1989இல் பிரசுரிக்கப்பட்ட ‘துருவச்சுவடுகள்’ கவிதைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரை. இந்தத் தொகுப்பில் நோர்வேயில் வாழும் ஏழு கவிஞர்களின் கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அணிந்துரை
சமுத்திரன்
இன்று நவீன தமிழ் இலக்கியம் ஒரு புதிய கலாச்சார முனைப்பைச் சந்திக்கிறது. ஐரோப்பாவில் வாழும் ஈழத்தமிழர் மத்தியிலிருந்து தற்போது முப்பதுக்கும் மேலான சஞ்சிகைகள் வெளிவருகின்றன. இவை கலை, இலக்கிய, அரசியல் சமூகவியல் அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்தக் கலாச்சார முனைப்பு தமிழ் இலக்கியம் இதுவரை கண்டிராத ஒரு புதிய பரிமாணத்தின் முகிழ்ப்பு என்று கூறலாம்.*1[i] இந்தப் பரிமாணத்தின் இன்றைய கட்டத்தைப் பிரதிபலிப்பதுபோல அமைந்தது. இந்த மாதம் மேற்கு பேர்லினில் இடம் பெற்ற «ஆறாவது இலக்கியச் சந்திப்பு» டிசம்பர் 22,23, 24 ம் திகதிகளில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஐரோப்பாவின் பலபாகங்களிலிருந்தும் ஏறக்குறைய அறுபது ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிகழ்ச்சிகளில் கலை, இலக்கிய விடயங்கள் மட்டுமின்றி அரசியல் சமூகவியல் போன்ற துறைகளும் இடம்பெற்றன. இலங்கை நிலைமைகள் மட்டுமின்றி சர்வதேச நிலைமைகளும் குறிப்பாக இன்று கிழக்கு ஐரோப்பாவில் இடம் பெறும் வெகுஜன எழுச்சிகளும் அலசி விவாதிக்கப்பட்டன.
மூன்று நாட்களும் அங்கே வருகை தந்த ஆண்களும், பெண்களும் கலந்துரையாடலில் ஆர்வத்துடன் பங்குபற்றினர். பலர் தமது கருத்துகளையும் விமர்சனங்களையும் ஆழ்ந்த உணர்ச்சியுடன் வெளிப்படுத்தினர். கருத்தரங்குகள் உத்தியோகபூர்வமாக முடிந்த பின்னரும் மண்டபத்துக்குள்ளேயும், வெளியேயும் விவாதங்கள் தொடர்ந்தன. அந்த மூன்று நாட்களும் இரவு ஒரு மணிவரை நான் கலந்துரையாடல்களில் பங்கு பற்றினேன். கருத்துப்பரிமாற்றங்கள் வரலாறு, கலை இலக்கியம், நடைமுறைச் சோசலிசம், பெண்ணிலைவாதம், சூழலியக்கங்கள், தமிழரின் புலப்பெயர்வுகள், ஐரோப்பாவின் நிறவாதம் போன்றவற்றைச் சுற்றி அமைந்தன. புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் அறிவுரீதியான ஒரு புதிய அலை எழுந்து வருகின்றது என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் இன்றைய பல சமூகவியக்கங்களின் புதிய கருத்துக்களையும் அனுபவங்களையும் உள்வாங்க முயற்சிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். இந்த அலையின் விசேடப் பண்புகளில் ஒன்று அதன் பன்முகத்தன்மையாகும்.
இந்த அறிவுரீதியான செயற்பாடுகளின் பகைப்புலமோ பெரியது. செழுமை மிக்கது. ஆக்கங்கள் படைப்போர் கடந்த பத்தாண்டுகளுக்குள்- பெரும்பாலாக 1983 யூலைக்குப்பின்- ஐரோப்பாவுக்குக் குடிபெயர்ந்தோராவர். இவர்கள் கொடூர யதார்த்தங்களைக் கண்டவர்கள், அனுபவித்தவர்கள். இவர்களின் ஒரு கால் இன்னும் தாய்நாட்டிலேதான். இவர்களின் ஆளுமை, நினைவுகள், அனுபவங்கள் எல்லாமே « தாய்நாடு- புகல்நாடு» என்னும் தொடர்பினால் ஆட்டிப்படைக்கப்படுகின்றன. ஐரோப்பாவில் வாழும் தமிழிரின் வாழ்நிலைப் பிரச்சனைகளை பல கலாச்சாரங்களின் -ஆகக்குறைந்தது இரு கலாச்சாரங்களின்- சிக்கலான மோதல்களாய், இணைவாய், அனுபவரீதியான தொகுப்பாய் பார்க்கலாம். இந்தச் சிக்கல்கள் இங்குள்ள அரசியல் யதார்த்தங்களின் பரிமாணங்களையும் உள்ளடக்குகின்றன.
ஐரோப்பாவில் தமிழர்கள் மூன்றாம் உலகத்தவர்கள், கறுப்பர்கள் என்ற வட்டத்தில் அங்கமாகின்றனர். இங்கு வந்த பின்தான் பலர் தம் நிறம் கறுப்பு என்று கண்டுபிடிக்கிறார்கள். பலருக்கு இதனை ஏற்பது கடினமாகவிருந்தாலும் கறுப்பு என்பது ஒரு அரசியல் கோட்பாடு என்பதைப் படிப்படியாகப் புரிந்து கொள்ள அனுபவம் நிர்ப்பந்திக்கிறது. தாய்நாட்டில் கிடையாத சுதந்திரம், பாதுகாப்பு, பொருளாதார உறுதிப்பாடு இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்த பலரின் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக ஈடேறுவதில்லை. அடிக்கடி ஏற்படும் கசப்பான அனுபவங்கள் தமிழர்கள் இங்கே அழைக்கப்படாத விருந்தாளிகள் என்பதை ஊசிபோல் குத்தி நினைவூட்டுகின்றன. கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சமத்துவமில்லை எனும் யதார்த்தத்தைக் காண்கிறார்கள். இந்தப் பாகுபாடு எப்போதுமே வெளிப்படையாக இடம்பெறுவதில்லை. இதன் மறைமுகச் செயற்பாடுகளே அதிகம். இந்தப்பாகுபாட்டின் அனுபவங்கள் தரும் வேதனையும் கலாச்சார ரீதியான அந்நியமாக்கலும் மூன்றாம் உலகத்திலிருந்து வந்தோருக்குச் சில புதிய பாடங்களைத் தருகின்றன.(எல்லாத் தமிழர்களும் இந்தப்பாடங்களைப் படிக்க விரும்புவதில்லை. பலர் தமது இருப்பு பற்றிய கேள்விகளைத் தம்மிடமே கேட்கப்பயப்படுகிறார்கள். ஆனால் இது மாறும் என்பது எனது நம்பிக்கை.) கறுப்பர்களின் உழைப்புச்சக்திக்கு கிடைக்கும் பெறுமதிகூட அவர்களின் மனிதத்துவத்திற்குக் கிடைப்பதில்லை. ஐரோப்பிய நாகரீகத்தின் இரட்டை நியமங்களும் கபடங்களும் நிறவாதத்திற்கூடாக பயங்கரமாய் வெளிப்படுகின்றன.
மேற்கு பேர்லினில் நான் இருந்த போது பேர்லின் சுவரின் முடிவு பற்றி நிறையப் பேசினோம். ஒரு மேற்கு ஜேர்மனிய பெண்ணிடம் ஒரு தமிழ் நண்பர் ஒருவர் கூறிய வார்த்தைகள் மேற்கின் இரட்டை நியமங்களின் வெளிப்பாட்டைப் படம் பிடிக்கின்றன. மேற்கையும் கிழக்கையும் பிரித்து உங்களதும் அவர்களதும் நடமாட்டத்தைத் தடைசெய்த அந்தச் சுவர் சாய்வதை நாமும் வரவேற்கிறோம். ஆனால் உங்கள் நாட்டிற்கு அரசியல் தஞ்சம்கோரி வந்திருக்கும் தமிழர்களையும் மற்றைய கறுப்பர்களையும் அவர்கள் வதியும் உள்ளூர் எல்லைகளுக்கு அப்பால் நகரக்கூட உங்கள் ஜனநாயக அரசின் சட்டம் அனுமதிக்கவில்லை. மேற்கு ஜேர்மனியில் நம்மைச் சுற்றி எழுப்பியிருக்கும் இந்தச் சுவர்களை எப்போது அகற்றப்போகிறீர்கள்? உங்களுக்குத் தெரியுமா இந்தத் தடையினால் இந்த நாட்டில் வாழும் பல தமிழர்கள் நமது இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது?
ஐரோப்பிய நாகரீகங்கள் தந்துள்ள உயர்ந்த விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் முழுமனித குலத்திற்கும் பொதுவானதென ஐரோப்பா பெருமைப்படலாம். ஆனால் இந்த விழுமியங்கள் இங்கே இன்னும் முழுமை பெறவில்லை. இவற்றுக்கு வர்க்கம் மட்டுமல்ல நிறமும் பாலும் உண்டெனும் உண்மையை நாம் அனுபவரீதியாக காண்கிறோம். நாம் பிறந்த குறைவிருத்தி சமூகத்தில் பின்னடைந்த கலாச்சாரத்தில் மறுக்கப்படும் உரிமைகள் இங்கே இருப்பதையும், மதிக்கப்படுவதையும் காண்கிறோம். இதையெல்லாம் அறிவித்து தனது உயர்ச்சியைப் பறைசாற்றும் முதலாளித்துவ ஜனநாயகம் கறுப்புக்குடியானவர்கள் இவற்றை முற்றாக அனுபவகிக்க முடியாதபடியும் பார்த்துக் கொள்கின்றன.
ஐரோப்பாவில் நமது தனிப்பட்ட அடிப்படைத் தேவைகளும் அவற்றைப் பூர்த்தி செய்ய நாம் தேடும் வழிவகைகளும் இந்தச் சமூகம்பற்றிய பல தகவல்களை அனுபவரீதியாக நமக்குத் தருகின்றன. இந்த அனுபவங்களை நாம் அலசி ஆராய முற்படும் போது நமது கலாச்சார விழுமியங்களும், நமது எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் தலையிடுகின்றன. உண்மையில் இவை நமது இருப்பு பற்றிய சுயமதிப்பீடுகளை பலவகையில் நிர்ணயிக்கின்றன. இதற்கூடாக நாம் ஒவ்வொரு கணமும் நமது தாய்நாட்டிற்குத் திரும்புகிறோம். இந்த அகவுலகப் பிரயாணங்கள் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. தாய்நாட்டு நிலைமைகளை நாம் நினைவு கூருகின்றோம். அங்கு மனித உரிமைகள் இங்கிலும் பார்க்க மோசமாக மீறப்படுகின்றன. அங்கு நடைபெறும் இனவாத ஒடுக்குமுறையின் துன்பியல் இந்நாட்டின் பூர்சுவா ஜனநாயக நியமங்களின்படி கொடியது. தமிழ்சமுகத்தின் சாதிவாதமும் ஆணாதிக்கவாதமும் நம்மைத் தலைகுனிய வைக்கின்றன. அங்கு மானிடம் தோற்றுவிட்டது. ஆனால் அழிந்து விடவில்லை. இங்கும் மானிடம் அழிந்து விடவில்லை என்பதை நினைவூட்டும் சம்பவங்களுக்குக் குறைவில்லை. இன்றைய புதிய கலாச்சார முனைப்பின் செழுமை மிகு பகைப்புலத்தின் சில அம்சங்களை இங்கு தொட்டுக் காட்டினேன். புலம்பெயர்ந்தோரின் இருப்பின் புதிய அம்சங்களின் சமூகவியல் ஆழ ஆராயப்பட வேண்டியது. இத்தகைய செழுமைமிகு பின்னணியில் காலூன்றி நிற்கும் சில தமிழ்க் கவிஞர்களின் படைப்புக்களை இந்நூலில் சுவடுகள் பதிப்பகம் நமக்குத் தருகிறது.
இந்தத் தொகுப்பில் நோர்வேயில் வாழும் ஏழு தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறுகின்றன. இவர்களில் வ.ஐ.ச ஜெயபாலனும், இளவாலை விஜயேந்திரனும் தமிழ் இலக்கிய உலகில் ஏற்கனவே பிரபல்யமானவர்கள். தமயந்தியும் மைத்ரேயியும் ஓரளவு அறிமுகமானவர்கள். தம்பா, வயவைக்குமாரன் கலிஸ்ரா ஆகியோர் புதியவர்கள். இந்தக் கவிதைத்தொகுப்பு இன்று ஐரோப்பாவில் எழுந்து வரும்(தமிழ்) புலம்பெயர்ந்தோர் இலக்கிய அலையின் ஒரு காத்திரமான வெளிப்பாடாகும். கவிஞர்களின் களம் தாய்நாடு, புகல்நாடு என்று பரந்து விட்டது. அவர்கள் படைத்துள்ள கவிதைகள் புதிய கலாச்சார முகிழ்ப்பின் புத்தம்புதிய மலர்கள். ‘யாதும் ஊரை யாவரும் கேளீர்’ என்னும் தமிழ்ப் பழமொழியை நடைமுறையில் சோதித்துப் பார்த்த அனுபங்களின் பிரதிபலிப்புக்கள், நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழர் தர ஆரம்பித்துள்ள புதிய கலைத்துவப் பரிமாணத்தின் முதற்படிகளை ஸ்திரப்படுத்தும் ஒரு பங்களிப்பு இதுவாகும்.
கவிஞர்களின் களம் புவியியல் ரீதியில், கலாச்சார ரீதியில் சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் இருப்பு இலங்கையிலிருந்து வடதுருவத்திற்கு அருகே அமைந்துள்ள எழில்மிகு நோர்வேக்கு மாறியுள்ளது. புதிய சூழலில் எல்லாமே வித்தியாசம். காற்று, காலங்களின் நகர்ச்சி, மரங்கள், பறவைகள் எல்லாமே புதிதாய்த் தென்படுகின்றன. இக்கவிஞர்களின் களத்தின் விரிவும், இருப்பின் மாற்றங்களும் தமிழ்க் கவிதையுலகிற்கு புதிய அனுபவங்களை மட்டுமல்ல, புதிய உவமைகைகளையும் அறிமுகம் செய்கின்றன.
ஜெயபாலன் ஈழத்து மண்ணுடனும் மக்களுடனும் இறுக்கமான பிணைப்பைக் கொண்டவர். ஜெயபாலனின் சமூகவியல் அறிவு அவரின் கவித்துவத்திற்கு ஒரு விசேட காத்திரத்தைக் கொடுப்பதை அவரின் கவிதைகளைப் படித்தோர் அறிவர். இந்தத் தொகுப்பில் வரும் அவரது «இலையுதிர்கால நினைவுகள்- 89» ஈழத்து மண்ணுடனும், மக்களுடனும் அவருக்கு இருக்கும் சேதனரீதியான உறவின் வேதனைமிகு வெளிப்பாடுகள். வேற்று நாட்டில் வேரிழந்த மனிதனின் கலாச்சார அந்நியமாக்கலையும் தனிமையையும்
‘நானோ
வழிதவறி அலஸ்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்’
என்ற வரிகள் கைப்பற்றுகின்றன. இந்தக் கவிதை ஈழத்தமிழரின் ஒடுக்குமுறைக்கெதிரான புலப்பெயர்வுகளின் அவலங்களைத் தனிமனிதனின் உணர்ச்சிகளின் உதவியுடன் வெளிப்படுத்துகின்றது. வெளியேறியோரின் இருப்பின் அவலங்களை நோர்வேயின் இயங்கையின் அம்சங்களைக் குறியீடுகளாக்கிப் பிரதிபலிக்கிறார் ஜெயபாலன்
‘இது இயற்கையே விரக்தியுறும்
இலையுதிர் காலம்
நீர் கூடக்கல்லாகும் நீண்ட குளிர்காலம்’
இதற்கு முன்னர் மக்பை பறவை கூறுகிறது
‘நாமறிவோம்
இலங்கைத் தமிழருங்கள் நாகரீகம்
பிறருடைய பேச்சுச் சுதந்திரத்தை
என்றேனும்
ரசித்ததுண்டா நீங்கள்’
விஜயேந்திரனின் ‘காணாது போன சிறுவர்கள்’, ‘காணி நிலம் வேண்டும்’ எனும் கவிதைகள் தமிழரின் புலப்பெயர்வின் பொருளாதார அபிலாசைகளைக் காட்டுகின்றன. முன்னைய கவிதையில் வழமையான ஒரு யாழ்ப்பாண நிலத்தோற்றத்தில்.
‘கட்டைப்பனைமரத்தைக் கப்பலாக்கி
காற்துடுப்பில் நீர்கடக்கும்
சிறார்களை மட்டும்
காணேன்’
அவர்கள் ‘காசு வயல் கதிரறுக்க கனடா போய்விட்டார்களாம். ஆனால் இந்தக் தமிழ் அரசியல் அகதிகள் பலரின் கனவுதான் என்ன? அங்கே ‘விடுதலை’ மலரவேண்டுமென நாம் விரும்பலாம். ஆனால் இங்கே நமக்கெல்லாம் ‘காணி நிலம் வேண்டும்’. அது மட்டுமல்ல நாம் விட்டுவந்த யாழ்ப்பாணத்தை மீண்டும் உருவாக்க சீதன மரபு அங்கே மாறிவிடக்கூடாது
‘ஊரில் காணியோடும்
வீடு கிணற்றோடும்
இன்னொரு ஜெயப்ரதா
அமைய வேண்டும்’
இந்தக் கவிதைகள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒருபுறம் விடுதலைபற்றி ஏதோவெல்லாம் பேசும் அதேவேளை மறுபுறம் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்கும் ஜனநாயக முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் பழைய உறவுகள் புகுந்த நாட்டிலும் மீள் உற்பத்தி செய்வதைக் காட்டவில்லையா? புகுந்த நாட்டில் தமிழர்களென நாம் பேணிப் பாதுகாக்கும் தனித்துவம் இதுதானா என்று கேட்கத் தோன்றுகிறது.
விஜயேந்திரனின் ‘பதினொராவது கட்டளை’ தனிமனிதர்களின் இயலாமையைக் கவித்துவமாக வெளிப்படுத்துவதுபோல் அமைந்துள்ளது. விடுதலையையும் மனிதத்துவத்தையும் இன்றைய நிலையில் கற்பனையிலேயே அனுபவிக்கலாம். ‘சற்று நிதானமாக் கனவுகாணப் பழகிக் கொள்’ நனவு கொடூரமாகும் போது கனவுகளில் தான் தற்காலிக ஆறுதல் இந்தக் கற்பனையும் இல்லாவிடில் இன்று ஈழத்தில் தமிழர்களைப் போராட வைக்கும் உந்துதலை அழிந்துவிடும் என்பது என் கருத்த. ஆம்ஒ நாம் கனவு காணப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கூடாக விடுதலையின் உள்ளடக்கத்தைத் தேடி யதார்த்தத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும்.
தம்பாவின் கவிதைகளில் மானிடத்தை, மனிதத்துவத்தைத் தேடும் பண்பு வெளிப்படையாகின்றது. நோர்வேயில் நாம் சந்திக்கும் நிறவாதம், அதே நேரத்தில் பல கறுப்புத் தனிமனிதர்களுக்கு ஏற்படும் மனித நேயம் நிறைந்த அனுபவங்கள் தம்பாவின் உள்ளத்தைத் தாக்கியுள்ளன.
‘இங்கு எல்லாமே மாறுபட்டதாக இருக்கின்றது
ஆனால் எங்ஙனந்தான் அவர்களின்
புன்னகை மட்டும் என்றும்போல்
அச்சாய்ப் பூக்கிறது
புகல் நாட்டில் நிறவாதத்திற்கு முகம் கொடுக்க முற்படும் தம்பா தாய்நாட்டின் இனவாத த்திலிருந்து தப்பி வந்தவர்.
‘இனவாத த்திற்குத் தப்பி பல்லாயிரம் மைல்கள்
கடந்தபோதும் வலிமாறாத தழும்புகள்
இதற்குமேல் நிறவாதம் எங்கே என்னைப்
பாதிக்கும்?’
தம்பாவின் எங்கும் மானிடம் அவருக்கு ஏற்பட்ட ஒரு இனிய அனுபவத்தின் வெளிப்பாடு. அவர் இந்தக் கவிதையில் நிறவாதத்திற்கு முகம் கொடுக்கவில்லை. ஆனால் அந்த முகம் கொடுக்கும் பிரச்சனையிலிருந்து விடுபட இந்த மனிதநேயம் மிக்க அனுபவம் உதவுகின்றது. எண்பது வயதைத் தாண்டிய ஒரு நோர்வேஜியப் பெண்மணி அவளும் முதுமையின் தனிமை தனை அனுபவிப்பவள்- இந்தத் தொழிலாளிக்குச் சொல்கிறாள்
– ‘இன்று உனக்காக கர்த்தரை வேண்டினேன்’
தம்பா நோர்வேயில் காணும் மனிதநேயத்தை என்றாவது ஒருநாள் தனது தாய்நாட்டிலும் காண ஏங்குகிறார். நோர்வேயின் தேசிய தினக்காட்சி பற்றிய ‘துளிர்க்கும் கனவு’ எனும் கவிதையின் செய்தி இதுதான்.
‘மானிடம் புதைந்த வீதிகளை உழும்
இராணுவ வண்டிகள் மறைய
எமது மண்ணில் சிறார்கள் மனித நேயத்த
எமது வீதிகளில் பதிக்கும் நாட்களை எண்ணி
அங்கே ஓரமாய் நின்று கனவு கண்டேன்’
இளம் கவிஞரான தம்பாவின் மனிதாபிமானம் கூரிய விமர்சனப் பார்வையுடன் எதிர்காலத்தில் இணைய வேண்டும் என்பது எனது விருப்பம்.
மைத்ரேயி ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் கவிதை எழுத ஆரம்பித்துள்ளார். இந்தத் தொகுப்பிலுள்ள இவரின் ‘ஊரிலிருந்து ஒரு கடிதம்’ இயக்கங்களின் சில தவறான போக்குகளை அம்பலப்படுத்துவதுடன் யாழ்ப்பாணத்துக் கிராமத்தில் சில யதார்த்தங்களைச் சித்தரிக்க முற்படுகின்றது. இந்தக் கவிதையில் நோர்வே வாழ் தமிழ் அகதிகள் பற்றிய ஒரு சிறப்பான அம்சம் வெளிப்படுகின்றது.
‘சங்கர் உண்மையிலேயே படிக்கப்போனானாம்
பரவாயில்லை
ஆனால்
நீ படிப்பதாகச் சொல்லிக்கொண்டு
அகதியாக…’
தமிழ் அகதிகள் வாழும் மற்றைய நாடுகளைப் போலல்லாது நோர்வேயில் தமிழ் அகதிகள் மாணவர்கள் என்னும் உருவத்திலும் வாழ்கிறார்கள். துரதிர்ஸ்டவசமாக இந்த உருவில் வாழும் அகதிகள் சிலர் சட்டபூர்வமாக அகதி அந்தஸ்துக்கோரி வந்துள்ளோரைவிட தாம் விசேடமானவர்கள் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றார்கள். உண்மை என்னவெனில் எந்த வடிவில் வந்தாலும் நாம் எல்லோருமே- நான் உட்பட – அகதிகள் தான். இதை ஏற்றுக்கொள்வது ஒரு அடிப்படை உண்மையை ஏற்றுக் கொள்வதாகும் – ஒரு கபடம் நிறைந்த பொய்மையிலிருந்து விடுபடுவதாகும். ஐரோப்பாவுக்கு குடிபெயர்ந்த சில தமிழர்களின் கீழ்தரமான செயல்கள் பற்றி இந்தக் கிராமத்துக் கடிதம் குறிப்பிடுகின்றது
‘வசந்தத்தை எதிர்பார்த்து
வெளிநாட்டு வாழ்வில் அள்ளுண்டு
சீட்டாட்டம், ஏமாற்று
போதைப் பொருள் கடத்தல்
பல்வேறாய்ப் பிளவுண்ட
குழுமோதல், குடி
மேற்கின் யாந்திரீக விசுவரூபம்
இவை தவிர
நோர்வேயில் புதிதாய் உணர்ந்தவற்றை எழுது’
மைத்ரேயின் ‘பிரகடனம்’ பெண்ணுரிமை பற்றியது. ஒரு பெண் தான் வாழப்போகிறேன் எனச்செப்பும் பிரகடனம்
‘இங்கு நாலு சுவரையும்
கிடுகுவேலியையும் தாண்டி
நான் வாழப்போகிறேன்’
என ஈழத்துப் பெண்ணொருத்தி கோருகிறாள் இந்தக் கவிதையோடு மைத்ரேயி நின்றுவிடமாட்டார் என்று நம்புகிறேன்.
கலிஸ்ராவின் கவிதைகளும் பெண்ணுரிமையைக் கருவாகக் கொண்டன. ஆண் ஆதிக்கம் மிகுந்த இன்றைய தமிழ்ச்சமுதாயத்தின் பெண்நிலைவாத விமர்சனங்களாய் அமைகின்றன இவரின் கவிதைகள்
‘உதயத்தின்போதே எம்
உணர்வுகளுக்குச் சாவுமணி
சமைத்துவிட்டனரே’
எனக் கூர்மையாக ஒரு வரலாற்று உண்மையைச் சொல்லும் கலிஸ்ரா, பெண்களை நோக்கி,
‘போதும் கண்ணே
இதுவரை தொலைத்த
நம் சிந்தனைகள் போதும்
பூமியில் நாமும்
மனிதர்களாய் வலம்வர வேண்டும்’
அடுத்த கவிதையில் (சிந்திப்பாயா?) தமிழ்ப் பெண் சொந்தச் சமூகத்திலிருந்து வெளியேறினாலும் அந்தச் சமூகம் வகுத்துள்ள கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேறப் போராடாதிருப்பதைக் குறிப்பிடுகிறார்.
‘நான்கு சுவர்
நாலு திசையான பின்னும்
நாலு குணத்தைக் கட்டியழும்
நாயகியே’
இந்த நாற்குணங்களும் ஆண்களால் பெண்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கணங்கள். இந்த ஆண் ஆதிக்கமும் நம்மோடு ஐரோப்பாவிற்கு வந்துவிட்டது. கலிஸ்ராவின் கவிதைகளில் அரசியல் செய்திகளும் இருக்கின்றன. ஆனால் கவித்துவம் மேலும் வளர வேண்டும். இவரின் ஆரம்ப முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. குறிப்பாக பெண்நிலைவாதக் கவிஞர்கள் நம்மிடையே பெருக வேண்டும்.
தமயந்தியின் கவிதைகள் ஆழத்து நிலைமைகளின் துன்பியலைக் காட்டுவன. யுத்த த்தால் அவதியுறும் மக்களின் பொருளாதாரம் வரட்சியாலும் தாக்கப்படும் அவலத்தை ‘மழையைத் தொலைத்த மேகம்’ புலப்படுத்துகிறது. அவர் காணும் துன்பியலின் இன்னொரு அம்சம் மிகவும் பயங்கரமாய் வெளிவருகின்றது. புதிய ஏற்பாடுகள் என்ற கவிதையில்
ஜெருசேலம் மக்களைப் போல்
கனவுகளுடன் மல்லுக்கட்டும் மக்கள்
பிணங்களை விலத்தி
நடந்து செல்லப் பழக்கப்பட்டுவிட்டனர்’
இதே துன்பியலை இவரின் மற்றக் கவிதையொன்றிலும் காண்கிறோம்.
‘இப்போ
மெலிந்த தென்றல் கூட
ரோமக்கால்களுக்குள்
நெருப்பைத் திணிக்கும்’
வயவைக்குமரின் கவிதை ஒன்று இதன் தொடர்ச்சிபோல் அமைகின்றது
‘தீயை அணைத்திட
நீரற்ற தேசம்
கந்தகத்துடனே
கடலைக்கடந்து
…….
……..
அமைதி என்று
ஒரு முழத்துண்டு
சிலுவையில் அறைய
ஒப்பந்தம் ஆனது’
வயவைக்குமரன் நம்மில் பலர் கண்டுபிடித்துள்ள தனிமனிதத் தீர்வையும் அகதி என்னும் கவிதையாகத் தருகிறார்.
‘நில்லாதே ஓடு
கடல்களைக் கடந்து
மலைக்களைத் தாண்டி
பூமியின் எல்லைவரை ஓடு
……..
……….
ஆசையாய் எல்லோருக்கும் எழுது
நான் ஒரு அகதியென்று’
இந்தக் கவிதைகளை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது ஒரு பொதுவான துன்பியல் தன்னை ஓங்கியிருப்பதை உணரலாம். இது இன்றைய தாய் நாட்டு நிலைமையின் பிரதிபலிப்பு. துன்பியல் பல கவிதைகளில் பலமாகப் படர்ந்திருப்பது இவற்றைப் படைத்த கவிஞர்கள் தாய்நாட்டின் கொடிய யதார்த்தங்களிலிருந்து தப்பியோடியவர்கள் என்பதாலா? இவர்கள் இன்று உதிரிகளாய் வேரறுபட்ட நிலையில் இருக்கும் இருப்பினாலா? இந்தக் கேள்விகளை வாசகர்களிடம் விட்டுவிடுவோம். என்னைப் பொறுத்தவரை இந்தத் துன்பியல்தன்மை புலம்பெயர்ந்த பலரின் அகநிலையைப் பிரதிபலிக்கின்றது.
கவிதைகளிடையே அழகியல் வேறுபாடு இருப்பதை மறுக்க முடியாது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இத்தொகுப்பில் மூவர் புதிய கவிஞர்கள். தம்பா, கலிஸ்ரா, வயவைக்குமரன் ஆகியோர் தமது கன்னிக்கவிதைகளைப் பிரசுரித்துள்ளார்கள். இவர்களின் கவித்துவ ஆற்றல் மேலும் வளர வேண்டும். புகழ்பெற்ற கவிஞர்களுடன் அவர்களும் இந்தக் கவிதைத்தொகுப்பில் சேர்ந்திருப்பது அவர்கள் மேலும் வளர நிறைய இடமுண்டென வாசகர்களுக்கு உணர்த்துவதுபோல் அவர்களுக்கும் உணர்த்துமென நம்பலாம். சுவடுகள் பதிப்பகத்தின் இந்த முயற்சி தொடர வேண்டும். ஐரோப்பாவின் மற்றைய இடங்களிலும் இத்தகைய பதிப்பகங்கள் தோன்ற வேண்டும். நவீன இலக்கியத்தின் புதிய பரிமாணமான இச்சர்வதேச முனைப்பு எமது கலாச்சாரத்தின் முன்னேற்றத்திற்கு உதவ இது அவசியம்.
ஓஸ், நோர்வே
30.12.1989
[i] இத்தகைய ஒரு புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் தோற்றத்திற்கும் பரிணமிப்புக்கும் பின்னணியாக அமையும் சில அரசியல், சமூகவியல் நிலைமைகளை நான் சமீபத்தில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க: சமுத்திரன் – ஈழத்தமிழர் போராட்டத்தில் புலம்பெயர்ந்தோரின் பங்கு.
( ஆறாவது இலக்கியச்சந்திப்பு அறிமுகத் தொகுப்பு- West Berlin 1989).