இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும்

 

சமுத்திரன்

22 ஜூன் 2017 

I

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார விருத்தி மற்றும் சமூக முன்னேற்றத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு பற்றி நீண்ட காலமாக விவாதங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. தமிழ் சமூகத்தினுள் நடைபெறும் இந்த விவாதங்கள் எல்லாமே எழுத்து வடிவம் பெறுவதில்லை. பொதுவாக வெளிநாடுகளில் இவை கருத்தரங்குகளிலும் ஈழத்தமிழர்கள் கூடும் மற்றைய நிகழ்ச்சிகளிலும் இடம்பெறுவதைக் காணலாம். 2009 ஐந்தாம் மாதம் இராணுவரீதியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபின் இந்த விடயம் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்த தமிழரின் பங்கு எனும் வடிவத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்போது ராஜபக்ச அரசாங்கம் அகங்காரத்துடன் தேசிய இனப் பிரச்சனை என ஒன்றில்லை இருந்தது பயங்கரவாதப் பிரச்சனையே அது தீர்க்கப்பட்டுவிட்டது இனிச் செய்யவேண்டியது வடக்கு கிழக்கின் அபிவிருத்தியே எனும் கொள்கையைப் பின் பற்றியது. நடைமுறையில் அந்த அரசாங்கம் போருக்குப்பின் மாற்றுவழிகளுக்கூடாகப் போரைத் தொடர்ந்தது. அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமின்றி அபிவிருத்தியை முன்வைத்தது. அரசியல் தீர்வுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கும் நெருங்கிய உறவுண்டு ஆனால் பின்னையது முன்னையதின் பிரதியீடாகாது எனும் கருத்தினை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அத்துடன் ராஜபக்ச ஆட்சி வடக்கு கிழக்கின் ‘அபிவிருத்தி’யை இராணுவ மயப்படுத்தி அடக்குமுறையின் கருவியாகப் பயன்படுத்தியது. இது போருக்குப்பின் அது மாற்றுவழிகளுக்கூடாகப் போரைத் தொடரும் கொள்கையின் ஒரு அம்சமாகியது. இது பற்றி ஒரு விரிவான கட்டுரையையும் எழுதியுள்ளேன்.[1] புலிகள் மீண்டும் அணிதிரள முற்படுகிறார்கள் என்றும் அதனால் தேசிய இறைமைக்கு ஆபத்து தொடர்கிறது என்றும் பிரச்சாரங்கள் செய்து இராணுவத்தை வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் நிலைகொள்வதை நியாயப்படுத்தியது அரசாங்கம். ராஜபக்ச ஆட்சியில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு உதவும் திட்டங்களைச் செயற்படுத்துவதற்குப் பலவிதமான கட்டுப் பாடுகளும் தடைகளும் இருந்தன. இதனால் தனிப்பட்ட காசாதார உதவிகளுக்கு அப்பால் திட்டமிட்ட சமூக மேம்பாட்டுக்கு உதவும் செயற்பாடுகள் குறைவாகவே இருந்தன. அடக்குமுறையின் விளைவான பயமும் நிச்சயமின்மையும் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் முன்னெடுப்புக்களுக்குப் பெரும் தடைகளாயின.

2015ல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்குப்பின் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தவர்  மத்தியில் மேலும் அதிகமான முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதைக் காணமுடிகிறது. அரசாங்கம் ‘தமிழ் டயஸ்போறா’வை வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் பங்காளர்களாகும்படி அழைத்துள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அப்போதைய ஆட்சிக்கு எதிரான சிங்கள மக்களுடன் சேர்ந்து  அவர்கள் வழங்கிய பெரும் ஆதரவின்றி ஆட்சி மாற்றம் இடம் பெற்றிருக்கவே முடியாது. ஆட்சி மாற்றத்தின்பின் சில விடயங்களைப் பொறுத்தவரை சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. விசேடமாகப் பேச்சுச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், இனவாதங்களுக்கு எதிராக மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சிவில் சமூக அமைப்புகளின் சுதந்திரம், மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர் இலங்கைக்குப் பிரயாணம் செய்வது, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் திட்டங்களைச் செயற்படுத்துவது போன்றவற்றில் காணக்கூடிய முன்னேற்றங்களைக் குறிப்பிடலாம். அதேபோன்று யாப்பின் 19வது திருத்தமும் வரவேற்கப்படவேண்டியதே. மறுபுறம் பல்வேறு வகையில் ஆட்சிமாற்றம் ஏமாற்றங்களையே கொடுத்துள்ளது. தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வுபற்றிப் பேசப்படுகிறது ஆனால் தெளிவாகத் தென்படும் முன்னேற்றம் இல்லை. புதிய யாப்புத் தொடர்பான செயற்பாடுகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இலங்கை அரசின் அமைப்பில் அடிப்படையான சீர்திருத்தமின்றி தேசிய இனப் பிரச்சனைக்கு ஜனநாயகரீதியான தீர்வினைக் காணமுடியாது. இதைச்செய்யும் அரசியல் திடசித்தம் அரசாங்கத்திற்கு இருக்கிறதா?

இன்னொரு மட்டத்தில் பார்த்தால் இராணுவம் நீண்டகாலமாகக் கைப்பற்றி வைத்திருக்கும் தனியார் நிலங்களைக்கூட இதுவரை அரசாங்கத்தினால் முழுமையாக விடுவிக்க முடியவில்லை. வடக்கு கிழக்கின் இராணுவ மயமாக்கலைப் பொதுமக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் குறைக்கக் கூட முடியவில்லை. தெற்கிலே தலைவிரித்தாடும் பேரினவாத சக்திகளைத் துணிகரமாக எதிர்க்க முடியாத நிலையிலேயே அரசாங்கம் இருக்கிறது. போர்க்குற்றம் தொடர்பாக அரசாங்கம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரண்படும் கொள்கையையே நாட்டில் பின்பற்றுகிறது.

ஊழல் தொடர்பாகக் கொடுத்த வாக்குறுதியின் ஒரு அற்ப பகுதியையாயினும் நிறைவேற்றமுடியாமை மட்டுமன்றி தனது ஆட்சிக்குள்ளேயே வளரும் ஊழலைக் கூடத் தடுக்கமுடியாமை ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் பயங்கரமான பலவீனத்தையே வெளிக்காட்டுகின்றது. சிங்கள மக்கள் மத்தியிலும் அரசாங்கம் மீதான ஏமாற்றமும் எதிர்ப்பும் வலுவடைந்துள்ளன. ஏறிச்செல்லும் வாழ்க்கைச் செலவினால் சகல இன மக்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆட்சிமாற்றத்திற்கு அயராது உழைத்த சிவில் சமூக அமைப்புக்கள் தமது ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் தொடர்ச்சியாகப் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றன. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தெளிவற்றதாக இருக்கும் அதேவேளை நடைமுறையில் பழைய கொள்கையே தொடர்கிறது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து வளர்கின்றன. புவியியல்ரீதியில் பொருளாதார வளர்ச்சி மிகவும் அசமத்துவமான போக்கிலேயே தொடர்கிறது. இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி (2015) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP ல்) 40 வீதத்திற்கும் மேலான பங்கு மேல்மாகாணத்தில் இடம்பெறுகிறது. மிகுதி எட்டு மாகாணங்களில் தென், மத்திய மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களும் கூட்டாக 30 வீதத்தைப் பெறுகின்றன (தலா 10%) . எஞ்சிய மாகாணங்களில் வடமாகாணம் நாட்டிலேயே ஆகக்குறைந்த மூன்று வீதத்தையும், அதற்கு அடுத்தநிலையில் ஊவா மாகாணம் ஐந்து வீதத்தையும் அடுத்து கிழக்கு மாகாணம் ஆறு வீதத்தையும் பெறுகின்றன.  இந்தப் போக்கு நீண்ட காலமாக இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிடவேண்டும். இன்றைய சூழலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சமூக, பொருளாதாரரீதியில் இலங்கையின் மிகப் பின்தங்கிய மாகாணங்களில் அடங்குகின்றன. அத்துடன் நீண்ட போரின் விளைவாக இந்த மாகாணங்கள் விசேட பிரச்சனைகளைக் கொண்டுள்ளன.[2]

1977ல் UNP ஆட்சி அறிமுகம் செய்த பொருளாதாரக் கொள்கையே பல முரண்பாடுகளுடன் இன்றுவரை தொடர்கிறது. சென்ற நான்கு தசாப்தங்களில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிபெற்று இன்று இலங்கை கீழ்நடுத்தர வருமான நாடெனும் அந்தஸ்தினைப் பெற்றுள்ளது. ஆயினும் இதுவரையிலான பொருளாதார வளர்ச்சி மிக அற்ப தொழில் வாய்ப்புக்களையே கொடுத்துள்ளது. நாட்டின் தொழிற்படையின் 20-25 வீதத்தினர் வெளிநாடுகளிலேயே வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் மத்தியகிழக்கில் தொழில் செய்கிறார்கள். அதில் ஏறக்குறைய அரைவாசியினர் பெண்கள். இவர்களில் 80 வீதத்திற்கும் மேலானோர் வீட்டுப்பணிப் பெண்கள். வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு உதவுவதற்கென்றே ஒரு அமைச்சு இலங்கையில் இயங்குகிறது. வெளிநாடுகளில் தொழில்செய்யும் இலங்கையர்கள் அனுப்பும் பணமே நாட்டின் பிரதான அந்நிய செலாவணி வருமானங்களில் ஒன்றாகும். ராஜபக்ச ஆட்சியில் குவிந்த கடன் சுமையைக் கையாள்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கும் இன்றைய அரசாங்கம் நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரித்துள்ளது. கடன் பொறியிலிருந்து மீளும் நோக்கில் சர்வதேச நிதியத்திடம் சரணடைந்துள்ளது.  மறுபுறம் எதிர்பார்த்த அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகள் வரவில்லை. நிதிமயமாக்கல் (financialization) மேலாட்சி செய்யும் இன்றைய உலகப் பொருளாதாரத்தில் இலங்கை போன்ற ஒரு நாடு உற்பத்தி மூலதனத்தைக் கவருவது சுலபமல்ல. வேறு பல நாடுகளுடன் போட்டி போடும் நிலையிலேயே இலங்கை உள்ளது.

இத்தகைய சூழலில் அரசாங்கம் புலம் பெயர்ந்து மேற்குநாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்களை வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் பங்குதாரர்களாக வரும்படி அழைப்பு விடுத்து அதற்கும் அப்பால் சில செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது. தமிழ் டயஸ்போறாவிடமிருந்து முதலீடுகளையும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பரீதியான பங்களிப்புக்களையும் எதிர்பார்க்கிறது. இந்த அழைப்புப்பற்றிப் பார்க்கமுன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குமிடையிலான தொடர்புகள் பற்றி மற்றும் வடக்கு கிழக்கு நிலைமைகள் பற்றிச் சில விடயங்களை நினைவுகூர்தல் பயன் தருமென நம்புகிறேன்.

II

வெளிநாடுகளில் (விசேடமாக மேற்கு நாடுகளில்) வாழும் புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தவர்க்கும் தாயகத்திலுள்ள அவர்களின் உறவுகளுக்குமிடையே பன்முகத் தன்மை கொண்ட தொடர்புகள் இருப்பதும் காலப்போக்கில் இவை ஒரு நாடுகளைக் கடந்த சமூகத்தின் (transnational community) உருவாக்கத்திற்கு வழிவகுத்ததும் பலரும் அறிந்த விடயமாகும். இலங்கையில் வாழும் வடக்கு கிழக்குத் தமிழ் சமூகத்தில் ஒரு காசாதாரப் பொருளாதாரம் உருவாகியுள்ளதும் யாவரும் அறிந்ததே. போர்க் காலத்தில் நாட்டிலே பாதிக்கப்பட்டோரில் கணிசமான பகுதியினர் வெளிநாட்டிலிருந்து சென்ற பண உதவியால் காப்பாற்றப்பட்டனர். ஆனால் காசாதாரப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வடக்கு கிழக்கின் பொருளாதார விருத்திக்குப் பெருமளவில் உதவவில்லை. வெளிநாட்டிலிருந்து செல்லும் காசாதாரம் சமூக மேம்பாட்டிற்கு உதவும் அபிவிருத்திப் போக்கிற்கு உதவுமா இல்லையா என்பது உள்நாட்டு நிலைமைகளிலேயே தங்கியுள்ளது என பல சர்வதேச ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அத்தகைய அபிவிருத்திக்கு உதவும் கொள்கை மற்றும் நிறுவனரீதியான சூழல் இருக்கவில்லை என்பதே உண்மை. வெளிநாட்டுக் காசாதாரம் அங்கு உற்பத்தி மூலதனத்தின் வளர்ச்சிக்கு உதவியதையும் விடப் பெருமளவில் ஒரு நுகர்வுவாதக் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கே உதவியுள்ளது. மறுபுறம் வெளிநாட்டுக் காசாதாரம் பெருமளவில் கோவில்களைப் புனரமைக்கவும் விஸ்தரிக்கவும் புதிய கோவில்களைக் கட்டவும் பயன்பட்டுள்ளது தொடர்ந்தும் பயன்படுகின்றது.

இன்றைய வட மாகாணத்தின் அரசியல் ஒரு குழம்பிய குட்டைபோல் தெரிகிறது. மூன்றரை வருடங்களுக்கும் மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) ஆட்சியிலிருக்கும் வட மாகாணசபையிடம் மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்பட்ட ஒரு அபிவிருத்தித் திட்டம் இல்லை. அத்தகைய ஒரு திட்டம் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். அதன் அமுலாக்கலில் மத்திய அரசுடன் பிரச்சனைகள் எழுந்திருக்கலாம். அந்தக் கட்டத்தில் அபிவிருத்தித் திட்டத்தை மக்களின் ஜனநாயகப் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டத்தின் கருவியாக்கி இருக்கலாம். அதற்கு நாட்டின் ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்றிருக்கலாம். இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சிந்தனை மாகாண சபையிடம் இருக்கவில்லை.

அதேபோன்று காசாதாரப் பொருளாதாரத்தை மாகாணத்தின் அபிவிருத்திக்கு உதவும் வகையில் மாற்றியமைப்பது பற்றிய கொள்கை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாகாணத்தின் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பங்கு பற்றிய கொள்கை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாகாண சபையின் முயற்சியின் விளைவாக மக்களின் – விசேடமாகப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் – சமூக மேம்பாடு தொடர்பாகக் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் ஊழல் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த ஊழலை முதலமைச்சர் இதுவரை காணாமல் இருந்தது அதிசயமே. இதை அவரால் ஏன் முளையிலே கிள்ளிவிட முடியவில்லை? இந்த நிலை உருவானதில் அவருக்கு ஒரு பொறுப்பும் இல்லையா? இதுவரை அவரின் பொறுப்பிலிருக்கும் அமைச்சுகளின் வினைத்திறன் பற்றிய மதிப்பீடு என்ன?

மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரம் போதாது என்பதில் நியாயம் உண்டு. மத்திய அரசுக்கும் மாகாண சபைக்குமிடையிலான உறவு மிதமிஞ்சிய அசமத்துவமாயிருப்பது உண்மை.  கூடுதலான அதிகாரப்பகிர்வுக்காகப் போராடவேண்டும் என்பதிலும் நியாயமுண்டு. ஆனால் இருக்கும் அதிகாரத்தை மக்களின் மனித நன்நிலையை வளர்க்க உதவும் வகையில் பயன்படுத்துவதற்கான திட்டமெதுவுமின்றி மாகாண சபையைக் கைப்பற்றுவதனால் எதைச்சாதித்துள்ளது TNA எனும் கேள்வி நியாயமானதே. இன்று TNAன் சீர்குலைவு ஒரு துன்பியல் கலந்த நகைச்சுவை நாடகமாக அரங்கேறியுள்ளது. அதற்கு மாற்றாகத் தோன்றியிருக்கும் தமிழ் மக்கள் பேரவை (TPC) இந்த நாடகத்தின் ஒரு உப காட்சியாகச் சமாந்திரமாகத் தொடர்கிறது. பேரவை தன்னைக் கூட்டமைப்பையும் விடப் பெரிய தமிழ் தேசிய வாதியாகக் காட்ட முற்படுகிறது. இந்தக் குறுந்தேசியவாதப் போட்டியின் விளைவுகளால் இனவாத அரசியலே மேலும் பலப்பட்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மேலும் தனிமைப்படும். இதனால் வருந்தப் போவது மக்களே.

கிழக்கு மாகாணம் வடக்கைவிட பல்லினமயப்பட்டது. இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை மேலும் இனவாதப்போக்கில் அரசியல் மயப்படுத்தித் தேர்தலில் வாக்குப்பெறும் வழிகளையே எல்லாக் கட்சிகளும் பின்பற்றுகின்றன. அதேவேளை மாகாண சபையின் தலைமைக்கும் அரசாங்கத்துக்கு மிடையிலான உறவு வடக்கிலிருந்து வித்தியாசமானது. இன்று கிழக்கில் TNAயே மிகப்பெரிய தமிழ் அரசியல் அமைப்பு. அது மாகாண சபை ஆட்சியில் ஒரு பங்காளி. ஆயினும் இன்றைய தமிழ் அரசியல் (TNA,TPC), தமிழ் டயஸ்போறாவின் பங்களிப்பு மற்றும் மக்களின் மனித நன்நிலையை மையமாகக்கொண்ட அபிவிருத்திக் கொள்கை இல்லாமை பற்றி மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் கிழக்கிற்கும் பொருந்தும்.

III

அரசாங்கத்தின் அழைப்பு தமிழ் டயஸ்போறாவில் பலவிதமான கருத்துக்களையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடு ஒரு முனையிலும் முற்றாக நிராகரிக்கும் நிலைப்பாடு மறுமுனையிலும் இருக்க இந்த இரண்டிற்குமிடையே சில போக்குகளையும் காணலாம். முதலாவது நிலைப்பாட்டைக் கொண்டவர்களில் இலாபநோக்குடன் முதலீடுகள் செய்ய விரும்புவோர் அடங்குவர். வடக்கு கிழக்கில் இலாபம்தரும் முதலீடுகளை ஏற்கனவே சில புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்துள்ளார்கள். இந்த முதலீடுகள் விசேடமாக உல்லாசத்துறை சார்ந்தவை. இன்றைய ஆட்சியின் அழைப்பு இத்தகைய முதலீட்டாளர்களை மேலும் ஊக்கிவிக்கும் என எதிர்பார்க்கலாம். இவர்கள் அரசின் முதலீட்டு அதிகார சபையின் (Board of Investment ன்) அனுசரணையுடன் தமது முதலீடுகளைச் செய்யலாம். அரசாங்கத்தின் அழைப்பை முற்றாக நிராகரிப்பவர்கள் பொதுவாகத் தீவிர தமிழ்தேசியவாத உணர்வினால் உந்தப்படுகின்றனர்.

இடைப் போக்குகளில் பரவலாகக் கேட்கும் ஒரு கருத்து இருக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் சமூகமேம்பாட்டிற்கு உதவும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதாகும். போரினாலும் வேறுகாரணிகளாலும் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் நன்நிலையில் அக்கறை கொண்ட டயஸ்போறா தமிழர்களில் பெரும்பான்மையினர் அல்லது கணிசமான தொகையினர் இத்தகைய கருத்துடன் ஒத்துப்போவார்கள் எனக்கருத இடமிருக்கிறது. வாழ்வாதாரவிருத்தி, இளம் சந்ததியினரின் கல்வி, தொழில்பெறும் தகைமைகள் மற்றும் மேல்நோக்கிய சமூக நகர்ச்சி போன்றவற்றிற்கு இவர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இத்தகைய கருத்துடையோர் மத்தியில் ஒரு சாரார் அரசியலை முற்றாக ஒதுக்கியே சமூக மேம்பாட்டைப் பார்க்கிறார்கள். மற்றயோர் அரசியல்ரீதியில் சிந்திப்போர். அரசாங்கம் பற்றித் தம் விமர்சனங்களைக் கொண்டுள்ளோர். அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் அல்லது அதைப் பின்தள்ளாத வகையிலயே சமூகமேம்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் எனும் பார்வையைக் கொண்டுள்ளோர். இருசாராரும் அரசுசாரா மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுக்குடாகவே செயற்பட விரும்புகின்றனர். இத்தகைய தொடர்புகளைப் பல குழுக்கள் ஏற்கனவே கொண்டுள்ளன. ஆயினும் நிறுவனங்களின் மற்றும் மனிதர்களின் விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவையும் ஆற்றல்களையும் விருத்தி செய்யும் திட்டங்களைப் பொறுத்தவரை அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவேண்டிய தேவையையும் இவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

எனது அபிப்பிராயத்தில் போரினாலும் வேறுகாரணிகளாலும் இடர்பாட்டிற்குள்ளாயிருக்கும் மக்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட விரும்பும் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியதே. அதேவேளை இந்த மக்களை உள்வாங்கியிருக்கும் அதிகார உறவுகளைக் கணக்கில் எடுக்காது அவர்களின் நிலைமைகளைச் சரியாக அறிந்து கொள்ள முடியாது. அவர்களை அந்த உறவுகளிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. அந்த உறவுகளைப் புரிந்து கொள்வது அவர்களின் அன்றாட போராட்டங்களின் தன்மைகளையும் அந்தப் போராட்டங்களின் சமூகரீதியான அரசியல்ரீதியான முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள உதவும். போரினால் பாதிக்கப்பட்டோர் எனும்போது அது ஒரு மிகப்பரந்த வகைப் படுத்தலைக் குறிக்கலாம். இந்த வகையுள் போர்ப் பிரதேசங்களில் வாழும் எல்லோரும் அடங்குவர். ஆனால்  ‘பாதிக்கப்பட்டோர்’ எனும் போது மனித நன்நிலைகுன்றிய, உரித்துடமைகள் இழந்த நிலைமைகளில் வாழ்வோரையே பலரும் மனதில் கொண்டுள்ளார்கள் எனக் கருதுகிறேன். இந்த வகையினர் எப்படி அவர்களின் வாழ்நிலைகளுக்காளானார்கள்? ஏன் அந்த நிலைமைகளில் தொடர்ந்தும் இருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இல்லாமல் அவர்களின் அன்றாட வாழ்வுப் போராட்டங்களைப் புரிந்து கொள்ள முடியாது. அத்தகைய புரிந்துணர்வு அவர்களின் நிலைமைகளைத் தனியே ஒரு மனிதாபிமானப் பிரச்சனையாகப் பார்ப்பதற்கும் அப்பால் அவற்றின் வர்க்க, பால், சாதி, பிரதேச ரீதியான பரிமாணங்களை அறிந்து கொள்ள உதவும். இப்படிப் பார்க்கும்பொழுது மக்களுக்கும் அரசுக்குமிடையிலான நேரடியான முரண்பாடுகளையும் மற்றைய சமூக, பொருளாதார முரண்பாடுகளையும் இனம் காணமுடியும். இந்த உறவுகளெல்லாம் அதிகார உறவுகள் என்பதும் தெளிவாகும். இந்த மக்களின் அன்றாட போராட்டங்களில் வாழிட உரிமை, வாழ்வாதார அபிவிருத்தியும் பாதுகாப்பும், சுரண்டல் மிகுந்த கடன் உறவுகளிலிருந்து விடுபடுதல், இளம் சந்ததியின் உடல் நலன், கல்வி மற்றும் மனித ஆற்றல்களின் விருத்தி, மனித மற்றும் சமூகப் பாதுகாப்பு உரித்துடைமைகள், சூழல் பாதுகாப்பு போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தன. இந்த அன்றாடப் போராட்டங்கள்  பொதுவாகத் தனிமனித, குடும்ப மட்டங்களிலும் சில சமயம் குறிப்பிட்ட கிராமிய அல்லது பிரதேச மட்டத்தில் கூட்டுச் செயற்பாடுகளுக்கூடாகவும் இடம்பெறுகின்றன. உதாரணங்களாக இராணுவம் கைப்பற்றியுள்ள தமது நிலங்களுக்கான மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அணிதிரட்டல்களும் போராட்டங்களும் பாதிக்கப்பட்டொரினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் கூட்டுச் செயற்பாடுகளாகும். துரதிஷ்டவசமாகப் பொதுவான பிரச்சனைகள் உள்ள வேறு பகுதியினரை அணிதிரட்டி அவர்களின் கோரிக்கைகளுக்குக் கூட்டான குரல் கொடுக்கும் அமைப்புக்கள் இல்லை. உதாரணங்களாக வறுமையில் வாடும் பெருந்தொகையான பெண்தலைமைக் குடும்பங்கள் மற்றும் முன்னைநாள் போராளிகளைக் குறிப்பிடலாம். அதேபோன்று கல்வி, சுகாதார, சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாத கிராமங்களையும் குறிப்பிடலாம்.

இங்கு சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ள விடயங்கள் ஆழ ஆராயப்படவேண்டியவை. அத்தகைய அறிவின் உதவியுடனேயே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் தமது திட்டங்களை வகுத்து நாட்டில் பங்காளர்களைத் தேட வேண்டும். இனங்களுக்கிடையிலான குரோதங்களை வளர்க்காது அதற்கு மாறாக புரிந்துணர்வையும் சமத்துவத்தையும் வளர்க்கும் அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். செயற்பாடுகளைச் சட்டபூர்வமான வழிகளில் சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான சூழலை மத்திய அரசாங்கமும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளும் உருவாக்கவேண்டும். இங்கு அரசியலைத் தவிர்க்கமுடியாது. அரசாங்கத்துடன், மாகாண சபைகளுடன், வேறு அரசியல் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் தேவைப் படலாம் ஆனால் அரசாங்கத்தின் பங்காளராக வேண்டியதில்லை. உண்மையான பங்காளர்கள் வேறு மட்டங்களில் அரசாங்கத்திற்கு வெளியேதான் உள்ளார்கள். அங்கு அன்றாடு போராடிகொண்டிருக்கும் மக்கள் மற்றும் அவர்களின் சுயமுனைப்புகளை ஊக்குவிக்கும் அமைப்புக்கள், நாட்டில் சகல மக்களின் சமூக, அரசியல், பொருளாதார ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள், முற்போக்கு அறிவாளர்களின் அமைப்புக்கள், இனவாதங்களுக்கு எதிரான அமைப்புக்கள் போன்றவைதான் பங்காளிகளாக வேண்டும்.

[1] பார்க்க:  https://samuthran.net/2017/04/24/அபிவிருத்தி-மனித-மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா?

[2] 2015ல் மாகாண GDPன் பொருளாதாரத் துறைரீதியான பங்குகளைப் பொறுத்தவரை கிழக்கில் விவசாயம் 12.1%, ஆலைத்தொழில் (industry) 31.8%, சேவைகள் 48.5%; வடக்கில் விவசாயம் 15%, ஆலைத்தொழில் 17.2%, சேவைகள் 60.6%.

 

நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டுமா? 1989 ஜூனில் யாழ்ப்பாணத்தில் கவிஞர் சேரனுடன் இடம்பெற்ற ஒரு உரையாடல்

 சமுத்திரன்

2017 May

1989 ஆறாம் மாதம். ஒரு ஐரோப்பிய நிறுவனத்தின் அபிவிருத்தித் திட்டம் ஒன்றினை மதிப்பீடு செய்யும் ஆலோசகராக நோர்வேயிலிருந்து எனது பிறந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு செல்கிறேன். 1987ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) வடக்கு-கிழக்கில் இருந்த காலம். ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி (EPRLF) மாகாண சபை ஆட்சியிலிருந்த காலம். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இலங்கை வான்படை ஒரு விமான சேவையை நடத்திக் கொண்டிருந்த காலம். நான் அதைப் பயன்படுத்தி யாழ் சென்றேன். அந்த விமானப் பயணம் ஒரு மறக்கமுடியாத அனுபவம். விமானத்திலிருந்த ஆசனங்களையும் விட அதிகமான பயணிகள். மூவருக்குரிய ஆசனங்களில் நால்வர் அமர்ந்திருந்தோம். இந்த நிலையில் ஆசனப் பட்டியை யாரும் கட்டமுடியவில்லை. கட்டும் படி பணிக்கப்படவும் இல்லை. அது மட்டுமல்ல. சிலர் நின்றபடி பயணம் செய்தனர். அப்படித்தான் ஏழு வருடங்களின் பின் யாழ் சென்றேன். அங்கு நான் வாழ்ந்த ஏழு நாட்களில் எத்தனையோ அனுபவங்கள்.[i]

கந்தர்மடத்தில் எனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்தேன். பகல் பொழுது முழுவதும் பெரும்பாலும் எனது தொழில் தொடர்பான பிரயாணங்கள், நேர்காணல்கள், கலந்துரையாடல்கள். மாலையில் சந்தர்ப்பம் கிடைத்த போது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சந்திப்புகள். ஆனால் மாலை ஆறுமணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. பொதுவாக இந்தச் சந்திப்புகளை மாலை ஆறு மணிக்கு முன்னரே முடித்து விடுவேன். ஆனால் அன்று மாலை ஒரு வித்தியாசமான ஒழுங்கு. எனது நண்பர்கள் மௌனகுருவும் சித்திராவும் மாலை உணவுக்கு அழைத்திருந்தார்கள். இளம் கவிஞர் சேரனையும் அழைத்திருப்பதாகக் கூறினார்கள். அன்றிரவு அவர்கள் வீட்டில் தங்கி மறுநாள் காலை ஊரடங்குச் சட்டம் முடிந்தபின் நான் சித்தப்பாவீட்டிற்குத் திரும்பலாம் எனும் மௌனகுருவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டேன். நான் சேரனின் கவிதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன் ஆனால் நேரில் சந்தித்துப் பேசியதில்லை. அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதையிட்டு மகிழ்வுற்றேன்.

அன்று மௌனகுரு வீட்டிற்குப் போகுமுன் யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்துறை விரிவுரையாளரான நண்பர் சிறீதரனைச் சந்தித்தேன். அவர் அப்போது மனித உரிமைகளுக்கான யாழ் பலகலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர் என்னை மௌனகுரு வீடுவரை ஆறு மணிக்குமுன் கூட்டிச்சென்று விடைபெற்றார். அங்கே மௌனகுரு, சித்திரா அவர்களின் மகன் சித்தார்த்தன், சேரன் என்னை வரவேற்றனர். சித்தார்த்தன் அப்பொது யாழ் இந்துக் கல்லூரி மாணவன் என நம்புகிறேன். எனது இன்னொரு நெருங்கிய நண்பன் நுஃமானும் அப்போது யாழ் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவர் மௌனகுரு வீட்டில்தான் குடியிருந்தார். ஆனால் அன்று அவர் தனது சொந்த ஊரான கல்முனைக்குச் சென்றுவிட்டதாக அறிந்தேன்.

ஆரம்பத்தில் நமது சம்பாசனைகள் பல விடயங்களைத் தொட்டன. ஆயினும் மாலை உணவருந்தும் போதும் அதற்குப் பின்பும் இலங்கையின் அன்றைய அரசியல் நிலைமை, விடுதலைப் போராட்டத்தின் போக்குகள், இந்திய இராணுவத்தின் நடைமுறைகள், மற்றும் வடக்கு – கிழக்கு மாகாண சபையை ஆளும் EPRLFன் நடைமுறைகள் ஆகியவற்றைச் சுற்றியே கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. ஒரு கட்டத்திற்குப்பின் எல்லோரும் பங்குபற்றிக் கொண்டிருந்த கலந்துரையாடல் பிரதானமாக எனக்கும் சேரனுக்குமிடையிலான விவாதமாக உருமாறத் தொடங்கியது. அதேவேளை அது மிகவும் பண்புடனும் நட்புணர்வுடனும் தொடர்ந்தது.  இளம் சித்தார்த்தனும் தன் கருத்துக்களை முன்வைத்தார். முழு இரவுக்கூடாகத் தொடர்ந்த அந்த விவாதத்தில் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் அதி முக்கிய இடத்தைப் பெற்றன. விவாதம் சற்றுச் சூடுபிடித்து நமது குரல்கள் உயரும்போது சித்தார்த்தன் எழுந்து நின்று ‘கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ. அடக்கி வாசியுங்கோ.’ எனக்கூறி வெளியே இந்திய இராணுவத்தினர் அல்லது EPRLFன் படையினர் நடமாடிக் கொண்டிருக்கலாம் என்பதை நினைவூட்டிக் கொள்வார்.

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பது பற்றி நமக்கிடையே பெரிய வேறுபாடுகள் இருக்கவில்லை. ஆனால் விவாதம் இலங்கை நிலைமைகளில் அந்த உரிமையை அரசியல்ரீதியில் எப்படிப் பயன் படுத்துவது எத்தகைய தீர்வு நியாயமானது போன்ற கேள்விகளிலேயே நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. சேரன் பிரிந்து போகும் உரிமைக்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். நான் ஒரு நாட்டிற்குள் சமஷ்டி, பிரதேச சுயாட்சி போன்ற தீர்வுக்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தேன். சேரனின் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றை ஏற்கனவே வாசித்திருந்ததால் தேசிய இனப்பிரச்சனை பற்றிய அவருடைய பார்வையை அறிந்திருந்தேன். அவர் தமிழ் குறுந்தேசிய வாதத்தை ஏற்காதவர் என்பதையும் நான் வாசித்த அவருடைய எழுத்துகளிலிருந்து அறிந்திருந்தேன். ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற தலைப்பில் வெளிவந்த ஈழத்துக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புக்குச் சேரன் எழுதிய முன்னுரை பற்றி நான் நோர்வேயில் சில நண்பர்களுடன் உரையாடியுள்ளேன். அதில் அவர் ‘போராட்டத்துள் ஒரு போராட்டம்’ பற்றிக் கூறியது மற்றும் தமிழ் ஈழப் போராட்டம் தென் ஆசியாவிற்கே ஒரு விடுதலைப் பொறியை ஏற்றும் என்ற அவரின் எதிர்பார்ப்பு எல்லாம் நினைவுக்கு வந்தன.

விவாதம் தொடர்கிறது. வடக்கு – கிழக்கில் தமிழ் ஈழத்தின் சாத்தியப்பாடு பற்றி ஆராயும்போது அங்குவாழும் முஸ்லிம் மக்களின் அந்தஸ்து ஒரு பொருளாகியது. அவர்கள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. அவர்களின் ஆதரவைப் பெறமுடியும் எனச் சேரன் நம்பியிருக்கலாம். இந்த விடையம்பற்றிப் பேசும் போது நான் சேரனைப் பார்த்து ‘உங்கள் நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டும் தானா?’ எனக் கேட்டேன். நுஃமான் சேரன் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவர். அவரைச் சேரன் மாமா என அழைப்பார். சித்தார்த்தனும் நுஹ்மானை மாமா என்றே அழைப்பார். ஒரு அரசியல் மட்டத்தில் இடம்பெற்ற விவாதத்தில் என்னிடமிருந்து அத்தகைய ஒரு கேள்வியைச் சேரன் எதிர்பார்த்திருக்க மாட்டார் என நம்புகிறேன். அவரின் முகத்தில் ஒரு மாற்றம். ஒரு கண நேரம் பேச்சிழந்த நிலை. அந்த அமைதிக்குப்பின் ‘இப்படி ஒரு பெரிய ஆயுதத்தை பயன்படுத்தி விட்டீர்கள்’ என்றார். சித்தார்த்தனும் எனது கேள்வியால் அதிர்ந்துபோனதுபோல் பட்டது. காலை நாலு மணியாகிவிட்டபோதும் நமது விவாதம் முடிவு பெறாத நிலையில் கொஞ்ச நேரமாயினும் தூங்குவோம் என முடிவெடுத்தோம். இந்த உரையாடலை பதிவு செய்திருக்க வேண்டுமெனச் சித்தார்த்தன் சொன்னார். மறக்கமுடியாத அனுபவம். மறுநாட்காலை எனக்கு வேறு வேலைகளிருந்ததால் காலை உணவை முடித்துக் கொண்டு விடை பெற்றேன். அந்த சந்திப்புக்குப்பின் சேரனுடன் நல்ல தொடர்பிருந்தது. அவர் ‘இனங்களுக்கிடையே நீதி மற்றும் சமத்துவத்துக்கான இயக்கம்’ பிரசுரித்த ‘சரிநிகர்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அந்தப் பத்திரிகையை ஒழுங்காக எனக்குக் கிடைக்கும்படி செய்தார்.

1990 பத்தாம் மாதம் 22ம் திகதி விடுதலைப் புலிகள் பாரம்பரியமாக வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை நிர்ப்பந்தமாக வெளியேற்றினர். தமது தாயகத்திலிருந்து அவர்கள் விரட்டப்பட்ட அந்தப் பயங்கர சம்பவத்திற்குப் பின் வான்தபாலில் வந்த ‘சரிநிகர்’ பத்திரிகையை ஆவலுடன் திறக்கிறேன். அதிலிருந்து மடிக்கப்பட்ட ஒரு சிறு கடதாசித் துண்டு கீழே விழுகிறது. அதை எடுத்து விரிக்கிறேன். சேரனிடமிருந்து இரு வரிகள். அந்தச் சிறு கடிதத்தை நான் பலதடவை வாசிக்கிறேன். ‘நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் வேண்டுமா என அன்று கேட்டீர்கள். இப்போது சொல்கிறேன் அது ஒரு போதும் வேண்டாம்.’ அந்தச் செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. ஆயினும் என் கண்கள் கலங்கின.

 

[i] அந்த அனுபவங்களின் சில அம்சங்கள் பற்றி அப்போதே பின்வரும் கட்டுரையை வரைந்துள்ளேன். N. Shanmugaratnam, Seven Days in Jaffna – Life under Indian occupation, Race & Class, 31(2),1989

தோழர் விசுவானந்ததேவன் – ஓர் அரசியல் உறவு பற்றிய மீள்சிந்திப்பு

1983 யூலை வன்செயல்கள் இலங்கைத்தீவை உலுக்கிய போது நான் ஜப்பானில் வாழ்ந்து வந்தேன். அந்த நாட்களில் ஒரு ஜப்பானியக் கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். தாய் நாட்டிலிருந்து வந்த செய்திகளினால் மிகவும் தாக்கப்பட்டிருந்தேன். என் கள ஆய்வினைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு இலங்கையின் அரசியல் நிலை மற்றும் தேசிய இனப்பிரச்சனை பற்றி சிந்திக்க முற்பட்டேன். ஒரு நீண்ட கட்டுரை அதன் விளைவாகியது. அது சிங்களப் பெருந்தேசியவாதம் பற்றியது. கட்டுரையை எழுதிய பின்னர் சென்னைக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அங்கே இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழர் ஒருவரை சந்தித்தபோது அன்று அவரது கட்சியின் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டிக்கும் பேரணி ஒன்று இடம் பெறுவதாக கூறி என்னையும் அதில் பங்குபற்றும் படி அழைத்தார். அதனை ஏற்றுக் கொண்டு நான் அவருடன் அந்த பேரணியில் பங்குபற்றினேன். கட்சியின் செங்கொடிகளுடனும் பதாகைகளுடனும் பேரணி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளானோர் பங்கு பற்றினர்.

பேரணி முடிந்த பின்னர் பலர் சமீபத்தில் உள்ள பூந்தோட்டத்தில் ஓய்வெடுக்கச் சென்றனர். நானும் எனது இந்திய தோழருடன் அங்கு சென்றேன். அங்கே தான் நீண்ட காலத்திற்கு பின் விசுவாவுடன் எனது எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. நீண்டு வளர்ந்து விட்ட தலைமுடியும் தாடியுமாக அவர் காட்சி தந்தார். அந்தச் சந்திப்பு நம்மிருவருக்குமிடையிலான உறவைப் புதுப்பிக்கும் நிகழ்வாகியது.

நான் சென்னையில் தங்கியிருந்த நாட்களில் நம்மிடையே நீண்ட உரையாடல்கள் இடம் பெற்றன. நான் எழுதிய கட்டுரையை வாசித்து அதுபற்றி அவரது அபிப்பிராயத்தைக் கூறும்படி கேட்டேன். அவர் சம்மதித்தார். மறுநாள் அவரை சந்தித்தபோது கட்டுரையை தான் வாசித்ததாகவும் அது கூடியவிரைவில் பிரசுரிக்கப்படவேண்டும் எனவும் கூறினார். பிரசுரிப்பதற்கு வேண்டிய உதவிகளையும் செய்வதாகக் கூறினார். கட்டுரையைக் காவ்யா பதிப்பகத்தினர் நூல் வடிவில் வெளியிட்டனர். எனது நூல் பற்றி கிரிதர் எனும் புனைபெயரில் விசுவா ‘புதுசு’ எனும் சஞ்சிகையில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

ஆனால் விசுவாவுடன் ஏற்பட்ட தொடர்பு முக்கியமாக அவர் தலைமையில் உருவாகிக் கொண்டிருந்த N.L.F.T இயக்கம் பற்றியது என்பதைக் குறிப்பிட வேண்டும். இதுபற்றி நிறைய கலந்துரையாடினோம். அவர் இலங்கையின் அரசியல் போக்குகள், தேசிய இனப்பிரச்சனையின் தன்மைகள் மற்றும் பிராந்திய அரசியல் நிலைமை, இந்தியாவில் அப்போது இடம்பெற்ற போராட்டங்கள் போன்ற விடயங்களை ஆழ ஆராய்ந்துள்ளார் என்பதை அறிந்தேன். நமது சம்பாசனைகளில் இந்த விடயங்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் இலங்கைப் புரட்சிக்குமிடையிலான உறவு சிங்கள முற்போக்கு சக்திகளுடன் தொடர்புகளை வளர்ப்பது பற்றி, மற்றும் இந்திய அரசின் நேரடியான மறைமுகமான உதவிகளுடன் தமிழ்நாட்டில் முகாமிட்டிருக்கும் தமிழீழ விடுதலை இயக்கங்களின் அரசியல் பற்றி நிறைய பேசினோம். அன்றைய சூழலில் ‘ஒரு மாக்சிச-லெனினிச’ அமைப்பினை இந்திய அரசும், ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டு ஆளும் மற்றும் பிரதான திராவிடக் கட்சிகளும் எப்படிப் பார்ப்பார்கள்? அத்தகைய ஒரு வெளிநாட்டு அமைப்பு இந்தியாவில் இயங்க முடியுமா? இந்தக் கேள்விகள் எழுந்தன. இவைபற்றி கொள்கை ரீதியில் விசுவா தெளிவாகவே இருந்தார். ஆனால் நடைமுறை ரீதியான பிரச்சனைகளைக் கையாளுவது பற்றி அவருக்கும் சந்தேகங்கள் குழப்பங்கள் இருந்திருக்கலாம்.

இந்தவிடயங்கள் பற்றி வேறுபல இடதுசாரிக் குழுக்களுடனும் தனிநபர்களுடனும் அவர் கலந்துரையாடியிருப்பார் என்று நம்புகிறேன். அந்த சந்திப்பினைத் தொடர்ந்து நம்மிருவருக்குமிடையே கடிதப் போக்குவரத்து இருந்தது.

மேற்குறிப்பிட்ட கேள்விகளும் அவற்றுடன் தொடர்புடைய வேறு பல கேள்விகளும் அந்தக் காலகட்டத்தில் முக்கியத்துவம் மிக்கவையாக விளங்கின. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஒரு வரலாற்று ரீதியான சந்தியில் நின்றது. அது எந்தத் திசையில் நகரும்? இந்திய வல்லரசின் கொள்கைகளும் உபாயங்களும் இயக்கங்களையும் போராட்டத்தின் அரசியல் போக்கையும் எப்படி பாதிக்கும்? இப்படிப் பல கேள்விகள்.

ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை அதுவரை மேலாட்சி நிலைபெற்றுள்ள குறுகிய தேசியவாதத்திலிருந்து விடுவித்து மக்கள் ஜனநாயகப்புரட்சியின் பாதையில் முழு இலங்கையின் சமூக மாற்றத்திற்கு உதவக் கூடிய வகையில் முன்னெடுக்க கூடிய அரசியல் கொள்கையுடைய இயக்கம் ஒன்று தேவைப்பட்டது. இந்த தேவையை விசுவா நன்கு கிரகித்திருந்தார் என நான் நம்பினேன் நம்புகிறேன்.

ஆயினும் பின்நோக்கிப் பார்க்கும் போது ஆரம்பக் கட்டத்திலிருக்கும் N.L.F.T போன்ற ஓர் இயக்கம் ஏற்கனவே மேலும் பலம் பெற்று வருகின்ற குறுந்தேசியவாத அலைக்கும் அதைத் தன்னாட்சிக்குக் கீழ்ப்படுத்திக் கருத்தியல் கருவியாக்கிக் கொண்ட சுத்த இராணுவ வாதத்திற்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் இந்த எதிர்நீச்சலில் N.L.F.T தன் உள்ளார்ந்த முரண்பாடுகளால் துன்பகரமாக உடைந்து போயிற்று. இயக்கத்தின் இலட்சியத்தைப் பாதுகாத்து முன்னெடுக்கும் நோக்கில் விசுவா P.L.F.Tஐ உருவாக்கினார். N.L.F.T விரைவில் செயலிழந்து தன்னைத்தானே அழித்துக் கொண்டது. P.L.F.T அளவுரீதியல் ஒரு சிறிய அமைப்பாகவே இருந்தது. ஆனால் விசுவாவையும் அவருடன் பயணித்த தோழர்களையும் அழிக்க வேண்டுமென முடிவெடுத்து திட்டமிட்டு செயற்பட்ட சக்திகள் அவர் கொண்டிருந்த அரசியல் பார்வையையும் அதன் அடிப்படையில் அவர் கட்டியெழுப்ப எடுத்த செயற்பாடுகளையும் கண்டு பயந்தனர் என்பது தெளிவு. விசுவாவின் அறிவாற்றலும் திட சித்தமும் அவர்களை கலங்க வைத்தன.

விசுவாவின் நிலைப்பாட்டினால் நானும் ஆகர்சிக்கப்பட்டேன். அவர் கேட்டுக்கொண்டபடி N.L.F.T இன் (பிளவிற்குமுன்) வேலைத்திட்டம் பற்றி ஒரு ஆக்கபூர்வமான விமர்சனத்தை முன்வைத்தேன். இதுபற்றி ‘புரட்சிகர அரசியல் முதன்மை பெற’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து புதிய ஜனநாயகப் புரட்சி பற்றியும் எழுதினேன். இந்தக் கட்டுரைகள் ஏற்கனவே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆட்கொண்டிருந்த குறுந்தேசியவாதம் மற்றும் இராணுவ வாதம் ஆகியவற்றை எதிர்க்கும் அறிவுரீதியான பங்களிப்புகளாக வரையப்பட்டன. இவற்றில் நான் கூறிய கருத்துக்களையும் வாதங்களையும் விசுவா ஏற்றுக் கொண்டார்.

அப்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய எனது பார்வையும் அது பின்னர் மாற்றம் அடைந்தது பற்றியும் ஒரு சிறு குறிப்பு அவசியமாகிறது. நீண்டகாலமாக நான் வடக்கு கிழக்கின் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற கருத்தினை நிராகரித்து வந்தேன். முழு இலங்கையும் சார்ந்த அடிப்படையான சமூக, அரசியல் மாற்றத்திலேயே அந்நாட்டில் வாழும் சகல இனங்களின் விமோசனமும் தங்கியுள்ளது என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தேன். 1977க்கு பின்னர் தேசிய இனப்பிரச்சனை பற்றிய வாதங்கள் இடதுசாரிகள் மத்தியில் வலுப் பெற்றன. அதற்கு முக்கிய காரணமாக இருந்த வடக்கில் எழுந்து வரும் இளைஞர் குழுக்களின் போக்குகளை அவதானிக்க தொடங்கினேன். சில இளைஞர் குழுக்கள் இடதுசாரிக் கருத்துக்கள் பற்றியும் மற்றய நாடுகளில் இடம் பெற்ற அல்லது இடம்பெற்று வரும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பற்றியும் ஆர்வம் காட்டின. மாக்சியத் தத்துவம் பற்றியும் தேசிய இனப்பிரச்சனை பற்றி மாக்சின், லெனினின் கருத்துக்களையும் அறிய விரும்பின. இந்தக் குழுக்கள் பழைய தேசியவாதத் தலைமையை விமர்சித்தன நிராகரித்தன. இந்தப் போக்குகள் பற்றி அப்போது ஆங்கிலத்தில் சில கட்டுரைகளை எழுதியிருந்தேன். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய எனது நிலைப்பாட்டினை மீள் பரிசீலனைக்குள்ளாக்கினேன். அவர்கள் ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்பட்டுள்ள ஓர் இனம் என்பதை முன்பிருந்தே ஏற்றிருந்தேன். ஆனால் தமிழ் தேசியவாதிகளின் தேசிய இனக் கோட்பாட்டை நான் ஏற்கவில்லை. அவர்களின் ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன குறை’ என்ற கோசம் மிகவும் பிற்போக்குத் தனமானது என்பதே அன்றும் இன்றும் எனது நிலைப்பாடு.

ஆனால் வடக்குக் கிழக்கில் தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு லெனினிசப் பார்வையில் நியாயம் உண்டு என்ற நிலைப்பாட்டிற்கு படிப்படியாக வந்தேன். ஜரிஷ் பிரச்சனை பற்றி மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளும் எனது சிந்தனைக்கு உதவின. 1983 ல் வெளிவந்த Benedict Anderson எழுதிய Imagined Communities என்ற நூலும் என்னைக் கவர்ந்தது.

அன்றைய காலகட்டத்தில் தேசிய இனப்பிரச்சனை பற்றி நான் விசுவாவின் கருத்துகளுடன் பெருமளவில் ஒத்துப் போனதைப் புரிந்து கொள்ள இந்தப் பின்னணி உதவியாயிருக்கும் என நம்புகிறேன். ஆனால் இந்தக் கருத்து ரீதியான நிலைப்பாட்டிற்கும் மேலாதிக்க நிலை பெற்றுவரும் போராட்ட போக்கிற்குமிடையே ஒரு வெளி தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது எனும் யதார்த்தத்தை மறந்துவிடலாகாது.

ஆரம்ப கட்டத்திலேயே பிளவுபட்ட ஒரு சிறிய அமைப்பின் ஒரு பகுதியை அதாவது P..L.F.T ஐ வளர்த்தெடுக்க விசுவா தீவிரமாக செயற்பட்டார். மற்ற அமைப்புகளுக்கு பெருமளவில் பொருளாதார ரீதியான மற்றும் இராணுவ ரீதியான உதவிகள் கிடைத்தன. அளவு ரீதியிலும் இராணுவ பலத்திலும் அவை பெரிய நிறுவனங்களாகி விட்டன. அவை இந்திய அரசுடனும் தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளுடனும் தமது உறவுகளை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. விசுவாவின் அணுகுமுறையோ முற்றிலும் வேறானது. அவர் இந்தியாவிலுள்ள புரட்சிகர அமைப்புகள் மற்றும் விடுதலை இயக்கங்கள் மீது அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தார். அவற்றுடன் உறவுகளைத் தேடுவது அவருடைய அரசியல் கொள்கைக்கு உகந்ததாக இருந்தது. இந்த வேறுபாடு மிகவும் அடிப்படையானது. இதே போன்று தென்னிலங்கையின் அரசியல் போக்குகள் பற்றியும் அவர் ஆழமாக அறிந்திருந்தது மட்டுமன்றி அங்குள்ள முற்போக்கு சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது பற்றியும் ஆவலாயிருந்தார். மேலாட்சிச் செல்வாக்கு பெற்றிருந்த தமிழ் தேசியவாதத்திற்கும் விசுவாவின் அரசியல் நிலைப்பாட்டிற்குமிடையே இணைத்து வைக்க முடியாத முரண்பாடு இருந்தது. இதுவே தேசியவிடுதலை பற்றிய அவருடைய நிலைப்பாட்டினை நெறிப்படுத்தியது என்பதே எனது கணிப்பு.

ஆகவே இலங்கை அரசு, இந்திய அரசு மட்டுமல்லாது விடுதலைப்புலிகள் மற்றும் மற்றைய அமைப்புகளாலும் அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார் என்பதைப் புரிந்து கொள்வதில் பிரச்சனை எழ இடமில்லை. அவருக்கும் அவர் தலைமை தாங்கிய ஆரம்பகட்டத்திலிருந்த அமைப்புக்கும் பாரதூரமான தீங்கினை விளைவிப்பதில் பல்வேறு சக்திகள் ஈடுபட்டிருந்தன என நம்பலாம். 1986 ல் விசுவா கொலை செய்யப்பட்டதுடன் அவர் முன்னெடுத்த முயற்சிகள் எல்லாம் ஸ்தம்பிதமாயின. பின்நோக்கிப் பார்க்கும் போது விசுவாவின், அவருடைய P.L.F.T ன், சகல முயற்சிகளும் ஆரம்பக் கட்டங்களுக்கப்பால் தொடரமுடியாத ஒரு முடிவைப் பெற்றன எனலாம். விசுவாவின் அரசியல் வாழ்க்கை நீளமானது. அவர் மாணவப் பராயத்திலிருந்தே இயக்க அரசியலில் ஈடுபட்டவர். ஆனால் அவரது கொலை ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை கட்டியெழுப்ப அவர் எடுத்த முயற்சிக்கு ஒரு சில வருடங்களுக்கு அப்பால் தொடரமுடியாது முற்றுப்புள்ளி வைத்தது. அவர் பயங்கர பிற்போக்கு அலைகளுக்கெதிராக நீச்சல் செய்யத் துணிந்தார். அவரின் முடிவு ஈழத்தமிழரின் போராட்டம் மீளமுடியாதபடி திசைமாறி விட்டது எனும் பயங்கரமான உண்மையின் குறியீடு போல் அமைந்தது.

இந்தக் குறுகிய வரலாற்றினைப் பலர் மறந்திருக்கலாம். இன்னும் பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம் ஆனால் தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தின் வரலாறு ஒரு திசைமாறிய போராட்டத்தின் வரலாறாகியதன் விளைவுகளை இலங்கைத் தமிழ் மக்கள் இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளைவுகளின் தாக்கங்கள் பற்றி ஆழப்பார்த்தல் அவசியம். ஆயினும் அதை இந்தக் கட்டுரையில் செய்ய முடியாது. அதன் சில முக்கிய அம்சங்கள் பற்றி குறிப்பாக நிலப்பிரச்சனை, அரசியல் குடியேற்றத்திட்டங்கள், சர்வதேச மட்டும் உள்நாட்டு புலம்பெயர்வு, காசாதாரப் பொருளாதாரத்தின் விளைவுகள் இவையெல்லாம் ‘தாயகம்’ என வடக்குக் கிழக்கு தமிழர்கள் கோரிய ஆள்பரப்பில் ஏற்படுத்தியுள்ள புவியியல் ரீதியலான மாற்றங்கள் போன்றவை பற்றி நான் வேறு விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளேன். இங்கே சில விடயங்களை மட்டும் சுருக்கிக் கூற விரும்புகிறேன்

இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக ஆட்சி செலுத்திய அரசாங்கங்களின் கொள்கைகளினால் மற்றும் நீண்ட காலப் போரினதும் விடுதலைப்புலிகளின் இராணுவ மயமாக்கப்பட்ட கொள்கைகளின், நடைமுறைகளின் விளைவுகளாலும் தேசிய இனப்பிரச்சனை தன்மை ரீதியான மாற்றங்களை கண்டுள்ளது. ‘தேசம்’ ‘அடையாளம்’ எனும் போர்வைகள் வடக்குக் கிழக்கு தமிழர்களை குறுந்தேசியவாத சிந்தனைக்குள் சிறை வைத்தன. இதனால் இலங்கையிலுள்ள மற்றைய இனங்களான முஸ்லீம்களை மற்றும் மலையகத் தமிழர்களை இந்த ‘விடுதலைப் போராட்டத்தினால்’ ஆகர்சிக்க முடியவில்லை. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கான சக்திகளுடன் ஆக்கபூர்வமான உறவுகளை வளர்க்க முடியவில்லை. ஆரம்பக் கட்டங்களில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் நியாயப்பாட்டினை ஏற்றுக் கொண்ட இடதுசாரி சிங்களவர்களைக்கூட வென்றெடுக்க முடியாத அந்த ஆயுதப் போராட்டம் மறுபுறம் ‘தேசிய அடையாளம்’ எனும் கருத்தியல் போர்வையினால் தமிழர் சமூகத்திற்குள்ளே இருக்கும் வர்க்க, சாதி, பால் ரீதியான வேறுபாடுகளை மறைப்பதில் அதிகார நிலை பெற்றுவிட்ட சக்திகள் கண்ணாயிருந்தன. சர்வதேசரீதியிலும் போராட்டம் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டது.

ஆகவே மாற்றமடைந்து விட்ட உள்நாட்டு நிலைமைகளையும் சர்வதேச நிலைமைகளையும் நன்கு கிரகித்து இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையையும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும் மீள் சட்டகப்படுத்தும் (reframe செய்யும்) தேவை உள்ளது என வாதிட்டு வந்துள்ளேன். இன்றைய நிலைமைகளில் விசுவா 1986 ல் கொண்டிருந்த கருத்துக்களும் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்பது கண்கூடு. அவர் கொலை செய்யப்படாதிருந்தால் தொடர்ந்து உயிர் வாழ்ந்திருந்தால் தனது பணியை தொடர்ந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த எதிர்நீச்சலில் அவரும் அவரது இயக்கமும் எவ்வளவு தூரம் முன்னேறியிருப்பார்கள் என்ற கேள்வி நியாயமானதே. எனது அபிப்பிராயத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே இருந்தன. ஆனால் தனது நீண்டகாலப் பார்வையில் அவர் நம்பிக்கை வைத்திருந்த மக்கள் ஜனநாயகமும் சோசலிசமும் இன்னும் முக்கியமானவை என்பது உண்மை. அவையும் மீள்சட்டகமாக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ‘மாக்சிசம்-லெனினிசம்’ எனும் பெயரில் சர்வதேச ரீதியில் உருவாக்கப்பட்ட கருத்தியலின் உள்ளடக்கங்கள் பற்றி ஆழ விமர்சிக்கும் தேவையை வலியுறுத்த வேண்டும். மாக்சிசத்தின் மற்றும் சோசலிச சிந்தனைகளின் சமகால செல்நெறிகள் மற்றும் அவை பற்றிய விவாதங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உண்டு. இத்தகைய விடயங்களில் விசுவா ஆர்வம் காட்டியிருப்பார் எனவும் நம்புகிறேன். எனது இந்தக் கருத்துக்களையும் இலங்கை தேசிய இனப்பிரச்சனையின் இன்றைய நிலை பற்றிய எனது பார்வையையும் விசுவா ஏற்றுக் கொண்டிருப்பார் என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடினமாயிருக்கலாம். ஆனால் இவை பற்றி விவாதிக்க முன்வந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

07-05-2016