீள் இணைப்பின் சாத்தியப்பாடு பற்றிய மீள் சிந்திப்பு அவசியமாகவே படுகிறது. இன்றைய அரசியல் புவியியல் நிலைமைகளில் மீள் இணைப்பின் சாத்தியப்பாடு கேள்விக்குறியாகிறது.  

  • புலப்பெயர்வின் விளைவுகள்

உள்நாட்டு மற்றும் சர்வதேசப் புலப்பெயர்வு வடக்கு கிழக்கின் அரசியல் பொருளாதாரத்தில், இனப்புவியியலில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. போரினால் ஏற்படும் இடப்பெயர்வுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் போர்ப்பிரதேசங்களில் அவற்றின் நீண்டகாலத் தாக்கங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியம்.

போரின் விளைவாக வடக்கு கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் மேற்கத்திய நாடுகளிலேயே குடியேறியுள்ளார்கள்.  புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கும் தாயகத் தமிழ் சமூகத்திற்கு மிடையேயான உறவு பல அம்சங்களைக் கொண்டது. இத்தகைய உறவை டயஸ்போறா (diaspora) ஆய்வாளர்கள் நாடுகடந்த சமூகங்களின் (transnational communities ன்) உருவாக்கமாகக் கோட்பாட்டு மயப்படுத்தி உள்ளார்கள். இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே ஒரு காசாதாரப் பொருளாதாரத்தின் (remittance economy ன்) வளர்ச்சி இந்த உறவின் ஒரு முக்கிய அம்சமாயிருந்தது. இதைத் தொடர்ந்து சமூக, கலாச்சாரரீதியான சிந்தனைகளின் வருகையும், செயல் திட்டங்களும் அதிகரித்தன. இவற்றின் நன்மை, தீமை பற்றிய ஆழமான ஆய்வுகள் இல்லையாயினும் பல போக்குகளை அவதானிக்க முடிகிறது.

  • காசாதாரப் பொருளாதாரம் போர்க் காலத்தில் பல குடும்பங்களைக் காப்பாற்றியது. அதேவேளை அது புலப்பெயர்வையும் மேலும் ஊக்கிவித்தது. வடக்கிலிருந்து தெற்கிற்கும் வெளிநாட்டிற்கும் நிரந்தரமாகப் புலம்பெயரும் போக்குத் தொடர்ந்தது. தெற்கில் குறிப்பாக மேல்மாகாணத்தில் குடியேறியுள்ள வடக்கு கிழக்கு தமிழரின் தொகை அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து உதவி பெறாதோரும் கல்வி, தொழில் காரணமாகத் தெற்கிற்குக் குடியகலும் போக்கும் தொடர்கிறது. தெற்கிலே குடியேறியுள்ள தமிழரின் எதிர்காலம் தெற்குடனேயே பிணைந்துள்ளது. அவர்கள் தமது மொழியுரிமையை அனுபவிக்க, இன அடையாளங்களைப் பேணி வளர்க்கும் உரிமையைப் பெற அங்குள்ள சிங்கள மக்களின் புரிந்துணர்வையும் ஆதரவையும் பெறுதல் அவசியம். 
  • வெளிநாட்டில் குடியேறவேண்டும் எனும் ஆவல் தமிழ் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதற்கு உதவக்கூடிய கதவுகள் இப்போ மூடப்பட்டுவிட்ட போதும் வெளிநாடு செல்லப் பல இளைஞர்கள் முயற்சித்தவண்ணம் இருப்பதை காணலாம். இருக்கும் வெளி நாட்டுத் தொடர்புகள் மட்டுமன்றி வடக்கு கிழக்கு நிலைமைகளும் இளம் சந்ததியினரின் புலப்பெயர்வை ஊக்கிவிக்கின்றன.
    • காசாதாரப் பொருளாதாரம் வடக்கு கிழக்கில் குறிப்பிடத்தகுந்த சமூக-பொருளாதார வேறுபடுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பணம் பெருமளவில் வடக்கிற்குச் செல்வதால் இந்தப் போக்கு அங்கேயே பலமாகியுள்ளது. இது சொத்துடைமை மற்றும் அதிகார உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும் சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளுக்குமிடையிலான தொடர்பு ஆராயப்படவேண்டியது. இதன் புவியியல் – அதாவது பிரதேசரீதியான தாக்கங்கள் – ஆய்வுகளின் அம்சமாகவேண்டும்.
  • நுகர்வின் மட்டுமன்றி நுகர்வுவாதத்தின் அவற்றுடன் தொடர்புள்ள வாணிபத்தின் வளர்ச்சியே காசாதாரப் பொருளாதாரத்தின் தலையாய போக்காகவுள்ளது. வெளிநாட்டு பணத்தின் வருகையால் உருவான சேமிப்பு உபரி வடக்கு கிழக்கில் உற்பத்தி மூலதனமாகப் பெருமளவில் முதலீடு செய்யப்படவில்லை. அத்தகைய முதலீட்டை ஊக்கிவிக்கும் சூழலை அரசாங்கம் உருவாக்கவில்லை.  (Studies have shown that the local institutional environment is the key for foreign remittances to contribute to development.)

For discussion

  • வடக்குக் கிழக்கு – தமிழர்களின் வெளியேற்றம், சிங்களமயமாக்கல், தமிழ் – முஸ்லிம் – சிங்கள உறவுகள்
  • தெற்கிலே நிரந்தரமாகக் குடியேறியுள்ள தமிழர்களின் மொழி உரிமை, அடையாளம்
  • மலையகத் தமிழரின் உரிமைப் போராட்டம்

வடக்கு கிழக்குக்கு வெளியே, மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வதிவிட நில உரிமைக்கான போராட்டம் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. பெருந்தோட்ட அமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அவர்களின் எதிர்காலம் பற்றிக் கேள்விகளை எழுப்புகின்றன. மலையகத்தில் சிங்கள மக்களுடன் சம உரிமை பெற்றுப் பாதுகாப்புடன் வாழ்வதே அவர்களின் போராட்டத்தின் நோக்கம்.

  • மேலே இனங்காணப்பட்ட பிரச்சனைகளின் தீர்வுகள் பற்றிப் பார்க்கும்போது அவை தவிர்க்கமுடியாதபடி வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கும் நம்மை எடுத்துச் செல்கின்றன. அது மாத்திரமன்று இவை எல்லாமே பல்லினத் தொடர்புள்ள பிரச்சனைகள். அத்துடன் இவற்றில் எந்தப் பிரச்சனையும் சிங்கள மக்களின் புரிந்துணர்வும் ஆதரவுமின்றித் தீரப்போவதில்லை. 

முற்போக்கு சக்திகளின் இன்றைய கடமைகளில் ஒன்று இந்தப் பிரச்சனைகளை ஆழ ஆராய்ந்து அவற்றை மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளாக உள்ளடக்கிய ஒரு திட்டத்தைத் தயாரிப்பதாகும். இப்படிச் சொல்வது எல்லா மக்களுக்கும் ஒரே அரசியல் திட்டமோ தீர்வோ என்பதாகாது. எல்லாக் குழுக்களுக்கும் பொதுவான ஜன்நாயகக் கோரிக்கைகளை இனம் காணவேண்டும். அத்துடன் ஒவ்வொரு மக்களின் கோரிக்கைகளுக்கான போராட்டம் மற்றைய மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு உதவ வல்லது என்பதை உறுதிபடுத்தவேண்டும்.  

இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகள் பல்லின நாடுகளே. ஒரு நவீன ஜனநாயக அரசில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசியங்களும்/ தேசிய இனங்களும் கூடி வாழ முடியும் என்பது பொதுமக்கள் மத்தியில் கலந்துரையாடப்படும் பொருளாகவேண்டும். 

சிங்கள மக்கள்

இனப்பிரச்சனை என்று ஒன்றில்லை. இருந்தது பயங்கரவாதப் பிரச்சனையே. அது தீர்க்கப்பட்டுவிட்டது என நம்பவைக்கப்பட்டுள்ள பெருபான்மையான சிங்கள மக்களின் மனதை எப்படி மாற்றுவது?

அத்தகைய ஒரு மாற்றம் இல்லாதவரை, சிங்கள மக்களின் சம்மதம், ஆதரவு, பங்குபற்றல் இல்லாதவரை தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு கிடைக்கப் போவதில்லை. இது ஒன்றும் புதிதாகப் பிறந்த ஞானமல்ல. பழைய செய்திதான். ஆனால் இன்று வடக்கு கிழக்குத் தமிழ்த் தரப்பிலிருந்து மீள்சட்டகமாக்கப்பட்ட தேசிய இனப்பிரச்சனையின் அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைப்பது சிங்கள மக்களுடன் ஒரு புதிய அரசியல் சம்பாஷணையை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. அதே போன்று முஸ்லிம் மக்களையும் மலையகத் தமிழ் மக்களையும் அணுகும் சந்தர்ப்பம் பிறக்கிறது. 

12.09.2020 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *