நடிகர் ஒன்றியம் அளித்த வித்தியாசம் கலந்த விருந்து

இந்த விமர்சனம் தினகரன் வாரமஞ்சரியில் 14-11-1976  பிரசுரிக்கப்பட்டது.

சமுத்திரன்

 

கடந்த ஒரு வருடமாக கொழும்பு நடிகர் ஒன்றியம் இரசிகர் அவைக்கெனத் தொடர்ச்சியாக அளித்து வந்த நாடகக் கலை விருந்து கடந்த 27ம் திகதி ஒருவித சுவை மாற்றத்துடன் இடம் பெற்றதென்று கூறுவதில் தவறில்லை என நம்புகிறேன். நடிகர் ஒன்றியத்தினரின் சமூக உணர்வை, இலட்சிய வேட்கையைப் பிரதிபலிக்கும் சிறிய நாடகமாக ( 40 நிமிடங்கள்) ‘வழிகாட்டி’ அமைந்தது. நேரடியான சமூகப் பிரச்சினைகளின் வர்க்க அரசியல் வேர்களையும், அவற்றின் தீர்வுக்கான வெகுஜன எழுச்சி மார்க்கத்தையும் காட்டியது வழிகாட்டி. இத்தகைய உள்ளடக்கத்தைக் கொண்ட முன்னைய நாடகங்களைப் போலவே இதிலும் சில சிக்கலான உத்திகள், கருத்து ரீதியான, மறைமுகமான கூற்றுகள் இடம்பெற்றன.

வித்தியோதய வளாக மாணவர்கள் மேடையேற்றிய இந்நாடகம், தாசீசியஸின் நெறியாள்கையில் தரப்பட்டது. நாடகாசிரியர் நா. சுந்தரலிங்கம் அவருக்கே உரித்தான பாணியில் கதை வசன அமைப்பில் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். ஆனால் ‘வழிகாட்டி’யில் (Abstraction) அளவுக்கதிகமாகிவிட்டதாகப் பலர் அபிப்பிராயப்பட்டிருப்பார்கள். ஆரம்பக் காட்சிகள் பலருக்குப் புரிந்து கொள்ளக் கஷ்டமாயிருந்திருக்கும். ஆயினும் இறுதிக் காட்சி இரசிகர்களின் மனங்களிலேற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க உதவியிருக்கும் என நம்புகிறேன். அதிகாரத்தில் தொடர்ந்துமிருப்பதையே நோக்கமாகக் கொண்ட சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்கள் மக்களின் சுலோகங்களை, மக்கள் வேண்டி நிற்பதையே தாமும் ஏற்றுக் கொள்கிறோம் என்று வேஷம் போட்டு மக்களைத் தொடர்ந்தும் தம் சுரண்டல் ஆதிக்கத்துக்குள் அடக்கி விடப் பகீரதப் பிரயத்தனம் எடுப்பதையும், விழிப்படைந்த மக்கள் சரியான பாதையில் எழுந்து செல்வதையும் காட்ட முற்பட்டிருக்கிறார்கள். இந்த உள்ளடக்கத்திற்கு அபத்தப்பாங்கு உத்திகள் மூலமும் சில இடங்களில் மறைமுகமான, நேரடியான கூற்றுக்கள் மூலமும் உருக்கொடுத்திருக்கிறார்கள்.

நாடகத்தரம் உயர்வு

சில மாதங்களுக்கு முன், வித்தியோதய வளாகத் தமிழ்க் கலை விழாவில் ‘ஓலங்கள்’ என்ற பெயரில் ஒரு நாடகத்தை மேடையேற்றினார்கள். இந்தத் தடவை நாடகத்தின் தரம் பல மடங்கு அதிகரித்திருக்கிறதைக் காண முடிந்தது. குறிப்பாக நடிப்பில் கணிசமான முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக இருந்தது. வித்தியோதய தமிழ்ச் சங்கத்தினர்; பாராட்டப்பட வேண்டியவர்கள். தாசீசியஸ், சுந்தரலிங்கம் போன்ற பன்முகத் திறமை கொண்ட கலா விற்பன்னர்களின் வழிகாட்டைலைப் பெற்றிருக்கும் வித்தியோதய தமிழ் மாணவர்களிடம், கட்டுப்பெத்தை வளாகத் தமிழ் மாணவர்கள் போன்று நாடகத்துறையில் சிறந்த ஒரு மரபினை, பயன்தரு பங்களிப்பை ஆற்றக் கூடிய தகைமைகளைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால்  ஒன்றை மறந்துவிடக் கூடாது. உத்திகள், புதுமையான கலை நுட்பங்கள் அவசியம்தான். ஆனால் அவற்றை இரசிகர்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளவும் வேண்டும். அல்லாவிட்டால் விஷேச இரசனை வளர்ச்சி கொண்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு சிலரால் தான் நாடகத்தைப் புரிந்து இரசிக்க முடியும்.

 கொழும்பு இரசிகர் அவை பொதுவாக நடுத்தர வர்க்கத் தமிழர்களைக் கொண்டது. இவர்களே இன்று நடிகர் ஒன்றியத்தின் நாடகத்தைப் பெருமளவில் விரும்பிப் பார்க்கிறார்கள். சென்ற வருடம் ‘விழிப்பு’ நாடக இரசிகர்கள் மத்தியில் பல்வகைப்பட்ட அபிப்பிராயங்களை ஏற்படுத்திய அதேவேளையில் தமிழ் நாடகத் துறையின் பக்குவப் பராயம் முடிந்து மலர்ச்சியான வளர்ச்சிக் கட்டம் ஆரம்பித்து விட்டதென்பதை அறிவித்தது. ஆனால் வெற்றி தந்த நம்பிக்கையில் நடிகர் ஒன்றியம் உருவ அமைப்பைப் புதுமைப்படுத்துவதில் அதிக வேகத்துடன் செல்கிறதோ என்ற பயம் என் மனதில் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக இரசிகர் அவையும் தனது அப்பியாசக் காலத்தைக் கடந்து வருவது உண்மை என்ற போதிலும் அவர்களை விட்டு அதிகம் தூரம் பாயாதிருத்தல் ஒன்றியத்தினருக்கு அவசியம்.

சுவை மாற்றம் 

 சுவை மாற்றத்துடன் தரப்பட்ட “மழை” (1-15 மணி) இரண்டாவது நாடகமாகும். இந்திரா பார்த்தசாரதியின் “மழை” இலங்கையின் ஊர் பேர்களுடன் தரப்பட்டது. இதுவரையில் நேரடியான சமூகப் பிரச்சனைகளைப் பலதரப்பட்ட பாங்கிலமைந்த உத்திகளைப் பயன்படுத்திக் கலைத்துவத்துடன் நாடகங்களாகத் தந்த ஒன்றியத்தினர் இங்கே சிக்கல் கொண்ட மனித உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு கதையை யதார்த்தப் பாங்கில் இலகுவான முறையில் உருக்கொடுத்திருக்கிறார்கள். “மழை” கதையின் அணுகு முறை சிக்மன்ட் பிராயிட் (Sigmond Freud) டின் கருத்துக்களைச் சார்ந்த மனோதத்துவ அணுகு முறையேயாகும். உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைப் பற்றிய கதை மழை. இதில் வரும் பாத்திரங்கள் நாலே நாலு பேர் தான். உயர்வு தாழ்வுச் சிக்கல், குற்ற உணர்வுகள், நரம்புத் தளர்ச்சியின் விளைவான திடீர் மாற்ற நடத்தைகள் இவையெல்லாம் நிறைந்ததே இந்நாடகம். நாடகத்தின் பாத்திரங்களே தங்களின் நடத்தைக்குத் தாங்களே மனோதத்துவ விளக்கங்கள் கொடுக்க முற்படும் பொழுது அமெச்சூர் மனோதத்துவ ஞானிகளாகக் (Amateur Psychologist) காணப்படுகின்றார்கள். (எனது அபிப்பிராயத்தில் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதியும் ஒரு Amateur Psychologist தான்).

இந்த நாடகத்தின் மையமான பாத்திரம் நிர்மலா என்ற முப்பது வயது மணமாகாத பெண். அவளுடைய தந்தை ஓர் இளைப்பாறிய பேராசிரியர். அவள் சிறுவயதில் தாயை இழந்தவள். அவளது அண்ணன் பத்து வருடங்களுக்கு முன்னர் தகப்பனோடு சண்டை போட்டுக் கொண்டு வெளியேறிவிட்டான். பேராசிரியரும் மகளும் ஒரு கிராமத்தில் வாழ்கிறார்கள். தகப்பன் மகளின் திருமணத்தைப் பற்றி அக்கறை காட்டாது அவளைத் தன்னோடு வைத்திருக்கிறார். அவளிடம் அவர் அன்றாட வாழ்வில் மனோதத்துவ ரீதியில் தங்கியிருக்கிறார். வயது வந்த நிர்மலா மனப்பிரச்சினைக்குப் பலியாகி நரம்புத் தளர்ச்சியால் தாக்கப்பட்டவள் போல் அடிக்கடி நடந்து கொள்கிறாள். இருதய நோயாளியாகிவிட்ட பேராசிரியருக்கு மருத்துவம் செய்ய வரும் டாக்டர் ஜேம்ஸிடம் (அவர் விவாகரத்துப் பெற்றுச் சமூக சேவையில் ஈடுபட்டிருப்பவர்) நிர்மலா தகப்பன் மீது தான் கொண்டிருக்கும் வெறுப்புணர்ச்சியை எல்லாம் கக்கித் தள்ளுகிறாள். தகப்பன் தூங்குவது போலிருக்கையில் அவள் அவர் மீது தனக்குள்ள ஆத்திரத்தையெல்லாம் ஜேம்ஸிடம் சொல்லிவிட்டு எனக்கு ஓர் ஆண் வேணும் (I need a man) அது நீங்களாகவே இருக்கலாம் என்கிறாள். மழையும் காற்றும் அடிக்கின்றன. மின்சாரம் நிற்கிறது. ஜேம்ஸ் பேராசிரியரைப் பரிசோதிக்கிறார். அவர் இறந்து கிடக்கிறார். நிர்மலா எதுவித பதற்றமும் அடையவில்லை. அவளின் அண்ணன் ரகு வந்து சேருகிறான். அவன் தகப்பன் மீது வெறுப்புள்ளவன். தகப்பன் நிர்மலா மீது அளவு கடந்த பாசத்தைக் காட்டியதைக் கண்டு எரிச்சலடைந்து வெளியேறியவன். ரகு-நிர்மலா-ஜேம்ஸ் இந்த மூவருக்குமிடையே நாடகம் நகர்கிறது. நிர்மலா ஜேம்சை மணந்து அந்தக் கிராமத்தை விட்டு வெளியேற விரும்புகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் கிராம மக்கள் தன் சேவையை மறந்து விட்டதைக் கண்ட ஜேம்ஸ் நிர்மலாவின் விருப்பத்திற்கு இணங்குகிறார். ஆனால் கிராம மக்கள் அவரை மீண்டும் ஏற்றுக் கொண்ட போது அங்கே அவருடைய சேவை தேவைப்படும் அவசியமும் ஏற்படும் போது ஜேம்ஸ் மனதை மாற்றி விடுகிறார். ஆத்திரமடைந்த நிர்மலா சொல்கிறாள் எனக்கு முன்பே தெரியும் நீங்கள் வரமாட்டீர்கள் என்று.

கடினமான பாத்திரம்

இந்த நாடகத்தில் நிர்மலாவின் பாத்திரம் மிகவும் கடினமான ஒன்று. அந்தப் பாத்திரத்தைத் தத்ரூபமாகச் செய்திருக்கிறார் ஆனந்தராணி ராஜரத்தினம். தகப்பன் மீது பாசத்தையும், வெறுப்பையும் கொண்டிருக்கும் நிலையை, தன் இளமை தனிமைக்குப் பலியாகும் கொடிய அனுபவத்தில் அதற்குக் காரணமாக இருக்கும் தகப்பன் மீது வெறுப்பையெல்லாம் அள்ளி வீசும் ஹிஸ்ரிறியா (Hysteria) வசப்பட்ட குழப்ப நடத்தையை, தகப்பனின் சாவுக்குத் தானே காரணம் எனும் குற்ற உணர்வில் சிக்கித் தத்தளிக்கும் மனப் புழுங்கலை, ஆனந்தராணி குறிப்பாகச் சித்திரிக்கிறார். நடிகைகளுக்குப் பஞ்சமேற்பட்டுள்ள இந்தக் காலத்தில் இத்தகைய ஒரு நடிகை தமிழ் நாடக உலகுக்குக் கிடைத்திருப்பது மிகவும் பெருமைப்பட வேண்டியதாகும்.

ரகுவின் பாத்திரமும் புதுமையானதுதான். ரகுவும் நிர்மலாவும் தோன்றும் காட்சிகள் அவர்களின் சம்பாஷனைகள் மனோதத்துவ ரீதியில் பேராசிரியரை, அவர்களிருவரை, ஜேம்சை விளக்குபவையாகவும் மிகவும் சுவையானவையாகவும் அமைந்துள்ளன. நிர்மலா ஜன்னலருகில் போய் நிற்பதும், அதைச் சாத்திவிட்டுப் பயந்து வருவதும், ரகு போய் ஜன்னலைத் திறப்பதும் அப்போது அவர்கள் பேசும் வார்த்கைகளும் மனோதத்துவத்துறையில் ஈடுபாடுள்ளவர்களுக்குச் சிந்தனையைத் தூண்டக்கூடியவை. இந்திரா பார்த்தசாரதியின் மனோதத்துவக் கோட்பாடுகள் விவாதத்திற்குரியவை. அவை பற்றிய ஆய்வில் இங்கு ஈடுபடுவது உசிதமல்ல.

பக்குவமுற்ற கலைஞர்கள்

இந்த நாடகத்தின் நடிகர்கள் அனைவரும் பக்குவமடைந்த கலைஞர்கள் என்பதை இரசிகர் அவை ஏற்றுக்கொள்ளும். ஆயினும் மழையின் நெறியாளரான  இளைஞர் பாலேந்திரா பாராட்டுக்குரியவர். பல்கலைக்கழக மாணவனாயிருந்த போது அவர் ஒரு நாடகத்தை நெறிப்படுத்தியிருக்கிறார். இதுதான் அவர் நெறியாண்ட இரண்டாவது நாடகம். சுந்தரலிங்கம், தாசீசியஸ், சிவானந்தன், பத்மநாதன் என்ற நடிகர் ஒன்றியத்தின் நெறியாளர் வரிசையில் சேர்ந்து கொள்கிறார் இளைஞர் பாலேந்திரா. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே அரங்க அமைப்பில் நாடகம் நகர்கிறது. மழை, காற்று, இடி, மின்னல் ஆகியவை மிகவும் இயற்கையான ஒலி, ஒளி மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பாத்திரங்கள் பிரதிபலிக்கும் மனநிலைமைகளுக்கு அமைய இசை அமைக்கப்பட்டுள்ள போதும் அதி கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம். இந்த நாடகம் காட்டமுனையும் மனோ நிலைமைகளை நன்குபுலப்படுத்தக்கூடிய இசை, நரம்பு வாத்திய இசைதான். அத்தகைய இசை உபயோகிக்கப்பட்டிருப்பது பொருத்தமானதே. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பின் வரிசையிலிருந்தவர்களுக்குக் கேட்கவில்லை. அத்துடன் இசையமைப்பில் ஏதோ போதாமை தென்பட்டது.

வழிகாட்டியும் மழையும் பலவிதமான விவாதங்களை மீண்டும் புதுப்பிக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய விவாதங்களை நாம் வரவேற்க வேண்டும். நடிகர் ஒன்றியத்தின் மற்றைய நாடகங்கள் ஏற்படுத்திய அழகியல்  விவாதங்களைப் போன்று இந்த நாடகங்களும் பல விவாதங்களை வருவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நாடகங்களைத் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு எல்லாம் எடுத்துச் செல்வது அவசியம். அப்போதுதான் இரசிகர்களுக்கு மத்தியில் இரசனை வேறுபாடுகள், விருப்பு வெறுப்புக்களை நேரடியாக அறிய முடியும்.

துருவச்சுவடுகள்

1989இல் பிரசுரிக்கப்பட்ட ‘துருவச்சுவடுகள்’ கவிதைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரை. இந்தத் தொகுப்பில்  நோர்வேயில் வாழும் ஏழு கவிஞர்களின் கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அணிந்துரை

சமுத்திரன்

இன்று நவீன தமிழ் இலக்கியம் ஒரு புதிய கலாச்சார முனைப்பைச் சந்திக்கிறது. ஐரோப்பாவில் வாழும் ஈழத்தமிழர் மத்தியிலிருந்து தற்போது முப்பதுக்கும் மேலான சஞ்சிகைகள் வெளிவருகின்றன. இவை கலை, இலக்கிய, அரசியல் சமூகவியல் அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்தக் கலாச்சார முனைப்பு தமிழ் இலக்கியம் இதுவரை கண்டிராத ஒரு புதிய  பரிமாணத்தின் முகிழ்ப்பு என்று கூறலாம்.*1[i] இந்தப் பரிமாணத்தின் இன்றைய கட்டத்தைப் பிரதிபலிப்பதுபோல அமைந்தது. இந்த மாதம் மேற்கு பேர்லினில் இடம் பெற்ற «ஆறாவது  இலக்கியச் சந்திப்பு» டிசம்பர் 22,23, 24 ம் திகதிகளில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஐரோப்பாவின் பலபாகங்களிலிருந்தும் ஏறக்குறைய அறுபது ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.  மாநாட்டின் நிகழ்ச்சிகளில் கலை, இலக்கிய விடயங்கள் மட்டுமின்றி அரசியல் சமூகவியல் போன்ற துறைகளும் இடம்பெற்றன. இலங்கை நிலைமைகள் மட்டுமின்றி சர்வதேச நிலைமைகளும் குறிப்பாக இன்று கிழக்கு ஐரோப்பாவில் இடம் பெறும் வெகுஜன எழுச்சிகளும் அலசி விவாதிக்கப்பட்டன.

மூன்று நாட்களும் அங்கே வருகை தந்த ஆண்களும், பெண்களும் கலந்துரையாடலில் ஆர்வத்துடன் பங்குபற்றினர். பலர் தமது கருத்துகளையும் விமர்சனங்களையும் ஆழ்ந்த உணர்ச்சியுடன் வெளிப்படுத்தினர். கருத்தரங்குகள் உத்தியோகபூர்வமாக முடிந்த பின்னரும் மண்டபத்துக்குள்ளேயும், வெளியேயும் விவாதங்கள் தொடர்ந்தன. அந்த மூன்று நாட்களும் இரவு ஒரு மணிவரை நான் கலந்துரையாடல்களில் பங்கு பற்றினேன். கருத்துப்பரிமாற்றங்கள் வரலாறு, கலை இலக்கியம், நடைமுறைச் சோசலிசம், பெண்ணிலைவாதம், சூழலியக்கங்கள், தமிழரின் புலப்பெயர்வுகள், ஐரோப்பாவின் நிறவாதம் போன்றவற்றைச் சுற்றி அமைந்தன. புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் அறிவுரீதியான ஒரு புதிய அலை எழுந்து வருகின்றது என்பதில் சந்தேகமில்லை.  அத்துடன்  இன்றைய பல சமூகவியக்கங்களின் புதிய கருத்துக்களையும் அனுபவங்களையும் உள்வாங்க முயற்சிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். இந்த அலையின் விசேடப் பண்புகளில் ஒன்று அதன் பன்முகத்தன்மையாகும்.

இந்த அறிவுரீதியான செயற்பாடுகளின் பகைப்புலமோ பெரியது. செழுமை மிக்கது. ஆக்கங்கள் படைப்போர் கடந்த பத்தாண்டுகளுக்குள்- பெரும்பாலாக 1983 யூலைக்குப்பின்- ஐரோப்பாவுக்குக் குடிபெயர்ந்தோராவர். இவர்கள் கொடூர யதார்த்தங்களைக் கண்டவர்கள், அனுபவித்தவர்கள். இவர்களின்  ஒரு கால் இன்னும் தாய்நாட்டிலேதான். இவர்களின் ஆளுமை, நினைவுகள், அனுபவங்கள் எல்லாமே « தாய்நாடு- புகல்நாடு» என்னும் தொடர்பினால் ஆட்டிப்படைக்கப்படுகின்றன. ஐரோப்பாவில் வாழும் தமிழிரின் வாழ்நிலைப் பிரச்சனைகளை பல கலாச்சாரங்களின் -ஆகக்குறைந்தது இரு கலாச்சாரங்களின்- சிக்கலான மோதல்களாய், இணைவாய், அனுபவரீதியான தொகுப்பாய் பார்க்கலாம். இந்தச் சிக்கல்கள் இங்குள்ள அரசியல் யதார்த்தங்களின் பரிமாணங்களையும் உள்ளடக்குகின்றன.

ஐரோப்பாவில் தமிழர்கள் மூன்றாம் உலகத்தவர்கள், கறுப்பர்கள் என்ற வட்டத்தில் அங்கமாகின்றனர். இங்கு வந்த பின்தான் பலர் தம் நிறம் கறுப்பு என்று கண்டுபிடிக்கிறார்கள். பலருக்கு இதனை ஏற்பது கடினமாகவிருந்தாலும்  கறுப்பு என்பது ஒரு அரசியல் கோட்பாடு என்பதைப் படிப்படியாகப் புரிந்து கொள்ள அனுபவம் நிர்ப்பந்திக்கிறது. தாய்நாட்டில் கிடையாத சுதந்திரம், பாதுகாப்பு, பொருளாதார உறுதிப்பாடு இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்த பலரின் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக ஈடேறுவதில்லை. அடிக்கடி ஏற்படும் கசப்பான அனுபவங்கள் தமிழர்கள் இங்கே அழைக்கப்படாத விருந்தாளிகள் என்பதை ஊசிபோல் குத்தி நினைவூட்டுகின்றன. கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சமத்துவமில்லை எனும் யதார்த்தத்தைக் காண்கிறார்கள். இந்தப் பாகுபாடு எப்போதுமே வெளிப்படையாக இடம்பெறுவதில்லை.  இதன் மறைமுகச் செயற்பாடுகளே அதிகம்.  இந்தப்பாகுபாட்டின் அனுபவங்கள் தரும் வேதனையும்  கலாச்சார ரீதியான அந்நியமாக்கலும் மூன்றாம் உலகத்திலிருந்து வந்தோருக்குச் சில புதிய பாடங்களைத் தருகின்றன.(எல்லாத் தமிழர்களும் இந்தப்பாடங்களைப் படிக்க விரும்புவதில்லை. பலர் தமது இருப்பு பற்றிய கேள்விகளைத் தம்மிடமே கேட்கப்பயப்படுகிறார்கள். ஆனால் இது மாறும் என்பது எனது நம்பிக்கை.) கறுப்பர்களின் உழைப்புச்சக்திக்கு கிடைக்கும் பெறுமதிகூட அவர்களின் மனிதத்துவத்திற்குக் கிடைப்பதில்லை. ஐரோப்பிய நாகரீகத்தின் இரட்டை நியமங்களும் கபடங்களும் நிறவாதத்திற்கூடாக பயங்கரமாய் வெளிப்படுகின்றன.

மேற்கு பேர்லினில் நான் இருந்த போது பேர்லின் சுவரின் முடிவு பற்றி நிறையப் பேசினோம். ஒரு மேற்கு ஜேர்மனிய பெண்ணிடம் ஒரு தமிழ் நண்பர் ஒருவர் கூறிய வார்த்தைகள் மேற்கின் இரட்டை நியமங்களின் வெளிப்பாட்டைப் படம் பிடிக்கின்றன.  மேற்கையும் கிழக்கையும் பிரித்து உங்களதும் அவர்களதும் நடமாட்டத்தைத் தடைசெய்த  அந்தச் சுவர் சாய்வதை நாமும் வரவேற்கிறோம். ஆனால் உங்கள் நாட்டிற்கு அரசியல் தஞ்சம்கோரி வந்திருக்கும் தமிழர்களையும் மற்றைய கறுப்பர்களையும் அவர்கள் வதியும் உள்ளூர் எல்லைகளுக்கு அப்பால் நகரக்கூட உங்கள் ஜனநாயக அரசின் சட்டம் அனுமதிக்கவில்லை. மேற்கு ஜேர்மனியில் நம்மைச் சுற்றி எழுப்பியிருக்கும் இந்தச் சுவர்களை எப்போது அகற்றப்போகிறீர்கள்? உங்களுக்குத் தெரியுமா இந்தத் தடையினால் இந்த நாட்டில் வாழும் பல தமிழர்கள் நமது இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது?

ஐரோப்பிய நாகரீகங்கள் தந்துள்ள உயர்ந்த விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் முழுமனித குலத்திற்கும் பொதுவானதென ஐரோப்பா பெருமைப்படலாம். ஆனால் இந்த விழுமியங்கள் இங்கே இன்னும் முழுமை பெறவில்லை. இவற்றுக்கு வர்க்கம் மட்டுமல்ல நிறமும் பாலும் உண்டெனும் உண்மையை நாம் அனுபவரீதியாக காண்கிறோம். நாம் பிறந்த குறைவிருத்தி சமூகத்தில்  பின்னடைந்த கலாச்சாரத்தில் மறுக்கப்படும் உரிமைகள் இங்கே இருப்பதையும், மதிக்கப்படுவதையும் காண்கிறோம். இதையெல்லாம் அறிவித்து தனது உயர்ச்சியைப் பறைசாற்றும் முதலாளித்துவ ஜனநாயகம் கறுப்புக்குடியானவர்கள் இவற்றை முற்றாக அனுபவகிக்க முடியாதபடியும் பார்த்துக் கொள்கின்றன.

ஐரோப்பாவில் நமது தனிப்பட்ட அடிப்படைத் தேவைகளும் அவற்றைப் பூர்த்தி செய்ய நாம் தேடும் வழிவகைகளும் இந்தச் சமூகம்பற்றிய பல தகவல்களை அனுபவரீதியாக நமக்குத் தருகின்றன. இந்த அனுபவங்களை நாம் அலசி ஆராய முற்படும் போது நமது கலாச்சார விழுமியங்களும், நமது  எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் தலையிடுகின்றன.  உண்மையில் இவை நமது இருப்பு பற்றிய சுயமதிப்பீடுகளை  பலவகையில் நிர்ணயிக்கின்றன. இதற்கூடாக நாம் ஒவ்வொரு கணமும் நமது தாய்நாட்டிற்குத் திரும்புகிறோம்.  இந்த அகவுலகப் பிரயாணங்கள் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. தாய்நாட்டு நிலைமைகளை நாம் நினைவு கூருகின்றோம். அங்கு மனித உரிமைகள் இங்கிலும் பார்க்க மோசமாக மீறப்படுகின்றன. அங்கு நடைபெறும்  இனவாத ஒடுக்குமுறையின் துன்பியல் இந்நாட்டின் பூர்சுவா ஜனநாயக நியமங்களின்படி கொடியது.  தமிழ்சமுகத்தின் சாதிவாதமும் ஆணாதிக்கவாதமும் நம்மைத் தலைகுனிய வைக்கின்றன. அங்கு மானிடம் தோற்றுவிட்டது. ஆனால் அழிந்து விடவில்லை. இங்கும் மானிடம் அழிந்து விடவில்லை என்பதை நினைவூட்டும் சம்பவங்களுக்குக் குறைவில்லை.  இன்றைய புதிய கலாச்சார முனைப்பின் செழுமை மிகு  பகைப்புலத்தின் சில அம்சங்களை இங்கு தொட்டுக் காட்டினேன்.  புலம்பெயர்ந்தோரின் இருப்பின்  புதிய அம்சங்களின் சமூகவியல்  ஆழ ஆராயப்பட வேண்டியது.  இத்தகைய செழுமைமிகு பின்னணியில் காலூன்றி நிற்கும் சில தமிழ்க் கவிஞர்களின் படைப்புக்களை இந்நூலில் சுவடுகள் பதிப்பகம் நமக்குத் தருகிறது.

இந்தத் தொகுப்பில் நோர்வேயில் வாழும் ஏழு தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறுகின்றன. இவர்களில் வ.ஐ.ச ஜெயபாலனும், இளவாலை விஜயேந்திரனும் தமிழ் இலக்கிய உலகில் ஏற்கனவே பிரபல்யமானவர்கள். தமயந்தியும் மைத்ரேயியும் ஓரளவு அறிமுகமானவர்கள். தம்பா, வயவைக்குமாரன் கலிஸ்ரா ஆகியோர் புதியவர்கள். இந்தக் கவிதைத்தொகுப்பு இன்று ஐரோப்பாவில் எழுந்து வரும்(தமிழ்) புலம்பெயர்ந்தோர் இலக்கிய அலையின் ஒரு காத்திரமான வெளிப்பாடாகும். கவிஞர்களின் களம் தாய்நாடு, புகல்நாடு என்று பரந்து விட்டது. அவர்கள் படைத்துள்ள கவிதைகள் புதிய கலாச்சார முகிழ்ப்பின் புத்தம்புதிய மலர்கள். ‘யாதும் ஊரை யாவரும் கேளீர்’ என்னும் தமிழ்ப் பழமொழியை நடைமுறையில் சோதித்துப் பார்த்த அனுபங்களின் பிரதிபலிப்புக்கள், நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழர் தர ஆரம்பித்துள்ள புதிய கலைத்துவப் பரிமாணத்தின் முதற்படிகளை ஸ்திரப்படுத்தும் ஒரு பங்களிப்பு இதுவாகும்.

கவிஞர்களின் களம் புவியியல் ரீதியில், கலாச்சார ரீதியில் சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் இருப்பு இலங்கையிலிருந்து வடதுருவத்திற்கு அருகே அமைந்துள்ள எழில்மிகு நோர்வேக்கு மாறியுள்ளது. புதிய சூழலில் எல்லாமே வித்தியாசம். காற்று, காலங்களின் நகர்ச்சி, மரங்கள், பறவைகள் எல்லாமே புதிதாய்த் தென்படுகின்றன. இக்கவிஞர்களின் களத்தின் விரிவும், இருப்பின் மாற்றங்களும் தமிழ்க் கவிதையுலகிற்கு புதிய அனுபவங்களை மட்டுமல்ல, புதிய உவமைகைகளையும் அறிமுகம் செய்கின்றன.

ஜெயபாலன் ஈழத்து மண்ணுடனும் மக்களுடனும் இறுக்கமான பிணைப்பைக் கொண்டவர். ஜெயபாலனின் சமூகவியல் அறிவு அவரின் கவித்துவத்திற்கு ஒரு விசேட காத்திரத்தைக் கொடுப்பதை அவரின் கவிதைகளைப் படித்தோர் அறிவர். இந்தத் தொகுப்பில்  வரும் அவரது «இலையுதிர்கால நினைவுகள்- 89» ஈழத்து மண்ணுடனும், மக்களுடனும் அவருக்கு இருக்கும் சேதனரீதியான உறவின் வேதனைமிகு வெளிப்பாடுகள். வேற்று நாட்டில் வேரிழந்த மனிதனின் கலாச்சார அந்நியமாக்கலையும் தனிமையையும்

‘நானோ

வழிதவறி அலஸ்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்

ஒஸ்லோவில்’

என்ற வரிகள் கைப்பற்றுகின்றன. இந்தக் கவிதை ஈழத்தமிழரின் ஒடுக்குமுறைக்கெதிரான புலப்பெயர்வுகளின் அவலங்களைத் தனிமனிதனின் உணர்ச்சிகளின் உதவியுடன் வெளிப்படுத்துகின்றது. வெளியேறியோரின் இருப்பின் அவலங்களை நோர்வேயின் இயங்கையின் அம்சங்களைக் குறியீடுகளாக்கிப் பிரதிபலிக்கிறார் ஜெயபாலன்

‘இது இயற்கையே விரக்தியுறும்

இலையுதிர் காலம்

நீர் கூடக்கல்லாகும்  நீண்ட குளிர்காலம்’

இதற்கு  முன்னர் மக்பை பறவை கூறுகிறது

‘நாமறிவோம்

இலங்கைத் தமிழருங்கள் நாகரீகம்

பிறருடைய பேச்சுச் சுதந்திரத்தை

என்றேனும்

ரசித்ததுண்டா நீங்கள்’

விஜயேந்திரனின் ‘காணாது போன சிறுவர்கள்’,  ‘காணி நிலம் வேண்டும்’ எனும் கவிதைகள் தமிழரின் புலப்பெயர்வின் பொருளாதார அபிலாசைகளைக் காட்டுகின்றன. முன்னைய கவிதையில் வழமையான ஒரு யாழ்ப்பாண நிலத்தோற்றத்தில்.

‘கட்டைப்பனைமரத்தைக் கப்பலாக்கி

காற்துடுப்பில்  நீர்கடக்கும்

சிறார்களை மட்டும்

காணேன்’

அவர்கள் ‘காசு வயல் கதிரறுக்க கனடா போய்விட்டார்களாம். ஆனால் இந்தக் தமிழ் அரசியல் அகதிகள் பலரின் கனவுதான் என்ன?  அங்கே ‘விடுதலை’ மலரவேண்டுமென நாம் விரும்பலாம். ஆனால் இங்கே நமக்கெல்லாம் ‘காணி நிலம் வேண்டும்’. அது மட்டுமல்ல நாம் விட்டுவந்த யாழ்ப்பாணத்தை மீண்டும் உருவாக்க சீதன மரபு அங்கே மாறிவிடக்கூடாது

‘ஊரில் காணியோடும்

வீடு கிணற்றோடும்

இன்னொரு ஜெயப்ரதா

அமைய வேண்டும்’

இந்தக் கவிதைகள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம்  ஒருபுறம் விடுதலைபற்றி ஏதோவெல்லாம் பேசும் அதேவேளை மறுபுறம் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்கும் ஜனநாயக முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் பழைய உறவுகள் புகுந்த நாட்டிலும் மீள் உற்பத்தி செய்வதைக் காட்டவில்லையா? புகுந்த நாட்டில் தமிழர்களென நாம் பேணிப் பாதுகாக்கும் தனித்துவம் இதுதானா என்று கேட்கத் தோன்றுகிறது.

விஜயேந்திரனின் ‘பதினொராவது கட்டளை’ தனிமனிதர்களின்  இயலாமையைக் கவித்துவமாக வெளிப்படுத்துவதுபோல்  அமைந்துள்ளது.  விடுதலையையும் மனிதத்துவத்தையும் இன்றைய நிலையில் கற்பனையிலேயே அனுபவிக்கலாம். ‘சற்று நிதானமாக் கனவுகாணப் பழகிக் கொள்’ நனவு கொடூரமாகும் போது கனவுகளில் தான் தற்காலிக ஆறுதல் இந்தக் கற்பனையும் இல்லாவிடில் இன்று ஈழத்தில் தமிழர்களைப் போராட வைக்கும் உந்துதலை அழிந்துவிடும் என்பது என் கருத்த. ஆம்ஒ நாம் கனவு காணப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கூடாக விடுதலையின் உள்ளடக்கத்தைத் தேடி யதார்த்தத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும்.

தம்பாவின் கவிதைகளில் மானிடத்தை, மனிதத்துவத்தைத் தேடும் பண்பு வெளிப்படையாகின்றது. நோர்வேயில் நாம் சந்திக்கும் நிறவாதம், அதே நேரத்தில் பல கறுப்புத் தனிமனிதர்களுக்கு ஏற்படும் மனித நேயம் நிறைந்த அனுபவங்கள்  தம்பாவின் உள்ளத்தைத் தாக்கியுள்ளன.

‘இங்கு எல்லாமே மாறுபட்டதாக இருக்கின்றது

ஆனால் எங்ஙனந்தான் அவர்களின்

புன்னகை மட்டும் என்றும்போல்

அச்சாய்ப் பூக்கிறது

புகல் நாட்டில் நிறவாதத்திற்கு முகம் கொடுக்க முற்படும் தம்பா தாய்நாட்டின் இனவாத த்திலிருந்து தப்பி வந்தவர்.

‘இனவாத த்திற்குத் தப்பி பல்லாயிரம் மைல்கள்

கடந்தபோதும் வலிமாறாத தழும்புகள்

இதற்குமேல் நிறவாதம் எங்கே என்னைப்

பாதிக்கும்?’

தம்பாவின் எங்கும் மானிடம் அவருக்கு ஏற்பட்ட ஒரு இனிய அனுபவத்தின் வெளிப்பாடு. அவர் இந்தக் கவிதையில் நிறவாதத்திற்கு முகம் கொடுக்கவில்லை. ஆனால் அந்த முகம் கொடுக்கும் பிரச்சனையிலிருந்து விடுபட இந்த மனிதநேயம் மிக்க அனுபவம் உதவுகின்றது. எண்பது வயதைத் தாண்டிய ஒரு நோர்வேஜியப் பெண்மணி அவளும் முதுமையின் தனிமை தனை அனுபவிப்பவள்- இந்தத் தொழிலாளிக்குச் சொல்கிறாள்

–  ‘இன்று உனக்காக கர்த்தரை வேண்டினேன்’

தம்பா நோர்வேயில் காணும் மனிதநேயத்தை என்றாவது ஒருநாள் தனது தாய்நாட்டிலும் காண ஏங்குகிறார். நோர்வேயின் தேசிய தினக்காட்சி பற்றிய ‘துளிர்க்கும் கனவு’ எனும் கவிதையின் செய்தி இதுதான்.

‘மானிடம் புதைந்த வீதிகளை உழும்

இராணுவ வண்டிகள் மறைய

எமது மண்ணில் சிறார்கள் மனித நேயத்த

எமது வீதிகளில் பதிக்கும் நாட்களை எண்ணி

அங்கே ஓரமாய் நின்று கனவு கண்டேன்’

இளம் கவிஞரான தம்பாவின் மனிதாபிமானம் கூரிய விமர்சனப் பார்வையுடன் எதிர்காலத்தில் இணைய வேண்டும்  என்பது எனது விருப்பம்.

மைத்ரேயி ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் கவிதை எழுத ஆரம்பித்துள்ளார். இந்தத் தொகுப்பிலுள்ள  இவரின் ‘ஊரிலிருந்து ஒரு கடிதம்’ இயக்கங்களின் சில தவறான போக்குகளை அம்பலப்படுத்துவதுடன் யாழ்ப்பாணத்துக் கிராமத்தில் சில யதார்த்தங்களைச் சித்தரிக்க முற்படுகின்றது. இந்தக் கவிதையில் நோர்வே வாழ் தமிழ் அகதிகள் பற்றிய ஒரு சிறப்பான அம்சம் வெளிப்படுகின்றது.

‘சங்கர் உண்மையிலேயே படிக்கப்போனானாம்

பரவாயில்லை

ஆனால்

நீ படிப்பதாகச் சொல்லிக்கொண்டு

அகதியாக…’

தமிழ் அகதிகள் வாழும் மற்றைய நாடுகளைப் போலல்லாது நோர்வேயில் தமிழ் அகதிகள் மாணவர்கள் என்னும் உருவத்திலும் வாழ்கிறார்கள். துரதிர்ஸ்டவசமாக இந்த உருவில் வாழும் அகதிகள்  சிலர் சட்டபூர்வமாக அகதி அந்தஸ்துக்கோரி வந்துள்ளோரைவிட தாம் விசேடமானவர்கள் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றார்கள். உண்மை என்னவெனில்  எந்த வடிவில் வந்தாலும் நாம் எல்லோருமே- நான் உட்பட  – அகதிகள் தான்.  இதை ஏற்றுக்கொள்வது ஒரு அடிப்படை உண்மையை ஏற்றுக் கொள்வதாகும் – ஒரு கபடம் நிறைந்த பொய்மையிலிருந்து விடுபடுவதாகும்.  ஐரோப்பாவுக்கு குடிபெயர்ந்த சில தமிழர்களின்  கீழ்தரமான செயல்கள் பற்றி இந்தக் கிராமத்துக் கடிதம் குறிப்பிடுகின்றது

‘வசந்தத்தை எதிர்பார்த்து

வெளிநாட்டு வாழ்வில் அள்ளுண்டு

சீட்டாட்டம், ஏமாற்று

போதைப் பொருள் கடத்தல்

பல்வேறாய்ப் பிளவுண்ட

குழுமோதல், குடி

மேற்கின் யாந்திரீக விசுவரூபம்

இவை தவிர

நோர்வேயில் புதிதாய் உணர்ந்தவற்றை எழுது’

மைத்ரேயின் ‘பிரகடனம்’ பெண்ணுரிமை பற்றியது. ஒரு பெண் தான் வாழப்போகிறேன் எனச்செப்பும் பிரகடனம்

‘இங்கு நாலு சுவரையும்

கிடுகுவேலியையும்  தாண்டி

நான் வாழப்போகிறேன்’

என ஈழத்துப் பெண்ணொருத்தி கோருகிறாள் இந்தக் கவிதையோடு மைத்ரேயி நின்றுவிடமாட்டார் என்று நம்புகிறேன்.

கலிஸ்ராவின் கவிதைகளும் பெண்ணுரிமையைக் கருவாகக் கொண்டன. ஆண் ஆதிக்கம் மிகுந்த இன்றைய தமிழ்ச்சமுதாயத்தின் பெண்நிலைவாத விமர்சனங்களாய் அமைகின்றன இவரின் கவிதைகள்

‘உதயத்தின்போதே எம்

உணர்வுகளுக்குச் சாவுமணி

சமைத்துவிட்டனரே’

எனக் கூர்மையாக ஒரு வரலாற்று உண்மையைச் சொல்லும் கலிஸ்ரா, பெண்களை நோக்கி,

‘போதும் கண்ணே

இதுவரை தொலைத்த

நம் சிந்தனைகள் போதும்

பூமியில் நாமும்

மனிதர்களாய் வலம்வர வேண்டும்’

அடுத்த கவிதையில்  (சிந்திப்பாயா?) தமிழ்ப் பெண் சொந்தச் சமூகத்திலிருந்து வெளியேறினாலும் அந்தச் சமூகம் வகுத்துள்ள கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேறப் போராடாதிருப்பதைக் குறிப்பிடுகிறார்.

‘நான்கு சுவர்

நாலு திசையான பின்னும்

நாலு குணத்தைக் கட்டியழும்

நாயகியே’

இந்த நாற்குணங்களும் ஆண்களால் பெண்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கணங்கள். இந்த ஆண் ஆதிக்கமும் நம்மோடு ஐரோப்பாவிற்கு வந்துவிட்டது. கலிஸ்ராவின் கவிதைகளில் அரசியல் செய்திகளும் இருக்கின்றன. ஆனால் கவித்துவம் மேலும் வளர வேண்டும். இவரின் ஆரம்ப முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. குறிப்பாக பெண்நிலைவாதக் கவிஞர்கள் நம்மிடையே பெருக வேண்டும்.

தமயந்தியின் கவிதைகள் ஆழத்து நிலைமைகளின் துன்பியலைக் காட்டுவன. யுத்த த்தால் அவதியுறும் மக்களின் பொருளாதாரம் வரட்சியாலும் தாக்கப்படும் அவலத்தை ‘மழையைத் தொலைத்த மேகம்’  புலப்படுத்துகிறது. அவர் காணும் துன்பியலின் இன்னொரு அம்சம் மிகவும் பயங்கரமாய் வெளிவருகின்றது. புதிய ஏற்பாடுகள் என்ற கவிதையில்

ஜெருசேலம் மக்களைப் போல்

கனவுகளுடன் மல்லுக்கட்டும் மக்கள்

பிணங்களை விலத்தி

நடந்து செல்லப் பழக்கப்பட்டுவிட்டனர்’

இதே துன்பியலை இவரின் மற்றக் கவிதையொன்றிலும் காண்கிறோம்.

‘இப்போ

மெலிந்த தென்றல் கூட

ரோமக்கால்களுக்குள்

நெருப்பைத் திணிக்கும்’

வயவைக்குமரின் கவிதை ஒன்று இதன் தொடர்ச்சிபோல் அமைகின்றது

‘தீயை அணைத்திட

நீரற்ற தேசம்

கந்தகத்துடனே

கடலைக்கடந்து

…….

……..

அமைதி என்று

ஒரு முழத்துண்டு

சிலுவையில் அறைய

ஒப்பந்தம் ஆனது’

வயவைக்குமரன் நம்மில் பலர் கண்டுபிடித்துள்ள தனிமனிதத் தீர்வையும் அகதி என்னும் கவிதையாகத் தருகிறார்.

‘நில்லாதே ஓடு

கடல்களைக் கடந்து

மலைக்களைத் தாண்டி

பூமியின் எல்லைவரை ஓடு

……..

……….

ஆசையாய் எல்லோருக்கும் எழுது

நான் ஒரு அகதியென்று’

இந்தக் கவிதைகளை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது ஒரு பொதுவான துன்பியல் தன்னை ஓங்கியிருப்பதை உணரலாம். இது இன்றைய தாய் நாட்டு நிலைமையின் பிரதிபலிப்பு. துன்பியல்  பல கவிதைகளில் பலமாகப் படர்ந்திருப்பது இவற்றைப் படைத்த கவிஞர்கள் தாய்நாட்டின் கொடிய யதார்த்தங்களிலிருந்து தப்பியோடியவர்கள் என்பதாலா? இவர்கள் இன்று உதிரிகளாய் வேரறுபட்ட நிலையில் இருக்கும் இருப்பினாலா? இந்தக் கேள்விகளை வாசகர்களிடம் விட்டுவிடுவோம். என்னைப் பொறுத்தவரை இந்தத் துன்பியல்தன்மை புலம்பெயர்ந்த பலரின் அகநிலையைப் பிரதிபலிக்கின்றது.

கவிதைகளிடையே அழகியல் வேறுபாடு இருப்பதை மறுக்க முடியாது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இத்தொகுப்பில் மூவர் புதிய கவிஞர்கள். தம்பா, கலிஸ்ரா, வயவைக்குமரன் ஆகியோர்  தமது கன்னிக்கவிதைகளைப்  பிரசுரித்துள்ளார்கள்.  இவர்களின் கவித்துவ ஆற்றல் மேலும் வளர வேண்டும். புகழ்பெற்ற கவிஞர்களுடன் அவர்களும் இந்தக் கவிதைத்தொகுப்பில் சேர்ந்திருப்பது அவர்கள் மேலும் வளர நிறைய இடமுண்டென வாசகர்களுக்கு உணர்த்துவதுபோல் அவர்களுக்கும் உணர்த்துமென நம்பலாம்.  சுவடுகள் பதிப்பகத்தின் இந்த முயற்சி தொடர வேண்டும். ஐரோப்பாவின் மற்றைய இடங்களிலும்  இத்தகைய பதிப்பகங்கள் தோன்ற வேண்டும். நவீன இலக்கியத்தின் புதிய பரிமாணமான இச்சர்வதேச முனைப்பு எமது கலாச்சாரத்தின் முன்னேற்றத்திற்கு  உதவ இது அவசியம்.

ஓஸ், நோர்வே

30.12.1989

[i] இத்தகைய ஒரு புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் தோற்றத்திற்கும்  பரிணமிப்புக்கும் பின்னணியாக அமையும் சில அரசியல், சமூகவியல் நிலைமைகளை நான் சமீபத்தில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க: சமுத்திரன் – ஈழத்தமிழர் போராட்டத்தில் புலம்பெயர்ந்தோரின் பங்கு.

( ஆறாவது இலக்கியச்சந்திப்பு அறிமுகத் தொகுப்பு- West Berlin 1989).

மௌனகுருவின் கூத்த யாத்திரை – கொண்டதும் கொடுத்ததும்

 சமுத்திரன்

இந்த நூல் ஈழத்துக் கூத்துக் கலை உலகில்  தன் சிறு பிராயத்தில் ஒரு ஆர்வமிகு பார்வையாளானாக, உதவியாளாக, பின்னர் பயிற்சி பெறுபவனாக, கூத்தாடுபவனாக, படைப்பாளியாக, பயிற்சியாளனாக, நெறியாளனாக, விமர்சகனாக, ஆய்வாளனாக, நுண்கலைத்துறைப் பேராசிரியராக மௌனகுரு மேற்கொண்ட நீண்ட பயணத்தின் ஒரு செறிவான ஆவணம். அவரைப் பொறுத்தவரை ஒரு யாத்திரையின் பதிவுகள். எளிய நடையில் எழுதப்பட்ட இந்த நூலை வாசிக்கவும், அதைப்பற்றிக் கருத்துரை வழங்கவும் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

இந்த நூல் ஒருவகையான சுயவரலாறென்பதை அதன் தலைப்புச் சொல்கிறது. அதேவேளை ஈழத் தமிழ்க் கூத்துக் கலையின் மீளுருவாக்கம் ஒரு தொடர்ச்சியான கூட்டுமுயற்சி எனும் செய்தியும் பலமாகச் சொல்லப்படுகிறது. இங்கே கூத்தில் மௌனகுருவுக்கு ஆர்வத்தை, அறிவை, கூத்தாடும் ஆற்றலை ஊட்டிய மட்டக்களப்பு அண்ணாவிமாரையும் கூத்தின் மறுமலர்ச்சிக்கும் மீளுருவாக்கத்திற்கும் நூலாசிரியரின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களித்த பேராசிரியர்களையும் வேறு பல கலைஞர்களையும் சந்திக்கிறோம். இவ்வாறு கூத்துக் கலையைப் பயின்று அதில் திறமை மிக்கவராக வளர்ந்த மௌனகுரு அந்தக் கலையின் முற்போக்குரீதியான மீளுருவாக்க விருத்திக்கும் பரவலுக்கும் தான் ஆற்றிய பங்கினை விவரமாகப் பதிவிடுகிறார். நிலப்பிரபுத்துவ, சாதிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கூத்து மரபினைக் கேள்விக்குள்ளாக்கி  முற்போக்குச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வகையில் புதிய உள்ளடக்கங்களைக் கொண்ட கூத்து நாடக மரபின் மீளுருவாக்கத்தின் முன்னணிப் பங்காளிகளில் ஒருவர். மட்டக்களப்பில் ஒரு கிராமத்தில் ஆரம்பிக்கும் மௌனகுருவின் கூறுரை (narrative) கிழக்கு, வடக்கு, மலையகம் என விரிந்து, கூத்துக்கூடாக இலங்கைக்குள் கிடைத்த பல்லின உறவுகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் கலைஞர்களுக்கூடாக அவர் ஈழத்தமிழரின் கூத்துக்கலைக்குத் தேடிய சர்வதேசத் தொடர்புகள் பற்றியும் இந்தத் அநுபவத்தொடருக்கூடாக அவருடைய தொடர்ச்சியான கலைத்துவ மற்றும் சமூக அறிவியல்ரீதியான சுயவிருத்தி பற்றியும் கூறுகிறது.

‘மாற்றமே நிரந்தரமானது’ எனும் தலைப்பிட்ட  முன்னுரையில் பாரம்பரியத்தைப் பேணும் நோக்கில் அதன் பழமையைப் பேணிக் காப்பதும் மாற்றத்தை நிராகரிப்பதும் அந்தப் பாரம்பரியத்துக்குச் சமாதி கட்டும் வழியாகும் எனும் செய்தியை உரக்கச் சொல்வதன் காரணத்தை நூலை வாசிக்கும்போது தெரியவருகிறது. ஈழத்து தமிழ் சமூகத்தின் கூத்துக் கலையில் விசேடமாக 1960களிலிருந்து ஏற்பட்டு வரும் மாற்றப் போக்குகள் பற்றிய தகவல்கள், விளக்கங்கள், கருத்து வேறுபாடுகளை நூலாசிரியர் வாயிலாக அறியக் கிடைக்கிறது. மாற்றத்திற்கூடாகவே கூத்து மரபு வாழ்கிறது, வாழமுடியும் அல்லாவிடில் அதற்கு எதிர்காலம் இல்லை எனும் செய்தி பலமாக இந்த நூலில் இழையோடுகிறது.

ஆயினும் மாற்றம் எப்போதும் எல்லோருக்கும் நன்மைபயப்பதெனக் கருதமுடியாது. அது எப்போதும் விமர்சனப் பார்வைக்குள்ளாகவேண்டும். வரலாறு நேர்கோட்டில் நகர்வதில்லை, அது நெழிவு, சுழிவுகளுக்கூடாகப் பயணிக்கிறது. பின்னடைவுகளை சந்திக்கிறது. மாற்றம் சமூகத்தில் யாரின் (வர்க்கம், சாதி, பால் மற்றும் இனம், மதம்)  நலன்களை முன்னிலைப் படுத்துகிறது? அதன் பின்னாலுள்ள அதிகார உறவுகள் எத்தகையவை? அது ஜனநாயகம் மற்றும் சமூகநீதிக்குச் சாதகமானதா இல்லையா?  இந்தப் பொதுவான கேள்விகள் கலைகளுக்கும் பொருந்தும். அதேவேளை கலைகள் தொடர்பாக வேறு சில கேள்விகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.  இந்த விடயம் பற்றி இந்த நூலில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் இது பற்றிய கருத்துப் பகிர்வுக்கும், விவாதத்திற்குமான சந்தர்ப்பத்தையும் திறந்து விடுகிறது.

முதலில் கால ஓட்டத்தில்  இலங்கைத் தமிழ் சமூகத்தில் கூத்துக்கலையின் மாற்றப் போக்குகளுக்கும் மௌனகுருவுக்குமிடையிலான உறவின் சில கட்டங்கள் பற்றிப் பார்ப்போம்.

 1959 ஆம் ஆண்டு 16 வயதில் மௌனகுரு வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் மாணவனாயிருந்தபோது கல்லூரி அதிபரின் பணிப்பில் ‘பாசுபதம்’ கூத்தை அரைமணி நேரக் கூத்தாகச் சுருக்கி எழுதி மேடையேற்றும் பொறுப்பை ஏற்கிறார்.  உள்ளூர் அண்ணாவி ஒருவரை கூத்தாடும் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்கிறார். அதுவரை கூத்தாட அநுமதி மறுத்த அவரின் தந்தையார் கல்லூரியில் கூத்தாட அநுமதி கொடுக்கிறார். மௌனகுரு எழுதுகிறார். ‘என் உடலுக்குள் இவ்வளவு காலமாக உறங்கிக் கிடந்த கூத்தாட்டங்கள் உருப்பெற்றன. என் ஆட்டத்தை அண்ணாவியார் வெகுவாக இரசித்தார்.’(33)

கூத்து வெற்றிகரமாக மூன்று தடவைகள் மேடையேறுகிறது.  இந்தக் கூத்துப் பற்றிய விபரத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தில் ஈடுபாடுமிக்க பேராசிரியர்கள் கணபதிபிள்ளை மற்றும் வித்தியானந்தனுக்கு மட்டக்களப்பைச்சார்ந்த இரு கல்வியாளர்கள் தெரியப்படுத்துகிறார்கள். வித்தியானந்தனும் அப்பொழுது இலங்கைப் பாரளுமன்றில் சமகால மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தவரும் நாடகத்துறையில் தீவிர ஈடுபாடுள்ளவருமான சிவத்தம்பியும் பாசுபதம் கூத்தைப் பார்க்க மட்டக்களப்புக்குச் செல்கிறார்கள். கூத்தையும் மௌனகுருவையும் பாராட்டுகிறார்கள். அரைமணிக்குச் சுருக்கப்பட்டு  ஒரு பாடசாலை  மேடையில் இளம் மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட வடமோடிக் கூத்தில் அவர்களின் கலைத்துவத் தேடலுக்கு ஒரு பயனுள்ள நடைமுறை உதாரணத்தைக்  கண்டனர் என நம்புகிறேன். அதுமட்டுமல்ல வித்தியானந்தனும் சிவத்தம்பியும் வந்தாறுமூலையில் மௌனகுருவையும் கண்டுபிடித்தனர். ஆகவே பாசுபதம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி அரங்கில் மேடையேற அழைக்கப்பட்டதில் ஆச்சர்யமில்லை.

பேராதனையில் இலங்கையின்  கூத்துக்கலைகளின் மறுமலர்ச்சிச் செயற்பாடுகளின் எழுச்சி காலகட்டம் அது.  பேராசிரியர் சரச்சந்திராவின் தலைமையில் சிங்கள கூத்து மரபில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறுகின்றன. இதன் விளைவாக 1950-60 களில் ‘மனமே’, ‘சின்ஹபாஹு’ போன்ற கூத்து நாடகங்கள் மேடையேறுகின்றன. சிங்களக் கூத்து மரபை மீளக்கண்டுபிடித்து அதனோடு ஈழத்துத் தமிழ்க் கூத்து மரபு உட்பட வேறு மரபுகளின் சில அம்சங்களையும் உள்வாங்கி சரச்சந்திரா தனது பங்களிப்பிற்கூடாகச் சிங்கள மக்களின் தேசிய நாடக வடிவமொன்றின் தோற்றத்திற்கு உதவினார். அதே பல்கலைக் கழகத்தில் தமிழ் நாடகக்கலைகளில் விசேடமாகக் கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தில் ஈடுபாடுகொண்ட கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் போன்றோருக்கு இது ஆகர்ஷமாய் விளங்கியது.

அவர் பேராதனையில் மாணவரானபோது வடமோடிக் கூத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவராக, மட்டக்களப்பு கூத்து மரபை அறிந்தவராக மட்டுமன்றி ஒரு கூத்தைச் சமகாலத்தேவைக்கேற்ப சுருக்கி எழுதிய அநுபவமும் உள்ளவராக இருந்தார். உரிய காலத்தில் உரிய இடத்தில் அவர் உரிய ஆசான்களின் மாணவராகிறார். கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் முன்னணி மாணவர்களில் ஒருவராகிறார். அன்றைய பேராதனை வளாகத்தில் செல்வாக்குப்பெற்றிருந்த மாக்சிச அரசியலால் கவரப்பட்டு மாக்சிசச் சிந்தனை வட்டங்களுடன் தொடர்பு கொள்கிறார். அவருடைய உலகப் பார்வை விரிகிறது, விமர்சன நோக்கில் ஆழமாகிறது.  அவருக்குப் பரிச்சயமான கூத்து மரபு மற்றும் அது தொடர்பான இலக்கியம் பற்றி விமர்சனரீதியில் பார்க்க முற்படுகிறார்.

வித்தியானந்தனின் தயாரிப்பில் பேராதனையில் மேடையேறிய நான்கு பிரபல கூத்துக்களில் எழுத்தாளராகவும் நடிகனாகவும் மௌனகுரு முக்கிய பங்கு வகிக்கிறார்.  கர்ணன்போர் (1962), நொண்டி நாடகம் (1963), இராவணேசன் (1964),  வாலிவதை (1966) ஆகிய இந்த நாலில் கர்ணன்போரும் நொண்டி நாடகமும் பழையவை. இவற்றை ஒரு மணித்தியாலத்துக்குள் சுருக்கிப் பிரதியாக்கும் பொறுப்பு மௌனகுருவிடம் விடப்படுகிறது. புதியவையான மற்றைய இரண்டின் பிரதிகளையும் எழுதும் பொறுப்பும் அவருடையதே. இது பற்றிய அவரது கருத்தைப் பின்வருமாறு பதிவிடுகிறார்.  ‘மட்டக்களப்புக் கூத்துகளில் பாத்திர உருவாக்கம் பாத்திர குணாம்ச வளர்ச்சி என்பன இல்லை. கதை கூறும் பண்பே அதில் மிகுதி.பாரம்பரிய கூத்துமுறையில் பாத்திர குணாம்சத்தை கொணருதல் என்பது புதிய முயற்சி. கூத்து நாடகமாகிய விதம் அது.’ (76).

இந்த கூத்து நாடகங்களின் நெறிப்படுத்தலில் வித்தியானந்தனுடன்  சிவத்தம்பி வகித்த முக்கிய பங்கினையும் பதிவிடுகிறார். ‘ஆட்டத்தை நடிப்பாக்கவேண்டும் என்று சிவத்தம்பி அடிக்கடி கூறுவார். ஒவ்வொரு நாடகத்திலும் சிவத்தம்பியின் கற்பனை செயல் புரிந்திருக்கிறது. நாட்டிய சாஸ்திரம் கூறும் நடிப்புமுறைகளை எமக்கு உணர்த்தி கீழைத்தேய நடிப்புமுறை என்ற கருத்துருவை அவர் 1960 களில் கொணர்ந்தார்.’ (78). இராவணேசனை ‘வடமோடி நாடகம்’ எனப் பெயரிட்டவர் சிவத்தம்பிதான் என்பதையும் குறிப்பிடுகிறார். 1960களில் பேராதனையில் நடந்த கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தில் கூத்து ‘கூத்து நாடகமாக’ பரிணமித்தது ஒரு முக்கிய மாற்றமாகும். பல ஆண்டுகளுக்குப்பின் மௌனகுருவின் புதியவார்ப்பில் இராவணேசன்  மறுபிறவிகள் எடுத்துப் பரந்த இரசிகர் கூட்டத்தைக் கண்டதுடன் விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

பேராசிரியர் வித்தியானந்தனின் பிரதான பங்களிப்பை விவரமாகப் பதிவிடுகிறார். சகல சாதி மாணவர்களையும், பல்பிரதேச மாணவர்களையும் கூத்தில் இணைத்தமை; முதல் முதலில் பெண்களைக் கூத்தில் ஆடவைத்தமை;ஐரோப்பிய பண்பாட்டினடியாக எழுந்த பல்கலைக்கழகத்தில் கிராமிய மத்தள ஓசையையும் சலங்கை ஓசையையும் கேட்க வைத்தமை. இந்தப் பின்னணியில் வித்தியானந்தன் கொண்டுவந்த மாற்றங்களின் ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறார். முக்கியமாக நேரச்சுருக்கத்திற்கும் நவீன மேடையமைப்பிற்கும் ஏற்ப கூத்தின் பல்வேறு அம்சங்களையும் சுருக்கிச் சீரமைத்ததையும், கூத்திற்கு வடமோடி, தென்மோடி எனப்பெயர் வைத்ததையும் குறிப்பிடலாம். அவர் கற்றதை அவருடையே வார்த்தைகளிலேயே கேட்போம்.

‘கூத்தைப் படச்சட்டமேடையில் ஆடலாம், சுருக்கிப்போடலாம், செம்மைப்படுத்தலாம், அழகுபடுத்தலாம் , மத்தளம் தவிர்ந்த பிற வாத்தியங்களையும் சேர்க்கலாம், ஒப்பனை உடைகளை மாற்றலாம், ஒளியமைப்பை நிகழ்த்தலாம் போன்ற விடயங்களை நான் அங்கு கற்றுக்கொண்டேன்.’ (173).

பிரித்தானியாவில் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்துப் பேராதனைக்குத் திரும்பிய கைலாசபதியுடன் மௌனகுருவுக்கு நெருக்கமான உறவு கிடைத்தது. ‘எத்தனை நாட்களுக்குப் பழைய கூத்துக்களுக்குள் நிற்கப்போகிறீர், மக்கள் பிரச்சனைகளை கூத்துக்களாக்க இயலாதா?’ எனக் கேட்ட கைலாசபதி, ‘ வங்காளத்தின் மரபுவழி நாடக அரங்கான யாத்ராவை, மக்கள் பிரச்சனை கூறும் நாடகமாக்கிய உத்பால்தத்தையும், மரபுமுறையிலமைந்த சீன ஒப்ராவை சீனக் கம்யூனிச அரங்கும் கலைஞர்களும் மக்கள் போராட்ட நாடக வடிவமாக்கிய செய்திகளையும் கற்பித்தார். கூத்து வேறு திசையில் செல்லவேண்டும் என்பது புலனானது’ (175-176).

பேராதனையில் கிடைத்த அறிவுடனும் செறிவான அநுபவத்துடனும் ‘கூத்து வேறுதிசையில் செல்லவேண்டும்’என்ற சிந்தனையுடனும் பட்டதாரியாக வெளியேறிய மௌனகுருவுக்குத் தனது கூத்துக்கலைப் பயணத்தைத் தொடரும் பாதையைத் தெரிவுசெய்வதில் குழப்பமிருக்கவில்லை என நம்பலாம்.

கிழக்கிலே கல்முனை சாஹிரா கல்லூரியில் ஆசிரியராகவிருந்த காலத்தில் கூத்துப் பழக்குவதிலும் கூத்துகளைத் எழுதித் தயாரித்து மேடையேற்றுவதிலும் ஈடுபடுகிறார். அந்தக் காலத்தில்  (1968 -) யாழ்ப்பாணத்தில் தீண்டாமையை ஒழிக்கும் வெகுஜன இயக்கத்தின் பெரும் போராட்டம் இடம்பெறுகிறது. 1969இல்  கொழும்பில் லும்பினி அரங்கில் இடம்பெற்ற தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மாநாட்டில் மௌனகுரு எழுதி மட்டக்களப்பின் பலசாதிகளையும் சார்ந்த கலஞர்களை வைத்துத் தயாரித்த சாதி எதிர்ப்புக் கூத்தான ‘சங்காரம்’ மேடையேறியது.  ‘சங்காரம்’  மண்டபத்தில் நிரம்பிவழிந்திருந்த பார்வையாளர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.

1960களுக்குப்பின் இடம்பெற்ற கூத்தின் பரிணாமப் போக்கினை விளக்கும் நோக்குடன் 1991இல் மௌனகுரு எழுதிய ‘பழையதும் புதியதும்’  நூலில் ‘பின்னோக்கிய தேடலும் முன்னோக்கிய பாய்ச்சலும்’ எனத் தலைப்பிடப்பட்ட கட்டுரையில் கூத்தை எப்படிப் பாதுகாக்கலாம், அதை எப்படி வளர்க்கலாம் என்பன பற்றிக்கூறுகிறார். இந்த வகையில் ‘சங்காரம்’ அவருடைய ‘முன்னோக்கிய பாய்ச்சலின்’ ஒரு ஆரம்பப் பரிசோதனை முயற்சி எனக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன். புரட்சிகர அரசியல் செய்திகளையும் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான வெகுஜன எழுச்சியையும் உள்ளடக்கமாய்க் கொண்டிருந்த அந்த வடமோடிக் கூத்து நாடகம் சில ஆக்கபூர்வமான விமர்சனங்களை மட்டுமன்றி பாரம்பரியத்தின்பேரில் பழமைபேணும் நிலைப்பாட்டிலிருந்தோரின் விமர்சனங்களையும் சந்தித்தது என் நினைவுக்கு வருகிறது. விமர்சனங்களையும் கவனத்தில் எடுத்து சங்காரத்தில் சில மாற்றங்கள் பின்னர் செய்யப்பட்டன. 1970இல் யாழ்ப்பாணத்தில் அம்பலத்தாடிகள் தீண்டாமைக்கு எதிராக காத்தான் கூத்து வடிவத்தில் ‘கந்தன் கருணை’யை மேடையேற்றினர். இதில் மௌனகுரு பிரதான வேடத்தில் நடித்தார். அன்றைய சாதி எதிர்ப்புப் போராட்டச் சூழலில் இந்தக் கூத்தும் வரவேற்பைப் பெற்றது.

இந்த முயற்சிகள் கூத்துக்கலையின் மாற்றங்கள் ஒரு செயல்முறைப் போக்காக உருவெடுப்பதன் அறிகுறிகள் போலமைந்தன. வேறு மரபுகளைச் சார்ந்த நாடகக் கலைஞர்களையும் இது கவர்கிறது. உதாரணமாக 1970களில் கொழும்பில் பிரபல நாடகக் கலஞர்களான சுந்தரலிங்கம் (விழிப்பு, அபசுரம்), தாசீசியஸ் (புதியதொரு வீடு), சுஹைர் ஹமீட் (வேதாளம் சொன்ன கதை) ஆகியோர் தமது தயாரிப்புகளில் கூத்திலிருந்து ஆட்டங்களை பயன்படுத்த முன்வந்தபோது மௌனகுரு உரிய ஆட்டங்களை நடிகர்களுக்குப் பழக்கி உதவினார். கூத்தின் ஆட்டவடிவங்களின் பயன்பாடு பன்முகரீதியில் விரிவடையும் போக்கிற்கு இவை சில உதாரணங்கள். 1960களுக்குப்பின்னான கூத்துக்கலையின் மாற்றப்போக்கு தனியே ஒரு குறிப்பிட்ட மரபிற்குள் மாத்திரம் அடங்கிப்போய்விடவில்லை. அதன் தாக்கம்  பரவுவது காலத்தின் தேவையைக் காட்டியது.

மட்டக்களப்பில், கொழும்பில், யாழ்ப்பாணத்தில் பலருக்குக் கூத்துக் கற்பிப்பதிலும் கூத்துகளை மேடையேற்றுவதிலும்  ஈடுபட்டிருந்த மௌனகுருவின் கூத்த யாத்திரையில் 1978இல் அவர் யாழ் பல்லகலைக்கழகத்தில் பேராசிரியர் கைலாசபதியின் வழிகாட்டலில் ஆரம்பித்த கலாநிதிப்பட்ட ஆய்வு ஒரு முக்கிய கட்டமாகும். மட்டக்களப்பு கூத்துக்களின் சமூக அடித்தளம் பற்றி 1976இல் அவர் சமர்ப்பித்த ஒரு கட்டுரையில் அந்தப் பிரதேசத்தின் கூத்துக்களின் உள்ளடக்கங்கள் அங்கு நிலவும் சாதி அமைப்பையும் அதை நியாயப்படுத்தும் கருத்தியலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது பற்றியும் அவை மாற்றப்படவேண்டியதன் தேவை பற்றியும் வாதிட்டார். இந்த வாதமே அவருடைய கலாநிதிப் பட்ட ஆய்வின் கருதுகோளின் பிரதான அம்சமாயிற்று. கைலாசபதி, ‘விடை கூறமுடியாத பல வினாக்களை எழுப்பினார். திக்குமுக்காடவைத்தார். என் கூத்தாய்வுப் பயணம் இப்படித்தான் ஆரம்பித்தது’ என எழுதுகிறார்.(101). ஆறு வருடங்களாக நடந்த இந்த ஆய்வுத் திட்டம் 1982இல் பேராசிரியர் கைலாசபதியின் மறைவிற்குப்பின் பேராசிரியர் சிவத்தம்பியின் மேற்பார்வையில் தொடர்ந்து முடிவுற்றது. மாக்சிச தத்துவார்த்த அணுகுமுறையில் செய்யப்பட்ட இந்த ஆய்வு 1998இல் ‘மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்’ எனும் தலைப்பில் விரிவான நூலாகவும் வெளியிடப்பட்டது.  ‘சமூக இயக்கப்பாட்டிற்கும் சமூகப் பின்னணிக்கும் நாடகங்களுக்குமிடையே அறாத் தொடர்பு உள்ளது என்பதும், சமயச் சடங்குகளிலில் இருந்து சமூகமாற்றம் காரணமாக நாடகம் பிறந்தது என்பதுமான கோட்பாடுகளை பொது விதிகளாக வைத்து இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது’ என முன்னுரை சொல்கிறது (மௌனகுரு, 1998: 14). மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை ஆழ ஆராய்வதுடன் சிங்கள மற்றும் இந்திய, சர்வதேச மரபுவழி நாடக மரபுகளின் மாற்றப் போக்குகள், உலக மட்டத்தில் அறியப்பட்ட நாடகக் கலைஞர்கள் மற்றும் விமர்சகர்களின் சிந்தனைகள் பற்றியும் முக்கியமான விடயங்களை உள்ளடக்குகிறது.

மட்டக்களப்பின் சடங்குகளும், வரலாறும் சமூக அமைப்பும், முக்கியமாக நிலமானிய அமைப்பும், எப்படி தென்மோடி, வடமோடி நாடகங்களை உருவாக்கின என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.  அவரது ஆய்வின் முடிவுகள் வேறு கூத்து ஆய்வாளர்களின் முடிவுகளிலிருந்து பெரிதும் மாறி இருந்தன என்பதை அறியத்தருகிறார்.  ‘கூத்து நிலமானிய சமூக அமைப்பின் ஓர் கலைவடிவம். அது மக்களை இன்றைக்கும் மகிழ்விக்கும் அதே நேரம் அது மக்களுக்கு இந்த சமூக அமைப்பையும் அதன் விழுமியங்களையும் ஏற்க வைக்கும் ஓர் போதை மருந்துபோலவும் காட்சிதருகிறது… கூத்து தமிழரின் சிறந்த நாடக வடிவம் ஒன்றின் சீணித்த (நலிந்த) வடிவம் என்பதும் புலனாயிற்று’ எனும் முடிவுக்கு வருகிறார் (183-184). இதுவும் இந்த ஆய்வின் மற்றைய முடிவுகளும் ‘கூத்தை இன்னொரு வகையில் மீளுருவாக்கம் செய்யவேண்டும்’ எனும் கருத்தை மேலும் வலுப்படுத்த உதவின. ‘கூத்து ஒரு கொண்டாட்டம்தான் இந்தக் கொண்டாட்டத்துக்குள் இருக்கும் சுரண்டலை நாம் கண்டு கொள்ளவில்லை’ என மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறார். கூத்தை மேலும் வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்லும் மௌனகுருவின் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்கு இந்த ஆய்வும் அதனால் கிடைத்த அநுபவமும் ஒரு ஆக்கபூர்வமான உந்தலையும் துணிவையும் கொடுத்துள்ளன எனக் கருதலாம்.

சில சந்தர்ப்பங்களில் ஒரு சில கூத்துகளில் விளிம்புநிலை மக்களின் சார்பில் குரல்கள் ஒலித்தாலும் ஒரு எதிர்ப்பரங்கு மரபு வளரமுடியாதிருந்த நிலையை மாற்றும் காலம் கனிகிறது. 1991இல் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட நுண்கலைத்துறையின் தலைவராக மௌனகுரு நியமனம் பெற்றது ஈழத்துக் கூத்துக்கலையின் விருத்திக்கு  கிழக்கில் பல்கலைக் கழக மட்டத்திலான அங்கீகாரத்தையும் ஆதரவையும் கொடுத்தது.  உள்நாட்டுபோர்ச்சூழலின் பல தடைகளுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் மௌனகுருவும் அவருடன் கடமையாற்ற நியமனம் பெற்ற இளம் விரிவுரையாளர்களும் கூத்துக்கலையில் ஆர்வமுள்ள இளம் சந்ததியை உருவாக்குவதில் ஈடுபட்டார்கள். ஆனால் ‘ஊரூராய்க் கூத்தாடிய மட்டக்களப்பில் கூத்துப் பார்க்காத மாணவர் பரம்பரையே பல்கலைக்கழகத்தில் இருந்தது’ எனும் கசப்பான யதார்த்தை எதிர்கொள்கிறார்கள்.  கூத்துப் பற்றிப் பல மாணவர்களிடம் நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. இதனால் சோர்வடையாது முயற்சியைத் தொடர்கிறார்கள். மௌனகுரு குழுவின் கூட்டு முயற்சி பலனளிக்கிறது. மாணவர்களைக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று கலைஞர்களுடன் சந்திப்புகளை ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டார்கள். ஆசிரியர்கள் மற்றும்  கூத்தாட விரும்பும் மாணவர்களுடன் மட்டக்களப்பு அண்ணாவியார்களும் இணைந்து செயற்படுவதைச் சாத்தியமாக்குகிறார்கள். கூத்தைப் பழைய மரபு முறையிலும் புதிய முறையிலும் மாணவர்களுக்குப் பயிற்றுகிறார்கள்.

‘பின்னோக்கிய தேடல், முன்னோக்கிய பாய்ச்சல்’ எனும் வழியில் யாழில் இருந்த காலத்தில் கூத்தின் மீளுருவாக்கம் பற்றிக் கண்ட கனவை நனவாக்க மட்டக்களப்பில் ஒரு நிறுவனத்துடன் துறைசார் விரிவுரையாளர்களும் கிடைக்கிறார்கள். பல சவால்களுக்கு மத்தியில் ‘இராவணேசனை’ மீளுருவாக்கி மேடையேற்றத் தீர்மானிக்கிறார்கள். 2001இல் புதிய முறையில் ‘இராவணேசன்’ வடமோடிக் கூத்து நாடகமாக வெற்றிகரமாக மேடையேறுகிறது. 2005வரை பல மேடைகளை பல்வேறு இடங்களில் காண்கிறது.  இராவணேசன் பல மீளுருவாக்கங்களைக் காண்கிறது. 2009இல் பேராசிரியர் பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் அதற்கு வெளியே அரங்க ஆய்வு கூடத்திலும், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திலும்  தொடர்ந்து செயற்படுகிறார்.

2001-2019 காலத்தில் ஐந்து வேறு முறைகளில் ‘இராவணேசன்’ மீளுருவாக்கம் பெற்று மேடையிடப்படுகிறது. இலங்கையின் பல்லின ரசிகர்களின் பாராட்டையும் பெறுகிறது. இவையெல்லாம் இலங்கையின் சமகால அரசியல் நிலைமைளின் போக்கினைக் கூறுகின்றன.  இராவணேசனின் பல்வேறு மீளுருவாக்கங்ளைச் செய்துகாட்டிய அநுபவம் பற்றி அவர் யாவருடனும் விசேடமாக விமர்சகர்களுடனும் நாடகக் கலைஞர்களுடன் ஒரு முக்கிய பாடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ‘ஒரு பிரதி காலம் தோறும் மாறலாம் ஆற்றுகையும் காலம் தோறும் மாறலாம் என்பதற்கு 2001-2019 காலத்தில் மேடையிட்ட இராவணேசனின் வேறுபட்ட கூத்து நாடகங்கள் உதாரணங்களாகின்றன.’ (195). இராவணேசனை மட்டுமன்றி வேறு பல கூத்துக்களையும் புதியமுறையில் மீளுருவாக்கினார்.

2011இல் நோர்வேயில்  ‘இமயத்தை நோக்கி’ எனும்  வடமோடிக்கூத்துக் கலந்த நாடகத்தை பிரளயன் மற்றும் மோகனதாசுடன் இணைந்து வாசுகி ஜெயபாலனின் உதவியுடன் ஒரு பல்லின நடிகர்குழுவுக்குப் பழக்கி ஒஸ்லோ ஒப்ரா மண்டபத்தில் மேடையேற்றிச் சாதனை படைத்தார். பூமி வெப்பமடைவதையும் அதனால் வரும் விளைவுகளையும் பிரதிபலிக்கும் இந்தக் கூத்து நாடகத்தில் நோர்வேயில் வாழும் தமிழ் நடிகர்களுடன் லெபனொன், பாகிஸ்தான், எரிட்டிரியா, அமெரிக்கா, ஸ்கொட்லாண்ட் போன்ற நாடுகளிலிருந்து வந்து நோர்வேயில் வாழும் நடிகர்களும் சேர்ந்து தமிழில் பாடி ஆடினர்.

மௌனகுருவின் கூத்துக்கலை மீளுருவாக்க நடைமுறையை நோக்குமிடத்து அவர் ஒரு திறந்த மனப்பாங்குடன் ஒரு இயங்கியல்ரீதியான கோட்பாட்டின் ஒளியில் செயல்படுவதைக் காணுகிறோம். சமீப காலங்களில் நவீனத்துவத்திற்கு பின்னைய பொதுவாக postmodernist, deconstruction (கட்டுடைப்பு), postcolonial (காலனித்துவத்திற்குப் பின்னைய)  சிந்தனைப் போக்குகளையும் கலைத்துறையில் அவற்றின் செல்வாக்கையும் விமர்சன நோக்கில் ஆராய்ந்து தனது அணுகுமுறையைச் செறிவாக்கியுள்ளார்.

இளைப்பாறிய பின் பல்கலைக்கழகம் அவரைத் தொடர்ந்தும் பயன்படுத்தத் தவறியதும், 2015இன் பின் விபுலானந்த நிலையம் அவருடன் தொடர்பில்லாது போனதும் அவருக்கு மட்டுமன்றி இலங்கையில் நுண்கலைத்துறையின் விருத்தியில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட பலருக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்தபோதும் தனது பணியைத் தொடர்கிறார். அவர் சார்ந்திருக்கும் கூத்துக்கலையின் மீளுருவாக்க வரலாற்றுப் போக்குத் தொடரும்வகையில் இளம் சந்ததிக் கலைஞர்களை உருவாக்குவதில் அவரின் ஈடுபாடு போற்றத்தக்கது.

ஈழத்துத் தமிழ்க் கூத்துக்கலையின் மீளுருவாக்கத்தை ஒரு பன்முகத்தன்மை கொண்ட  வரலாற்றுப் போக்காகப் பார்ப்பதே நியாயமானது. கூத்துக்கலையின் மீளுருவாக்கம் எனும்போது அது சமூகத்தேவைகளுக்கேற்ப உள்ளடக்க மற்றும் அழகியல்ரீதியில் சமகாலமயப்படுத்தலைக் குறிக்கிறது. இங்கே இலாபநோக்கில் பொழுதுபோக்குச் சந்தைக்காக நாடகத்தை பண்டமயமாக்கும் போக்கிற்கும் சமூகப் பிரச்சனைகளையும் மனித வாழ்நிலையின் முரண்பாடுகளையும் ஆழ அறிந்து எதிர்காலப்பார்வையில் கலைத்துவச் செயற்பாடுகளில் ஈடுபடும் போக்குகளுக்குமிடையிலான வேறுபாடு முக்கியமானதாகும். பேராசிரியர் மௌனகுருவும் அவருடன் இயங்குவோரும் பின்னைய அணியினர் என்பதை சொல்லத் தேவையில்லை ஆயினும் இந்தவகையில் வேறு கலைஞர்கள் குழுக்களும் தத்தமது நிலைப்பாடுகளிலிருந்து செயற்படுகிறார்கள் என்பதை ‘நந்தவனத்திற்கு அழகு பல்வகைப் பூக்களே’ என நூலின் இறுதி அத்தியாயத்தில் அவர் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது.

இந்த இறுதி அத்தியாயம் கனதியானது. கூத்துப்பற்றிய அவருடைய கருத்துக்கள் மாறிவந்த விதத்தை விவரமாக விளக்குகிறார். இதில் சில முக்கிய அம்சங்களை நான் ஏற்கனவே தொட்டுள்ளேன். வேறொரு முக்கிய அம்சம் கூத்தின் மீளுருவாக்கம் தொடர்பாக 2000 ஆம் ஆண்டிற்குப்பின், விசேடமாகக் கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து எழுந்துள்ள, கோட்பாட்டுரீதியான  எதிர்கருத்தாகும். ‘பின்நவீனத்துவ’, ‘பின்காலனித்துவவாத’,சிந்தனைகளைச் சார்ந்திருக்கும் ஒரு குழுவினர் இதுவரை மௌனகுரு போன்றோர் செய்தது கூத்தின் மீளுருவாக்கம் அல்ல எனும் விமர்சனத்தை முன்வைத்ததுடன் அவர்களின் அணுகுமுறையில் சில மீளுருவாக்கக் கூத்துக்களையும் மேடையேற்றியுள்ளார்கள்.  கோட்பாட்டுரீதியில் இங்கு நாம் காண்பது மாக்சிசத்திற்கும் பின்நவீனத்துவ, பின்காலனித்துவ செல்நெறிகளால் ஆகர்சிக்கப்பட்ட கலாச்சார அடையாள அரசியல் போக்கிற்குமிடையிலான முரண்பாடாகும். விசேடமாகப் பின்காலனித்துவ (postcolonial) வாதம் சார்ந்த ‘விளிம்புநிலை மக்கள் கற்கைகள்’ (subaltern studies) செல்நெறிக்கும் மாக்சிசத்திற்கும் இடையிலான உறவின் பல்வேறு கட்டங்களையும் முரண்பாடுகளையும் ஆராய்வது பயன்தரும்.  இங்கு கோட்பாட்டுரீதியில் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. மாக்சிசமெனும் பொது மரபில்  ஒன்றுக்கு மேற்பட்ட செல்நெறிகள் இயங்குவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பொதுவாகக் கலாச்சார அடையாள அரசியலில் மேலாட்சி செலுத்தும் இனத்துவமையக் கருத்தியல் சமூக அமைப்புப் பற்றிய விமர்சனப் பார்வையைக் குறுக்குகிறது. இதனால் கூத்து மீளுருவாக்கத்தைப் பொறுத்தவரை அடையாளத்தின் பெயரில் பின்னோக்கிய பழமைபேணும் போக்கின் பிடிக்குள்ளாவது சுலபம். இது ஒரு பொதுவான விமர்சனம். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பிரிவினால் மேடையேற்றப்பட்ட மீளுருவாக்கக் கூத்துகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. அவற்றின் பிரதிகளையும் நான் பார்த்ததில்லை. ஆயினும் ஈழத் தமிழரின் கூத்துக்கலையின் மீளுருவாக்கம் பற்றிக் கருத்துவேறுபாடுகள் தோன்றியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. இது கூத்துக்கலையின் மீளுருவாக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் உதவும்வகையில் கேள்விகளை எழுப்புகிறது. மீளுருவாக்கம் என்றால் என்ன, அதற்கு ஒரு பொதுவான வரைவிலக்கணம் உண்டா? 1960களிலிருந்து தொடரும் மீளுருவாக்க வரலாற்றின் பிரதான போக்குகளை எப்படி இனங்காண்பது, எந்த விதிகளின்படி? அவற்றின் கோட்பாட்டுரீதியான, கருத்தியல்ரீதியான செல்நெறிகள் எத்தகையவை?  உலகரீதியான கலாச்சார மாற்றப் போக்குகள் மற்றும் அவை பற்றிய விவாதங்கள்  தமிழ் அரங்கியலின் மாற்றப் போக்குகளில் எந்தவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன? இப்படிப் பல கேள்விகள்.

மௌனகுருவின் கருத்தில் எதிர்மறைகளில் ஒற்றுமையை காண்பது பயன்தரும். மறுபுறம் எதிர்மறைகளின் மோதலில் ஒரு புதியது தோன்றலாம் எனவும் அவர் கருதுகிறார். இவை நல்ல எண்ணங்கள். எனது அபிப்பிராயத்தில் அந்த மோதல் ஒரு திறந்த ஆக்கபூர்வமான விவாதமாக உருவெடுக்கவேண்டும். அதற்கு இந்த நூல் வழி திறக்கிறது.

August 2021

நூல் விபரம்:

சி. மௌனகுரு, கூத்த யாத்திரை நான் கொண்டதும் கொடுத்ததும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, சென்னை 2021.

இந்த நூலின் இறுதி அத்தியாயம் பின்வரும் தலைப்பில் குமரன் புத்தக இல்லத்தால் தனி நூலாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது: சி. மௌனகுரு, கூத்தே உன் பன்மை அழகு, 2021

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ எம். வாமதேவனின் பயணம்

சமுத்திரன்

‘நான் சாதாரணமான ஒருவன்’ எனும் வார்த்தைகளுடன் ஆரம்பிக்கும் வாமதேவனின் சுயசரிதையை வாசித்துமுடித்தபோது அதற்கு அவரை நன்கறிந்திருக்கும் பேராசிரியர் சந்திரசேகரன் வழங்கியுள்ளஅணிந்துரையில் வரும் பின்வரும் வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன. ‘பல்கலைக் கழகத்தில் பயின்ற காலத்தில், குடும்பமட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் பலரை இழந்து சொல்லொணாத் துயருக்குள் சிக்கிய நிலையில் மனஉறுதியுடனும் ஒருதார்மீக ஆவேசத்துடனும் தனது கல்விசார் புலமைக்கற்கையைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர் வாமதேவன் அவர்கள்.’ உண்மைதான். குடும்பத்தில் ஒரேகணத்தில் ஏற்பட்ட பல இழப்புகளின் அதிர்ச்சியைத் தாங்கிப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இலங்கை, பிரித்தானியா மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்று இலங்கையில் அவர் சேர்ந்திருந்த அரசசேவையில் அதிஉயர்நிலையை அடைந்த மலையகத் தமிழர் ஒருவர் தனது வாழ்வின் கதையை  ‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ என மகுடமிடப்பட்டுள்ள நூலில் முடிந்தவரை முழுமையாகப் பதிவிடுகிறார். அரசபணியில் அரைநூற்றாண்டுகால அனுபவம். அமைச்சின் செயலாளர் பதவியில் சிறுபான்மையினரைக் காண்பது அரிதாகிவிட்ட இந்தக் காலத்தில் அந்தப் பதவியை வகித்த மலையகத்தோட்டச் சமுதாயத்தைச் சார்ந்த முதலாவமவன் வாமதேவன். அரசசேவையில் அவரது நீண்ட பயணத்தில் அவர் பிறந்து வளர்ந்த மலையகத் தோட்டச்சமூகம் பற்றிய உணர்வும் அந்த மக்களின் சமூகநலன் மீதான அக்கறையும் கூடவே பயணித்தன எனும் செய்தியும் நூலில் இழையோடுகிறது. வாமதேவன் நிர்வாகி, ஆய்வாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு ஆளுமை. தன்னைச் ‘சாதாரணமான ஒருவன்’ என அடக்கமாக அழைத்துக்கொள்ளும் இவரின் ஆற்றல்கள் சாதாரணமானவையல்ல.

இந்த நூல் தனக்கு எழுபத்தைந்தாம் பிறந்தநாள் பரிசாக மகன்கள் பார்த்திபன், முகிலன், வசந்தன் ஆகிய மூவரிடமிருந்து கிடைத்ததென அறியத்தருகிறார். ஒரு சிறப்பான இந்தப் பரிசில் வாமதேவனின் துணைவி யோகேஸ்வரிக்கும் பங்கு உண்டெனலாம்.  மிகவும் சரளமான சுவையான மொழிநடையில் தனது சுயசரித்திரத்தை அது நகர்ந்துவந்த பரந்த சமூக, அரசியல் பின்னணியுடன் வரைந்துள்ளார் வாமதேவன். 

அவர் 1965 ஒக்டோபரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தின் கலைப்பீடத்தில் முதலாண்டு மாணவனாகும்போது நான் அதே பல்கலைக் கழகத்தின் பேராதனை வளாகத்தில் விவசாயப்பீடத்தில் இறுதியாண்டு மாணவனாயிருந்தேன். 1966 ஒக்டோபரில் அவர் பொருளியலில் விசேட பட்டப்படிப்புக்குத் தெரிவாகிப் பேராதனை வளாகத்திற்கு வருகிறார். நவம்பர் 22ஆம் திகதி அவரது தந்தையாரும் மூன்று சகோதரிகளும் மலையகத்தில் மண்சரிவுக்குப் பலியாகிய சோகநிகழ்வினால் தாக்கப்படுகிறார். குடும்பத்தில் அவருடைய தாயாரும் அவருமே எஞ்சினர். ‘இந்தச் சம்பவம் எனது வாழ்க்கையில் பலத்த மாறுதல்களுக்குக் காரணமாக அமைந்தது’ எனப் பதிவிடுகிறார். கல்வியில் தீவிரமாக ஈடுபடுகிறார். இந்த நாட்களிலேதான் அவருக்கும் எனக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறுகிறது. நூலில் அவர் குறிப்பிடுவதுபோல் பல்கலைக்கழக வளாகத்துக்கு அயலில் நானும் வேறுசில மாணவர்களும் வசித்துவந்த வீட்டில் அவரும் நம்முடன் சேர்ந்துகொள்கிறார்.  எனது இறுதி ஆண்டில் நான் பேராதனை வளாக மாணவர்சங்கத் தலைவராக இருந்தபோது இடம்பெற்ற மாணவர் போராட்டத்தில் வகித்த பங்கிற்காகப் பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டிருந்தேன். அந்தத் தண்டனைப்படி நான் பல்கலைக்கழக வளாகத்தின் ஐந்து மைல் ஆரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலைமைகளிலேயே எனக்கு வாமதேவனின் நட்புக் கிடைத்தது. இன்றுவரை அந்த நட்புத் தொடர்கிறது. பேராதனையில் எனக்கு ஏற்கனவே கிடைத்த நண்பர்கள் சண்முகமும் மறைந்த நவரட்ணவும்தான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ வாமதேவனின் வாழ்வின் பல்வேறு கட்டங்களுக்கூடாக வாசகரை எடுத்துச் செல்கிறது. ஹைலன்ட்ஸ் கல்லூரியில் அவருக்குக் கிடைத்த  முற்போக்காளரான ஆசிரியர்களின் அறிவுரீதியான செல்வாக்கு மற்றும்  மலையகத்தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்தில் அவர்கள்  காட்டிய தீவிர ஈடுபாடு எல்லாம் வாமதேவன் போன்ற மாணவர்களின் உலகப்பார்வைக்கும் அறிவுரீதியான விருத்திப்போக்கிற்கும் எப்படி உதவியுள்ளன என்பதை அறியமுடிகிறது.  பல்கலைக்கழகத்தில் நாம் சந்தித்த வாமதேவன் கல்வியில் தீவிரமாகக் கவனம் செலுத்திய அதேசமயம் பல்கலைக்கழகத்திலும் வெளியேயும் அரசியல் மற்றும் கலை இலக்கியக் கலந்துரையாடல்களிலும் பகிரங்க விவாதங்களிலும் பங்குபற்றவும் தவறவில்லை. கொழும்பில் சண்முகதாசனின் மாக்சிச அரசியல் வகுப்புகளில் பங்குபற்றியுள்ளார். பேராதனையிலும் மாக்சிசக் கல்வி வட்டத்துடன் நெருக்கமாக இருந்தார். கருத்தரங்குகளில்  தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார். அத்தகைய நிகழ்வுகள் பற்றி இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.  

கொழும்பில் முதலாம் ஆண்டு மாணவனாக மலையக சகமாணவர்கள் மூவருடன் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தபோது அவர்கள் எல்லோருமே நிதிப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டநிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிடம் உதவிக்கு விடுத்த வேண்டுதல் நிராகரிக்கப்பட்டதால் ஒரு நண்பர் வாமதேவனையும் இரு சகமாணவர்களையும் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்திடம் அழைத்துச் செல்கிறார். மலையகத்தமிழ் மாணவர்களின் நிலைமயைக் கேட்ட செல்வநாயகம் அந்த மூவருக்கும் ஒருவருக்கு 25ரூபா வீதம் மாதத்திற்கு 75ரூபா உதவியாக வழங்கக் கட்சியின் சார்பில் சம்மதிக்கிறார். இந்த உதவி ஆரம்பித்த சில மாதங்களில் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் தமிழ்விழாவில் உரையாற்ற வாமதேவன் அழைக்கப்படுகிறார். அந்த நிகழ்ச்சியில் அன்றைய யு. என். பி அரசாங்கத்தில் உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த தமிழரசுக்கட்சிப் பிரமுகர் செனட்டர் திருச்செல்வம் பிரதம விருந்தினராக உரையாற்றும்போது அங்கு கூடியிருந்த மலையகத்தமிழர்களுக்கு ‘மலையகம் உங்களுக்கான இடமில்லை நீங்கள் அனைவரும் வடக்கில் வந்து குடியேறவேண்டும்’ என அழைப்பு விடுத்தார். அமைச்சரைத் தொடர்ந்து உரையாற்றிய இளம் பட்டதாரி மாணவன் வாமதேவன் ‘இது எங்களது மண் நாங்கள் குடிபெயரமாட்டோம்’ என உணர்ச்சிபொங்க சபையோரின் கைதட்டலுக்கு மத்தியில் அவருக்குப் பதிலளித்தார். மலையக இளம் சந்ததியினர் மத்தியில் எழுந்துவரும் அடையாள உணர்வின் குரலாக ஒலித்தது வாமதேவனின் பதில். இதன் உடனடி விளைவாகத் தமிழரசுக் கட்சியின் பண உதவி நிற்பாட்டப்பட்டது! அந்தப் பதில் திருச்செல்வத்தையும் மற்றைய தமிழரசுக் கட்சித் தலைவர்களையும் சிந்திக்க வைத்திருக்கவேண்டும். ஆனால் அவர்களின் எதிர்வினை முற்றிலும் குறுகிய நோக்கின் பிரதிபலிப்பாகவே இருந்தது.பல்கலைக்கழக மாணவராயிருந்தபோது அநுபவித்த அரசியல் சுதந்திரத்தை நன்கு பயன்படுதியுள்ளார் என்பதற்கு அவர் பதிவுசெய்துள்ள சில விபரங்கள் ஆதாரங்களாகின்றன.  

1970ஆம் ஆண்டிலிருந்து அரசசேவையிலிருந்த காலகட்டம் பற்றிய அத்தியாயங்களில் இலங்கை அரசின் திட்டமிடல் அமைச்சு, அது சார்ந்த நிறுவனங்களின் கொள்கைகள், செயற்பாடுகள் மற்றும் வாமதேவன் வகித்த பதவிகள் அவர் கையாண்ட பொறுப்புக்கள் பற்றிய தகவல்களும் விளக்கங்களும் பொதிந்துள்ளன. நாட்டின் அரசியல் மாற்றங்கள் அவர் கடமையாற்றிய நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஏற்படுத்திய மாற்றங்களையும் விபரமாகக் குறிப்பிடுகிறார். பல சந்தர்ப்பங்களில் சமூகரீதியான ஆதங்கங்கள், விமர்சனங்கள் மனிதாபிமான உணர்வுடன் வெளிப்படுகின்றன.  வரிகளுக்கு இடையேயும் விமர்சனங்கள் தென்படுகின்றன.  1973ஆம் ஆண்டு உற்பத்தி ஆண்டாகப் பிரகடனப்படுத்தபட்டதைத் தொடர்ந்து நுவரேலியா கச்சேரிக்கு மாற்றம் பெற்றுப் போனபோதும் பிரிவு அபிவிருத்திச் சபைச் செயற்பாடுகளில் தோட்டங்கள் உள்வாங்கப்படாததால் ‘மனதிற்குள்ளிருந்த ஆசையான தோட்டப்புற அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்களிக்கமுடியும் என்பது நிராசையாகப் போய்விட்டது’ என மனம் வருந்துகிறார். அந்தக் காலகட்டத்தில் -1974இல் – நுவரேலியாவில் உணவின்மை காரணமாக தோட்டத்துறையினர் பட்ட அவலக்காட்சியின் துன்பியலையும் பின்வருமாறு பதிவிடுகிறார். ‘எனக்குத் தெரிந்தபலர், நகர்ப்புறங்களில் பிச்சை எடுத்த கோரங்களை நான் பார்த்ததுண்டு. தோட்டப்புற வயதுசென்றவர்கள், வரிசையாக நகரங்களில் கையேந்தி நின்றமை இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை.’ அந்த மக்கள் இத்தகைய கொடிய  இக்கட்டுக்குள்ளானமைக்கும் 1972இல் கொண்டுவரப்பட்ட காணிச்சீர்திருத்தச் சட்டத்தினதும் 1964இல் வந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தினதும் அமுலாக்கலுக்கும் உள்ள தொடர்பினையும் சுட்டிக்காட்டுகிறார். 

திட்டமிடல் அமைச்சில் வாமதேவனின் துறைசார் புலமைக்கு அங்கீகாரம் கிடைப்பதை அவருக்கு வழங்கப்படும் பதவி உயர்வு மற்றும் பாரிய பொறுப்புக்கள் எடுத்தியம்புகின்றன. ஆனால் 1983 ஜூலையில் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத வன்செயல்கள் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் பெரும் சோதனையாயிற்று. அன்று அவர் கடமையிலிருந்தவேளை வத்தளையிலிருந்த அவருடைய வீடு முற்றாக அழிக்கப்பட்டது. அந்த அழிவில்  நூல்களும் முனைவர் பட்ட ஆய்வுக்கெனச் சேர்த்துவைத்திருந்த தரவுகளும் சாம்பலாயின.  அங்கிருந்த அவரது மனைவியும் குழந்தைகளும் அயல்வீட்டில் தஞ்சமடைந்தனர். அவரும் குடும்பமும் இடம்பெயர்ந்து ஒரு அகதிகள் முகாமில் தங்கியிருந்தபோது சிங்கள நண்பர்கள் பலவகையில் உதவினர். ஆயினும் இந்த இடுக்கண்ணையும் தாங்கி மீண்டும் எழ வழிபிறக்கிறது.  குடும்பத்துடன் இந்தியாவுக்குத் தற்காலிகமாகக் குடிபெயர முடிவெடுக்கிறார். நோராட் நிறுவனத்தின் உதவியுடன் தென் இந்தியாவில் ஒரு ஆய்வினை மேற்கொள்கிறார். சேவையிலிருந்து விடுப்புப் பெற்று சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவில்(தமிழ்நாட்டில்) குடியேற்றப்பட்ட மலையகக் குடும்பங்களின் நிலைமைகள் பற்றிய பயன்மிக்க ஆய்வுத் திட்டத்துடன் ஜவஹர்லால் பல்கலைக் கழகத்துடன் இணைந்த திருவனந்தபுரம் அபிவிருத்திக் கற்கைகள் மையத்தில் எம்.ஃபில் (M. Phil) பட்ட மாணவராகிறார். 1987இல் அந்தப் பட்டப்படிப்பை நிறைவு செய்து அபிவிருத்தித் துறையில் முன்பைவிட மேலும் புலமை மிக்கவராக இலங்கைக்குத் திரும்பி அரசசேவையில் இணைகிறார். அவர் செய்த ஆய்வு ´Sri Lankan Repatriates in Tamil Nadu´எனும் தலைப்பில் நூலாகப் பிரசுரிக்கப்பட்டது. 

அரச சேவைக்குத் திரும்பியபின் இளைப்பாறும்வரை தோட்டத்துறையோடு நேரடியாக ஈடுபடும் பொறுப்புக்கள் மற்றும் தேசியரீதியில் முக்கியத்துவம்பெறும் பொறுப்புக்களை ஏற்றார். மேலும் புதிய சர்வதேச அநுபவங்களையும் பெறுகிறார். நாட்டின் உள்நாட்டுப்போர் மற்றும் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்ற சூழலில் அவற்றைக் கையாண்ட அநுபவங்கள் தொடர்பான பதிவுகளை வாசிக்கும்போது அரசசேவையின் அரசியல்மயமாக்கலின் தாக்கங்களையும் உணரமுடிகிறது. ஆயினும் நீண்டகாலமாகத்  தோட்டமக்களுக்கு அரச சேவைகள் சென்றடைவதற்கு இருந்த தடைகள் சிலவற்றை அகற்றுவதற்கும் வேறுசில வசதிகளை அவர்கள் பெறுவதற்கும் உதவும் செயற்திட்டங்களில் முக்கிய பங்காற்ற வாமதேவன் வகித்த பதவிகள் உதவின. லயவாழ்க்கையிலிருந்து விடுபட்டுத் தனிவீட்டு உடைமையாளராக  வேண்டும் என்பது  தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலக் கனவாயிருந்தது. 2015இல் வந்த அரசாங்கமாற்றம் இந்தக்கனவு நனவாகும் நம்பிக்கையைக் கொடுத்தது. இதற்காக உருவாக்கப்பட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக ஒரு வருடம் வாமதேவன் கடமையாற்றினார்.  அரசபதவியிலிருந்து மலையகத்தமிழ் சமூகத்தின் ‘அபிவிருத்திக்கு ஓரளவிற்கு பங்களிக்க கூடியதாக இருந்தமை எனக்கு மன நிறைவைத்தந்தது. இது அரசபணியாக இருந்தமையினால் இதனால் ஒருவர் திருப்தியடைய முடியாது’ எனத் தனது உள்ளக்கிடக்கையை பகிர்ந்தவண்ணம் அரசசேவையிலிருந்து இளைப்பாறியதும் சமூக செயற்பாட்டாளராகிறார். ‘தன்னார்வ நிலையில் சமூகத்திற்கென மேற்கொண்ட சில செயற்பாடுகள் எனக்கு இரட்டிப்பு மனநிறைவைத் தந்தன’ எனத் தனது திருப்தியை வெளிப்படுத்துகிறார்.  சமூகம் பற்றிய அநுபவரீதியான அறிவு, அபிவிருத்திபற்றிக் கொண்டுள்ள துறைசார் அறிவு, மற்றும் அரசசேவையில் கிடைத்த பல தசாப்த அநுபவம் எல்லாமே ஒன்றாக சமூக நீதி மற்றும் மனித மேம்பாடு பற்றிய வாமதேவனின் சிந்தனை உருவாக்கத்திற்கு உதவியுள்ளன. 2014ஆம் ஆண்டு ‘மலையகம் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி’ எனும் தலைப்பிலான நூல் மூலம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். எழுத்துத்துறையிலும் சமூகத்தளத்திலும் அவருடைய செயற்பாடுகள் தொடர்கின்றன. 

‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ நூலின் இறுதியில் ‘மகிழ்ச்சிக் குறியீடு’ பற்றி எழுதுகிறார். அது தனக்குச் சாதகமாக அமைந்துள்ளது என நம்பும் அதேவேளை ‘ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் குறிப்பாக குறைவான நிலையிலுள்ள நான் சார்ந்த சமூகமும் பொதுவாக இதே நிலையிலுள்ள ஏனைய சமூகப்பிரிவினரும் உயர்ந்த நிலையை அடையவேண்டுமென்பதே என்னைப் போன்றவர்களின் அவாவாக அமைகிறது.’ எனும் செய்தியுடன் நூலை நிறைவு செய்கிறார். இந்தச் செய்தியை அந்த மக்களின் எதிர்காலம் பற்றிய விசேடமாக அபிவிருத்தி பற்றிய ஒரு பரந்த கருத்துப்பரிமாறலுக்கான அழைப்பாக எடுத்துக்கொள்ளலாம் போல்படுகிறது.

வாமதேவனுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இலங்கை தேசிய இனப் பிரச்சனை ஏதிர்காலம் பற்றிய மீள்சிந்திப்பு – சில குறிப்புகள்

சமுத்திரன்

12 09 2020 Zoom கலந்துரையாடல் – Notes

 கடந்த பல தசாப்தங்களாகப் பல காரணங்களால் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை மாற்றங்களைக் கண்டுள்ளது என்பதால் அதை ஆழ ஆராய்ந்து எதிர்கால நோக்கில் மீள்சட்டகமாக்குவது பற்றிய கருத்தாடல்களின் தேவையை நாம் உணர்கிறோம். தற்போது விசேடமாக கடந்த பொதுத்தேர்தலின் முடிவுகளின் பின் தாயக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகங்களில் இலங்கை வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் நிலவரம் பற்றிய உரையாடல்களும் விவாதங்களும் உத்வேகம் பெற்றுள்ளன போல் தெரிகிறது. வடக்கு கிழக்கில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதற்கு மாற்றாகத் தம்மைத் தீவிர தமிழ்த்தேசியவாதிகளாகக் காட்டிக்கொண்டோரின் கட்சிகள் சில ஆசனங்களைப் பெற்றுள்ள போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய இழப்பின் எதிர்ப்பக்கத்தில் இலாபம் பெற்றவர்கள் கடும் பேரினவாதக் கொள்கையின் அடிப்படையில் தெற்கிலே பெரு வெற்றியைப் பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜனப் பெரமுனவிற்குச் சார்பான தமிழ் வேட்பாளர்களே.  

தேர்தலில் தமிழ் வாக்காளரின் கணிசமான பகுதியினரின் தேர்வுகள் தமிழ்த் தேசியவாதிகளுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளன. வடக்கிலும் கிழக்கிலும்  ஒரு பகுதித் தமிழர்கள் ‘அபிவிருத்தி வாக்குறுதிகளையும்’ ‘சலுகை அரசியலையும்’ நம்பித் ‘தமிழ்த் தேசியத்திற்கு’ முன்னுரிமைக் கொடுக்கத் தவறிவிட்டார்கள் எனத் தமிழ்த் தேசியவாதிகள் ஆதங்கப்படுகிறார்கள் போல் தெரிகிறது. இது ஒரு எதிர்காலப் போக்கின் ஆரம்பத்தின் குறிகாட்டியா எனும் ஏக்கமும் இந்த ஆதங்கத்திற்கு உரமூட்டலாம். இதனால் உந்தப்படும் உரையாடல்கள் நீண்டகாலமாக தமிழ் சமூகத்தில் மேலாட்சி செலுத்திவரும் தமிழ்த் தேசியவாதக் கதையாடல் கட்டமைப்பின் குறுகிய அரசியல் தளத்தில் உணர்ச்சிகள் மிகுந்த மேலோட்டமான பார்வைகளுக்கப்பால் செல்வதாகத் தெரியவில்லை. 

ஆயினும் இன்றைய தாயகத்தின் அரசியல் நிலைமை தேசிய இனப் பிரச்சனை பற்றியும் நீண்டகாலமாகத் தமிழ் சமூகத்தில் மேலாட்சி செலுத்தும் தமிழ் தேசியவாதம் பற்றியும் ஆழமான கலந்துரையாடல்களுக்கும் விவாதங்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தவகையில் இன்றைய கருத்தமர்வு ஒரு ஆரம்பமே. ஒரு அமர்வில் அலசி ஆராய்ந்து முடிவுக்கு வரக்கூடிய விடயமல்ல இது.

இலங்கை தேசிய இனப்பிரச்சனை / ஏதிர்காலம் பற்றிய மீள்சிந்திப்பு எனும் தலைப்பில் சில முக்கியமான ஒன்றோடொன்று தொடர்புள்ள விடயங்கள் பற்றிய ஒரு முதற்கட்டக் கலந்துரையாடலைச் செய்வதே இந்த அமர்வின் பிரதான நோக்கம். இங்கு தரப்பட்டுள்ள எல்லா விடயங்களையும் இந்த ஒரு அமர்வில் ஆழ ஆராயமுடியாது.

  • உள்நாட்டுப் போரும் போருக்குப்பிந்திய தசாப்தமும்
  • உலகமயமாக்கலின் தாக்கம்
  • பிராந்திய அரசியல்
  • சிறுபான்மை இனங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
  • அரசியல் தீர்வின் சாத்தியக்கூறுகள்

இன்றைய அமர்வில் உள்நாட்டுப்போரும் போருக்குப்பிந்திய தசாப்தமும் பற்றிக் கலந்துரையாடுவது ஒரு ஆரம்பமாக இருக்கும். இதை நாம் செய்யும்போது மற்றைய விடயங்களுடன் தொடர்புடைய கருத்துக்களும் வெளிவரலாம். போருக்குப் பிந்திய காலத்தின் அரசியல் மற்றும் சமூக, பொருளாதார போக்குகள் பற்றிப் பார்ப்பது அவசியம். தேசிய இனப்பிரச்சனையின் மீள்சிந்திப்புக்கும் அதற்கூடாக அதன் மீள்சட்டகமாக்கலுக்கு உதவக்கூடிய வகையிலும் நமது கருத்துப் பரிமாறல் அமையும் என எதிர்பார்க்கிறோம்.

சில சிறு குறிப்புகளுடன் இன்றைய கலந்துரையாடலை ஆரம்பித்து வைக்க விரும்புகிறேன்.

சில முக்கியமான தகவல்கள்:

  • கடந்த நான்கு தசாப்தங்களில் – குறிப்பாக உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் – இலங்கை அரசின் பேரினமயமாக்கல், அதாவது ethnocratisation, இனத்துவ மேலாதிக்கமயமாக்கல், தீவிரமாக ஆழமாக்கப்பட்டுள்ளது.
    • அரசின் இராணுவமயமாக்கல் நிரந்தரமாகியுள்ளது. இதன் நேரடித் தாக்கத்தை வடக்கு, கிழக்கில் காணலாம்.
    • அதிகாரவாதத்தின் பலமூட்டல்
    • 20ஆவது யாப்புத் திருத்தம் / ஜனாதிபதியைச் சர்வ அதிகாரமுடையவராக்குகிறது
    • புதிய யாப்புக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன
  • வடக்கு, கிழக்கின் சனத்தொகையியல் மாற்றங்கள் தொடர்கின்றன 
  • போருக்குப்பின் வடக்கு-கிழக்கு தமிழ் சமூகம் போருக்கு முன்னர் இருந்ததைவிட அரசியல்ரீதியில் பலவீனமாக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்தப் போக்குத் தொடரும் அறிகுறிகள் பலமாகத் தெரிகின்றன.
  • இன்றைய இலங்கையின் அரசியல் அமைப்பில் இனரீதியில் பாதிக்கப்படும் சமூகங்களாக வடக்கு கிழக்கில் தமிழர் மற்றும் முஸ்லிம்கள், மலையகத் தமிழர் மற்றும் தெற்கிலே வாழும் தமிழ் பேசும் மக்களை இனங்காணலாம்.  இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை அணுகும்போது இந்த யதார்த்தத்தைத் தவிர்க்கமுடியாது. 

இவற்றை மனதில் கொண்டு –

வடக்கு, கிழக்கு நிலைமைகளைச் சற்று ஆழமாகப் பார்ப்போம் (இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை, போருக்குபின்னான நிலமைகள் தொடர்பான எனது கட்டுரைகளை இந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்samuthran.net)

  • தேசிய இனப்பிரச்சனை உள்நாட்டுப் போராக மாறியதற்குக் காரணிகள் இருந்தன. அதே போன்று 30 வருடப் போரினால் பல விளைவுகள் ஏற்பட்டன. இந்த விளைவுகள் போரின் காரணிச் சங்கிலியுடன் (causal chain உடன்) பின்னூட்டப் போக்கினால் (feedback process) இணைந்தன. விளைவுகளும் காரணிகளாகும் போக்குத் தொடர்ந்தது, இன்றும் தொடர்கிறது. இந்த காரணி -விளைவு இருவழித் தொடர்பும் பின்னூட்டமும்  (cause-consequence interaction and feedback) பல கட்டங்களுக்கூடாக தேசிய இனப்பிரச்சனைக்குப் புதிய அம்சங்களைச் சேர்க்கிறது. இப்படியாக தேசியப் இனப் பிரச்சனை போர்க்காலத்தின் பல்வேறு போக்குகளின் முரண்பாடுகளினால் அரசியல் பொருளாதார, இனத்துவப்புவியியல்ரீதியில், கலாச்சார மற்றும் இவற்றுடன் தொடர்புள்ள பல்வேறு அம்சங்களில்  மாற்றங்களுக்குள்ளாகிறது. இதனால் தேசிய இனப்பிரச்சனை தன்மைரீதியான மாற்றங்களைக் கண்டுள்ளது எனக் கருதலாமா?  (எனது அபிப்பிராயத்தில் தேசிய இனப்பிரச்சனை தன்மைரீதியான மாற்றங்களைக் கண்டுள்ளது.)
  • விளைவுகளை நான் பட்டியலிடத் தேவையில்லை ஆயினும் சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறேன்:வாழ்வாதார அழிவுகள்,  இடப்பெயர்வுகள் (not always unintended, often deliberately, carried out by both the state´s military and the LTTE) நிரந்தரமான புலப்பெயர்வுகள் (internal and international ), வடக்குக் கிழக்கின் போர்பொருளாதாரம், புலப்பெயர்வுடன் வந்த காசாதாரப் பொருளாதாரமும் அதன் விளைவுகளும், நீண்டகாலமாக முகாம்களில் / மனிதாபிமான உதவியில் தங்கியிருத்தல் / சந்ததிகளையும் ஊடறுக்கும் இடப்பெயர்வு வாழ்க்கையும் சமூக விளிம்புமயமாக்கல் /
  • போர்க்காலத்துக்கு முன்பிருந்தே  தொடரும்  குடியேற்றத் திட்டங்கள்
  • ´காரணிச் சங்கிலி – விளைவுகளின்´ இயங்கியல் பற்றி மேலும் தொடரமுன் இன்று தாயகத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் ஒரு விடயம் பற்றி ஒரு அவதானிப்பு.

கடந்த நான்கு தசாப்தங்களாகப் போரின் சமூக, பொருளாதார, மனிதப் பாதுகாப்புரீதியான விளைவுகள் எப்போதும் முக்கியத்துவம் பெற்றபோதும் இவற்றைத் தற்காலிக மனிதாபிமான அவசரகாலப் பிரச்சனைகளாகப் பார்க்கும் போக்கும் நடைமுறையுமே மேலோங்கிய நிலையில் தொடர்ந்துள்ளது. இதில் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் பிரதான பங்கினை வகித்து வந்துள்ளன. இங்கு ஒரு முக்கியமான யதார்த்ததைப் புரிந்து கொள்ளவேண்டும். கடந்த நான்கு தசாப்தங்களாக அதாவது போர்க்காலத்திற்கும் அதற்குப் பின்னரும் வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தில் ஒரு பகுதியினர் பல்வேறு அவலங்களால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரப் பாதுகாப்பின்மை (livelihood insecurity), மற்றும் மனித மேம்பாட்டுச் சந்தர்ப்பங்களின்மை ஆகியவற்றினால் தொடர்ச்சியாக இன்னலுக்குள்ளாகியுள்ளனர். இந்த மக்களில் விளிம்புநிலையில் வாழ்பவர்கள் மட்டுமன்றி கீழ்நடுத்தர மட்டத்தினர் எனக் கருதப்படுவோரும் சமூக நகர்ச்சிச் சந்தர்ப்பங்களற்ற நிலையிலுள்ள மற்றயோரும் அடங்குவர். போருக்குப் பின்னர் இந்த மக்களின் நிலைமைகள் பற்றி விசேடமாக பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் பிரச்சனைகள் பற்றிச் சில ஆய்வறிக்கைகள் வெளிவந்துள்ளன.

போருக்குப்பின் வடக்கில் மக்கள் நலனுக்குப் பாதகமான நிதிமயமாக்கல் துரிதமாக இடம்பெற்றது என்பதை மறுக்கமுடியாது. இன்றைய நவதாராள உலகில் வறியவர்களைப் பொறுத்தவரையில் நுண்கடன் என்பது சமூகப் பாதுகாப்புவலையின் ஆபத்துமிக்க பிரதியீடாகும் (அதாவது நவதாராளப் பொருளாதாரக் கொள்கையின் விளைவான சமூகப்பாதுகாப்பற்ற நிலைமைகளில்). ஏனெனில் அது வறியோரை மேலும் நலிவுக்குள்ளாக்கும் நுண்கடன் எனப் பெயரிடப்பட்ட கடன்பொறிக்குள் இட்டுச் செல்கிறது,  இந்த ஆபத்துப் பலரைத் தற்கொலைக்குத் தள்ளுமளவிற்குப் பயங்கரமானது என்பதையும் கண்டுள்ளோம்.

 (For discussion: 1977 – Militarisation of the NQ; Neoliberalisation of the economy)

ஆயினும் போருக்குப்பின் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாக வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நிரந்தரமாக விளிம்புமயப்படுத்தபட்ட நிலையில் வாழும் மக்களின் சமூக முன்னேற்றம் பற்றியோ அல்லது போருக்குப்பின்னான வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி பற்றியோ எதுவிதமான கொள்கையும் இருக்கவில்லை. அரசியல் தீர்வுக்கு முதல் முன்னுரிமையென்ற பெயரில் அபிவிருத்தியை, குறிப்பாக பாதிக்கப்பட்டோரின் சமூக முன்னேற்றத் தேவைகளை, முற்றாகக் கைவிட்டனர். இந்த வகையில் வடமாகாணத்தின் முதலாவது மாகாண சபையின் கொள்கையற்ற போக்கும் செயல்திறன் குறைபாடும் அவலத்தில் வாழும் மக்களுக்கும், மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காககொண்ட ஒரு மாகாண அபிவிருத்திக் கொள்கையையும் செயற் திட்டத்தையும் எதிர்பார்த்திருந்தோருக்கும் பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்திருந்தால் ஆச்சரியமில்லை. கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயல்திறன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. 

உண்மையில் இது தமிழ்த் தேசியத் தலைமையின் வர்க்கத்தன்மையையும், நமது சமூகத்தின் அதிகார உறவுகளில் வர்க்கம் – சாதி – பால் ஆகியவற்றின் ஊடறுப்பினையும் தோலுரித்துக் காட்டுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக நிற்கும் தமிழ்த் தேசியவாதத் தலைமைக்கும் இது முற்றிலும் பொருந்தும்.  இந்தச் சூழலில் கடந்த தேர்தலில் தமிழ் வாக்காளர்களில் ஒரு கணிசமான பகுதியினர் பிரதான தமிழ்த் தேசியவாத அமைப்புக்களை நிராகரித்து ‘வேலைவாய்ப்பு, சமூக நலன்’ போன்ற வாக்குறுதிகளைப் பிரச்சாரப் பொருளாக்கிய, அரசாங்கத்திற்குச் சார்பான கட்சிகளுக்கு ஆதரவு வழங்கியிருப்பது அதிர்ச்சிதரும் விடயமல்ல. 

இதெல்லாம் தரும் பாடமென்னவெனில் அரசியல் தீர்வுக்கும் மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட அபிவிருத்திக்குமிடையே ஒரு சீனச் சுவர் கிடையாது. இரண்டிற்குமிடையிலான உறவை எப்படிப் புரிந்து கொள்வது? இது கலந்துரையாடலுக்கான ஒரு முக்கிய கேள்வி.

அபிவிருத்தியை அரசியல் தீர்வைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக அரசாங்கம் பயன்படுத்துவதை எதிர்ப்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றலுடைமைகளை வளர்க்கவல்ல அபிவிருத்திக்கான கோரிக்கையை நிராகரிப்பதாகாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகள் போரின் விளைவுகள், தொடரும் இராணுவமயமாக்கல், மற்றும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடையவை.  ஆகவே போருக்குப் பின்னான வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதார விருத்திக்கும் மனிதமேம்பாட்டிற்கும் முன்னுரிமை கொடுக்கும் அபிவிருத்திக் கொள்கையொன்றினை மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்படுவது அரசியல் தீர்வுக்கான போராட்டத்துடன் இணைந்த ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படவேண்டிய ஒரு காலகட்டத்திலேயே நாம் இருக்கிறோம். (see, samuthran.net)

தேசிய இனப் பிரச்சனையின் தன்மைரீதியான மாற்றம் தொடர்பாக / முக்கியத்துவமிக்க சில அம்சங்கள்

  • அடையாளம் – ஆள்புலம் இணைப்பின் (identity-territory nexus ன்) உடைப்பு அல்லது பலவீனமாக்கல்

வடக்கு கிழக்குத் தமிழரின் தாயகம் எனக் கோரப்பட்ட பிரதேசத்தின் தொடர்ச்சி மீட்க முடியாதவாறு (irreversibly) உடைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தின் இன்றைய புவியியல் 1970களில் இருந்ததைவிடப் பலவகையில் பாரதூரமாக மாறிவிட்டது. ஆள்புலத்துக்காக இரண்டு இனத்துவ தேசியவாதங்களுக்கு இடையிலான மிகவும் அசமத்துவமான போட்டியின் முடிவு அந்த ஆள்புலத்தின் பேரினமயமாக்கலே.

அரச காணிகளில் குடியேற்றத் திட்டங்கள், நில அபகரிப்பு, இராணுவ வலயங்கள், பொருளாதார மாற்றங்கள், மற்றும் தமிழரின் பெருமளவிலான நிரந்தரப் புலப்பெயர்வு போன்றவற்றால் அந்தப் பிரதேசத்தின் இனக்கூறுகளின் விகிதாசாரம், நிலச் சொத்துரிமைகள், நிர்வாகக் கட்டுமானம், பௌதிக உட்கட்டுமானம், நிலத்தோற்றங்கள் அடிப்படையான மாற்றங்களைக் கண்டுள்ளன. போர்க்காலத்தில் அரச குடியேற்றத் திட்டங்களும் இராணுவமயப்படுத்தப் பட்டன. இன்று வடக்கு கிழக்கு முன்பைவிட பல்லினமயமாகியுள்ளது, அரச காணிகளில் சிங்கள மக்களின் குடியேற்றம் தொடர்கிறது. அதேவேளை இனங்களுக்கிடையே முரண்பாடுகளும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன.

அதிகாரப் பகிர்வு பற்றிப் பார்க்கும்போது வடக்கு-கிழக்கு மீள் இணைப்பின் சாத்தியப்பாடு பற்றிய மீள் சிந்திப்பு அவசியமாகவே படுகிறது. இன்றைய அரசியல் புவியியல் நிலைமைகளில் மீள் இணைப்பின் சாத்தியப்பாடு கேள்விக்குறியாகிறது.  

  • புலப்பெயர்வின் விளைவுகள்

உள்நாட்டு மற்றும் சர்வதேசப் புலப்பெயர்வு வடக்கு கிழக்கின் அரசியல் பொருளாதாரத்தில், இனப்புவியியலில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. போரினால் ஏற்படும் இடப்பெயர்வுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் போர்ப்பிரதேசங்களில் அவற்றின் நீண்டகாலத் தாக்கங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியம்.

போரின் விளைவாக வடக்கு கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் மேற்கத்திய நாடுகளிலேயே குடியேறியுள்ளார்கள்.  புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கும் தாயகத் தமிழ் சமூகத்திற்கு மிடையேயான உறவு பல அம்சங்களைக் கொண்டது. இத்தகைய உறவை டயஸ்போறா (diaspora) ஆய்வாளர்கள் நாடுகடந்த சமூகங்களின் (transnational communities ன்) உருவாக்கமாகக் கோட்பாட்டு மயப்படுத்தி உள்ளார்கள். இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே ஒரு காசாதாரப் பொருளாதாரத்தின் (remittance economy ன்) வளர்ச்சி இந்த உறவின் ஒரு முக்கிய அம்சமாயிருந்தது. இதைத் தொடர்ந்து சமூக, கலாச்சாரரீதியான சிந்தனைகளின் வருகையும், செயல் திட்டங்களும் அதிகரித்தன. இவற்றின் நன்மை, தீமை பற்றிய ஆழமான ஆய்வுகள் இல்லையாயினும் பல போக்குகளை அவதானிக்க முடிகிறது.

  • காசாதாரப் பொருளாதாரம் போர்க் காலத்தில் பல குடும்பங்களைக் காப்பாற்றியது. அதேவேளை அது புலப்பெயர்வையும் மேலும் ஊக்கிவித்தது. வடக்கிலிருந்து தெற்கிற்கும் வெளிநாட்டிற்கும் நிரந்தரமாகப் புலம்பெயரும் போக்குத் தொடர்ந்தது. தெற்கில் குறிப்பாக மேல்மாகாணத்தில் குடியேறியுள்ள வடக்கு கிழக்கு தமிழரின் தொகை அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து உதவி பெறாதோரும் கல்வி, தொழில் காரணமாகத் தெற்கிற்குக் குடியகலும் போக்கும் தொடர்கிறது. தெற்கிலே குடியேறியுள்ள தமிழரின் எதிர்காலம் தெற்குடனேயே பிணைந்துள்ளது. அவர்கள் தமது மொழியுரிமையை அனுபவிக்க, இன அடையாளங்களைப் பேணி வளர்க்கும் உரிமையைப் பெற அங்குள்ள சிங்கள மக்களின் புரிந்துணர்வையும் ஆதரவையும் பெறுதல் அவசியம். 
  • வெளிநாட்டில் குடியேறவேண்டும் எனும் ஆவல் தமிழ் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதற்கு உதவக்கூடிய கதவுகள் இப்போ மூடப்பட்டுவிட்ட போதும் வெளிநாடு செல்லப் பல இளைஞர்கள் முயற்சித்தவண்ணம் இருப்பதை காணலாம். இருக்கும் வெளி நாட்டுத் தொடர்புகள் மட்டுமன்றி வடக்கு கிழக்கு நிலைமைகளும் இளம் சந்ததியினரின் புலப்பெயர்வை ஊக்கிவிக்கின்றன.
    • காசாதாரப் பொருளாதாரம் வடக்கு கிழக்கில் குறிப்பிடத்தகுந்த சமூக-பொருளாதார வேறுபடுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பணம் பெருமளவில் வடக்கிற்குச் செல்வதால் இந்தப் போக்கு அங்கேயே பலமாகியுள்ளது. இது சொத்துடைமை மற்றும் அதிகார உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும் சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளுக்குமிடையிலான தொடர்பு ஆராயப்படவேண்டியது. இதன் புவியியல் – அதாவது பிரதேசரீதியான தாக்கங்கள் – ஆய்வுகளின் அம்சமாகவேண்டும்.
  • நுகர்வின் மட்டுமன்றி நுகர்வுவாதத்தின் அவற்றுடன் தொடர்புள்ள வாணிபத்தின் வளர்ச்சியே காசாதாரப் பொருளாதாரத்தின் தலையாய போக்காகவுள்ளது. வெளிநாட்டு பணத்தின் வருகையால் உருவான சேமிப்பு உபரி வடக்கு கிழக்கில் உற்பத்தி மூலதனமாகப் பெருமளவில் முதலீடு செய்யப்படவில்லை. அத்தகைய முதலீட்டை ஊக்கிவிக்கும் சூழலை அரசாங்கம் உருவாக்கவில்லை.  (Studies have shown that the local institutional environment is the key for foreign remittances to contribute to development.)

For discussion

  • வடக்குக் கிழக்கு – தமிழர்களின் வெளியேற்றம், சிங்களமயமாக்கல், தமிழ் – முஸ்லிம் – சிங்கள உறவுகள்
  • தெற்கிலே நிரந்தரமாகக் குடியேறியுள்ள தமிழர்களின் மொழி உரிமை, அடையாளம்
  • மலையகத் தமிழரின் உரிமைப் போராட்டம்

வடக்கு கிழக்குக்கு வெளியே, மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வதிவிட நில உரிமைக்கான போராட்டம் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. பெருந்தோட்ட அமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அவர்களின் எதிர்காலம் பற்றிக் கேள்விகளை எழுப்புகின்றன. மலையகத்தில் சிங்கள மக்களுடன் சம உரிமை பெற்றுப் பாதுகாப்புடன் வாழ்வதே அவர்களின் போராட்டத்தின் நோக்கம்.

  • மேலே இனங்காணப்பட்ட பிரச்சனைகளின் தீர்வுகள் பற்றிப் பார்க்கும்போது அவை தவிர்க்கமுடியாதபடி வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கும் நம்மை எடுத்துச் செல்கின்றன. அது மாத்திரமன்று இவை எல்லாமே பல்லினத் தொடர்புள்ள பிரச்சனைகள். அத்துடன் இவற்றில் எந்தப் பிரச்சனையும் சிங்கள மக்களின் புரிந்துணர்வும் ஆதரவுமின்றித் தீரப்போவதில்லை. 

முற்போக்கு சக்திகளின் இன்றைய கடமைகளில் ஒன்று இந்தப் பிரச்சனைகளை ஆழ ஆராய்ந்து அவற்றை மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளாக உள்ளடக்கிய ஒரு திட்டத்தைத் தயாரிப்பதாகும். இப்படிச் சொல்வது எல்லா மக்களுக்கும் ஒரே அரசியல் திட்டமோ தீர்வோ என்பதாகாது. எல்லாக் குழுக்களுக்கும் பொதுவான ஜன்நாயகக் கோரிக்கைகளை இனம் காணவேண்டும். அத்துடன் ஒவ்வொரு மக்களின் கோரிக்கைகளுக்கான போராட்டம் மற்றைய மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு உதவ வல்லது என்பதை உறுதிபடுத்தவேண்டும்.  

இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகள் பல்லின நாடுகளே. ஒரு நவீன ஜனநாயக அரசில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசியங்களும்/ தேசிய இனங்களும் கூடி வாழ முடியும் என்பது பொதுமக்கள் மத்தியில் கலந்துரையாடப்படும் பொருளாகவேண்டும். 

சிங்கள மக்கள்

இனப்பிரச்சனை என்று ஒன்றில்லை. இருந்தது பயங்கரவாதப் பிரச்சனையே. அது தீர்க்கப்பட்டுவிட்டது என நம்பவைக்கப்பட்டுள்ள பெருபான்மையான சிங்கள மக்களின் மனதை எப்படி மாற்றுவது?

அத்தகைய ஒரு மாற்றம் இல்லாதவரை, சிங்கள மக்களின் சம்மதம், ஆதரவு, பங்குபற்றல் இல்லாதவரை தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு கிடைக்கப் போவதில்லை. இது ஒன்றும் புதிதாகப் பிறந்த ஞானமல்ல. பழைய செய்திதான். ஆனால் இன்று வடக்கு கிழக்குத் தமிழ்த் தரப்பிலிருந்து மீள்சட்டகமாக்கப்பட்ட தேசிய இனப்பிரச்சனையின் அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைப்பது சிங்கள மக்களுடன் ஒரு புதிய அரசியல் சம்பாஷணையை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. அதே போன்று முஸ்லிம் மக்களையும் மலையகத் தமிழ் மக்களையும் அணுகும் சந்தர்ப்பம் பிறக்கிறது. 

12.09.2020 

தேசிய இனப் பிரச்சனையும் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கமும்

எல். சாந்திக்குமாரின் கருத்துக்கள் பற்றி ஒரு பார்வை

சமுத்திரன்

தோழர் சாந்திக்குமாரின் மரணச்செய்தியைக் கொழும்பில் வாழும் ஒரு நண்பர் மின்னஞ்சல் மூலம் தெரியத் தந்தார். நான் நீண்டகாலமாக சாந்திக்குமாருடன் தொடர்பில்லாது இருந்ததனால் எழுந்த மனவருத்தம் அந்த மரணச்செய்தி தந்த துக்கத்தை அதிகரித்தது. அத்தகைய நேரத்தில் கடந்தகால நினைவுகள் பல எழுவது இயற்கையே. அவரை முதலில் சந்தித்தது 1970களின் நடுப்பகுதியில் என நம்புகிறேன். கூர்மையான சமூகப்பார்வையும் அரசியல் ஆர்வமும் மிக்க ஒரு இளைஞனாகவிருந்தார். அப்போது நான்  கொழும்பில் வாழ்ந்துவந்தேன். அன்று ஏற்பட்ட தொடர்பு சில பொதுவான ஈடுபாடுகளால் தொடர்ந்தது. வளர்ந்தது. ஒரு மாக்சிசக் கல்வி வட்டத்தை உருவாக்குவதில் எனக்கு இருந்த ஆர்வத்தை அவரும் பகிர்ந்து கொண்டார். சாந்தியுடனும் வேறு சிலருடனும் சேர்ந்து ஒரு கல்வி வட்டத்தை ஆரம்பித்தோம். அதில் பலர் இணைந்தனர். மற்றையோர் எல்லோரும் என்னை விட வயதில் இளையவர்களாகவும் அவர்களில் சிலர் பல்கலைக்கழக மாணவர்களாகவும் இருந்தனர். கல்வி வட்டம் சில ஆண்டுகள் மிகவும் நன்றாக இயங்கியது. மாக்சிசக் கோட்பாட்டுடன் இலங்கை மற்றும் உலக அரசியல், கலை இலக்கியம் போன்றவை உரையாடல்களின் முக்கிய விடயங்களாயின. 1970கள் இலங்கை அரசியலில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய கோட்பாட்டுரீதியான விவாதங்கள் தீவிரமடையத் தொடங்கிய காலம். வடக்கு கிழக்கு தமிழர்களின்  தேசிய சுயநிர்ணய உரிமை மாக்சியவாதிகள் மத்தியில் ஒரு விவாதப் பொருளாகியது. இந்த விவாதங்களும் கருத்துப் பரிமாறல்களும் மலையகத் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பான கேள்விகளையும் உள்ளடக்கும் வகையில் விரிந்தன. மலையகத் தமிழரின் சமூக உருவாக்கம் நான் பங்குபற்றிய கலந்துரையாடல்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. இவற்றில் சாந்திக்குமாரின் பங்களிப்பும் ஈடுபாடும் மிக முக்கியமானது. சாந்திக்குமாரை நினைவுகூரும் இவ்வேளை அவருடைய இதயத்திற்கு நெருக்கமானதாகவும் அறிவுரீதியான தேடலின் பிரதான விடயங்களில் ஒன்றானதுமான மலையகத் தமிழரின் சமூக உருவாக்கம் பற்றிய அவரது பதிவுகள் பற்றி உரையாடுவது பயன்தருமென நம்புகிறேன். விசேடமாகச் சாந்திக்குமாரின் ஆக்கங்கள் இன்றைய இளம் சந்ததி அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என விரும்புவர்களில் நானும் ஒருவன்.

மலையகத் தமிழ் சமூகம் பற்றியும் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாகவும் 1979-82 காலத்தில் சாந்திக்குமார் எழுதிய ஆறு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. 1979இல் யாழ் பல்கலைக் கழகத்தின் வெளியீடான ‘மானுடம்’ சஞ்சிகையில்  பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையைத் தவிர மற்றைய ஐந்து கட்டுரைகளும் 1980-82 காலத்தில் ‘தீர்த்தக்கரை’ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டன.[1]             

அவர் ‘தீர்த்தக்கரை’ சஞ்சிகையை ஆரம்பிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவராகவும் அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்தவர். அந்தச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட அவருடைய ஆக்கங்கள் பன்முகரீதியானவை. ஆயினும் அப்போது சூடுபிடித்திருந்த தேசிய இனப் பிரச்சனை தொடர்பான விவாதங்களில் தனது கோட்பாடுரீதியான நிலைப்பாட்டையும் மலையகத் தமிழரின் தேசிய இனத்தன்மையின் பரிணாமம் பற்றிய தனது கருத்துக்களையும் முன்வைப்பதில் ஆர்வமாயிருந்தார். இலங்கையில் ஏற்கனவே எழுச்சி பெற்றுவிட்ட இனத்துவமைய அரசியல் கலாச்சாரச் சூழலிலேயே இந்த விவாதங்கள் இடம்பெற்றன. பல்லின நாடான இலங்கையின் அரசை சிங்கள பௌத்த ஒற்றை இனத்தேசத்தின் அரசாக நிர்ணயிக்கும் பேரினவாதத் திட்டம் நடைமுறையிலிருந்தது. இன ஒடுக்குமுறை இதன் ஒரு அம்சமாகியது. 1970களில் வடக்கு கிழக்குத் தமிழ் சமூகத்தில் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை வலுப்பெற்றது. கருத்தியல் மட்டத்தில் சிங்கள பெருந்தேசியவாதத்திற்கும் தமிழீழத் தேசியவாதத்திற்கும் இடையிலான முரண்பாடு இந்த நாட்டில் இரு இனங்களினதும் தொன்மையையும் தனித்துவத்தையும் நிரூபிக்கும் போட்டியாக உருவெடுத்தது.  இந்தக் கருத்தியல்ரீதியான விவாதம் நவீனகால அதாவது கொலொனியத்திற்கும், சுதந்திரத்திற்குப் பின்னைய காலத்தினதும் பிரச்சனையான தேசிய இனப்பிரச்சனையையும் தேசியத்திற்கான விளக்கத்தையும் புராதனத்தன்மை மிகுந்த ‘வரலாற்று’ முலாம் பூசப்பட்ட கட்டமைப்புக்குள் கொண்டு சென்றது. தேசிய இனப்பிரச்சனைக்கும் வரலாற்றுக்குமிடையிலான உறவு முக்கியமானது.  ஆனால் அதை இலங்கைத் தீவின் தொன்மை மிகு இரு இனங்களில் எது மூத்த குடி எனும் அடிமூல (primordial) கருத்தியல் போட்டித் தளமாக மாற்றுவது தேசிய இனப்பிரச்சனையின் உருவாக்கத்தில் கொலோனிய மற்றும் நவீனகாலக் காரணிகள் வகிக்கும் பங்கின் முக்கியத்துவம் பற்றிய வரலாற்றுரீதியான புரிதலைக் குழப்பத்திற்குள்ளாக்குகிறது. 

நவீன காலகட்டத்தில், அதாவது முதலாளித்துவத்தின் காலகட்டத்தில், தேசியம் அல்லது தேசம் பிறக்கமுன் தேசியவாதம் பிறக்கிறது என்பதையே ஆய்வுகள் காட்டுகின்றன. நவீன தேசம் தோன்றுவதற்கான புறநிலைபூர்வமான வரலாற்று மாற்றச் சூழல்களில் தேசியவாதமே தேசியத்தை வடிவமைக்கிறது. தேசியவாதம்  தேசியத்தின் வெகுஜனக் கற்பிதத்தைப் படைத்துப் பலப்படுத்தவும் கோரிக்கைகளை நியாயப்படுத்தவும் வரலாற்றுரீதியான ஆதாரங்களைத் தேடுகிறது. இந்த முயற்சி வரலாற்று நிகழ்வுகளுடன் சில திரிபுகளையும் கர்ணபரம்பரைக் கதைகளையும் புதிய கற்பனைகளையும் கருத்தியல் தேவைகளுக்கேற்பக் கலந்து பரிமாறுகிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான கதையாடல்களிலும் இந்தப் போக்கே செல்வாக்குச் செலுத்தியது. நாட்டின் சில வரலாற்றாய்வாளர்கள் சிங்கள – தமிழ் இனங்களுக்கிடையிலான பண்டைய உறவுகளை இன்று மேலாட்சி பெற்றுவிட்ட  குரோத இனத்துவமையப் பட்டகத்திற்கூடாக நோக்குவதின் தவறையும் ஆபத்தையும் விளக்க முற்பட்டனர். கருத்தரங்குகளில் கர்ணபரம்பரைக் கதைகளின் ஆதாரமற்றதன்மைகளைப் புட்டுக்காட்டிச் சிரமப்பட்டு விளக்கினர்.[2] ஆனால் துன்பகரமாக இந்த முயற்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  பாராளுமன்ற அரசியலில் முற்றாக இறங்கிவிட்ட இடதுசாரிக் கட்சிகள் சிங்களப் பெருந்தேசியவாதத்திடம் சரணடைந்துவிட்டன. சில மாக்சிய இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சனையையும் சுயநிர்ணய உரிமையையும் ஜனநாயகப் புரட்சியின் அம்சமாக விளக்க முற்பட்டார்கள்.  ஆயினும் இனத்துவமைய அரசியலின் எழுச்சியால் இவர்கள் இரு இனங்கள் மத்தியிலும் ஒரங்கட்டப்பட்டனர்.1977இல் வந்த ஆட்சி மாற்றத்துடன் நாட்டின் பொருளாதாரத்தின் நவதாராளமயமாக்கல் ஒரு புறமும் தேசிய இனப்பிரச்சனையின் இராணுவமயமாக்கல் மறுபுறமும் அமுலுக்கு வந்தன. இதுவே அரசாங்கத்தின் இரட்டைக் கொள்கையாயிற்று.  உள்நாட்டுப் போரின் வருகை தவிர்க்கமுடியாத ஒரு விதிபோலாகிவிட்டது.

இத்தகைய சூழலிலேயே சாந்திக்குமார் தேசிய இனப்பிரச்சனை பற்றியும் பிரித்தானிய கொலொனிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரச் சுரண்டல் தேவைகளுக்காகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களை மையமாகக் கொண்ட மலையகத் தமிழ் சமூகத்தின் உருவாக்கம்,  உரிமைகள் மற்றும் கூட்டு அடையாளம் பற்றியும் தனது கருத்துக்களைப் பதிவிடுகிறார். மலையகத் தமிழ் சமூகம் பற்றி அவர் முன்வைக்கும் தகவல்களும் வாதங்களும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையின் உருவாக்கத்தில் கொலோனிய-ஏகாதிபத்தியத்தின் பங்கினைச் சுட்டிக்காட்டுவதுடன் மலையகத் தமிழரின் உரிமைப் போராட்டத்தின் குறிப்பான தன்மைகளையும் தெளிவாக்க உதவுகின்றன. தேசிய இனப் பிரச்சனையைப் பொறுத்தவரை அவர் லெனினிசம் சார்ந்த தனது கோட்பாட்டுரீதியான நிலைப்பாட்டை ஆணித்தரமாக முன்வைத்தார். இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளின் தேசிய இனப் பிரச்சனை பற்றி மாக்சிசவாதிகள் மத்தியில் கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் இருந்ததை நன்கறிந்திருந்தார். 1979இல் எழுதிய ஒரு கட்டுரையில் மூன்றாம் உலக இடதுசாரி இயக்கங்கள் தொழிற்சங்க வாதத்திற்கும் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கும் பலியாவதைச் சுட்டிக்காட்டியபடி இவற்றின் விளைவான இரண்டு குறைபாடுகளைத் துல்லியமாக்குகிறார். ஒன்று, இந்த நாடுகளில் சிறுபான்மையாயிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் நேச சக்திகளான சிறுபண்ணை விவசாயிகள் மற்றும் ‘பூதாகரமாக உருவெடுத்துவரும் வேலையில்லாப் பட்டாளம்’ ஆகிய சமூகப் பிரிவுகளை அணிதிரட்டுவதன் முக்கியத்துவத்தை உணராதிருப்பது. மற்றது, இதைப் போலவே தேசிய இனப்பிரச்சனையைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதிருப்பது. அவருடைய வார்த்தைகளில்:

‘இலங்கையில் தேசிய இனப் பிரச்சனை, ஏகாதிபத்தியத்தால் ஏற்கனவே சுதந்திரமாக இருந்த இனங்கள் ஒரு அமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டதாலும், காலனித்துவப் பொருளாதார நோக்கிற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பெருந்தோட்டப்பகுதி காலனித்துவ சிறுபான்மை மக்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய அடக்குமுறைகளுக்கெதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் இவற்றைக் கவனத்திற்கு எடுக்காமல் வெற்றிபெற முடியாது. இலங்கையின் கடந்தகால இடதுசாரி தொழிற்சங்க அரசியல் தலைமைகள் பெரும்பாலும் இப்பிரச்சனைக்கு உரிய இடத்தைக் கொடுக்காததன் காரணமாகவும் அல்லது மௌனம் சாதிப்பதன் காரணமாகவும் சந்தர்ப்பவாதப் போக்கையே அனுஷ்டித்து வந்துள்ளன.’ (1979)

 பல விடயங்கள் பற்றி மிகவும் சுருக்கமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை வாசகர் மனதில் பல கேள்விகளை எழுப்பி இருக்கலாம். உதாரணமாக ‘ஏற்கனவே சுதந்திரமாக இருந்த இனங்கள்’ என்பதற்கு விளக்கம் தேவைப்பட்டது.  இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து 1980இல் ‘தேசியங்களும் தேசிய இனங்களும் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் ‘தீர்த்தக்கரை’யில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை தேசிய இனப் பிரச்சனை தொடர்பான சில விடயங்களை மேலும் தெளிவாக்க முயல்கிறது. ‘மார்க்சியமும் தேசியங்கள் குறித்த பிரச்சனையும்’ என்ற தலைப்பில் ஸ்டாலின் 1913ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையில் தேசியம் பற்றி முன்வைக்கப்படும் வரைவிலக்கணத்தை  கொலோனிய-ஏகாதிபத்திய வரலாற்றுக்குட்பட்ட ஒரு மூன்றாம் உலக நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்கு யாந்திரீகரீதியில் பிரயோகித்து ஒரு குறிப்பிட்ட மக்கள் தேசமாகத் தகுதியற்றவர்கள் என முடிவெடுப்பது  தவறெனச் சுட்டிக் காட்டுகிறார் சாந்திக்குமார். ஒரு இனம் ஒரு தேசமெனும் தகைமையைப் பெறப் பின்வரும் நிபந்தனைகள் அனைத்தையும் திருப்திப்படுத்த வேண்டுமென ஸ்டாலின் கூறுகிறார்: வரலாற்றுரீதியில் நிலையாக இருக்கும் சமூகம்,  பொதுவான மொழி, பிரதேசம்,பொருளாதாரம் மற்றும் உளவியல்ரீதியான உணர்வு. ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஒடுக்கப்படும்  இனங்களுக்குப் பொதுவான பொருளாதாரம் இருப்பது சாத்தியமில்லை. இதனால் மற்ற நிபந்தனைகளைத் திருப்திப்படுத்தினாலும் ஒரு இனம் தேசிய இனமாகக் கருதப்படமுடியாதா எனும் கேள்வி எழுகிறது. 

ஆகவே ஏகாதிபத்தியம் பற்றியும் அதன் காலகட்டத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் லெனின் தெரிவிக்கும் கருத்துக்களே நமதுகால வரலாற்று நிலைமைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன என வாதிடுகிறார் சாந்திக்குமார். இந்தப் பார்வையில் தேசியங்களின் பிரச்சனைகளை பின்வருமாறு மூன்றாக வகைப்படுத்துகிறார். 

´முதலாவதாக ஏகாதிபத்தியத்தால் அடிமைப்படுத்தப்பட்ட தேசங்களின் விடுதலையும் சுயாட்சியும். இரண்டாவதாக காலனித்துவ பரிபாலன அமைப்பின் விளைவாக ஒருமயப்படுத்தப்பட்ட உள்நாட்டு தேசிய இனங்களின் பிரச்சினை. முன்பு சுயாதீனமாக இருந்த குழுக்கள், ஒரு தேசிய பரிபாலன அமைப்பிற்குக் கீழ் கொண்டுவரப்பட்டது சம்பந்தப்பட்ட பிரச்சினை இது. மூன்றாவதாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு மக்கள் பெரும்பான்மையாக குடியேற்றப்பட்டதின் விளைவாக உருவான தேசிய இனப்பிரச்சனைகள்.

இரண்டாவதிற்கும், மூன்றாவதிற்கும் முறையே இலங்கையின் வட- கீழ் பிரதேச தமிழின மக்களையும் இந்திய வம்சாவழி தோட்டப்புற (மலையக) மக்களையும் உதாரணமாக கூறலாம். (சாந்திக்குமார், 1980)

இந்தச் சமூக அமைப்புக்களின் பிரச்சனைகளுக்கு ஸ்டாலின் முன்வைக்கும் நிபந்தனைகளில் ஒன்றான பொதுப் பொருளாதாரம் செல்லுபடியாகாது எனச் சுட்டிக்காட்டுகிறார். கொலோனிய – ஏகாதிபத்திய வல்லரசுகள் உலகின் படத்தை தொடர்ச்சியாக மீள்வரைந்து புதிய புவியியல்களை உருவாக்கின, மீளுருவாக்கின. பல்லின சமூகங்களை ஒற்றையாட்சிக்குள்ளாக்கிய அதேவேளை அவற்றைப் பிரித்தாளும் தந்திரத்தையும் இந்த வல்லரசுகள் கையாண்டன. ‘முன்பு சுயாதீனமாக இருந்த குழுக்கள்’ எனும் சாந்திக்குமாரின் கூற்றுக்கு விளக்கம் தேவைப் படலாம்.  அந்தக் கேள்வியை இங்கு ஆராய்வது சாத்தியமில்லை.  

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை அடிமைக் கூலி முறைமை சர்வதேசக் கொலோனிய தொழிற்பிரிவின் முக்கிய குணாதிசயமாயிற்று.  1833இல் பிரிட்டிஷ் கொலொனிகளில் அடிமைக் கூலிமுறைமை  சட்டவிரோதமாக்கப்பட்டபின்  பெருந்தோட்ட உற்பத்தி மற்றும் தேவைகளுக்கு  இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் மற்றைய  கொலொனிகளுக்கு அரைஅடிமைக் கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி செய்யப்பட்டனர். இந்த நடைமுறை 1920கள் வரை தொடர்ந்தது. நவீன காலத்தில் பல்வேறு நாடுகளினதும் அவற்றின் தேசிய இனப் பிரச்சனைகளினதும் உருவாக்கத்தில் இந்த வரலாற்றுப் போக்கின் பங்கு தீர்க்கமானது. இந்த வரலாற்றுப் பின்னணி பற்றிய புரிதலுடன் சாந்திக்குமார் மலையகத் தமிழ் சமூகத்தின் தோற்றத்தையும் அதன் உருவாக்கத்தில் காலத்திற்கூடாக இடம்பெற்ற மாற்றங்களையும் அணுகுகிறார். அவருடைய அவதானிப்புகளும் கருத்துக்களும் இற்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னைய வரலாற்றுப் போக்கு பற்றியன என்பதையும் குறிப்பிடவேண்டும். வரலாற்றுரீதியான தகவல்களைப் பொறுத்தவரை ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளை சாந்திக்குமார் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது. துரதிஷ்டவசமாக இந்த உசாத்துணை விபரங்கள் அவரது கட்டுரைகளில் சேர்க்கப்படவில்லை.

மலையகத் தமிழ் சமூக உருவாக்கத்தின் வரலாற்றுப் புள்ளிகள்

‘.. கடந்த நூற்றாண்டிற்கு மேற்பட்ட இவர்கள் வெறும் தொழிலாளர் கூட்டமாக மாத்திரம் தான் உருவெடுத்திருந்தார்களா? இவர்கள் இங்கு வாழ்ந்து தீர்த்திருப்பது ஒரு வாழ்க்கை இல்லையா? அந்தச் சுவடுகளை, ஒரு சமூகத்தின் உயிர்ப்பை கிராமங்களில் காணுவதைப் போல தோட்டங்களிலும் நாம் காணக்கூடுவதில்லையா? இம்மக்கள் தங்கள் போராட்டங்களில், நடவடிக்கைகளில் கலைக் கலாச்சார பிரதிபலிப்புக்களில் தங்களை ஒரு சமூகமாக இனங்கண்டுள்ளார்கள். மிகப் பெரும்பான்மையாக தொழிலாளர்களை மையமாகக் கொண்டு பல சமூக தட்டுக்களை தன்னுடன் உருவாக்கி வளரும் ஒரு சமூகமாக இவர்கள் உருவெடுத்துள்ளார்கள்.’  (சாந்திக்குமார், 1980).

நாலு தசாப்தங்களுக்கு முன்னர் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கம் பற்றி சாந்திக்குமார் பேசவும் எழுதவும் முற்பட்டபோது அந்த விடயம் இலங்கையின் சமூக விஞ்ஞான வட்டங்களில் ஒரு  மிகப்புதிய பேசுபொருளாகவிருந்ததை நான் நினைவுகூருகிறேன்.  அதேவேளை அவரின் இந்த முன்னெடுப்புடன்   சமகாலத்தில் வேறு சிலரின் பங்களிப்புக்களும் இடம்பெற்றன.  அன்றைய சூழலில்   சாந்திக்குமார் எழுதிய கட்டுரைகள்  மலையக மக்களின் இன உருவாக்கத்தையும் அதன் முரண்பாடுகளையும் இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையின் ஒரு அம்சமாக முன்வைத்து விளக்க முற்பட்டன. முக்கியமாக அவருடைய கட்டுரைகள் ஒரு கோட்பாட்டுரீதியான பார்வையால் ஒளியூட்டப்பட்ட முன்னெடுப்பினைக் குறித்தன. துரதிஷ்டவசமாக கடந்த தசாப்தங்களுக்கூடாக இதை அவரால் தொடரமுடியாது போனமை வருந்தத்தக்கது. அவருடைய  முயற்சி ஒரு நிறைவு பெறாத் திட்டமான போதும் அவர் விட்டுச்சென்ற கட்டுரைகள் இன்றும் பெறுமதி மிக்கவை என்பதை இந்தக் கட்டுரை புலப்படுத்தும் என நம்புகிறேன்.

இலங்கையின் மலையகத்தின் காடுகளை வெட்டி இலாபம் தரும் பணப்பயிர் தோட்டங்களாக மாற்றுவதற்காக    இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட சிக்கலும் துன்பமும் மிகுந்த வரலாற்றின் பல்வேறு கட்டங்களை இனங்கண்டு பதிவிடுகிறார்.   கோப்பிப் பயிர்ச்செய்கைக்காக முதன்முதலாகத் தென்னிந்தியாவிலிருந்து 1828ஆம் ஆண்டு தொழிலாளர்கள் குடும்பங்கள் கொண்டுவரப்பட்டு சிங்ஹப்பிட்டியாவில் (இன்று பேராதெனியப் பூங்கா இருக்குமிடத்தில்) குடியமர்த்தப்பட்டனர் எனும் தகவலை நினைவூட்டுவதுடன் இதைத் தொடர்ந்து 30-40 வருடங்கள் மலைநாட்டுப் பகுதியில் கோப்பிப் பயிரிடுகையின் பகுதியில் பரவலான வளர்ச்சி பற்றியும் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களின் வருகை தொடர்பாகவும் பல விடயங்களைப் பதிவிடுகிறார்.  கோப்பிப் பயிரின் அறுவடை காலத்திலேயே பெருந்தொகையான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இதனால் பல தொழிலாளர்கள் இலங்கையில் நிரந்தரமாக அல்லது நீண்டகாலத்திற்கு தங்கவில்லை. மறுபுறம் இலங்கையில் தொழிலாளர் பற்றாக்குறை கொலோனிய ஆட்சியாளருக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு நிரந்தரப் பிரச்சனையாயிருந்தது.  கோப்பிப் பயிர் வியாதிக்குள்ளாகி அழிவடைந்ததைத் தொடர்ந்து 1860களில் பெருந்தோட்ட முறையில் தேயிலை உற்பத்தி ஆரம்பித்தபோது நிரந்தரமான தொழிற்படையின் தேவை மேலும் பெரிதாகியது. இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யத் தொழிலாளக் குடும்பங்களை இந்தியாவிலிருந்து பெருமளவில் கொண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆயினும் எதிர்பார்த்து வந்த வாழ்க்கை இலங்கையில் கிடையாததாலும் கடுமையான வேலை நிபந்தனைகளாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பினர். உதாரணமாக 1893ஆம் ஆண்டு 91,676 பேர் தோட்டப்பகுதிக்குப் புதிதாக வந்தபோதும் அதே ஆண்டில் 73,181 பேர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றனர். தென்னிந்தியக் கிராமங்களிலிருந்து மலையகம் வரையிலான பயணம் பல இன்னல்களையும் உயிராபத்துக்களையும் கொண்டிருந்தது. ஆயினும் இந்தியக் கிராமங்களின்  ஒடுக்கப்பட்ட மக்களின் வறுமையும் பஞ்சமும் மறுபுறம் இலங்கைக்குத் தொழிலாளர்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஏஜண்டுகள் கொடுத்த  கவர்ச்சிகரமான ஆனால் போலியான வாக்குறுதிகளும் பலரின் புலப்பெயர்வுக்குக்கான காரணிகளாயின.  இந்த ஏஜண்டுமுறையே பெரிய கங்காணி முறைக்கு முன்னோடியாக இருந்தது. பெரும் பிரயத்தனங்களுக்கூடாகச் சேர்த்துக் கொண்டுவரப் பட்ட தொழிலாளர்களை நிரந்தரமாகக் கட்டுப்படுத்திச் சுரண்டும்    மூடப்பட்ட   முகாமை அமைப்பாகவே தேயிலைப் பெருந்தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. ஒவ்வொரு தோட்டமும் அதற்கேயுரிய தொழிலாளக் குடும்பங்களின் நிரந்தரக் குடியிருப்புக்களாக அமைக்கப்பட்டு ஒரு பெரிய கங்காணியின் பொறுப்பில் விடப்பட்டது. இந்தத் தோட்ட அமைப்பில் கங்காணிகள் சாதிமுறைக் கட்டுப்பாடுகளையும் நடைமுறைப் படுத்தினர். சுரண்டலும் ஒடுக்குமுறையும் இணைந்த இந்த அமைப்பில் வர்க்கமும் பாலும் சாதியும் ஒன்றை மற்றது ஊடறுக்கும் உறவினைப் பெறுகின்றன. மறுபுறம் இத்தகைய நிர்ப்பந்த நிலைமைகளில் குடியேற்றப்பட்ட இந்தச் சமூகத்தில் 1920களை அடுத்து  அதுவொரு நிரந்தர சமுதாய அமைப்பின் தன்மைகளைப் பெறுவதைக் காணலாம் எனக் கூறுகிறார் (1982). 

ஆயினும் ‘இந்தக் காலப்பகுதிகளில் மலையகத்தோட்டங்கள் இருண்ட கோட்டைகளாகவே இருந்துள்ளது’ எனக் கூறும் சாந்திக்குமார் தொழிலாளர் மத்தியில் ஸ்தாபன முயற்சிகள் அவர்கள் வந்து ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் 1931ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கிறது எனும் முக்கிய தகவலை நினைவூட்டுகிறார். அவருடைய கருத்தில் ‘இந்தக் கட்டத்தின் ஆரம்பத்தோடு மலையக மக்களின் வரலாற்றோடும், சமூக உருவாக்கத்தோடும் தொடர்புடைய பல முக்கிய அம்சங்கள் நோக்கப்படவேண்டிய – வெளிப்படுத்தப்படவேண்டிய அவசியத்தை நாடி நிற்கின்றன’ (1981). ‘வெளி உலகின் நடவடிக்கைகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இறுக்கமான கோட்டைகளாகவிருந்த தோட்ட அமைப்புக்களில் முதல் நுழைவாயிலாக 1931ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமை அமைந்தது. முதன் முதலாக தோட்டப்புறங்களில் வெளியார் நுழையவும், பிரச்சாரங்கள் நடத்தவும் இது இடமளித்தது’ (1982).

 1931இல் வந்த சர்வசன வாக்குரிமை மலையக மக்களையும் உள்ளடக்கியபோதும் அதன் அமுலாக்கலில்  இருந்த  குறைபாடுகளால் சிலபகுதியினருக்கு அந்த உரிமை கிட்டவில்லை.  அந்த வருடம் இடம்பெற்ற அரச சபைத்தேர்தலில் மலையகத் தமிழரின் வாக்குகளால் தோட்ட உரிமையாளர் பின்னணியைக் கொண்ட பெரி. சுந்தரம் மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய இரு தமிழர்களும் கோடன் (Gordon) எனும்  ஒரு தோட்டத்துரையும் வெற்றிபெற்றனர். இவர்கள் ‘மலையக மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளின் நின்றும் விலகியே இருந்தனர்’ எனச் சுட்டிக்காட்டும் சாந்திக்குமார் (1982) தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு நலன்களை மையப்படுத்திய பரந்த நோக்கிலான ‘அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சம்மேளனம்’ எனும் அமைப்பினை நிறுவிய நடேச ஐயரின் பங்களிப்பிற்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார். இந்தியாவிலிருந்து வந்த முற்போக்கு அறிவாளரும் கொலோனிய எதிர்ப்புச் செயற்பாட்டாளாருமான  நடேச ஐயரின் முயற்சிக்குத் தோட்டத் துரைமாரினதும் அவர்களது ஏவலாளர்களுமான பெரிய கங்காணிகள் மற்றும் பொலிசாரினதும் எதிர்ப்புப் பலமாயிருந்தது. தோட்டங்களுக்குள் பிரவேசிக்க முடியாத நிலையில் நடேச ஐயரின் பிரச்சாரத்திற்கு வேறு வழிகளைக் கையாளவேண்டியிருந்தது. தோட்டப் பகுதிகளின் பிரதான வீதிகளில் திறந்த காரிலிருந்து ஐயர் தனது பிரச்சாரத்தைச் செய்தார். ஆயினும் தோட்ட அமைப்பின் அதிகாரமும் அரசாங்கமும் போட்ட தடைகளாலும் 1933இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியாலும் நடேச ஐயரின் முயற்சியைத் தொடர்வது மேலும் கடினமாயிற்று. இறுதியாக எல்லா தோட்டத் தொழிலாளர்களையும் இந்தியாவுக்குக் கூட்டிச் செல்ல அவர் எடுத்த முயற்சியும் தோல்வியடைந்தது. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை இடதுசாரிகள் நிரப்ப முன்வந்தனர்.[3]

இன்னல்கள் பெருகியபோதும் மலையகத் தமிழ்ச் சமூகம் ஒரு தொடர்ச்சியான நிரந்தர இருப்பைச் சந்ததிகளுக்கூடாகப் பெற்றவண்ணமிருந்த நிலையில் 1948இல் வந்த குடியுரிமைச் சட்டம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. «சுதந்திரம்» கொலோனிய ஒடுக்குமுறையின் முடிவாக அல்லாது ‘உள்நாட்டுக் காலனித்துவம், அல்லது இனக்காலனித்துவமாகத் தொடர்வதைக் காண்கிறோம்’ என்றபடி ‘இனக்காலனித்துவம்’ என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்.

‘உண்மையில், காலனித்துவம் உள்நாட்டுக் காலனித்துவம், அல்லது இனக்காலனித்துவமாக தொடர்வதைக் காண்கிறோம். சுதந்திரமடைந்த காலகட்டத்தில்  இருந்து இலங்கையின் நிர்வாகம்,சட்டதிட்டங்கள், அரசியல் யந்திரம் என்பனவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் இனக்காலனித்துவ ஆதிக்கத்திற்கு செய்த தயாரிப்புகளாக தென்படுகின்றன. இந்த தயாரிப்புக்களின் முன்னோடிகளில் ஒன்றாக 1948-ம் ஆண்டு மலையகத் தமிழர்களின் வாக்கு பறிக்கப்பட்டமை இருந்தது. வாக்குரிமை பறிக்கப்பட்டதின் மூலமாகத் தொடர்ந்தும் அதீத லாபம் தரக்கூடிய அரை அடிமைத் தொழிலாளர்களாக அவர்களின் நிலைமையை நீடிப்பது சாத்தியமாயிற்று. ஏனைய துறைகளில் இவர்களின் மேல்நோக்கிய நகர்வு தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து வந்த இலங்கை – இந்திய குடியுரிமை ஒப்பந்தங்கள் உள்நோக்கில் மலையக மக்கள் மீதான அரசின்  செலவைக் குறைப்பதையே கொண்டிருந்தன.’(1980).

1980இல் அவர் எழுதிய அதே கட்டுரையின் பின்வரும் வாசகங்கள் அவருடைய நிலைப்பாட்டைச் சுருக்கமாகப் பிரதிபலிக்கின்றன. 

´சமூக உருவாக்கம் ஒரு புறமும் இனக் காலனித்துவத்தின் செயற்பாடு மறுபுறமுமாக தாம் ஒரு தனித்துவமான இனம் என்ற உணர்வை பலப்படுத்தி வந்திருக்கின்றது. இந்த சமூக உணர்வின், பிரக்ஞையின் பிரதிபலிப்பாகவே மலையகம் என்ற பதம் அண்மைக்காலங்களில் ஆதிக்கம் பெற்று வருகின்றது. மலையகம் என்பதில் தொனிக்கின்ற புவியியல் அர்த்தத்தை மாத்திரம் நோக்கும்போது அது பிராந்தியவாதமாகப் படலாம். ஆனால் மலையகம் என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் எல்லையை அன்றி குறிப்பிட்ட உற்பத்தி முறையை (பெருந்தோட்டத்துறையைச்) சார்ந்து வாழ்கின்ற ஒரு சமூகத்தின் இருத்தலை, ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் எழுச்சியை குறிக்கின்றது.

நாம் இப்படிக் கூறுவது இதுவரை இருந்துவந்திருக்கின்ற பல ஸ்தாபனங்களிற்கு, கோட்பாடுகளிற்கு ரொம்பவும் அசௌகரியத்தை ஏற்படுத்தியே தீரும். மலையக மக்களை ஒரு தொழிலாள கூட்டமாகவே மாத்திரம் கருதுவது பலருக்கு வசதியாகவிருக்கிறது.´ 

மலையகத் தமிழர் தொடர்பாக ‘இனக் காலனித்துவம் அல்லது உள்நாட்டுக் காலனித்துவம்’ பற்றிச் சாந்திக்குமார் முன்வைக்கும் கருத்து இலங்கையின் பேரினவாத ஆட்சியாளரும் அரசும் தேசிய இனப்பிரச்சனையை கையாண்ட பொதுவான கொள்கையை விளக்கவும் உதவும் எனலாம். இனப்புவியியலை மாற்றும் நோக்கிலான திட்டமிட்ட குடியேற்றங்களுடன் தேசிய இனப்பிரச்சனையின் இராணுவமயமாக்கல், அரசியல் தீர்வை மறுத்தல் மற்றும் முடிந்தவரை மற்றைய இனங்களின் கூட்டு அடையாளங்களையும் நினைவுச்சின்னங்களையும் அழித்தல் போன்ற திட்டங்கள் எல்லாம் அதையே உணர்த்துகின்றன. சாந்திக்குமார் ஏற்கனவே குறிபிட்டதுபோல் பெருந்தோட்ட உற்பத்தி  முறையே இந்த மக்களின் கூட்டு இருப்பிற்கு வரலாற்றுரீதியான அடிப்படையாயிற்று. மலையகத் தமிழரின் தேசிய இன உருவாக்கத்தின் பரிணாமப் போக்கானது இந்தத் தொழிலாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அதேவேளை சமூகரீதியான, வர்க்கரீதியான வேறுபடுத்தலையும் உள்ளடக்கியதெனும் அவருடைய அவதானிப்பும் முக்கியமானது. இலங்கையின் மலையகத்தில் ஒரு சிறுபான்மைத் தமிழ் தேசிய இனத்தை உருவாக்கும் நோக்கம் பிரித்தானிய கொலோனிய ஏகாதிபத்தியத்திற்கு இருக்கவேயில்லை. ஆனால்  பொருளாதாரரீதியான சுரண்டலுக்காகக் கொலோனியம் உருவாக்கிய பெருந்தோட்ட அமைப்பு அத்தகைய ஒரு பரிணாமப் போக்கிற்கு வழிவகுத்தது. கொலோனிய ஏகாதிபத்தியம் இலங்கைத்தீவில் மலையகத் தமிழர் எனும் ஒரு இனத்தின் உருவாக்கத்தில் வரலாற்றின் உணர்வுபூர்வமற்ற (unconscious) கருவியாயிற்று.

ஆனால் பல தசாப்தங்களாக இலங்கையில் ஏற்பட்டுவரும் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களின் தாக்கங்களினால் மலையகத் தமிழ் சமூகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. இது தொடர்பாக சமீபத்திய ஆய்வுகள் முக்கியமான தகவல்களைத் தருவதுடன் பயன்மிக்க கேள்விகளையும் எழுப்பத் தூண்டுகின்றன.  உதாரணமாக 2018ஆம் ஆண்டு முனைவர்கள் சந்திரபோஸ் மற்றும் ரமேஷ் தொகுத்து வெளியிட்ட ‘இலங்கையில் பெருந்தோட்ட சமூகம் 150 வருடங்கள் (1857-2017)’ எனும் தலைப்பிலான நூல் பல பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்குகிறது.[4] இந்த நூல் தரும் தரவுகளின் உதவியுடன் முக்கியமான ஒரு சில மாற்றப் போக்குகளைக் குறிப்பிட விரும்புகிறேன். காலப்போக்கில் பல காரணங்களால் மலையகத் தமிழர்களின் மொத்த சனத்தொகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாயிருப்போரின் விகிதாசாரம்  தொடர்ச்சியாகக் குறைந்துவந்துள்ளது. ஆயினும் தோட்டத் தொழிலாளர்கள் மலையகத் தமிழ் சமூகத்தின் அரசியல் புவியியலில் வகிக்கும் பங்கு முக்கியமானது. அவர்களின் போராட்ட மரபும் இன்றும் தொடரும் போராட்டங்களும் அந்த சமூகத்தின் உருவாக்க வரலாற்றின் தொடர்ச்சியைக் காட்டுகின்றன. இன்றைய மலையகத் தமிழரில் பெரும்பான்மையினர் தொழிலாளர்களே. அவர்களில் பெரும்பான்மையினர் முறைசாராத் துறைகளில் தொழிலாற்றுகிறார்கள். அதேவேளை மாற்றங்களைப் பொறுத்தவரை, ஒரு புறம் கல்விக்கூடாக ஒரு சாராரின் மேல்நோக்கிய சமூக நகர்ச்சி, நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி, மற்றும் தோட்டத் தொழிலாளரின் சில பகுதியினருக்கு சொந்த வாழிட உரிமை போன்றன இடம்பெறும் அதேவேளை மறுபுறம் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாக 480,000 மலையகத் தமிழரை இந்தியாவிற்குப் புலம்பெயர்க்கப்பட்ட பின்னர் மலையகத்தில் எஞ்சியிருக்கும் மக்களின் சனத்தொகை தொடர்சியாகக் குறைந்துவரும் போக்கையும் காண்கிறோம். இன வன்முறைகளால் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேலான தொகையினர் வடக்கு கிழக்குக்கு இடம்பெயர்ந்து அங்கேயே நிரந்தரமாகக் குடியேறியுள்ளனர். இன்னொரு புறம் தொழில் காரணமாக இளம் சந்ததியினரின் நகர்நோக்கிய, வேறு பிரதேசங்கள் நோக்கிய நகர்ச்சியும் தொடர்கிறது. மலையகத் தமிழ் சமூகத்தின் புவியியல் இலங்கைக்குள்ளே மலையகத்திற்கும் அப்பால் பரந்துவிரிகிறது. அவர்களின் சமூக, அரசியல், பொருளாதாரக் கோரிக்கைகளும் போராட்டமுனைகளும் முன்பைவிடப் பன்முகமயமாகியுள்ளன.   

அவர் வாழ்ந்த காலத்தில் இடம்பெற்ற மாற்றப் போக்குகள் மலையகத் தமிழரின் தேசிய இன உருவாக்கத்திலும் அதன் மீளுற்பத்தியிலும், அவர்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பு, வர்க்க உறவுகள் ஆகியவற்றிலும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பது பற்றித் தனது விமர்சனப் பார்வையிலான கருத்துக்களைச் சாந்திக்குமார் கொண்டிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதேபோன்று நீண்டகால உள்நாட்டுப் போரும் அதன் விளைவுகளும், தொடரும் இராணுவமயாக்கலும் நாட்டின் தேசிய இனப்பிரச்சனையையும் இனங்களுக்கிடையிலான உறவுகளையும் எப்படிப் பாதித்துள்ளன என்பது பற்றியும் அவர் தனது கருத்துக்களைக் கொண்டிருப்பார் என நம்பலாம்.  மலையகத் தமிழரின் தேசியஇன உரிமைப் பிரச்சனையை அவர் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனையின் ஒரு அம்சமாகவே பார்த்தார். இன்றைய இலங்கையில் தொடர்ந்தும் இனரீதியில் ஒடுக்கப்படும் வடக்கு கிழக்குத் தமிழர், முஸ்லிம்கள், மற்றும் மலையகத்தமிழர் ஆகிய மூன்று இனத்தவருக்கும் கொள்கைரீதியான பொது ஜனநாயகத் திட்டமொன்று தேவை என்பது கண்கூடு. அத்தகைய திட்டமொன்றின் அடிப்படையில் சிங்கள முற்போக்காளரின் ஒத்துழைப்புடன் சிங்கள மக்களின் புரிந்துணர்வையும் ஆதரவையும் தேடவேண்டும் என்பதும் கண்கூடு. தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு நாட்டின் ஜனநாயகப் புரட்சியின் மீட்சியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஆனால் இன்றைய இலங்கையில் இவை பாரிய சவால்கள் என்பதையும் மறுக்க முடியாது. இந்தப் பார்வைபற்றிச் சாந்திக்குமாரின் சிந்தனையை அறியும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. ஆயினும் நாம் அறிந்த சாந்திக்குமார் இது போன்ற விடயத்தில் ஈடுபாட்டைக் கொண்டிருப்பார் என நம்பலாம்.  அவர் தனது கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்யாமை வருந்தத்தக்கது. ஆனால் நான்கு தசாப்தங்களுக்கு முன் அவர் முன்வைத்த விமர்சனப் பார்வையும் அணுகுமுறையும் மலையகத் தமிழ் சமூகத்தின் உருவாக்கம் மற்றும் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனையின் சிக்கல்மிகுந்த உள்ளடக்கங்கள் ஆகியவற்றின் சமீபகாலப் போக்குகளின் அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் என நம்புகிறேன். 

26.01.2021  


[1] இந்தக் கட்டுரைகள் பின்வருமாறு

 எல். சாந்திக்குமார், 1979, மூன்றாம் உலக நாடுகளில் இடதுசாரி இயக்கங்களும் இலங்கையும், மானுடம், யாழ் பல்கலைக்கழக மானுடவியல் துறை வெளியீடு

எல். சாந்திக்குமார், 1980, மலையகம் சில குறிப்புகள், தீர்த்தக்கரை 06-08 1980

————————-,1980, தேசியங்களும் தேசிய இனங்களும் குறித்த மாக்சிய கண்ணோட்டம், தீர்த்தக்கரை 10-12 1980

————————, 1981, மலையகத்தின் வரலாறும் சமூக உருவாக்கமும், தீர்த்தக்கரை 02-05 1981.

————————, 1982, மலையகத்தின் வரலாறும் சமூக உருவாக்கமும் II, தீர்த்தக்கரை 01-03 1982

————————, 1982, இனவெறியாட்டம்…மலையக மக்கள்…எதிர்காலம், தீர்த்தக்கரை 01-03 1982

[2] உதாரணமாக 1979ஆம் ஆண்டு மார்கழி மாதம் கொழும்பில் சமூகவிஞ்ஞானிகள் சங்கம் இலங்கையின் இனங்கள் பற்றிய ஒரு முக்கியமான ஆய்வுக் கருத்தரங்கத்தை நடத்தியது.  இந்த விடயம் தொடர்பாக சிங்கள மற்றும் தமிழ் இனங்களைச் சார்ந்த சமூக, அரசியல், வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றுகூடித் தத்தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துக் கருத்துக்களைப் பரிமாறிய முதலாவது பகிரங்கக் கருத்தரங்கம் இதுவே. ஆய்வாளர்கள் இலங்கையின் இனங்களின் விசேடமாகச் சிங்கள மற்றும் தமிழ் இனங்களின் வரலாறுகள் பற்றிய பல கட்டுக்கதைகளை ஆதாரபூர்வமாகக் கட்டுடைத்து அவற்றின் பொய்மையை அம்பலப்படுத்தினர். சமர்ப்பிக்கப்பட்ட எல்லாக் கட்டுரைகளும் 1984ஆம் ஆண்டு Ethnicity and Social Change in Sri Lanka எனும் தலைப்பில் ஒரு தொகுப்பாகச் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தால் வெளியிடப்பட்டது.

 [3] பெருந்தோட்டத்துறைத் தொழிலாளார் பிரச்சனைகள், தொழிற்சங்க வரலாறு ஆகியவை பற்றிய இது தொடர்பான மற்றும் பல விபரங்களை குமாரி ஜயவர்த்தனவின் ´The Rise of the Labour Movement in Ceylon´ (1972) எனும் தலைப்பிலான நூலில் அறியலாம்.

[4] ஏ. எஸ். சந்திரபோஸ், இரா. ரமேஷ் (பதிப்பாசிரியர்கள் ), 2018, இலங்கையில் தேயிலைப் பெருந்தோட்டச் சமூகம் 150 வருடங்கள்,எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட்.

கொவிட்-19 பேரிடரின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள்: சில அவதானிப்புக்களும் பாடங்களும்

சமுத்திரன்

Covid-19 பெருந்தொற்று இன்றைய உலக முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களை அம்பலப்படுத்தியுள்ளது.  விசேடமாக இந்தப் பெருந்தொற்றுக் கடந்த 40 வருடகால நவதாராள உலகமயமாக்கலின் போக்குகளையும் தாக்கங்களையும் மேலும் கண்கூடாக்கி அவைபற்றி நம்மை ஆழச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. கொவிட்-19இன் உலகமயமாக்கலுடன் உலக அதிகாரப் போட்டியின் முரண்பாடுகளும் அரங்கிற்கு வந்தன. குறிப்பாக, உலகரீதியில் பலவீனமடைந்துவரும் அமெரிக்க வல்லரசும் எழுந்துவரும் சீன வல்லரசும் இந்தப் பெருந்தொற்று நோயின் ஆரம்பம், பரவல், சர்வதேசப் பொறுப்புத் தொடர்பாக முரண்பட்டன. துரதிஷ்டவசமாக உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த வல்லரசு அரசியலில் மாட்டிக் கொண்டது. மிக முக்கியமாக இந்த நெருக்கடி பூதாகரமாக வளர்ந்துவிட்ட சமூகப்-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் தன்மைகளையும் சுற்றுச்சூழலின் சீரழிப்பினையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அதே போன்று பல நாடுகளும், உலக அமைப்புக்களும் இத்தகைய ஒரு அவலத்தின் பன்முகங்கொண்ட சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குப் போதியளவு தயார்நிலையை அல்லது ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் புட்டுக்காட்டியுள்ளது. 

இந்தச் சவாலைக் கையாள்வதில் போட்டி, தேசியவாதம், நிறவாதம், இனவாதம், மதவாதம் மற்றும் அதிகாரவாத நிர்வாகமுறைமை போன்றன தலைதூக்கியுள்ள இந்தச் சூழலில் மக்கள் மட்டங்களில் தேவைகளின் அடிப்படையிலான பகிர்வை, கூட்டுறவை, மற்றும் சுற்றுச்சூழலை முன்னிறுத்தும் விழுமியங்கள் மதிக்கப்படும் அறிகுறிகள் தென்படுவது ஒரு நல்ல சகுனம். ஆயினும் இலாபத்திற்கூடாக மூலதனக் குவியலின் முடிவுறா வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பின் விதிகள் நிலைபெறும் மனித மேம்பாட்டின் முன்னுரிமைகளுடன் முரண்படுகின்றன. உலகளவிலான சவாலாகிவிட்ட இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ள தேசிய எல்லைகளைத் தற்காலிகமாக மூடுவது அல்லது கட்டுப்படுத்துவது அவசியமான ஒரு வழிமுறை. ஆனால் இந்தச் சிக்கலைக் கையாள்வதில் நாடுகளுக்கிடையே மனிதத்துவ ஒருமைப்பாட்டிற்கும் கூட்டுறவுக்கும் பதிலாக  போட்டியும், முரண்பாடுகளும் வலுப்பெற்றால் இந்தத் தற்காலிக நடைமுறையை முடிவுக்கு கொண்டுவருவது புதிய சவாலாக உருவெடுக்கும். ஒரு சில நாடுகள் மாத்திரம் வெற்றிபெறுவது போதாது. பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளும் வெற்றி பெறுவது அவசியம் என்பதை அழுத்திக் கூறவேண்டுமா?  

ஏன் நாடுகளும் உலக நிறுவனங்களும் தயார்நிலையில் இருக்கவில்லை?

‘கொரோனாவைரஸ் நமக்கு நன்கு பழக்கமான ஒரு பூதமாக முன்கதவிற்கூடாக நுழைகிறது.’ (Mike Davis, March 14, 2020)

 தற்போதைய சூழலில் கொவிட்-19 எனும் வியாதி 2019ஆம் வருட இறுதியில் வுஹானில் வெடித்து உலகரீதியில் பரவும் எனக் குறிப்பாக எவராலும் முன்கணிப்புக் கூறியிருக்கமுடியாது எனும் கருத்தில் நியாயமுண்டு. ஆனால் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒரு பெருந்தொற்று எந்த நேரத்திலும் இடம்பெறலாம் என்பதுபற்றியும் அதை எதிர்கொள்ளக்கூடிய தயார்நிலையில் நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் இருக்கவேண்டிய தேவை பற்றியும் போதியளவு நேரடி அநுபவம் சார்ந்த மற்றும் நம்பகமான நிபுணத்துவ முன்னெச்சரிக்கைகள் இருந்தன என்பதை மறுக்கமுடியாது (Rodrik, 2020; Davis, 2005, 2020; Wallace, 2016; Wallace et al, 2020). இது பற்றி ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

  • அநுபவம் சார்ந்த முன்னெச்சரிக்கைகளாகப் பல இருப்பினும் பின்வருவனவற்றைச் சுலபமாக இனம் காணலாம்: SARS (2003), MERS (2012), Ebola (2014-2016). இவை சந்தேகமின்றி போதியளவு முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளன. இவற்றின் அநுபவங்களின் அடிப்படையில் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும். 
  • Mike Davisஇன் 2005ஆம் ஆண்டு நூல்  ´The Monster at Our Door´ – The global threat of Avian Flu. பிரபலம் வாய்ந்த இந்த நூல் 2003இல் சீனாவில் எழுந்த பறவைக் காய்ச்சல் பற்றியும் வைரசினால் ஏற்படும் அதுபோன்ற நோய் எதிர்காலத்தில் மீண்டும் தோன்றி உலகரீதியிற்ப் பெருந்தொற்றாகப் பரவக்கூடிய ஆபத்துப் பற்றியும் சொல்கிறது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் இத்தகைய ஆபத்தான வைரஸ் தோன்றுவதற்கான காரணப் பின்னணியாக நவீன ஆலைத்தொழில்மயப்படுத்தப்பட்ட விவசாய விசேடமாக மிருக உற்பத்தி, மற்றும் துரித உணவுச் சங்கிலிகள்  விளங்குவதைக் காட்டுவதுடன் நகரமயமாக்கல், சேரிகளின் வளர்ச்சி ஆகியன வியாதி பெருந்தொற்றாகப் பரவ உதவுவதையும் விளக்குகிறார் நூலாசிரியர். இது போன்ற பெருந்தொற்று மனித ஒருமைப்பாட்டிற்கு ஒரு சோதனை என்றும் அப்படியான காலத்தில் நாம் நம்மை மாத்திரமன்றி மற்றவர்களையும் பாதுகாக்கும் பொறுப்பினைக் கொண்டுள்ளோம் எனவும் சுட்டிக் காட்டுகிறார்.

தற்போதைய கொவிட்-19 பற்றி அவர் மார்ச் 14ஆம் திகதி எழுதிய கட்டுரையில் போதியளவு முன்னெச்சரிக்கைகள் இருந்தும் உலகின் தயாரற்ற நிலையைக் காரசாரமாக விமர்சிக்கிறார். இதுவரையில் ஆபத்தான நோய்களின் திடீர் வெடிப்பை எதிர்கொள்ளத் தயாரற்ற மோசமான நிலைபற்றிப் பல சினிமாப் படங்கள், கணக்கிலடங்கா நாவல்கள், நூற்றுக்கணக்கான நூல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் தெளிவாகக் கூறியுள்ள பின்னணியில் ‘கொரோனாவைரஸ் நமக்கு நன்கு பழக்கமான ஒரு பூதமாக முன்கதவிற்கூடாக நுழைகிறது’ என நியாயமான ஆத்திரத்தொனியில் எழுதுகிறார் (Davis, 2020).

  • 2016ஆம் ஆண்டு உலக வங்கி வறிய நாடுகளுக்கென ஒரு பெருந்தொற்று அவசரகால நிதியுதவித் திட்டத்தை (Pandemic Emergency Financing Facility) அறிவித்தது. எல்லைகளைக் கடந்து பரவும் சுகாதார நெருக்கடிகளைக் கையாள உதவும் ஒரு திட்டமாக இது அறிவிக்கப்பட்டது பெருந்தொற்று ஆபத்தின் சாத்தியப்பாட்டினை உலக வங்கியும் அங்கீகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
  • அமெரிக்காவின் CIA நிறுவனம் 2009ஆம் வெளியிட்ட ´State of the World 2025´ அறிக்கையில் பெருந்தொற்று பற்றி எதிர்வு கூறியுள்ளதை நான் சமீபத்தில் படித்த ஒரு கட்டுரை தெரியப்படுத்துகிறது. CIAஇன் அறிக்கையின்படி ஒரு பெருந்தொற்று நோய் வெடிக்குமாயின், அது ஜனத்தொகை செறிவுமிக்க, மனிதரும் கால்நடைகளும் நெருக்கமாயிருக்கும் சந்தைகளைக் கொண்ட சீனா அல்லது தென்கிழக்காசியாவின் ஒரு பிரதேசத்திலே இடம்பெறும் என அந்தக் கட்டுரை தரும் மேற்கோள் சொல்கிறது (Duclos, 2020).[1] CIA அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக இயங்கும் ஒரு அமைப்பு. அந்த நோக்கிலேயே இந்த முன்கணிப்பை அது வெளியிட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது. ஆகவே இந்தத் தகவல் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருந்தபோதும் அந்த நாடு எதுவிதத்திலும் தயார் நிலையில் இருக்கவில்லை என்பது தற்போது கண்கூடு.

இவைபோன்ற முன்னெச்சரிக்கைகள் அதிகரித்துவரும்போது அவற்றை மதிக்கும் ஒரு அரசாங்கம் தனது நாட்டின் தேசிய சுகாதார சேவை உட்கட்டுமானத்தை உரிய வழிகளில் கட்டியமைத்துப் பலப்படுத்தியிருக்க வேண்டும். அதேபோன்று சர்வதேச மட்டத்தில் இதற்கு உதவும் வகையில் ஒரு சுகாதார சேவை உட்கட்டுமானமும் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? கொவிட்-19 இன் உலகரீதியான தாக்கமும் அதைப் பல நாடுகள் கையாண்ட விதமும், சர்வதேச அமைப்புக்களின் இயலாமையும் மிகவும் துன்பகரமாகவே இருந்தன. இந்த நிலைமை கடந்த 40 வருடங்களாகத் தொடர்ந்த நவதாராள உலகமயமாக்கலின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. சுயபோட்டிச் சந்தை, தனியுடைமையாக்கல், சுதந்திர வர்த்தகம், மூலதனத்தின் தாராளமயமாக்கல், சமூகபாதுகாப்புக்கான அரசின் செலவினத்தின் தொடர்ச்சியான வெட்டும் சுகாதார மற்றும் கல்வி சேவைகளின் தனியுடைமையாக்கல் ஆகியன நவதாராளப் பொருளாதாரக் கொள்கையின் அம்சங்களில் அடங்கும். 

பல நாடுகளில் முன்னர் இருந்த தேசிய சுகாதார சேவைகளின் உட்கட்டுமானத்தின் தொடர்ச்சியான பலவீனமாக்கலும் செயலாற்றல் இழப்பும் இந்த கொள்கையின் பல்வேறுபட்ட பாதகமான விளைவுகளில் ஒன்றாகும். கொவிட்-19 இந்தக் குறைபாட்டினைப் பல நாடுகளில் அதிர்ச்சிதரும் வகையில் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்காது காலம் தாழ்த்தியமைக்கும் அரசியல் தலைமையின் அலட்சியப் போக்கிற்கும் இந்தக்குறைபாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு.  பல செல்வந்த நாடுகள் கொவிட்-19 இன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தக் காலம் தாழ்த்தியபின் அவசரகால நடவடிக்கையாகக் கணிசமான தொகை பணத்தை ஒதுக்கிச் செயற்பட்டப்போதும் அந்த முயற்சியால் தேசிய சுகாதார சேவை உட்கட்டுமானத்தின் நீண்டகாலப் பலவீனமாக்கலின் அல்லது போதாமையின் விளைவுகளை வெற்றிகரமாகத் தடுக்கமுடியவில்லை என்பதை அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி, ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளின் நிலைமைகள் காட்டுகின்றன. நெருக்கடி கட்டுக்கடங்காது போகும் அறிகுறிகளைக் கண்ட போது ஸ்பெயின் நாட்டின் சமூக ஜனநாயக அரசாங்கம் தனியார் மருத்துவமனைகளைத் தேசியமயமாக்கியது வரவேற்கப்படவேண்டியதே. அதற்கு முன்னைய அரசாங்கம் பின்பற்றிய நவதாராள அரச செலவினச் சிக்கனக் கொள்கையின் விளைவுகள் ஸ்பெயினின் தேசிய சுகாதார உட்கட்டுமானத்தை பலவீனமாக்கியிருந்தது.   

கொவிட்-19 ஐரோப்பிய ஒன்றியத்தின் முரண்பாடுகளை, ஏற்றத்தாழ்வுகளை மற்றும் அதன் மையப்படுத்தப்பட்ட தலைமையினதும் நிர்வாக இயந்திரத்தினதும் ஜனநாயகமற்ற தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது. நவதாராள உலகமயமாக்கல் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பைப் பலப்படுத்தவில்லை, பெருந்தொற்று எனும் பொது எதிரி அங்கத்துவ நாடுகளுக்கிடையே ஒரு ஒருமைப்பாட்டு அலையை ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்கனவே இருந்த அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகள் மேலும் கூர்மையடைந்து பிரிவினையும் தேசியவாதங்களும் எழுச்சி பெறவே அது வழி சமைத்துள்ளது. இது நவதாராள  ஐரோப்பியப் பொதுச் சந்தையின் அருவச் சக்தியில் அதீத நம்பிக்கை வைத்திருந்த ஒன்றியவாதிகளுக்கு ஒரு கசப்பான செய்திதான். கொரோனாவின் வருகையுடன் அங்கத்துவ நாடுகளின் தேசியவாதங்களும் தேசிய எல்லைக்கட்டுப்பாடுகளும் புத்துயிர்பெற்றன. ஒன்றியத்துக்குள்ளே ஜேர்மனியின் தலைமையிலான குழுவின் மேலாதிக்கத்தால் ஓரங்கட்டப்பட்ட தெற்கு ஐரோப்பிய நாடுகள் போர்க்கொடி தூக்குவதில் ஆச்சர்யமில்லை. 27 அங்கத்துவ நாடுகளையும் 440 மில்லியன் மக்களையும் உள்ளடக்கும் ஒன்றியத்திடம் ஒரு செயற்பாட்டுத்திறன்மிக்க ஒருங்கிணைந்த சுகாதார உட்கட்டுமானம் இருக்கவில்லை எனும் செய்தி பலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம்.  இதுபோன்ற அவசரகால நெருக்கடியின்போது எல்லைகளை மூடுவது மற்றும் வளங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றி நடைமுறைக்குகந்த கொள்கையும் புரிந்துணர்வும் ஒன்றியமட்டத்தில் இருக்கவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

இந்தியா ஒரு ஒழுங்கான சுகாதார சேவை உட்கட்டுமானத்தைக் கட்டியமைக்கத் தவறியுள்ளதென அமர்த்தியா சென் அவர்கள் கோவிட்-19 தொடர்பாக சமீபத்தில் NDTV இல் இடம்பெற்ற ஒரு உரையாடலில் கூறியுள்ளார். அத்துடன் இந்திய அரசாங்கத்தின் முழு முடக்க அணுகுமுறையால் பெருந்தொகையான மக்கள் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயத்தையும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.  

முழுநாடு தழுவிய முடக்கத்தை இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்திய விதத்தில் மனிதாபிமானத்தைக் காணமுடியவில்லை.  உட்கட்டுமானம் மற்றும் திட்டமிட்ட அணுகுமுறையைப் பொறுத்தவரை இந்தியாவில் கேரள மாநிலம் விதிவிலக்கானதெனச் செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இலங்கை அரசாங்கம்  கொவிட்-19 இன் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இதுவரை கணிசமான வெற்றி பெற்றுள்ளபோதும் அதன் இராணுவமயமாக்கலும் பேரினவாத அரசியல்மயமாக்கலும் வரவேற்கப்படவேண்டியதல்ல.  இந்தக் கட்டுரையை எழுதும்போது வைரசின் பரவல்வீதம் முன்பைவிட அதிகரித்துள்ளது. ஆகவே இலங்கையின் நிலைமை எப்படி மாறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பொது மக்களின் வாழ்வை  முடக்கியுள்ள அவசரகாலத்தை அகற்றுமாறு பலர் கோரியுள்ளார்கள். 

நவதாராள உலகமயமாக்கலின் மேலாட்சியின்கீழும் தேசிய சுகாதார சேவை உட்கட்டுமானத்தைத் தொடர்ந்தும் ஓரளவு திருப்திகரமாக வைத்திருந்த நாடுகள் கொவிட்-19 தாக்கத்தை மற்ற நாடுகளையும்விட ஒப்பீட்டுரீதியில் சில வழிகளில் நன்றாகக் கையாண்டுள்ளன. இந்த நாடுகளின் அரசாங்கங்கள் காலம் தாழ்த்தாது முடிந்தவரை துரிதமாகச் செயற்படவல்ல நிறுவனரீதியான வசதிகளைக் கொண்டிருந்தன. தொற்றுத் தவிர்ப்பு நடைமுறைகள், பரிசோதனையின் தரமும் வீதமும், மருத்துவ வசதிகள், குணமடைந்தோர் வீதம், மரணவீதம், etc.  போன்றவையின் அடிப்படையில் இந்த நாடுகளின் ஒரு முழுமையான தரவரிசைப்படுத்தப்பட்ட பட்டியலைத் தயாரிப்பது தற்போது சாத்தியமில்லை.  அப்படி ஒரு சர்வதேச ஒப்பீட்டுரீதியான மதிப்பீட்டைச் செய்யக்கூடிய கட்டத்தை இந்தப் பெருந்தொற்று இன்னும் அடையவில்லை. இன்னும் அது முடிவுக்கு வரவில்லை. அப்படி வந்தாலும் இரண்டாவது அலை, மூன்றாவாது அலை என அது திரும்பும் சாத்தியப்பாடுகள் உண்டெனச் சில நிபுணர்கள் சொல்கிறார்கள். தற்காலிகமாகச் சில உதாரணங்களை மட்டுமே தற்போதைக்குக் குறிப்பிடலாம். இவற்றைப் பின்னர் மீள்பரிசீலனை செய்ய வேண்டிவரலாம். தென்கொரியா, தைவான், கியூபா, சீனா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஃபின்லாந்து, நோர்வே ஆகியன அத்தகைய ஒரு தற்காலிக பட்டியலில் அடங்கும் என எதிர்பார்க்கலாம்.  சீனா பற்றி உலக அரங்கில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீனாவில் முதலில் கொவிட்-19 பற்றி வெளிப்படையாக அறிவித்த மருத்துவர் லீ தண்டனைக்குள்ளானதும் பின்னர் அவர் அதே வியாதிக்குப் பலியானதும் உலகறிந்ததே. சீனாவின் அதிகாரவாத அணுகுமுறையும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த விமர்சனமும் நியாயமானதே. ஆனால் சீனா பாரிய தொற்றுநோயைப் பிரதேசரீதியில் கட்டுப்படுத்தி நாட்டின் பெரும்பகுதிக்கு அது பரவாமல் தடுப்பதில் வெற்றியடைந்துள்ளது என்பதை மறுப்பதற்கு ஆதாரமில்லை. சீனா முக்கிய தகவல்களை உரிய நேரத்தில் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவில்லை போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. இவைபற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு சுதந்திரமான விசாரணை தேவைப்படலாம். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் ஒரு சில நாடுகள் மட்டும் உலகச் சிக்கலாகிவிட்ட பெருந்தொற்றான கொவிட்-19 ஐ தமது தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள எல்லைகளுக்குள் வெற்றி கொள்வது போதாது. 

ஐரோப்பாவில் சில நாடுகள் கொவிட்-19 பெருந்தொற்றுக்கெதிராகக் கூட்ட நோயெதிர்ப்பாற்றல் (herd immunity) அணுகுமுறையை வெளிப்படையாகப் பின்பற்றுகின்றன, உதாரணங்களாக சுவீடன், நெதெர்லாந்து. பிரித்தானியாவும் ஆரம்பத்தில் இந்தக் கொள்கையைப் பின்பற்ற முயன்று பின்னர் மற்ற நாடுகள் போல் தொற்றைக் கட்டுப்படுத்தும் வழிக்கு வந்தது.  கொவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பூசி இல்லாத இன்றைய நிலையில் கூட்ட நோயெதிர்ப்பாற்றல் இலக்கை அடைவதற்கான அடுத்த வழி வைரசின் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைத் தவிர்த்து அதன் தொற்றினால் சமூகத்தின் பெரும்பான்மையோர் நோயெதிர்ப்பாற்றலைப் பெற வைப்பதாகும். இந்த அணுகுமுறையால் வயோதிபர்கள் மற்றும் சுகாதாரரீதியில் பலவீனமானவர்கள் பெரும் ஆபத்துக்குள்ளாகிறார்கள்.  கொவிட்-19 பொதுவான வைரஸ்  (flu)காய்ச்சலையும்விட உயிருக்குப் பல மடங்கு அதிகமான ஆபத்தானதென்பதால் இந்தக் குழுக்களின் மரணவீதம் மிகவும் அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுவீடனும் நெதெர்லாந்தும் தொடர்ச்சியாக நூறுவீதம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்தன எனச் சொல்ல முடியாத போதும் இந்த நாடுகளின் இதுவரையிலான மரண வீதங்கள் மேற்கூறிய முடிவுக்கு ஆதாரமாக இருக்கின்றன. ஆயினும் ஏற்கனவே எடுத்துக் கூறப்பட்ட பல காரணங்களால் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பலவீனமாயிருந்த நாடுகளிலும் மரணவீதம் மிக அதிகமாகவே உள்ளது. உதாரணமாக 2020 மே மாதம் இரண்டாம் திகதிவரை ஸ்பெயினில் ஜனத்தொகையின் 100,000 நபர்களில் 53.7 நபர்கள் கொவிட்-19ஆல் மரணித்துள்ளார்கள். இத்துடன் ஒப்பிடும்போது 26.4 ஆக இருக்கும் சுவீடனின் மரணவீதம் ஏறக்குறைய அரைவாசியாகவே உள்ளது. ஆனால் தொற்றுக் கட்டுப்பாட்டுக் கொள்கையை ஸ்பெயினைவிட நன்கு நடைமுறைப்படுத்திவரும் நோர்வேயில் கொரோனா மரணவீதம் 3.9 ஆகவும் நோர்வேயையும்விடத் திறமையாக செயற்பட்ட தென் கொரியாவில் 0.5 ஆகவும் இருக்கின்றன (2020,  மே மாதம் இரண்டாம் திகதி நோர்வேயின் VG பத்திரிகையில் வெளிவந்த புள்ளி விபரங்களின்படி). சுவீடனுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட அதன் அயல்நாடுகள் (நோர்வே, டென்மார்க், ஃபின்லாந்து) முடக்கல் கொள்கையை நன்கு நடைமுறைப்படுத்தியதால் சுவீடனும் பயனடைந்திருக்கலாம்.

 சமூக, அரசியல், தார்மீக நோக்கில் கொவிட்-19ஐ எதிர்க்க கூட்ட நோயெதிர்ப்பாற்றல் ஏற்புடைய கொள்கையா என்பது பற்றி விவாதங்கள் தொடர்கின்றன. இது ஒரு மல்தூசிய மற்றும் சமூக டாவினிச  (Malthusian and social Darwinist) அணுகுமுறை எனும் விமர்சனம் பலமானது.  உலகின் மிகப் பெரும்பான்மையான நாடுகள் இந்த அணுகுமுறையைக் கொள்கையளவில் நிராகரித்துள்ளன. இன்றைய நிலைமைகளில் கிடைக்கும் தகவல்களின்படி வைரசின் பரவலைக் கட்டுப்படுத்தும் கொள்கையைத் திறமையாகச் செயற்படுத்திய நாடுகளில் தொற்று மற்றும் மரணவீதங்கள் மிகக் குறைவு.  ஆனால் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட ஒரு தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் சுலபமாகக் கிடைக்கமுன் பொருளாதார மீளுயிர்ப்புக்கு முன்னுரிமை கொடுத்து முடக்கம், சமூக இடைவெளி பேணல், தேசிய எல்லைக் கட்டுப்பாடுகள் போன்றன தளர்த்தப்பட்டபின் ஒரு புதிய பரவல் அலை எழுந்தால் என்ன செய்வது எனும் கேள்வியை தட்டிக்கழிக்க முடியாது. அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும் எனும் கேள்வி எழுகிறது. 

கொவிட்-19 இன் அரசியல் பொருளாதாரமும் சமூகத் தாக்கங்களும்

இந்தப் பெருந்தொற்றின் விளைவான உலகப் பொருளாதார நெருக்கடியைப் 2007-2008 இல் வந்த நிதி நெருக்கடியுடன் ஒப்பிடுவது ஒரு பொதுப் போக்காகியுள்ளது. அதேவேளை இன்றைய நெருக்கடி முன்னையதை விடவும் பலமடங்கு பாரியது மட்டுமல்லாது இது வெளிக்கொணர்ந்த அதிர்ச்சிகள் பன்முகமானவை என்பதும் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் பொதுவான கருத்தாகும். இந்தப் பொருளாதார நெருக்கடி முன்னையதைவிடவும் வேறுபட்டது என்பதை

பொதுமக்கள் அநுபவபூர்வமாகப் புரிந்து கொள்கிறார்கள்.  2007-2008 நெருக்கடி அமெரிக்காவில் நிதித்துறையில் ஆரம்பித்து வேறு பல, விசேடமாக ஐரோப்பிய, நாடுகளுக்குப் பரவியது. தமது வீடுகளை வங்கிகளிடம் அடமானம் வைத்துக் கடன் பெற்ற பெருந்தொகையினரால் கடனைத் திருப்பிக் கட்டமுடியாத நிலையினால் ஆரம்பித்த அந்த நெருக்கடியால் பெரும் நிதி நிறுவனங்கள் கணநேரத்தில் வீழ்ந்தன. இது நிதி மூலதனம் உருவாக்கிய பிரச்சனை (Harvey, 2010). 

கொவிட்-19 சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்துப் பெருந்தொற்றாக உலகமயமாகியது. இருநூறுக்கு மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கங்கள் இதைக் கையாள எடுத்த வழிவகைகளின் தவிர்க்கமுடியாத  உடனடியான பொருளாதார விளைவு உற்பத்தித் துறைகளின் மற்றும் பல சேவைகளின் வீழ்ச்சியாகும். பல்வேறு ஆலைத்தொழில்கள், விவசாயம், சர்வதேசப் போக்குவரவு, உல்லாசத்துறை, உணவகங்கள், பொழுதுபோக்குச் சேவைகள், பாவனைப் பொருட்களின் விற்பனை நிலையங்கள் எனப் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டன. ´நிஜப் பொருளாதாரம்´ (´real economy´) எனப்படும் இந்தத் துறைகளிலேயே நெருக்கடி ஆரம்பித்து நிதி மூலதனத் துறைக்குப் பரவியது. ஆகவே இந்த நெருக்கடி கேள்வி, நிரம்பல் இரண்டினதும் வீழ்ச்சியுடன் ஆரம்பித்து நிதித்துறைக்குப் பரவி அங்கு பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி தீவிரமடைந்தது. தொழில் இழப்பு, வருமானமின்மை தனிநபர்களையும் குடும்பங்களையும் படுமோசமாகப் பாதிக்கின்றன.  பெற்ற கடனைத் திருப்பிக் கட்டமுடியாத நிலையில் தனிநபர்கள் மட்டுமன்றி சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்களும் திண்டாடும் நிலையில் பல நாடுகளும் – குறிப்பாக இலங்கை போன்ற வளர்முக நாடுகளும் – கடன் சிக்கலுக்குள்ளாகியுள்ளன. இதனால் வங்கிகளும் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வளர்முக நாடுகளிலிருந்து வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள நிலையில் அவர்களில் தங்கியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரங்கள்பாதிக்கப்பட்டதுடன்  தாய் நாட்டின் அந்நிய செலாவணி வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு நாட்டின் காசாதாரப் பொருளாதாரத்தின் அளவைப் பொறுத்து அதன் முக்கியத்துவம் வேறுபடலாம். உதாரணமாக இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தில் வெளிநாட்டுக் காசாதாரம் முக்கிய பங்கினை வகிக்கிறது.

சீனாவின் முக்கிய நகரமொன்றில் ஆரம்பித்த நோயின் உலகமயமாக்கலுடன் பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும் உலகமயமானது உலகப் பொருளாதாரத்தில் சீனா வகிக்கும் பாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. பெருமளவிலான நிரம்பல் சங்கிலிகள் (supply chains) சீனாவிலிருப்பதையும் இந்த நெருக்கடி உலகுக்கு நினைவூட்டுகிறது. வுஹான் விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் பல உயர் கல்வி நிறுவனங்களையும் கொண்ட நகரமாதலால் அதன் சர்வதேசத் தொடர்புகளும் பன்முகரீதியானது. 

ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடி கொவிட்-19 வந்ததால் மட்டும் வெடித்த ஒன்றல்ல. உண்மை என்னவெனில் உலகப் பொருளாதாரம் ஏற்கனவே மந்தநிலையிலேயே இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் தொடரும் நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தினால் ஊகத்திற்கூடாகத் துரித இலாபம் பெறும் போக்கு, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் வளர்ச்சி, ஒரு புறம் நுகர்வுவாதக் கலாச்சாரத்தின் வளர்ச்சி மறுபுறம் நீண்டகாலமாகத் தொழிலாளர்களின் வளராத அல்லது வீழ்ச்சியடையும் மெய் ஊதியம், உழைப்பின் முறைசாரா மயமாக்கலின் (informalization), தற்காலிகமயமாக்கலின் உலகரீதியான பரவல், கடன்பளுவால் பாதிக்கப்படும் குடும்பங்களின் தொகை அதிகரிப்பு, நில அபகரிப்பு மற்றும் இயற்கையின் பண்டமயமாக்கலின் தீவிரமயமாக்கலும் சுற்றுச் சூழலின் சீரழிவும்  –  இந்தச் சூழ்நிலையிலேயே கொவிட்-19 பெருந்தொற்றாக மாறுகிறது. ஏற்கனவே மந்தநிலையிலிருந்த உலகப் பொருளாதாரம் ஒரு பாரிய சிக்கலினால் விழுங்கப்படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் பிரச்சனைகளுக்குள்ளான போதும் பல்லாண்டுகளாக உலகரீதியில்  உயர் வளர்ச்சி வீதங்களைக் கண்ட சீனாவின் பொருளாதாரம் இந்தச் சிக்கலால் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றுத் தொடர்பான முடக்கல் கட்டுப்பாடுகள் தொடரும்வரை உலகப் பொருளாதாரம் பின்னடைவிலிருந்து மீளெழுவது சாத்தியமில்லை. அதேவேளை கொரோனா நெருக்கடிக்குப் பின்னான பொருளாதாரக் கொள்கைகள் என்னவாயிருக்கும் எனும் கேள்வியும் எழுகிறது. 

சமூகப்-பொருளாதார தாக்கங்கள்மேலும் சில குறிப்புகள்

கொரொனாவைரஸ் எதுவிதப் பாகுபாடுமின்றி யாரையும் தாக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் சிறிதளவு உண்மை உண்டு. ஆனால் பெரிய உண்மை என்னவெனில் இந்தப் பெருந்தொற்றினைக் கையாள அரசாங்கங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளின் சமூகப்-பொருளாதார விளைவுகள் அமைப்புரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப வேறுபடுகின்றன. கொரோனா தொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து மேற்கு நாடுகளின் சில செல்வந்தர்கள் தமது சொந்த ஜெட்விமானங்களில் மலைப்பிரதேச விடுமுறை இல்லங்களை நோக்கிப் பறந்தார்கள் எனும் செய்தியைப் படித்தேன். இவர்கள் உலகின் செல்வந்தர் வர்க்கத்திற்குள்ளேயும் ஒரு சிறுபான்மையினரே. இதற்கு மறு துருவத்தில்  வேலையிழந்து, வருமானமிழந்து, சேமிப்புமற்ற நிலையில் பெருந்தொகையானோர் பல்வேறு நாடுகளில் அல்லல் படுகிறார்கள். இவர்களைப் பட்டினியிலும் பஞ்சத்திலுமிருந்தும் அதனால் வரும் விளைவுகளிலுமிருந்தும் காப்பாற்றுவது ஒரு உலகமயச் சவாலாகிவிட்டது.  

ஐ. நாவின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு  (International Labour Organization – ILO)இன் இயக்குனர் நாயகத்தின் சொற்களில் கொவிட்-19 இன் விளைவாக, ‘அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடையும் நாடுகள் இரண்டிலுமே தொழிலாளர்களும், தொழிலாற்றும் நிறுவனங்களும் பேரவலத்தை எதிர்நோக்குகிறார்கள்…கடந்த 75 வருடங்களுக்கும் மேலாகச் சர்வதேச ஒற்றுமைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சோதனை இதுதான். ஒரு நாடு தோல்வியடைந்தால் நாம் எல்லோருமே தோல்வியடைவோம். நமது உலக சமூகத்தின் சகல பகுதிகளுக்கும், குறிப்பாக இடர்பாட்டுக்குள்ளாகும் நிலையில் அல்லது தமக்குத்தாமே உதவமுடியாத நிலையிலுள்ளோருக்கு, உதவும் தீர்வுகளை நாம் காணவேண்டும்’ (Rios, April 8, 2020). ILOவெளியிட்டுள்ள அறிக்கை தரும் புள்ளி விபரங்களின்படி(ILO, April 7, 2020): 

  • உலகின் மொத்தத் தொழிற்படை 3.3 பில்லியன் (billion)
  • இதில் 81 வீதத்தினர் – அதாவது ஏறக்குறைய 2.67 billion தொழிலாளர்கள் – தொழிற்றலங்கள் முற்றாக அல்லது பகுதியாக மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • உலகம்பூராவும் 2 billion தொழிலாளர்கள் முறைசாரா துறைகளில் வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அபிவிருத்தியடையும் நாடுகளிலேயே உள்ளார்கள்.

பல நாடுகள் பாதிக்கப்பட்ட மக்களில் சில பகுதியினருக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் தற்காலிக நிவாரணம் வழங்கப் பணம் ஒதுக்கியுள்ளதுடன் தொழில் நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட காலம்வரை வரி விலக்கும் வழங்கியுள்ளன. இதற்காகவும் வேறு அரசாங்க செலவுகளுக்காகவும் மத்திய வங்கிகள் மேலதிகமாக பணம் அச்சிட்டு உதவியுள்ளன. இது ஒரு குறுகிய கால நடவடிக்கையே. நிவாரணப் பொதிகளின் உள்ளடக்கங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.  செல்வந்த நாடுகள் தமது தேசிய வருமானத்தின் 10-15 வீதத்தை ஒதுக்கியுள்ளன. நிவாரணப் பணத்தின் பங்கீட்டைப் பொறுத்தவரை இறுதியில் அது செல்வந்தர்களுக்கே சாதகமாயிருக்கிறது என்பதே யதார்த்தம் (Stevenson, 2020). சில வறிய நாடுகள்  செல்வந்த நாடுகளிடமிருந்தும் உதவிகள் பெற்றுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களில் இதுவரை உதவி கிடையாதோர் மற்றும் உதவியின் போதாமையால் பாதிக்கப்பட்டோர் பலர்.  இந்தியாவின் நிலைமை பற்றி அந்த நாட்டின் மூத்த அபிவிருத்திப் பொருளியலாளரும், முன்னை நாள் இந்திய திட்டமிடல் ஆணைக்குழு அங்கத்தவரும், திருவனந்தபுரம் அபிவிருத்திக் கற்கைகள் மையத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியருமான K. P. கண்ணன் சமீபத்தில் (April 13) எழுதிய கட்டுரையின் சில பகுதிகளைச் சுருக்கிக் கூறுவது பொருத்தமாயிருக்கும். 1.34 பில்லியன் ஜனத்தொகையின் மூன்றிலிரண்டு பகுதியினர் அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கும் இந்தியாவில் கொவிட்-19 நெருக்கடி இந்தப் பெரும் மக்களைப் பொறுத்தவரை சுலபமாக ஒரு பட்டினி நெருக்கடியாக மாறக்கூடியது. தொழிற்படையின் 90 வீதத்தினர் வேலையின்றி அல்லது சமூகப் பாதுகாப்பின்றி இருக்கும் நிலையில் உரிய அரச உதவி வழங்கப்படாவிடில் ஆபத்தான திருப்பம் ஏற்படலாம். இதை ஏற்கனவே காணக்கூடியதாக இருக்கிறது. பெருந்தொகையான மரணங்களையும் பட்டினியின் மற்றும் கொவிட்-19 ஆல் வரும் மரண பயத்தின் விளைவாக எழக்கூடிய சமூகக் கொந்தளிப்பை எப்படித் தவிர்ப்பது என்பதே இன்று இந்தியாவை எதிர் நோக்கும் மிகப் பெரிய நெருக்கடியாகும். இத்தகைய ஒரு பாரிய நெருக்கடியைக் கையாள இந்திய அரசாங்கம் நாட்டின் தேசிய வருமானத்தின் ஒரு வீதத்திற்கும் குறைந்த அற்ப தொகையையே ஒதுக்கியுள்ளது பெரும் அரசியல் துன்பியலாகும் எனக் கூறும் கண்ணன் தேசிய வருமானத்தின் 10 வீதம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக ஒதுக்கப்படவேண்டும் என்றும் அதைச் சாத்தியமாக்கும் வழிவகையையும் சுட்டிக் காட்டுகிறார் (Kannan, 2020).

பெருந்தொற்றுத் தொடர்பான இந்திய நிலைமைகள் இலங்கை உட்பட மற்றைய அயல் நாடுகள்மீதும் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை. கொரோனா வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அவசரகால அதிகாரங்களுடன் இராணுவமயமாக்கப்பட்ட அணுகுமுறையின் உதவியுடன் பெற்ற வெற்றியின் மறுபக்கத்தில் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுடன், வேலையிழந்து, வருமானமிழந்து துன்புறுவோரின் விசேடமாக உதவிகள் கிட்டாத அன்றாடம் காய்ச்சிகளின் அவலங்கள்  தொடரும் நிலையில் ஒரு அரசியல் நெருக்கடி வெடித்துள்ளது. கொவிட்-19 நெருக்கடியைத் தமது அரசியல் நோக்கத்தை அடையும் திட்டத்திற்குப் பயன்படுத்தும் நோக்கில் காய்நகர்த்துகின்றனர் ஜனாதிபதியும் அவரது கட்சியினரும்.  நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஜனாதிபதிக்கு சர்வ அதிகாரத்தையும் வழங்கும் வகையில் யாப்பை மாற்றும் நோக்கில் பொதுத்தேர்தலை நடத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தேர்தல் ஆணைக்குழு ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறுமென அறிவித்துள்ளது. இன்றைய பெருந்தொற்றுச் சூழலில் தேர்தலை நடத்துவது மக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தானதென்பதுடன், ஒரு நியாயமான, சுதந்திரமான தேர்தல் இடம்பெறக்கூடிய நிலைமைகளும் இல்லை எனும் யதார்த்தத்தை எதிர்க்கட்சிகளும் சிவில் சமூகக் குழுக்களும் சுட்டிக்காட்டியுள்ளன. யாப்புரீதியான நெருக்கடி ஒன்று தோன்றியுள்ளது. தற்போதைய சட்டரீதியான தேவைகளுக்காகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் யாப்புரீதியான அனுமதி இருந்தும் ஜனாதிபதி அதைச் செய்யத் தயாரில்லை.  தற்போது இலங்கையில் நாடாளுமன்றம் இல்லை, நீதித்துறையும் தற்காலிகமாக முழுமையாக இயங்கமுடியாத நிலையில், ஆகவே நடப்பது ஜனாதிபதியின் ஆட்சிதான். அவர் இராணுவத்தின் மற்றும் தனக்கும் தனது கட்சிக்கும் விசுவாசமானவர்களின் உதவியுடன் நாட்டை ஆளுகிறார். இது ஆட்சிமுறைமையில் அதிகாரவாதத்தை மேலும் ஆழமாக்கவே உதவும். கொரோனா நெருக்கடி தொடங்கியபின்  இலங்கையின் மத்திய வங்கி இதுவரை 170 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணத்தை வெளியிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. அரச சேவையாளரின் ஊதியங்கள், பாதிக்கப்பட்டோருக்குப் பண உதவி போன்றவற்றிற்கு இந்தப் பணம் செலவிடப்படுகிறதெனெ அரசாங்கம் சொல்கிறது. ஆயினும் வாழ்வாதாரங்களை இழந்த பலருக்கு உதவிகள் போய்ச்சேரவில்லை எனச் செய்திகள் சொல்கின்றன. இந்தப் பணத்தின் பங்கீடு அரசியல் தலையீடுகள், கட்டுப்பாடுகள் மற்றும் ஊழல் ஆகியவற்றிலிருந்து தப்பமுடியுமா?

 உலகின் மிகத் துப்புரவான நகரங்களில் ஒன்றெனக் கொண்டாடப்படும் சிங்கப்பூரில்  கொவிட்-19ஐக் கட்டுப்படுத்துவத்தில் ஆரம்பத்தில் வெற்றி பெற்றபோதும் பின்னர் நோயின் பரவல் அங்குவாழும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்தது. கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் அரசாங்கம் பல இலட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்குள் தனிமைப் படுத்தி முடக்கியது. வசதிகள் குறைந்த மற்றும் மனிதநெருக்கடிமிக்க விடுதிகளில் அடைபட்டிருந்ததால்  அவர்களிடையே கொரோனா தொற்றுவது சுலபமாயிற்று. இது செல்வந்த நகர அரசான சிங்கப்பூர் பெருமைப்படக்கூடிய விடயமல்ல. சிங்கப்பூரை செல்வபுரியாக்குவதில் வெளிநாட்டுத் தொழிலாளரின் பங்கு உலகறிந்தது. தனி நபர்களுக்கிடையே சமூக விலகல் அல்லது சமூக இடைவெளியைப் பேணுதல் வைரசின் தொற்றைத் தவிர்ப்பதற்கு அவசியமென்பது இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் பெருந்தொகையான தென்னாசியத் தொழிலாளர்கள் வாழும் இந்த விடுதிகளில் இது நடைமுறையில் சாத்தியமில்லை. வேறு பல நாடுகளில் சேரிகளில் குடியிருக்கும் சமூகங்களிலும் இது சாத்தியமில்லை. வைரஸ் தொற்றைத் தவிர்க்கச் சவற்காரம் பயன்படுத்தி நாளுக்குப் பல தடவைகள் கைகளை நன்கு கழுவ வேண்டுமென்பதும் ஒரு முக்கிய அறிவுரையாகும். இது குடிநீருக்கே தட்டுப்பாடுள்ள சூழல்களில் விசேடமாக நீர் விநியோகக் கட்டுப்பாடுகளுள்ள நகரங்களில், நீர் சந்தைமயப்படுத்துள்ள இடங்களில், வரண்ட பிரதேசங்களில், பொதுவாக வறியவர்களின் குடியிருப்புக்களில் சாத்தியமில்லை. 

உலகப் பொருளாதாரமும் சீனாவும்

ஏற்கனவே குறிப்பிட்டபடி கொரோனா நெருக்கடி உலகப் பொருளாதரத்தில் சீனாவின் முக்கியத்துவத்தை நன்கு புலப்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் சீனா இன்று உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர். 2019 ஆம் ஆண்டு சீனா மொத்தமாக 2.499 ட்ரில்லியன் (trillion)  அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தது. இதில் 49% மற்றைய ஆசிய நாடுகளுக்கு, 20.1% வட அமெரிக்காவிற்கு, 19.9% ஐரோப்பாவிற்கு, மற்றும் 4.5% ஆபிரிக்காவிற்கும் சென்றுள்ளது. ஆலைத் தொழில் உற்பத்தியில் சீனா முன்னணியிலுள்ளது. சீனாவின் ஏற்றுமதிகளில் உயர் தொழில்நுட்பவியல் துறைகள் சார்ந்த பொருட்கள் ஒரு முக்கியமான இடத்தைப்பிடித்துள்ளன. வட அமெரிக்காவும் ஐரொப்பாவும் அதன் உயர் பெறுமதிப் பொருட்களின் பிரதான சந்தைகள்.  சீனாவின் உள்நாட்டுச் சந்தையும் மிகப் பெரியது. கடந்த 15 வருடங்களில் உள்நாட்டு நுகர்வுச் சந்தை துரிதமாக வளர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரம் இன்றைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் சீனப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மறுபுறம் அமெரிக்காவும் அதன் அணியைச் சார்ந்த நாடுகளும் சீனாவின் பொருளாதார மேலாதிக்கத்திற்கெதிராக மாற்று வழிகளைத் தேடுகின்றன. இந்தச் சூழலில் சீனாவிலிருக்கும் வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவிற்குக் கவரும் முயற்சியில் அந்த நாட்டின் அரசாங்கமும் தனியார் துறைக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.

2003இல் இடம்பெற்ற  SARS தொற்றினால் வந்த நெருக்கடியிலிருந்து சீனப் பொருளாதாரம் மிகத் துரிதமாக மீண்டது.  2007-2008 நிதி நெருக்கடியைத் தீர்க்கச் சீனா அமுல் படுத்திய உள்நாட்டு முதலீட்டு மற்றும் சர்வதேச நிதி உதவித் திட்டம் மற்றைய ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியதுடன் கடன் பளுவினால் பாரிய பொருளாதாரச் சிக்கலுக்குள்ளான கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் நேரடியாகப் பயனளித்தது. அன்று சீனா உலக முதலாளித்துவ அமைப்பை நெருக்கடியிலிருந்து விடுவிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. இது சீனாவின் தேசிய பொருளாதாரத்தின் மீள்வலிமையாக்கலுக்கு உதவியது. இன்றைய நெருக்கடி சீனாவையும் பெருமளவில் பாதித்திருப்பதுடன் ஏற்கனவே சீனாவின் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் கடன்பளுக்களும் அரசாங்கத்தின் கடனும் வளர்ந்துள்ளன. இந்த நிலையில் சீனா எத்தகைய சர்வதேசப் பங்கினை வகிக்கப்போகிறது என்பதைச் சற்றுப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  உள்நாட்டுச் சந்தையை மீண்டும் உயிரூட்டுவது சீனாவின் முன்னுரிமையாயிருக்கலாம். அதேவேளை அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளும் மீள் எழுதல் சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு அவசியம். முதலாம் மாதம் 23ஆம் திகதி வுகானில் வாழும் அனைவரையும் அவர்களின் வீடுகளிலிருந்து வெளிவராது முடக்கும் விதியை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்த சீன அரசாங்கம் நாலாம் மாதம் எட்டாம் திகதி அதைத் தளர்த்தும் முடிவை அறிவித்த போது வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அரசாங்கங்கள் கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. தன்னம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில்  சீனா பொருளாதார மீட்டெடுப்புச் செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தொடங்கியது. ஆயினும் இந்தத் தடவை சீனாவின் பொருளாதார மீட்சிப் போக்கு முன்னைய சந்தர்ப்பங்களைவிட மெதுவாகவே நகரும் எனப் பொருளியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (Hedrick-Wong, March 25, 2020). 

பொருளாதாரத்தை மீண்டும் இயங்கவைக்க வைரசின் பரவலைத் தடுக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். மறுபுறம் அத்தகைய தளர்த்தல் வைரசின் பரவலை ஊக்குவிக்கும் ஆபத்து வளரலாம். கொவிட்-19 ஐ தடுப்பதற்கு ஊசி மற்றும் அந்த நோய்க்கு மருந்து எதுவும் இல்லாத நிலையில் எல்லா நாடுகளும் எதிர்கொள்ளும் முரண்பாடு இது தான். மறுபுறம் உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது பற்றி ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது. இந்த மாபெரும் நெருக்கடியின் சமூகப்-பொருளாதார, சுற்றுச்சூழலியல் பாடங்களை ஆழப்படித்து மாற்று அணுகுமுறைகளைத் தேடாது மீண்டும் அதே உலகப் பொருளாதார அமைப்பைச் சில ‘சரிப்படுத்தல்களுடன்’ மீள்நிர்மாணம் செய்வதுதான் உடனடி நோக்கமாயிருக்க வேண்டுமா

இயற்கையின் பழிவாங்கல்

‘இயற்கைமீது மனிதர் ஈட்டிய வெற்றிகளையிட்டு நாம் தற்புகழ்ச்சி அடையாமலிருப்போமாக. ஏனெனில் நமது ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது. முதலில் ஒவ்வொரு வெற்றியும் நாம் எதிர்பார்த்த முடிவுகளைத் தருகிறது என்பது உண்மைதான் ஆனால் இரண்டாம் மூன்றாம் தடவைகளில் அது மிகவும் வித்தியாசமான நாம் எதிர்பார்க்காத – பல சந்தர்ப்பங்களில் முதல் கிடைத்த முடிவுகளை இரத்துச் செய்யும் – விளைவுகளைத் தருகிறது.’

Frederick Engels, 1876, The Part Played by Labour in the Transition from Ape to Man.(https://www.marxists.org/archive/marx/works/1876/part-played-labour/ ) (சமுத்திரன், 2017, Samuthran.net)

டேவிட் ஹாவிய் (David Harvey, 2020) சொல்வதுபோல் கொவிட்-19  நாற்பது வருடங்களாக இயற்கையைப் பெரிதும் துஷ்பிரயோகம் செய்த நவதாராள உலகமயமாக்கலுக்கு எதிராக ‘இயற்கையின் பழிவாங்கல்’. இயற்கை தன் சீற்றத்தைக் காட்டியது இதுதான் முதற் தடவையல்ல. கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக நாடுகள் எடுத்த நடவடிக்கைகளால் ஒரு குறுகிய காலத்தில் நமது வளிமண்டலத்தின் மாசுபடுத்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியின் நற்பயனை பெய்ஜிங், நியூயோக், டில்லி போன்ற பெருநகர வாசிகள் மட்டுமன்றி உலகின் மற்றையோரும் மற்ற சீவராசிகளும் அநுபவித்தனர். புதைபடிவ எரிபொருளின் சக்தியில் தங்கிநிற்கும் உலகின்  கரிமப் பொருளாதாரம் ஒரு உலகரீதியான மனித அவலத்தின் காரணமாக தற்காலிகமாக இயக்கமிழக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாதானலேயே நமக்கு இந்தப் புதிய அநுபவம் கிடைத்தது. இது உலக அமைப்பின் சுற்றுச்சூழல்பற்றி ஒரு அடிப்படையான தகவலை நினைவூட்டியுள்ளது. கரிமப் பொருளாதாராமே புவிக்கோளின் வெப்பமயமாக்கலுக்குப் பிரதான காரணம். பதினெட்டாம் நூற்றாண்டு ஆரம்பித்த ஆலைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியாவே கரிம வெளியீட்டில் முன்னின்றது. பின்னர் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஆலைத்தொழில் மயமாக்கல் கரிம வெளியீட்டை மேலும் அதிகரித்தன. இருபதாம் நூற்றாண்டில் வட அமெரிக்காவே இதில் முன்னணியிலிருந்தது. இதைத் தொடர்ந்து சீனா, இந்தியா, பிராசில் போன்ற வளர்முக நாடுகளில் கரிமப் பொருளாதாரம் வளர ஆரம்பித்தது. இந்த நூற்றாண்டில் புதைபடிவ எரிபொருள் பாவனையில் சீனாவே முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன் கரிம வெளியீட்டிலும் அது அமெரிக்காவையும் மிஞ்சி விட்டது (Malm, 2016; சமுத்திரன், 2017). 

மூலதனத்தின் தாக்கங்களுக்கு எதிராக இயற்கையின் சீற்றம் பலவிதமான தோற்றங்களில் வெளிவருகிறது. ஒரு சுற்றுச்சூழலியல்ரீதியான பிரச்சனை அதனுடன் அமைப்புரீதியில் தொடர்புள்ள வேறு பிரச்சனைகள் மீதும் நமது கவனத்தைத் திருப்புகின்றது. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னாலுள்ள காரணிகளின் அரசியல் சுற்றுச்சூழலியலைப் பார்த்தல் அவசியம். நன்கறியப்பட்ட பரிணாம உயிரியலாளரும் (evolutionary biologist)முற்போக்கு சமூக ஆர்வலருமான  Rob Wallace சமீபத்தில் ஒரு நேர்காணலில் சொன்னது போல் இந்த நெருக்கடிக்கான அமைப்புரீதியான காரணிகளைத் தேடாது ஒரு கொரோனா வைரஸில் பழியைப் போடுவதுடன் விட்டுவிடுவது உண்மையை மறைக்கவே உதவும்.  

சமீப தசாப்தங்களில் வைரஸ்களினால் கால்நடைகளையும் மனிதர்களையும் பாதிக்கும் வியாதிகள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து முன்பைவிட அடிக்கடி வருகின்றன. இந்த வைரஸ்களில் சில மனித உயிருக்கு மிகவும் ஆபத்தானவையாகவும்  இன்றைய உலகமயமாக்கல் யுகத்தில் துரிதமாக உலகெங்கும் பரவ வல்லனவாகவும் இருப்பதும் அநுபவரீதியான உண்மையாகும். விஞ்ஞானரீதியான தகவல்களின்படி கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த SARS-CoV-2 வைரசினால் வந்த நோய்தான் கொவிட்-19. இது போன்ற வைரசுகளின் பரிணாமத்திற்கும் இலாபநோக்கில் ஆலைத்தொழில்மயப்படுத்தப்பட்ட விவசாயத்திற்கும் (factory farming), விசேடமாக கால்நடை உற்பத்தி ஆலைத் தோட்டங்கள் மற்றும் பல காரணங்களால் தொடரும் காடழிப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதை இயற்கை மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுகள் காட்டுகின்றன (Wallace et al, 2020; Wallace, 2016). வளரும் இறைச்சிச் சந்தைக்காக கோழி, வான்கோழி, பன்றி, மாடு ஆகியவற்றின் உற்பத்தித் தொழிற்சாலைகள் பெருமூலதனத்தால் உலகமயமாக்கப்பட்டுள்ளன. 1990களிலிருந்து சீனாவிலும் இந்தத்துறை பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த ஆலைத் தோட்டங்கள் வைரஸ்களின் தோற்றத்திற்கும் பரிணாமத்திற்கும் உகந்த சூழல்களைக் கொண்டுள்ளன. இவற்றிடமிருந்து பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களைக் கொடுக்கும் வைரசுகள் தோன்றியுள்ளன, மீண்டும் தோன்றும் ஆபத்துக்கள் தொடர்கின்றன. மறுபுறம் காடழிப்பினால் வனவிலங்குகளின் வதிவிடங்கள் சுருங்கி அவற்றிற்கும் மனிதருக்குமிடையிலான வெளியில் (இடைமுகத்தில்) மாற்றமேற்படுகிறது.  இது வன விலங்கிலிருந்து வைரஸ் நுண்ணுயிரிகள் நேரடியாக அல்லது ஒரு இடைத்தரப்பிற்கூடாக மனிதருக்குச் சென்றடையும் ஆபத்தை அதிகரிக்கிறது. மனித உணவாகப் பயன்படும் வனவிலங்குகளிடமிருந்து  வைரஸ் மனிதருக்குத் தொற்றும் ஆபத்தும் அதிகமென ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இத்தகைய வழிகளில் ஒன்றுக்கூடாகத்தான் கொவிட்-19 நோய்க்குக் காரணமான கொரோனா வைரஸ் மனிதரிடம் முதலில் சென்றடைந்திருக்கலாமெனும் கருதுகோள் விஞ்ஞானிகளால் ஆராயப்படுகிறது. வனவிலங்கு மாமிசத்திற்குச் சீனாவில் மட்டுமல்ல உலகரீதியான சந்தை வளர்ந்துள்ளது.

சீனாவில் கால்நடை உற்பத்தி ஆலைத்தொழில்மயமாக்கப்பட்டதன் விளைவாகப் பல சிறுபண்ணை விவசாயிகள் கால்நடை உற்பத்தியைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களில் பலர் வாழ்வாதாரத்திற்காகச் சந்தைக் கேள்வியுள்ள ‘வன’ விலங்குகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டார்கள். இதற்காக இவர்கள் எஞ்சியுள்ள காடுகளுக்கு நெருக்கமாகத் தொழிலில் ஈடுபட்டார்கள். இந்தப் பகுதிகளில்தான் வைரஸ் தொற்றியுள்ள வௌவால்களும் உள்ளன எனும் தகவலை இரு மானிடவியலாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர் என ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது (Spinney, 2020). வுஹானின் உணவுச் சந்தையில் தான் வைரஸ் முதலில் மனிதரைப் பற்றிக்கொண்டது என்றால் அந்த வைரசின் மூலம் எந்த உணவு அல்லது மிருகம் எனும் கேள்விக்கான இறுதியான பதில் இன்னும் வரவில்லை. ஆனால் இந்த வைரஸ் வுஹானின் ஆய்வுகூடமொன்றிலிருந்து வெளியேறவில்லை, இது மனிதரால் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ் அல்ல என்பதில் விஞ்ஞானிகள் மிகத் தெளிவாயிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் மட்டுமல்ல அமெரிக்காவின் புலனாய்வுத்துறையும் இதையே சொல்கிறது. 

முன்னைய வைரஸ் தொற்றுகளையும்விட கொவிட்-19 உலகமயமாக்கப்பட்டதன் விளைவாக வைரஸ் மற்றும் வேறு நுண்ணுயிரிகளால் வரும் நோய்களின் அரசியல் பொருளாதார அமைப்புரீதியான மூலக்காரணிகள் பற்றிய விழிப்புணர்வு வளர ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இலாபத்தையே முழுமுதல் நோக்காகக் கொண்டியங்கும் அமைப்பு மனித மேம்பாட்டையும் இயற்கையையும் அந்த நோக்கத்திற்குக் கீழ்ப்படுத்துகிறது. கொவிட்-19இன் ஆட்டம் ஓய்ந்துவிடலாம். ஆனால் அடுத்த தடவை அதையும்விட ஆபத்தான ஒரு பெருந்தொற்றுத் தோன்றக்கூடிய அமைப்புரீதியான காரணிகள் தொடர்கின்றன. தற்போதைய விவசாய  உற்பத்தி அமைப்புக்கள் தொடரும்வரை இது போன்ற ஆபத்துக்களும் தொடரும் என்பதே கசப்பான பாடமாகும். இந்த நெருக்கடி உலக கரிம முதலாளித்துவ அமைப்பின் தன்மைகள் பற்றி விழிப்புணர்வூட்டவும் ஓரளவு உதவியுள்ளது என நம்பலாம்.  ஆனால் இந்த அமைப்புத் தானாக மாறப்போவதில்லை. 

இனி?..?..?

மனித உயிர்களைக் காப்பதற்காக பெருந்தொற்றை உடனடியாகக் கட்டுப்படுத்துவதும் அதைத் தவிர்ப்பதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதும் முன்னுரிமை பெற்றுள்ளது நியாயமானதே. கடந்த நாற்பது வருடங்களாக நடைமுறையிலிருந்த நவதாராள உலகமயமாக்கலின் விளைவாகப்  பல நாடுகளின் தேசிய பொதுச் சுகாதார சேவையின் பலவீனமாக்கலையும் உலக நிறுவனங்களின்  இயலாமையையும் இந்த நெருக்கடி அம்பலப்படுத்தியுள்ளது. சகல மக்களுக்கும் தரமான சுகாதார, கல்வி சேவைகளை வழங்கும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் அவசியத்தை இந்த நெருக்கடி மீண்டும் வலியுறுத்துகிறது.  ஆனால் வல்லரசுகளின் அதிகாரப் போட்டிகள் மத்தியிலும் பெருந்தொற்றின் விளைவுகளைக் கையாண்டு அமைப்பைத் தொடர்ந்தும் சில ‘சரிப்படுத்தல்களுடன்’ தக்கவைக்கும் அரசியல் திட்டத்திற்கே ஆளும் வர்க்கக்கூட்டுகள் முன்னுரிமை கொடுக்கும் என்பதை மறந்துவிடலாகாது. முதலாளித்துவம்  பிரச்சனைகளைத் தீர்க்கும் பெயரில் பொதுவாக அவற்றை வேறு பக்கங்களுக்கு மிகவும் திறமையாக மாற்றிவிடுகிறது. இது வரலாறு தரும் பாடம். போராட்டமின்றித் தரமான சமூகப்பாதுகாப்பு உரிமைகளைப் பெறுவது சாத்தியமில்லை. நிலைபெறு மனித மேம்பாடே சமூக முன்னேற்றத்தின், அபிவிருத்தியின் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் இலாபத்திற்கூடாக மூலதனக் குவியலின் முடிவுறா வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பின் விதிகள் நிலைபெறும் மனித மேம்பாட்டின் முன்னுரிமைகளுடன் முரண்படுகின்றன.

கொவிட்-19 நெருக்கடியின் அமைப்புரீதியான காரணிகளைத் தேடவேண்டியதன் அவசியத்தை இந்தக் கட்டுரை வலியுறுத்தியுள்ளது. இந்த நோக்கில் சில விளக்கங்களையும் சுருக்கமாகக் கொடுத்துள்ளது. இவை பற்றி மேலும் விரிவாக பின்னர் எழுதும் ஆர்வமுடன் உள்ளேன். இன்று கொவிட்-19 தொடர்பான உலக மட்டத்திலான கதையாடலை உலக அமைப்பைத் தக்கவைக்கும் உடனடித் தற்காலிக ‘தீர்வுகளின்’ தேடலுக்குள் மட்டுப்படுத்துவதை நிராகரித்து விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களுடன் ஒரு பரந்த முற்போக்கு அரங்கிற்கு எடுத்துச் செல்வதில் பல இடதுசாரி அறிவியலாளர்களும் செயற்பாட்டு ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளது உற்சாகமளிக்கிறது. 

References

Davies, Mike. 2005, The monster at our door – The global threat of avian flu, Owl Books New York

Davies, Mike. 2020, In a plague year, Jacobin 14 March 2020

Duclos, Michel. Is coronavirus a game changer? 23 April 2020,  https://www.institutmontaigne.org/en/blog/covid-19-game-changer-middle-east-and-maghreb

Harvey, David, Anti-capitalist politics in the time of covid-19, Jacobin, 20 March 2020

Harvey, David, 2010, The enigma of capital, Oxford University Press

Hedrick-Wong, China´s economic recovery will be slower than it was for SARS, China Development Institute, 25 March 2020, http://en.cdi.org.cn/component/k2/item/660-china-s-economic-recovery-from-covid-19-will-be-slower-than-it-was-for-sars

ILO Monitor: Covid 19 and the world of work, updated estimates and analysis, 7 April 2020, https://www.ilo.org/wcmsp5/groups/public/@dgreports/@dcomm/documents/briefingnote/wcms_740877.pdf

Kannan, K. P. No excuse for a niggardly Covid+19 package, The Hindu 

Businessline, 13 April, 2020, https://www.thehindubusinessline.com/opinion/india-needs-a-better-covid-19-relief-package/article31297141.ece

Malm, Andreas. 2016, Fossil Capital The rise of steam power and global warming, Verso

Rios, Beatriz. ILO warns of devastating consequences of covid+19 on labour markets, April 8, 2020 https://www.euractiv.com/section/economy-jobs/news/ilo-warns-of-devastating-consequences-of-covid-19-on-labour-markets/

Rodrik, Dani. Will covid-19 remake the world?  https://www.project-syndicate.org/commentary/will-covid19-remake-the-world-by-dani-rodrik-2020-04

Spinney, Laura. Is factory farming to blame for coronavirus? The Guardian, 28 March 2020,https://www.theguardian.com/world/2020/mar/28/is-factory-farming-to-blame-for-coronavirus  

Stevenson, G. Following the coronavirus money trail, Open Democracy, 27 March 2020, https://www.opendemocracy.net/en/oureconomy/following-coronavirus-money-trail/

Wallace, Rob. 2016, Big farms make big flu, Monthly Review Press

சமுத்திரன், 2017, மூலதனமும் இயற்கையும் – மாக்சிச செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள்,I, II, III, IV, V. Samuthran.net 

 Wallace, Rob.,Liebman, Alex., Chaves, Luis. F., Wallace, Rodrik. 2020, Covid+19 and the circuits of capital, Review of the month, Monthly Review, May 2020.


[1] நான் குறிப்பிடும் கட்டுரையில் தரப்படும் முழுமையான மேற்கோள்: ´If a pandemic disease breaks out, it will be in a densely populated area, with close proximity between humans and animals, such as exists in some markets in China or Southeast Asia where people live close to livestock.´ (CIA, 2009, The State of the World 2025, cited in Duclos, 2020)

பலமிக்க தலைவரின் வருகையும் ஜனநாயகத்தின் தடம்புரளலும்

சமுத்திரன்

‘எக்காலத்திலும் ஜனநாயகம் பற்றிய மிகச்சிறந்த பகிடி என்னவெனில் அது தன்னை அழிக்கும் வழிவகையைத் தனது கொடிய எதிரிகளுக்குக் கொடுப்பதுதான்.’ Joseph Goebbels, ஹிட்லரின் பிரச்சார அமைச்சர் (1933-1945)

ஜனநாயகம் பற்றி ஹிட்லரின் பிரச்சாரப் பீரங்கியின் ‘பகிடி’ சமீபகாலங்களில் பல அரசியல் விமர்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் நினைவுகூரப்படுவதைக் காணலாம். தன்னை அழிக்கவல்ல அல்லது சீர்குலைக்கவல்ல விதைகளை ஜனநாயகம் தனக்குள்ளேயே கொண்டுள்ளது எனும் கருத்து மீண்டும் பலமாகவே கேட்கிறது. விசேடமாக டொனால்ட் ட்ரம்ப்  (Donald Trump) அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த மேற்கோள் மேலும் பரவலானது. ட்ரம்ப்பை ஹிட்லருடன் ஒப்பிடுவது பொருந்துமா என்பதல்ல முக்கியம். பலமிக்க அதிகாரவாத ஆளுமை கொண்ட ஒரு தலைவனாலேயே இன்றைய நெருக்கடிகளிலிருந்து நாட்டை விடுவிக்க முடியும் எனும் செய்தியை வலியுறுத்தும் வலதுசாரிக் கருத்தியல் பலநாடுகளில் மக்களின் ஆதரவுடன் எழுச்சி பெறுவதே அரசியல் விவாதங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது ஒருவகையான சீசரிசம் Caesarism எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் – அதாவது அரசியல் சிக்கல்மிகுந்த சமயத்தில் ஜூலியஸ் சீசர் போன்ற ஒரு இரும்பு மனிதன் பலரின் ஆதரவுடன் தலைவனாவது. Caesarism எனும் கருத்துருவை கிராம்சி உட்பட பல்வேறு சமூக விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர். ட்ரம்ப்பை சரிவடையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எழுந்துநிற்க வைக்கும் வல்லமை உள்ள ஒரு சீசராக அந்த நாட்டின் மேனிலை வர்க்கத்தின் ஒரு சாரார் நம்புகின்றனர் போலும். இன்னொருபுறம் சமூக-பொருளாதாரரீதியில் பலவீனமாக்கப்பட்டோரின் ஒரு சாராரும் தமது பிரச்சனைகளைத் தீர்க்க வல்ல தலைவர் அவரென நம்புகிறார்கள்.  

அதிகாரவாதம் பிரதிநிதித்துவ மற்றும் நேரடி ஜனநாயகத்துடன் முரண்படுகிறது. ஆனால் அத்தகைய ஜனநாயக விரோத தலைமைக்குச் சாதகமான ஒரு கருத்தியல் பல நாடுகளின் தேர்தல் அரசியலில் மிதமிஞ்சிய செல்வாக்குப் பெற்றுள்ளதைக் காண்கிறோம். இன்றைய நடைமுறை ஜனநாயகத்தில் நம்பிக்கை இழப்போர் தொகை அதிகரித்தவண்ணமுள்ளது போலவே தெரிகிறது. தேர்தல்களுக்கூடாகவே வாக்காளர்கள் இந்தச் செய்தியைத் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவில் ட்ரம்ப் என்றால் பிலிப்பைன்ஸ்சில் Duterte, துருக்கியில் எர்டோகான் (Erdogan), ரஷ்யாவில் புட்டின்  (Putin), பிராசிலில் பொல்சனாறோ (Bolsonaro), நமக்கு மிகவும் நெருங்கிய இந்தியாவில் மோடி. இவரைப் பிரபல ஆங்கில எழுத்தாளரான போல் மேசன் சமீபத்தில் எழுதிய நூலில்  (Paul Mason, 2019) ´Modi the Hindu Trump´ ‘மோடி இந்து ட்ரம்ப்’ என வர்ணித்துள்ளார். இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம் ஆனால் அதையும் விட முக்கியமாக நமது இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களில் 51 வீதத்திற்கும் மேலானேர் ஒரு ‘பலமிக்க தலைவனே’ இன்றைய தேவை எனும் முடிவில் கோட்டாபய ராஜபக்சவைத் தெரிவு செய்துள்ளார்கள். அவரை ஒரு பௌத்த பீடாதிபதி பெருமையுடன் ஹிட்லருடன் ஒப்பிட்டதை மறக்கமுடியுமா? ஜனாதிபதித் தேர்தலில் அவருக்குக் கிடைத்த சிங்கள பௌத்த வாக்காளரின் மிகப்பெரும் ஆதரவுக்கு இந்த ஒப்பீடும் உதவியிருக்கலாமோ எனப் பலர் எண்ணவும் கூடும். ஆனால் இலங்கையில் ‘பலமிக்க தலைவன்’ ‘தோன்றியது’ இதுதான் முதல் தடவையல்ல. 

சமகாலத்தில் பல நாடுகளில் இந்தப் போக்கினை அவதானிப்போர் இதற்கு ஒரு உலகரீதியான காரணப் பின்னணியை, இதன் சர்வதேச, பிராந்திய அரசியல் தொடர்புகளை அறிய முற்படுவது நியாயமானதே. அது அவசியமும் கூட.   இன்றைய உலக அமைப்பில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் இது ஏன் அல்லது எப்படி இடம்பெறுகிறது என்பதை அறிந்துகொள்ள அந்த நாட்டின் உள்ளார்ந்த முரண்பாடுகள், வரலாற்று நிலைமைகள் அடிப்படை முக்கியத்துவம் பெறுகின்றன.   இந்தக் குறிப்பில் உலகரீதியான  பின்புலத்தைப் பற்றிச் சில முக்கிய விடயங்களை மிகச் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன். அடுத்துவரும் கட்டுரைகளில் இவை பற்றி விரிவாக ஆராயப்படும்.  இந்த வகையில் நீண்ட உலகரீதியில் மேலாட்சி செலுத்திவந்த நவதாராள உலகமயமாக்கலின்நெருக்கடிகளும் அவற்றினால் வந்த சமூக, பொருளாதார மற்றும் சூழல் சார்ந்த விளைவுகளும் பிரதான முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் 2001ஆம் ஆண்டு ´9/11’ தாக்குதல்களுக்குப்பின் அமெரிக்க வல்லரசின் முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ கொள்கை,  தொடர்ந்து பல்வேறு நாடுகள் நடைமுறைப்படுத்திவரும்  ‘பாதுகாப்புமயமாக்கல்’ (securitization), மற்றும் விசேடமாக சமீப தசாப்தங்களில் புதிதாக எழுந்துவரும் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் உலக மற்றும் பிராந்திய அதிகார உறவுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் முக்கியத்துவம் மிக்கவை. 

இந்தப் புதிய வல்லரசுகளில் சீனா ஏற்கனவே உலக மட்டத்தில் கணிசமான பலமும் செல்வாக்கும் பெற்றுவருவது அமெரிக்க வல்லரசுக்குத் தலையிடியைக் கொடுக்கிறது.  ஆனால் இன்றைய உலக மாற்றப் போக்கில் சீனாவை எப்படி வகைப்படுத்துவதென்பது பெரிய கேள்வியாகும். சீனாவின் மாற்றங்களில் பலமிக்க தனிநபரின் தலைமைபற்றி நீண்டகாலமாக உலகரீதியில் பேசப்படுவதையும் எழுதப்படுவதையும் காண்கிறோம். ஆனால் அங்கே தனிநபர் வழங்கும் தலைமைக்குப்பின் ஒரு மிகப்பலமிக்க கட்சி  ‘நிரந்தரமாக’ அதிகாரத்தில் இருப்பதை மறந்துவிடலாகாது. சீனா நவதாராளக் கொள்கையை பின்பற்றுகிறதா இல்லையா என்பது ஒரு முடிவுறா விவாதமாகத் தொடர்கிறது. பலரின் அபிப்பிராயத்தில் சீனா நவதாராளக் கொள்கையின் சில அம்சங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. தனது நோக்கிலான முதலாளித்துவ விருத்திப் பாதையையே அது தேர்ந்தெடுத்தது. இது ‘கிழக்காசியப் பாதை’ எனச் சில ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. அதாவது சீனாவின் பழைய எதிரியான ஜப்பான் தேசிய அரசின் தலைமைத்துவ பங்குடன் முதலாளித்துவ அபிவிருத்திக்கு வகுத்த வழியால் நவீன சீனா ஆகர்சிக்கப்பட்டது எனலாம். இந்தப் பாதையையே சீனாவுக்கு முன்னர் தைவானும், தென் கொரியாவும் பின்பற்றி முதலாளித்துவ விருத்தி பெற்ற நாடுகளாயின. 1990களிலிருந்து தனது பொருளாதார வளர்ச்சியின் முன்னுரிமைகளுக்கேற்ப வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவரும் நாடாகவும் சீனா விளங்குகிறது.  அரச அதிகாரத்தை முழுமையாகத் தன் கையில் வைத்திருக்கும் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் சோஷலிசத்தை நிர்மாணித்துத் தக்கவைப்பதில் தோல்வியடைந்தபோதும் அங்கே முதலாளித்துவத்தை விருத்தி செய்வதிலும் அந்த நாட்டை ஒரு உலக வல்லரசாக வளர்தெடுப்பதிலும் வெற்றியடைந்து வருவதை மறுக்கமுடியுமா?இன்றைய சீனாவின் முதலாளித்துவம் ஒரு கலப்புப் பொருளாதாரம் (mixed economy) என்பதே பலரின் கருத்து.  மறுபுறம் செல்வந்த நாடுகள் உட்படப் பெருவாரி நாடுகள் நவதாராளக் கொள்கையை அமுல்படுத்தியது சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் உதவியது.  சீனாவில் இருப்பது ஒரு ஒற்றைக் கட்சி அதிகாரவாத அமைப்பு. அங்கே எதிர்க் கட்சிக்கு இடமில்லை. முதலாளித்துவ ஜனநாயக நிறுவனங்களுமில்லை. கட்சியின் விதிமுறைகளுக்கமையத் தலைவர் தேர்வு இடம்பெறுகிறது. இது ஒரு உட்கட்சி விவகாரமே. இங்கு நான் குறிப்பிட்டுள்ள மற்றைய நாடுகளையும் விடச் சீனா வேறுபட்டதென்பதால் பின்வரும் கருத்துரைகள் பெரும்பாலும் சீனாவுக்குப் பொருந்தாது. சீனாவின் எழுச்சியும் அது ஒரு புதிய ஏகாதிபத்திய வல்லரசா இல்லையா என்பதும் வேறாக ஆராயப்படவேண்டும்.  

நவதாராள உலகமயமாக்கலின் பாதகமான சமூக-பொருளாதார விளைவுகளுக்கு எதிராகப் பல நாடுகளில் ஒருபுறம் வலதுசாரித் தேசியவாத, அதிகாரவாதப் பொப்பியூலிசப் போக்கும் மறுபுறம் சமூக ஜனநாயக அரச சீர்திருத்தங்களைக் கோரும் மற்றும் ஜனநாயகத்தை மக்கள் ஜனநாயகமாக மீட்டெடுக்கும் உலகளாவிய நோக்கிலான இடதுசாரிப் போக்குகளும் தோன்றியுள்ளன. இவற்றில் வலதுசாரிப்போக்கே தற்சமயம் பொதுவாகப் பலம்பெற்றுவருவதை அவதானிக்கலாம். சுயபோட்டிச் சந்தை, தனியுடைமையாக்கல், சுதந்திர வர்த்தகம், மூலதனச் சந்தையின் தாராளமயமாக்கல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு  கடந்த நான்கு தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த நவதாராளக் கொள்கையின் விளைவுகள் பெருவாரியான பொதுமக்கள் மத்தியில் நவதாராள உலகமயமாக்கலில் மட்டுமன்றி ஜனநாயகத்திலும் நம்பிக்கை இழக்க வைத்துள்ளன என்பதைப் பல சர்வதேசரீதியான ஆய்வுகள் காட்டுகின்றன.  ‘நடுத்தர வர்க்கங்கள்’ என ஆய்வறிக்கைகள் குறிப்பிடும் உழைப்பாளர்களின் மெய் ஊதியம் வளராமை அல்லது வீழ்ச்சியடைதல், வேலையில்லாமை, சமூகப் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் மக்கள் தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கிறார்கள். சமூகத்தின் செல்வமும் வருமானமும் ஒரு அற்ப சிறுபான்மையினரிடம் குவிவது இதன் மறுபக்கம் என்பதையும் காண்கிறார்கள். தமது வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கீழ் தமது வாழ்க்கைத் தரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் அநுபவம் அந்த ஆட்சிமுறையின் ‘ஜனநாயகத்தில்’ நம்பிக்கை இழக்க வைக்கிறது.  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி கடந்த 25 வருட காலத்தில் 2019 ஆண்டில் பல செல்வந்த நாடுகளில், விசேடமாக பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும், பெருமளவிலானோர் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்துள்ளனர். பல நாடுகளில் முன்னர் ஜனநாயகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் மத்தியில் கடந்த பத்து வருட காலத்தில் பொதுவாக ஏமாற்றமே அதிகரித்துள்ளது என்பதை 154 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. இந்தப் பொதுவான போக்கிற்கு விலக்காகத் தொடர்ந்தும் ஜனநாயகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருக்கும் நாடுகளாக சுவிற்சலாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் விளங்குவதாக அதே ஆய்வு காட்டுகிறது. 

சமூகத்தில் பரவலாயிருக்கும் அதிருப்தியை வலதுசாரி சக்திகளின் ஒரு சாரார் தமது அரசியல் மூலதனமாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலைமைகளில் அகதிகளின் மற்றும் தொழிலாளர்களின் வருகையையும் மேற்கத்திய நாடுகளில் தேசியவாத, இன மற்றும் நிறவாத சக்திகள் தமது அரசியலுக்குப் பயன்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் நவதாராள உலக மயமாக்கலால் இலாபமடைந்த முதலாளி வர்க்கத்தினர் (இவர்களில் பெரும் பயனாளிகள் நிதிமூலதனத்தால் இலாபமடைந்தோர், மற்றும் உற்பத்தி முதலீடுகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறைந்த ஊதியத்தில் தரமான தொழிலாளர்களை வழங்கும் சீனா, வியட்நாம் மற்றும் ஆசிய தென் அமெரிக்க நாடுகளுக்கு மாற்றிப் பெரும் இலாபமடைந்தோர்), உயர்மட்ட துறைசார் நிபுணர்கள், மற்றும் அரசியல் மேனிலையாளர்கள் இருப்பதுபோல் தோல்வியடைந்த அல்லது எதிர்பார்த்த பயனைப்பெறாது ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள், மேனிலையாளர்கள் மற்றும் தேசியவாதத்தை, இனவாதத்தை, மதவாதத்தைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றமுயலும் சந்தர்ப்பவாதிகளும் இருக்கின்றனர். இவ்வாறு தோல்வியடைந்த முதலாளித்துவ, மேனிலையாள, மற்றும் குட்டி பூர்ஷ்வாக் குழுக்களிடமிருந்தே வலதுசாரிப் பொப்பியூலிசத்தின் தலைமைச் சக்தியும் கருத்தியலும் உருவாகின்றன. இந்தக் கூட்டம் ஏந்தி நிற்கும் ‘தேசிய நலன்’ எனும் கவர்ச்சிகரமான கருத்தியல் பதாகையால் பொதுமக்கள், குறிப்பாக நவதாரக் கொள்கையால் பாதிக்கப்பட்டோரில் பலர், கவரப்படுகின்றனர்.  ஆழ நோக்கின் முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்குமிடையிலான உறவு முரண்பாடுகள் மிக்கது மட்டுமன்றி அதிகார வர்க்கக் கூட்டுகள் தமது நலன்களுக்காகத் ‘தேசியத்தின்’ பெயரால் அதிகாரவாத மற்றும் பாசிச அடக்குமுறையையும் நியாயப்படுத்தத் தயங்கமாட்டா என்பது புலனாகும்.  இது நவீனகால வரலாறு தரும் பாடமாகும். இன்றைய அரசியல் போக்குகளைப் பார்க்கும்போது இந்தப் பாடத்தைப் பலரும் மறந்துவிட்டனரா என எண்ணத் தோன்றுகிறது. 

இதுவரையிலான உலகமயமாக்கலின் சில விளைவுகளுக்கு எதிராக வலதுசாரி எதிர்வினைப் போக்குகள் பல நாடுகளில் எழுந்துள்ளமை இவற்றிற்கு ஒரு உலகரீதியான தோற்றத்தைக் கொடுக்கின்றது. ஆயினும் குறிப்பிட்ட தேசியமட்டங்களிலிருந்து பலமான தேசியவாதக் கருத்தியல்களின் உதவியுடன் எழும் இந்த எதிர்வினைகளுக்கு நவதாராளத் திட்டத்திற்கு இருந்தது போன்ற உலகரீதியான அதிகாரத்துடன் இணைந்த அரசியல், பொருளாதாரப் பொறிமுறைகள், மேலாட்சியைத் தக்கவைக்கும் கருத்தியல் பொறிமுறைகள் ஆகியன சர்வதேச மட்டத்தில் இல்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். அதேவேளை நவதாராளவாதத்தின் வீழ்ச்சி உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிகளின் வெளிப்பாடு என்பதோடு சர்வதேச அதிகார உறவுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் ஒரு குறிகாட்டியும்கூட.  தெற்கத்திய நாடுகளில் இந்த அதிகாரவாதப் போக்கிற்கு ஆகர்சமூட்டும் சக்திகளாகச் சீனா, இந்துத்துவ ஆட்சியின் கீழுள்ள இந்தியா, மற்றும் ரஷ்யா போன்ற எழுந்துவரும் வல்லரசுகள் விளங்குகின்றன. மறுபக்கத்தில் தேசிய மட்டங்களில் இன்னும் ஆதரவு குன்றிய நிலையிலிருக்கும் சமூக ஜனநாயக அல்லது மக்கள் ஜனநாயக எதிர்வினைப் போக்கிற்கு முற்போக்கு சக்திகளின் உலகரீதியான ஒருமைப்பாடு இருப்பதையும் சுட்டிக் காட்டவேண்டும். முதலாளித்துவத்தின் இதுவரையிலான வரலாற்றில் சமூக ஜனநாயகச் சீர்திருத்தங்கள் நீடித்த நாடுகளிலேயே மக்கள் நலன் மிகப் பரந்தளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது எனும் முடிவு ஆதாரபூர்வமானது. சமூக ஜனநாயகச் சீர்திருத்தம் முதலாளித்துவ அமைப்பிற்குள் பல அடிப்படையான சமூக நல உரிமைகளை மக்களின் உரித்துடைமைகளாக (entitlements ஆக)நிறுவனமயப்படுத்துகிறது. இது தொழிலாளர் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் போராட்டங்களின் விளைவாகும். ஆனால் முதலாளித்துவ அமைப்பில் சமூக ஜனநாயக சீர்திருத்தங்களை நீண்டகாலத்திற்குத் தக்கவைப்பது சுலபமில்லை என்பதும் வரலாறு தரும் அநுபவமாகும். மக்களைப் பொறுத்தவரை  பொதுவாக சமூக நலனை முன்னெடுக்க உதவும் சீர்திருத்தத்திற்கே குறுகிய காலத்தில் முன்னுரிமை கொடுப்பார்கள்.  இதற்கும் அப்பால் சிந்தித்துச் செயற்படும் சோஷலிச ஜனநாயகவாதிகள் சமூக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களை குறிப்பிட்ட காலகட்டத்தின் தேவை என்பதை அங்கீகரித்து நீண்டகால நோக்கில் ஆதரிக்கிறார்கள். 

செல்வந்த நாடுகளில் மட்டுமன்றி வளர்முக நாடுகளிலும் தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பெருமளவில் ‘பலவான்’ எனப் ‘பெயர்பெற்ற’ தலைவனைக் கொண்ட வலதுசாரித் தேசியவாதக் கட்சிகளையே ஆதரிக்கும் போக்கு இடதுசாரிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. இந்த நாடுகளில் செல்வந்த நாடுகளையும்விட அதிகாரவாதப்போக்குப் பலமாக இருப்பதைக் காணலாம். செல்வந்த நாடுகளில்  ஜனநாயக மரபைப் பேணப் போராடும் சக்திகள் இயங்கிய வண்ணமிருப்பதைக் காண்கிறோம். அதேவேளை பல்வேறு நாடுகளில் நவதாராள உலகமயமாக்கலால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினரில் பலர் பொருளாதாரத் தேசியவாத, இனவாத, நிறவாத, அடிப்படைவாதப் பிரச்சாரங்களாலும் வாக்குறுதிகளாலும் ஈர்க்கப்படுவதும் கண்கூடு.  அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இருந்து சமீபத்தில் நடந்தேறிய பிரித்தானிய பொதுத் தேர்தல்வரை இதைக் காண்கிறோம். தன்மைரீதியான வேறுபாடுகள் இருப்பினும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவும் இந்தப் போக்கின் ஒருவகை உதாரணமாகிறது.  இந்த வலதுசாரிப் போக்கினால் மக்களின் மனித மேம்பாட்டிற்கு உதவமுடியுமா, உண்மையில் உள்நாட்டில் நடைமுறையிலிருக்கும் தனியுடைமையாக்கல் மற்றும் சந்தைமயமாக்கல், இவற்றின் விளைவுகளான ஏற்றத் தாழ்வுகள், தொழிலாளரின் மெய் ஊதியத்தின் வீழ்ச்சி, வாழ்வாதாரப் போதாமை, வேலையில்லாமை, சமூகப் பாதுகாப்பின்மை, சூழலின் சீரழிவு போன்றவற்றினை மாற்றமுடியுமா எனும் கேள்விகள் எழுகின்றன. அதாவது உள்நாட்டில் சமூக முன்னேற்றத்தைப் பொறுத்தவரை, பலரின் தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கு உதவத்தவறிய நவதாராளக் கொள்கையைக் கைவிட்டு மாற்றுக் கொள்கையைப் பின்பற்றமுடியுமா? இந்தக் கேள்விகள் வலதுசாரித் தேசியவாதத்தின் மேலாதிக்க அடையாள அரசியலால் மறைக்கப்படும் வர்க்க, மற்றும் பால்ரீதியான முரண்பாடுகள்மீதும், ‘தேசிய அடையாளம்’ ‘தேசிய பாதுகாப்பு’ எனும் சாக்கில் ‘சிறுபான்மையர்’ ‘புறத்தியார்’ எனும் பெயர்களால் வெளிவாரிப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுவோரின் நிலைமைகள் மீதும் நமது கவனத்தைத் திருப்புகின்றன. 

டொனால்ட் ட்ரம்ப்பின் பொருளாதாரத் தேசியவாத நிலைப்பாட்டிற்கு ‘தேசியவாத நவதாராள வாதம்’ (´nationalist neoliberalism´) எனப் பெயரிட்டுள்ளார் ஒரு ஆய்வாளர் – அதாவது ஒருபுறம் சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேசப் போட்டியைப் பொறுத்தவரை தேசியப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை மறுபுறம் உள்நாட்டில் நவதாராளப் பெருமப் பொருளாதாரக் (macroeconomic) கொள்கை. இந்த ஆட்சியில் நிறவாதமும் வெளிநாட்டவரின் அடிப்படை மனித உரிமை மீறல்களும் மோசமாக வளர்ந்துள்ளன. பாதுகாப்புமயமாக்கலும் தொடர்கிறது. ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு பரந்த எதிர்ப்புக்கள் எழுந்தவண்ணமிருக்கின்றன.  இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியைக் காணவில்லை. வேலையில்லாமை, சமூகப்பாதுகாப்பின்மை, மற்றும் சூழலின் சீரழிவு பெரும் பிரச்சனைகளாகத் தொடர்கின்றன. இவற்றை மறைப்பதற்கு இந்துத்துவ தேசியவாதத்தைப் பயன்படுத்தி அதிகாரவாதப் போக்கினை நியாயப்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசாங்கம். இந்துத்துவக் கருத்தியல் நேற்றுத் தோன்றியதல்ல. அதற்கு தொண்ணூறு வருடங்களுக்கு மேலான வரலாறுண்டு.  ஆயினும்  இந்திய அரசாங்கம் சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடளாவிய எதிர்ப்புக்கள் தோன்றியுள்ளன. அங்கே ஜனநாயக உரிமைகளுக்கான அணிதிரட்டல் இன, மத பிரிவுகளைத் தாண்டி முன்னேறுவதைக் காண்கிறோம். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வலதுசாரிப் பொப்பியூலிசம் ஏற்கனவே நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.    

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபயவின் கொள்கை சிங்கள பௌத்த பேரின தேசியம், அதன் பாதுகாப்பு மற்றும் ‘அபிவிருத்தி’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது நீண்டகாலமாக பிரதிநிதித்துவ ஜனநாயகம் பேரினத்துவ மேலாதிக்கத்துவத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட்டநிலையில் அதிகாரவாதத்தையும் இராணுவமயமாக்கலையும்  இன்றைய உள்நாட்டு மற்றும் பிராந்திய அரசியல் சூழலில் தக்கவைக்கும் திட்டத்திற்குக் கிடைத்த வெற்றியைக் குறிக்கிறது.   ஜனாதிபதியின் அதிகாரத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் இலங்கை யாப்பின் 19ஆம் திருத்தத்திற்கு எதிராக மீண்டும் சர்வ அதிகாரத்தையும் ஜனாதிபதிக்குக் கையளிக்கும்வகையில் யாப்பிற்குத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என அறிவித்துள்ளார் கோட்டாபய. 

J. R. ஜயவர்த்தன போன்று முழு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாவதே அவருடைய அவா. அதை அவர் அடைய நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வரப்போகும் பொதுத் தேர்தலில் வழங்குமாறு கோரியுள்ளார். ஆனால் அவரின் விருப்பைத் திருப்திப் படுத்துவதாயின் பிரதம அமைச்சரின் அதிகாரம் 19ஆம் திருத்தத்திற்கு முன்பிருந்த நிலைக்குக் குறைக்கப்படவேண்டும். தற்போது பிரதமராக இருக்கும் அவருடைய அண்ணன் இதை ஏற்றுக் கொள்வாரா? ராஜபக்ச வம்சத்திற்குள் அதிகாரப் பகிர்வு தொடர்பான சுவராஸ்யமான கேள்வி!

2015இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தோல்வியடைந்தபின் கோட்டாபய தனக்கென ஒரு அரசியல் பாத்திரத்தை வகுக்கும் முயற்சியை மேற்கொண்டார். புதிய அரசாங்கம்  திசைதெரியாது தடுமாறியபடி உள்ளார்ந்த பூசல்களில் மூழ்கித் தவித்த நிலையில் அதன்மீது மக்களின் அதிருப்தி வளர்ந்து  கொண்டிருந்த சூழலில் ராஜபக்ச குழுவினர் 2016இல் சிறீலங்கா பொது ஜன பெரமுன (SLPP) எனும் அமைப்பினைக் கூட்டிப் பலப்படுத்தினர். அதுவரை அவர்கள் தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (UPFA) படிப்படியாக SLPP உடன் சங்கமித்தது. அதே காலத்தில் இதற்குச் சமாந்திரமாக, எதிராக அல்ல, கோட்டாபய தனது அரசியல் எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு சில புதிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டார்.  அவருடைய திட்டத்திற்கு ஒரு தொழில்நுட்பவல்லுன (technocratic) தோற்றத்தைக் கொண்ட ‘வியத்மக’ (viyathmaga) எனும் அமைப்பினை அவருக்கு விசுவாசமான இளைப்பாறிய இராணுவ அதிகாரிகள் உட்படப் பல்வேறு துறைகள் சார்ந்தோரின் உதவியுடன் உருவாக்கினார். நாட்டை நேசிப்பதுடன் அதை சுபீட்சமும் அமைதியும் மிக்க ஒன்றாக அபிவிருத்தி செய்வதற்குப் பங்களிக்க விரும்பும் துறைசார் வல்லுனர்கள், ஆய்வாளர்கள் மற்றும் முயற்சியாளர்களை ஒன்று கூட்டும் வலைப்பின்னலான வியத்மக ஒரு அரசியல் அமைப்பல்ல என அதன் நோக்கு, குறிக்கோள் பற்றிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுடன் ஒழுக்கவியல் மற்றும் ஆத்மீகரீதியான விழுமியங்கள் போன்ற வார்த்தைகளையும் காணக்கிடைக்கிறது. 2019ஆம் ஆண்டில் இலங்கையில் 5000த்திற்கும் அதிகமானோருடன் வெளிநாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களும் வியத்கமவில் இணைந்துள்ளனர் என அறியக்கிடைக்கிறது. ‘நம்மால் முடியும், சிறீலங்காவால் முடியும்’ (´We can and Sri Lanka can´) எனும் கோஷத்துடன் தொழிற்றுறை, கல்வி, தகவல் தொழில்நுட்பம், இளைஞரின் பங்கு, சுகாதாரம், தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கும் பிரச்சாரத்தை வியத்மக முன்னெடுத்தது. இதன் முன்னணியில் இயங்கும் துறைசார் வல்லுனர்கள்  கோட்டாபயவின் தலைமைத்துவத்தை புகழ்ந்து அவருக்குத் தமது விசுவாசத்தைக் காட்டியுள்ளனர்.

‘அரசியல் சார்பற்ற’ அமைப்பென அறிமுகப்படுத்தப்பட்ட வியத்மக உண்மையில் ஆரம்பத்திலிருந்தே ஒரு அரசியல் சார்ந்த அமைப்பென்பதில் சந்தேகமில்லை.  சிங்கள மக்கள் மத்தியில் பரந்த ஆதரவைப் பெற்றுள்ள மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செல்வாக்கும் பேரினவாதப் பொப்பியூலிசமுமின்றி கோட்டாபயவின் அமோக வெற்றியை விளங்கிக்கொள்ள முடியாது. அதேவேளை சிங்கள-பௌத்த தேசியத்தின் பாதுகாப்புடன் ‘அபிவிருத்தி’யைப் பிரதான இலக்குகளாக முன்னுரிமைப் படுத்தும் வல்லுனர்களின் விசேட அமைப்பாக அறியப்பட்ட வியத்மக கோட்டாபயவிற்கு ஏற்கனவே இருந்த ‘இரும்பு மனிதன்’ விம்பத்தை மெருகூட்டி மேலும் பலப்படுத்தி ஆளுமைரீதியில் அவரை அண்ணன் மகிந்தவிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவும் உதவியுள்ளது. நடைமுறையில் உயர் பதவி நியமனங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பாக கோட்டாவிற்கு நெருக்கமான வியத்மக குழுவிற்கும் SLPPயில் செல்வாக்குள்ள அரசியல்வாதிகளுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றலாம். ஆனால் மகிந்தவின் தலைமையில் இயங்கும் SLPPதான் ஜனாதிபதி கோட்டாவின் வெகுஜன அரசியல் தளமென்பதையும் அவர் ராஜபக்ச வம்சத்தின் பிரதிநிதி என்பதையும் மறந்துவிடலாகாது.

2005 ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் செயற்படுத்திய பகிஷ்கரிப்பின் உதவியுடன் சிறியளவிலான (180786) வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச 2009 போர் முடிவில் முடிசூடா மன்னனாகச் சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டார். ஆயினும் போரின் இராணுவ வெற்றியின் நாயகன் யார் எனும் போட்டியில் கோட்டாபயவுக்கே முதலிடம் கிடைத்தது. நீண்ட காலம் தொடர்ச்சியாக இராணுவத்தில் கடமையாற்றியவரும் இறுதிப்போரின்போது தளபதியாக இருந்தவருமான சரத் பொன்சேகா ராஜபக்சக்களினால் ஒரம் கட்டப்பட்டுச் சிறையிலிடப்பட்டார். போர்முடிவில் மிகச்சிறந்த தளபதி என ராஜபக்சக்களால் புகழ்மாலை சூட்டப்பட்ட பொன்சேகா தானும் ஜனாதிபதியாகத் தகுதியானவரெனும் அபிலாஷையை வெளிப்படுத்தியதே அவர் விட்ட பெருந்தவறானது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ‘கோட்டாவின் போர்’ (´Gota´s war´) எனச் சித்தரிக்கப்பட்டது.        

 வெற்றிக் கொண்டாட்டதின்போதே ஜனாதிபதி மகிந்த தமிழ் மக்களின் பிரச்சனை இனப் பிரச்சனையல்ல அவர்கள் வேண்டுவது அபிவிருத்தியே எனப் பிரகடனப்படுத்தினார். இன்று கோட்டாபயவும் அதையே மேலும் அழுத்தி சொல்கிறார். அதிகாரப் பகிர்வுக்குப் பெரும்பான்மை இனத்திடமிருந்து ஆதரவில்லை ஆகவே அதைச் செய்யமுடியாது என்பதே அவருடைய முடிவு. போருக்குப் பின்னான இலங்கையில் இராணுவம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட விசேட அந்தஸ்துக்குரிய நிறுவனமாக உயர்த்தப்பட்டுவிட்டது. ஏற்கனவே நீண்ட காலமாக புனிதமயப்படுத்தப்பட்டு வணக்கத்துக்குரிய நிறுவனமாகத் திகழ்ந்த பௌத்த மதபீடத்தின் அரசியல் செல்வாக்கும் மேலும் வளர்ந்துள்ளது.  பெரும்பான்மை இனத்தைச் சார்ந்திருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் இராணுவத்தை விமர்சனங்களிலிருந்தும் குற்றச்சாட்டுகளிலிருந்தும் பாதுகாப்பதற்கும், பௌத்தமதபீடத்திற்குத் தமது விசுவாசத்தைக் காட்டி ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் போட்டிபோடுகின்றன. இன்றைய இலங்கையின் தேர்தல் அரசியலின் போக்கின்மீது இந்த நிறுவனங்கள் பெரும் செல்வாக்கினைக் கொண்டுள்ளன. கோட்டாபய அதிகாரத்துக்கு வந்ததும் இராணுவத்தின் அந்தஸ்து மேலும் உயர்ந்துவிட்டது. ‘தேசிய பாதுகாப்பு’ எனும் பெயரில் இராணுவமயமாக்கல் உத்வேகத்துடன் முன்னேறுகிறது. 2020 சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி இராணுவப் பதக்கத்தை அணிந்தபடி தலைமைதாங்கி உரையாற்றினார்.  ஒரு ஜனநாயகக் குடியரசெனப்படும் இந்த நாட்டில் இது முதற் தடவையாக இடம்பெற்றது வெறும் குறியீட்டுக்கும் மேலான முக்கியத்துவமிக்கது. 

அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதியின் கொள்கை இன்னும் விரிவாகத் தெளிவாக்கப்படவில்லை. தற்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு சில பொப்பியூலிச முடிவுகள் செயற்படுத்தப்படுகின்றன. 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் நடைமுறைக்குவந்த நவதாராளப் பொருளாதாரக் கொள்கையை இதுவரையிலான அரசாங்கங்கள் தமது அரசியல் மற்றும் போர்க்காலத் தேவைகளுக்கேற்ப மாற்றங்களுடன் பின்பற்றி வந்துள்ளன.  போருடன் சேர்ந்து ஒரு போர்ப் பொருளாதாரமும் உருவாகியது. இராணுவம் நேரடியாகப் பொருளாதாரத் துறைகளில் முதலீட்டாளரானது. இலங்கையில் நவதாராளக் கொள்கை, போர்ப்பொருளாதாரம், அரச கூட்டுத்தாபனங்கள் பற்றி முன்னர் கட்டுரைகள் எழுதியுள்ளேன்.[1]

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இன்று நவதாராளக் கொள்கை உலகரீதியில் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. இலங்கையிலும் அதற்கு எதிர்ப்பு வளர்ந்துள்ளது. மாற்றுப் பொருளாதாரக் கொள்கைக்குச் சார்பான சூழல் இருப்பதை மறுக்க முடியாது. இலங்கையைப் பொறுத்தவரை ஒரு மாற்றுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் சாத்தியப்பாடுகள் உண்டு. தேசிய அபிவிருத்திக் கொள்கையின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான உறவுகளை மீளமைப்பது பற்றிப் பேசப்படுகிறது.  ஆனால் அது எத்தகைய கொள்கையாயிருக்கும் என்பதைச் சற்றுப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மாற்றுக் கொள்கை பெரும்பாலும் சீனா மீதான பொருளாதாரரீதியான தங்கிநிற்றலை அதிகரிக்கலாம் என்றே தோன்றுகிறது. இது தவிர்க்கமுடியாதபடி வல்லரசுகளின் இந்து சமுத்திரப் பிராந்திய மேலாதிக்கப் போட்டியுடன் தொடர்புபடுகிறது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு மேலும் அதிகரிப்பதை விரும்பாத இந்தியாவும் தனது உதவியை அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்.  சீனாவும் இந்தியாவும் மாத்திரமல்ல, அமெரிக்கா மற்றும் அதன் அணியைச் சார்ந்த மேற்கத்திய நாடுகளும் ஜப்பானும் சும்மா இருக்கப்போவதில்லை. தற்போது இந்த அணிக்கும் இந்தியாவுக்குமிடையே சீனாவுக்கு எதிரான பொதுப் புரிந்துணர்வுண்டு. உள்நாட்டு அரசியல் நிலைமை சீனாவுக்குச் சார்பாக இருப்பது தெளிவு. ஆயினும் வல்லரசுப் போட்டிமிகுந்த பிராந்திய சூழல் புதிய அரசாங்கத்திற்கு  அனுகூலங்களை மட்டுமன்றி கட்டுப்பாடுகளையும் கொடுக்கிறது. தற்சமயம் ஜனாதிபதியின் உடனடியான முன்னுரிமை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தன் விருப்பிற்கேற்ப யாப்பில் திருத்தங்களை கொண்டுவருவதே.  பொதுத் தேர்தல் முடியும்வரை நாமும் பொறுத்திருப்போம்.


[1]பின்வரும் கட்டுரைகளைப்பார்க்கவும்: அபிவிருத்தி மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா?//samuthran.net/2017/04/24/அபிவிருத்தி-மனித-மேம்ப/ 

இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும்:https://samuthran.net/2017/06/22/இலங்கையின்-வடக்கு-கிழக்க/

காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம் – சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ பற்றி ஒரு பார்வை: II

சமுத்திரன்

மலையகத் தமிழ் சமூகம்

பல்வேறு நகர்ப்புறங்களில் வாழும் அருந்ததியர் சமூகமே பிரதான பேசுபொருளாகவிருக்கும் இந்தத் தொகுப்பில் மலையகத் தமிழர் என அடையாளப்படுத்தப்படும் ‘இந்திய வம்சாவழியினர்’ பற்றி ‘மலையகத் தலித்துக்கள்  சில புரிதல்கள்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழ்த் தேசம் பற்றிச் சில முக்கியமான விடயங்களைச் சொல்வதுடன் விவாதத்திற்குரிய அரசியல் கேள்விகளையும் எழுப்புகிறது. மலையகத் தமிழ்த் தேசியத்திற்கு இந்தக் கட்டுரை பிரதான முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆயினும் அந்த விடயத்தை அரைகுறையில் விட்டுள்ளதாகவே படுகிறது. முதலில் ஒரு புள்ளிவிபரம் பற்றிய திருத்தம். 136ஆம் பக்கத்தில் பின்வருமாறு சொல்லப்படுகிறது,‘இத்தேசத்தின் அதிக பெரும்பான்மை மக்கள் பிரிவினர் பெருந்தோட்டத்துறை எனும் குறிப்பிட்ட உற்பத்தி நடவடிக்கையுடன் தம்மை பிணைத்துக்கொண்ட கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.’ பல காலமாக மலையகத் தமிழரில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிக பெரும்பான்மையினராக இருந்தனர் என்பது உண்மையாயினும் கிடைக்கும் புள்ளிவிபரங்களின்படி தற்போது மலையகத் தமிழ்ச் சனத்தொகையில் ஒரு சிறுபான்மையினரே பெருந்தோட்டத் தொழிலாளர்கள். சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தினதும் உள்நாட்டு இடம்பெயர்வுகளினதும் விளைவுகளால் மலையகத் தமிழரின் சனத்தொகைப் புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மை பற்றிப் பிரச்சனைகள் உண்டு. ஆயினும் ‘இலங்கையில் மொத்தமாக 15 இலட்சம் மலையகத் தமிழர்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு லட்சத்திற்குக் குறைவானவர்களே தோட்டத் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர்’(சந்திரபோஸ் & ரமேஷ், 2018: xxxv).இதன்படி மலையகத் தமிழர்களில் 13 வீதத்திற்கும் குறைவானோரே இன்று தோட்டத் தொழிலாளர்களாயிருக்கிறார்கள். இந்த இலக்கத்திற்குப் பின்னால் மலையகத் தமிழ்ச் சமூகத்தில் பலமுக்கியமான மாற்றப் போக்குகள் இருக்கின்றன என்பதைச் சமீபகால ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த வகையில் 2018 ஆண்டு ஏ. எஸ். சந்திரபோஸ் மற்றும் இரா. ரமேஷ் தொகுத்து வெளியிட்டுள்ள ‘இலங்கையில் தேயிலைப் பெருந்தோட்டச் சமூகம் 150 வருடங்கள் (1867/2017)’ எனும் தலைப்பிலான நூல் பல பயன்மிக்க ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. ஆயினும் சாதியத்தின்மீது இந்த மாற்றப் போக்குகளின் தாக்கங்கள் பற்றி விரிவான, ஆழமான ஆய்வுகள் இனிமேல்தான் வெளிவரவேண்டும். 

மலையகத் தமிழ் சமூகத்தில் தலித்துக்கள் பெரும்பான்மையினராகவும் ஆதிக்க சாதியினர் சிறுபான்மையினராகவும் இருக்கையில் சிங்கள மற்றும் வடக்குக் கிழக்குத் தமிழ் சமூகங்களில் ஆதிக்க சாதியினரே அளவுரீதியிலும் பெரும்பான்மையினர் எனும் ஒப்பீட்டுரீதியானத் தகவலைத் தருகிறது சரவணனின் கட்டுரை. அத்துடன் அளவுரீதியில் சிறுபான்மையாயிருக்கும் ஆதிக்க சாதியினர் தலித்துக்கள்மீது தீண்டாமையைத் தவிர வேறு பல கொடுமைகளைப் புரிவது பற்றிக் கூறுகிறது. சமீபத்தில் வெளிவந்த வேறு ஆய்வுகளின்படி இந்த ‘உயர்சாதியினரில்’ ஒரு தொகையினர் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது (ஜெயசீலன் & சந்திரபோஸ், 2018). இதுவும் ஆதிக்கசாதியினரின் தொகையைக் குறைக்க உதவியுள்ளது. மலையகத் தமிழர்களில் மிகப்பெரும்பான்மையினர் – 81 வீதத்தினர் – தலித்துக்கள் எனும் முக்கியமான தகவலைச் சுட்டிக்காட்டியபடி ‘இது மலையகத் தேசத்தை தலித் தேசமாக அடையாளப்படுத்துகிறது’ எனக் கூறும் சரவணன் மேலும் ‘மலையகத் தேசத்தின் அடையாளமானது உழைக்கும், வர்க்க தலித்திய மற்றும் பெண்களின் நேரடி பங்கேற்பின் உருவாக்கத்திலானதாகவுள்ளது. மலையகத் தேசத்தின் இப்பண்பானது, தேச உருவாக்கங்களில் மிகவும் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றே எனக் கூறலாம்’ எனக் கூறுகிறார் (ப136). மலையகத் தமிழ்த் தேசியத்தின் உருவாக்கம் பற்றிய இந்தக் கருத்தைச் சமகால நிலைமைகளுடன் இணைத்துப் பார்த்தல் பயன் தருமென நம்புகிறேன்.  மலையகத் தமிழ் சமூகத்தின் மாற்றப் போக்குகளை மனதிற்கொண்டு சமகாலத்தில் மலையகத் தமிழரின் தேசிய உருவாக்கத்தின் பண்புகளை இனங்காணல் அவசியம். இனத்துவ அரசியலின் மேல்நிர்ணய ஆற்றலுக்குட்பட்ட இலங்கையின் அரசியல் பொருளாதார, கலாச்சார சூழலில் மலையகத் தமிழ் தேசியத்தின் உருவாக்கத்தின் பரிணாமப் போக்கினை அவதானித்தல் அவசியம். இது ஒரு ஆய்வுக்குரிய விடயம். 

நான் மேலே குறிப்பிட்டுள்ள 2018ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வுத் தொகுப்பில் இது தொடர்பான பல கட்டுரைகள் உள்ளன. இங்கு ஒரு சில தகவல்களை மட்டும் குறிப்பிடலாம். மலையகத் தமிழ் சமூகத்தில் அறிவாளர்களை உள்ளடக்கிய ஒரு நடுத்தர வர்க்கம் உருவாகும் போக்குத் தொடர்கிறது. சமீப தசாப்தங்களில் ஒரு கணிசமான மலையகத் தமிழர்கள் நிரந்தரமாக வடக்கு கிழக்குக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். இன்னொரு புறம் இளம் மலையகத் தமிழரின் கொழும்பு, மற்றைய நகர்களை நோக்கிய நகர்ச்சி தொடர்கிறது. மலையகமே தாயகமெனும் அடையாளம் தொடரும்போதும், ஒரு புறம் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள வடக்குக் கிழக்கில் நிரந்தரமாகக் குடியமரும் போக்கு, மறுபுறம் தெற்கிலே பெரும்பான்மை சிங்கள இன மக்கள் மத்தியில் வாழ்க்கையை அமைக்கும் போக்கு. எனவே பல்வேறு காரணங்களால் மலையகத் தமிழ் சமூகத்தின் புவியியல் நாட்டிற்குள் மலையகத்திற்கும் அப்பால் பரந்து விரியும் போக்குகள் அந்தச் சமூகத்தவரின் கூட்டு அடையாளத்தை எப்படி மீள்வரையறுக்கின்றன, இந்த நிலைமைகளில் அந்த மக்களின் சுயநிர்ணய உரிமையை அரசியல்ரீதியில் எப்படிக் கையாள்வது போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்த மாற்றப் போக்குகளுக்கு மத்தியில் மலையகத் தமிழர்களில் பெரும்பான்மையினர் தொழிலாள வர்க்கத்தினர், தலித்துக்கள், வருமானம் மற்றும் மனிதமேம்பாட்டைப் பொறுத்தவரை வறியவர்கள் எனும் யதார்த்தமும் கண்கூடு. இதில் பெண்கள் பால்ரீதியான ஊதிய வேறுபாட்டிற்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர் என்பதும் இந்த யதார்த்தில் அடங்கும். 

மலையகத் தமிழரின் கோரிக்கைகளும் போராட்டங்களும் வர்க்கம், பால், சாதி, இனம், பிரதேசம் என ஒன்றுடன் மற்றவை தொடர்புள்ள பல பரிமாணங்களைக் கொண்டவை. இவற்றின் ஊடறுப்பைக் (intersection)கிரகிக்க உதவும் நடைமுறை சார்ந்த அணுகுமுறை தேவை.  

மலையகத் தமிழர் எனும் அடையாளத்திற்கு மாறாக இந்த மக்களைத் தொடர்ந்தும் இந்திய வம்சாவழித் தமிழர்களென்றே அடையாளப்படுத்த வேண்டுமெனெ அந்தச் சமூகத்தில் அரசியல் செல்வாக்குமிக்க ஒருசாரார் வலியுறுத்தி வருகின்றனர். மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் திலகராஜா, அருணாசலம் அரவிந்தகுமார், மற்றும் சுரேஷ் வடிவேலு போன்ற அரசியல் தலைவர்கள் இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் மலையகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மூக்கையாவின் கருத்தில்:

‘கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாகவே இலங்கைவாழ் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களை மலையகத் தமிழர்கள் என்றழைக்கவேண்டும் என்ற கருத்து கணிசமாக இச்சமூகத்து மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. .. சமூகத்தின் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எம்மை இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று அடையாளம் செய்து கொள்வதிலேயே பல நன்மைகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்று நியாயமான வாதங்களை முன்வைத்தனர். மறுபுறத்தில் தம்மை இந்தியாவுடன் அடையாளப்படுத்திக்கொள்வது அரசியலில் பின்னடைவுகளுக்கு ஆளாக்கும் என்ற கருத்தில் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் சிலரும் அரசியலில் இந்திய எதிர்ப்பு சிந்தனையுடனான ஒரு சிலரும் தம்மை மலையகத் தமிழர் என்று கூறிக் கொள்வதே சிறந்தது என வாதிட்டு வந்துள்ளனர்.’ (மூக்கையா, 2018:212-213).[1]

இந்தக் கருத்து இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் மத்தியில் மலையகத்தமிழர் எனும் கூட்டு அடையாளம் ஒரு பரிணாமப் போக்கில் தொடர்ச்சியாக உருவாக்கம் பெறுகிறது எனும் கருதுகோளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மலையகத் தமிழர் எனும் கூட்டு உணர்வும் தேசிய அடையாளமும்  எந்த அளவிற்கு அந்த மக்களிடம் பதிந்துள்ளன எனும் கேள்வி எழுகிறது. இதுவரை இந்த மக்களின் அடையாளம் பற்றிய சர்ச்சையும் விவாதங்களும் சில குறிப்பிட்ட குழுக்களுக்கப்பால் செல்லவில்லையா?  இலங்கைக்குப் புலம்பெயர்ந்து 150-200 வருடங்களுக்குப் பிறகு ‘இந்திய வம்சாவழித் தமிழர்’ அல்லது ‘மலையகத்தமிழர்’ என்ற இரண்டில் எது மக்களின் கூட்டு அடையாள உணர்வில் மேலோங்கியுள்ளது?இந்தச் சமூகத்தின் புவியியல்ரீதியான மற்றும் அதனுடன் இணைந்த அரசியல் பொருளாதார மாற்றங்களின் தாக்கங்கள் எத்தகையன?காலப்போக்கில் நாட்டின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் தம்மை இலங்கைத் தமிழராக இனங்காணும் போக்கே இந்தச் சமூகத்தில் பலம் பெறும் எனக் கருதுவது தவறா?மறுபுறம் இன அடையாள மாற்றப் போக்கினை வலுவூட்டும் பேரினவாதத் திட்டத்தின் தாக்கம் எத்தகையது? அறிவாளர்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் வகிக்கும் பங்குகள் எத்தகையன?   இவை விவாதத்திற்குரிய கேள்விகள். இந்தக் கேள்விகள் விவாதத்தின் கட்டமைப்பைத் தன்மைரீதியில் மீள்வரையறுக்கின்றன.

புகலிடத்தில் சாதியம்

பொதுவாக வெளிநாடுகளில் குடியேறியிருக்கும் சமூகங்கள் தமது மரபுகளையும் பல பழக்கவழக்கங்களையும் பலவழிகளால் பல்வேறு வடிவங்களில் மீளுற்பத்தி செய்வதை காண்கிறோம். மொழி, மதம் மற்றும் கலாச்சார செயற்பாடுகள் போன்றன புலம் பெயர்ந்து வாழும் ஒரு சமூகத்தவரை இணைக்கும் அடையாள உருவாக்கத்தின் அம்சங்களாகக் கருதப்படுகின்றன. ஆயினும் இந்தப் போக்கு அதே சமூகத்திற்குள் வேறுபடுத்தலுக்கு, ஏன் பாகுபாட்டுக்குக்கூட, உதவும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் மீளுருவாக்குவதையும் காணலாம். ஆபிரிக்கர்களும் ஆசியர்களும் எதிர்கொள்ளும் நிறவாதப் பிரச்சனைகள் நிலவும் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சமூகங்களிற்குள் சாதியம் மற்றும் ஆணாதிக்கத்துடன் பிரதேசவாதச் சிந்தனையும் தொடர்வது உண்மையே. நோர்வேயில் வாழும் ஈழத்தமிழ் சமூகத்தில் தொடரும் சாதியம், ஆணாதிக்கம், மதவாதம், பிரதேசவாதம் பற்றிய தனது அவதானிப்புகளையும் சிலதனிப்பட்ட அநுபவங்களையும் ‘வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார். 

சரவணன் தொலைபேசியில் பேசிய தமிழைக் கொச்சைத் தமிழெனக் கேலிசெய்யும் யாழ்ப்பாணத் தமிழர். அவருக்கு ‘ஏன் நீங்கள் எங்களைப் போல கதையுங்களேன். இல்லையெண்டா இப்பிடித்தான் எல்லாரும் கேலி செய்வாங்க’ எனப் புத்திமதி கூறும் நண்பி. இந்தவகையான யாழ்மையப் பிரதேசவாதம் ஒருபுறம் மறுபுறம் தமிழ் சமூகத்திற்குள்ளே தொடரும் சாதியப் பாகுபாடுகள். ஆனால் இங்கு ஒரு விடயத்தை நினைவூட்டுது நல்லது. இங்கு வாழும் தமிழ் சமூகத்திற்குள் நிலவும் சாதியம் இந்த நாட்டின் சமூக அமைப்பிற்கும், அதன் அதிகார உறவுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் வெளிவாரியானது மட்டுமன்றி இந்த சமூகத்தின் செல்வாக்குமிக்க ஜனநாயக விழுமியங்களுக்கும் முரணானது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இங்கு வாழும் ஆசிய, ஆபிரிக்க நாட்டவர்கள் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனை நிறவாதம் தொடர்பானது. இதற்கு ஒரு வெளிப்படையான ‘வர்ணத் தோற்றம்’ இருந்தாலும் இது இந்துமதத்தின் வர்ணாசிர முறையுடன் தொடர்புடையதல்ல!

புலம்பெயர்ந்த தமிழ் சமூகங்களில் ஈழத்தில் சாதியம் பற்றிய உரையாடல்களில் ‘அங்கே சாதியம் இப்போ இல்லை என்றும், அது இப்போ ஒரு சமூகப் பிரச்சனையல்ல’ போன்ற கருத்துக்களை கேட்கிறோம். இங்கேயே இன்னும் சாதியத்தின் செல்வாக்குத் தொடரும்போது அங்கே அதன் இன்றைய நிலை என்ன எனும் கேள்வி எழுகிறது. அங்கே சாதியச் சிந்தனையும் அதன் நடைமுறைகளும் உள்ளூர் நிகழ்வுகளில், கோவில் சடங்குகளில், அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்வதைக் காண்கிறோம்.

சில முடிவுரைகள்

‘தலித்தியம்’ இலங்கைத் தமிழ் சமூகத்தில், குறிப்பாக இந்திய வம்சாவழி/மலையக தமிழ்ச் சமூகத்தில் இதுவரை எத்தகைய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?  

இந்தியாவில் தலித்தியமெனும் கருத்துருவின் வருகை அந்த நாட்டின் சமூக, பண்பாட்டு, அரசியல் கதையாடல்களிலும் செயற்பாடுகளிலும் குறிப்பிடத்தகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.வர்ணாசிரமத்தை பேணுவதை நோக்காகக் கொண்ட காந்தியினால் ‘ஹரிஜனர்’, அதாவது கடவுளின் பிள்ளைகள், என்றும் இந்திய யாப்பின்படி சட்டபூர்வமாக ‘பட்டியல் சாதிகள்’ அல்லது ‘அட்டவணைச் சாதிகள்’ (Scheduled castes) என்றும் அழைக்கப்பட்டவர்கள், மற்றும் இவர்களைப் போன்று நசுக்கப்பட்டவர்களான பட்டியல் ஆதிவாசிகள் (Scheduled tribes)தம்மைத் தலித்துக்கள் எனப் பெருமையுடன் அடையாளப்படுத்தியது அவர்களின் வரலாற்றில் ஒரு சமூக, பண்பாட்டு, அரசியல் முக்கியத்துவம் மிக்க திருப்பத்தின் அறிவிப்பானது. இந்தியாவின் வடமொழிகளில் ‘நசுக்கப்பட்டோர்’, ‘சிதறுண்டவர்கள்’ எனும் அர்த்தங்களைக் கொண்ட சொல்லான ‘தலித்’ அந்த நிலைக்காளான மக்கள் தமது தாழ்த்தப்பட்ட நிலைமையை உணர்ந்து அதற்கு எதிராக அணிதிரளும் கூட்டு அடையாளத்தையும் பலத்தையும் குறிக்கும் மாற்றுக் கோட்பாடாகப் பரிணமித்தது. இந்தியாவில் தலித்திய இயக்கம் பல மட்டங்களில் தாக்கமுள்ள பங்குகளை வகிக்கிறது. ஆயினும் அங்கு தலித்துக்களிடையே காணப்படும் படிநிலைச் சாதியமைப்பினதும் வர்க்க மற்றும் சமூக அந்தஸ்து வேறுபடுத்தல் போக்குகளினதும் விளைவுகளான பல்வகைமை தலித்தியத்தின் அடையாள அரசியலின் ஒருமைப்பாட்டு நோக்கத்திற்கு நிரந்தர சவாலாகியுள்ளது. தலித்துக்களை உள்ளடக்கும் சாதியமைப்பின் அடிமட்டத்திலுள்ளோர் உயர்மட்ட தலித்துக்களால் ஓரங்கட்டப்படுவதையும் காண்கிறோம். 

இலங்கையில் மலையகத்தமிழர் மத்தியில் வர்க்கரீதியான தொழிற் சங்கங்களும் இன அடிப்படையிலான அரசியல் அமைப்புக்களுமே முக்கிய இடங்களைப் பெற்றுள்ளன.  சாதி அடிப்படையில் அருந்ததியர் தலித்துக்கள் மத்தியிலும் ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே உள்ளனர். இலங்கையில் தலித்தியம் செயற்பாடுமிக்க ஒரு இயக்கபூர்வமான வளர்ச்சியைக் காணவில்லை. இதற்கான காரணங்களைத் தெளிவாக அறியவேண்டும். அருந்ததியர் சமூகத்தில் பல வழிகளுக்கூடாக இடம்பெறும் சாதி அடையாள மறுப்பு அல்லது அடையாளத் தற்கொலை பற்றி சரவணன் ஆவணப்படுத்தியுள்ளார். அவர் தன்னை அருந்ததியன் என அடையாளப்படுத்தியதை, அருந்ததியர் சமூகத்தின் பிரச்சனைகள் பற்றி எழுதுவதை அவரின் உறவினர்கள் விரும்பவில்லை. இவை ‘தலித்தியம்’ பிரதிநிதித்துவப்படுத்தும் உணர்வுபூர்வமான எதிர்ப்பு அடையாள அரசியலுக்கு மாறான உதாரணங்கள். 

தலித்தியக் கதையாடல் இலங்கைக்குவருமுன் ஒரு காலகட்டத்தில் நாட்டின் வடபகுதியில் சாதியத்திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் செயற்பட்டன. 1960களில் யாழ்ப்பாணத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி (மாஓயிச) சாதியத்திற்கு, குறிப்பாகத் தீண்டாமைக்கு, எதிராக வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்பிப் போராடியது. மற்றைய இடதுசாரிக் கட்சிகளும் அங்கே சாதியத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டன. ஆனால் இந்தப் போக்கு 1970 களுக்குப்பின் தொடரவில்லை. இது குடாநாட்டிற்கு அப்பால் செல்லவில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும். 

சாதிய எதிர்ப்புப் போராட்டத்தின் எதிர்காலம் பற்றிய கணிப்புக்கள் என்ன? இலங்கையில் மனித மேம்பாட்டுச் சந்தர்ப்பங்களுக்கும் ஜனநாயக உரிமைகளுக்குமான பரந்த வெகுஜன அரசியலின் தேவை பலமட்டங்களில் உணரப்படுகிறது. அத்தகைய ஒரு அரசியலுக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுடன் தொடர்புகளை வளர்ப்பது சாதிய எதிர்ப்பு சக்திகளின் இன்றைய தேவை இல்லையா?

சாதிய எதிர்ப்பு அரசியலின் நோக்கம் சாதிய படிநிலையை, அடக்குமுறையை, அதாவது மனிதரைச் சாதி அடிப்படையில் அடையாளப் படுத்தும் வழக்கத்தை, அதை தொடர உதவும் அதிகார உறவுகளை, இல்லாதொழிப்பதாகும்.  ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான அணிதிரட்டல் சாதிய அடையாளங்களை,விசேடமாக எதிர்ப்பைப் பிரதிபலிக்கும் நோக்கிலே மீள்வரையறுக்கப்பட்ட அடையாளங்களை,மையப்படுத்தும் அரசியலை அறிமுகம் செய்கிறது. சாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முக்கிய தேவையாயிருக்கும் இந்த அரசியல் சாதி அடையாளத்தை நிரந்தரமாகத் தக்கவைக்க உதவும் அரசியலாக மாறுவது அதன் ஆரம்ப நோக்கத்திற்கு எதிரானது என்பதைச் சொல்லத் தேவையில்லை.  இந்த முரணான மாற்றப்போக்கினைத் தவிர்ப்பதற்கு சாதிய எதிர்ப்புப் போராட்டம் பரந்த ஆழமான ஜனநாயக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களுடன் நெருக்கமான பங்காளியாக இருத்தல் அவசியம்.   கடந்த பல தசாப்தங்களாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையிலிருக்கும் நவதாராள முதலாளித்துவக் கொள்கைள் பாரிய ஏற்றத் தாழ்வுகளை வளர்த்து வறிய தலித்துக்கள் உட்படப் பெருந்தொகையானோரை விளிம்பு நிலைக்கு தள்ளியவண்ணமிருக்கின்றன. நவதாராள உலகமயமாக்கலில் மனித சுதந்திரம், சமசந்தர்ப்பம் என்பன மக்களை ஏமாற்றும் அர்த்தமற்ற சுலோகங்களாகிவிட்டன. இந்தப் போக்கிற்கு எதிராக ஜனநாயகத்திற்கும் தக்கவைக்கவல்ல தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கும் போராடும் சக்திகளுடன் சாதியத்திற்கு எதிரான சக்திகள் தமது கோரிக்கைகளுடன் இணைவது இன்றைய காலகட்டத்தின் தேவை.   

(2019 August 18ஆம் திகதி ஒஸ்லோவில் இடம்பெற்ற சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ நூலின் வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)


[1]மூக்கையா, மா.செ. (2018), இலங்கையில் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களின் மக்கள் தொகையும் அதன் பிரதான பண்புகளும், ஏ. எஸ். சந்திரபோஸ் மற்றும் இரா. ரமேஷ் (பதிப்பாசிரியர்கள்), இலங்கையில் தேயிலைப் பெருந்தோட்டச் சமூகம் 150 வருடங்கள் (1867 – 2017).எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 2018.

காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம் – சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ பற்றி ஒரு பார்வை:I

சமுத்திரன்

‘தலித்தின் குறிப்புகள்’ பிரதி ஒன்றினை எனக்குத் தரும்போது சரவணன் ‘இது இலேசான வாசிப்புக் கட்டுரைகளைக் கொண்டது’ எனக் கூறியது நினைவுக்கு வருகிறது. ஆயினும் இந்தக் கட்டுரைகளை வாசித்தபோது எனக்குப் பல கனதியான விடயங்கள் நினைவுக்கு வந்தன. இங்கு அவை எல்லாவற்றையும் பற்றிச் சொல்வது சாத்தியமில்லை. ஆனால் ‘தலித்தின் குறிப்புகள்’ என் சிந்தனையைப் பலமாகத்தூண்டி வரலாறு மற்றும் கோட்பாடு தொடர்பான கேள்விகளுக்கு இழுத்துச் சென்றன என்பது உண்மை. இந்த அனுபவத்தின் உதவியுடன் சரவணனின் நூல் பற்றியும் அதன் பேசுபொருளுடன் தொடர்புள்ள சில பொதுவான அரசியல் விடயங்கள் பற்றியும் எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

1990களிலிருந்து 2017 வரையிலான காலகட்டத்தில் எழுதிப் பிரசுரிக்கப் பட்ட 30 கட்டுரைகளுடன் ஆதவன் தீட்சண்யாவின் அணிந்துரை மற்றும் ஆசிரியரின் ‘என்னுரை’ யையும் உள்ளடக்குகிறது இந்தத் தொகுப்பு. கட்டுரைகளின் ஒரு பகுதி சரவணன் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் ‘சரிநிகர்’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. அப்போது அவர் ‘அருந்ததியன்’ எனும் புனைபெயரில் எழுதினார். தன்னை அடையாளப்படுத்த இந்தப் புனைபெயரை அவர் தேர்ந்தது குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது.  மற்றைய கட்டுரைகள் அவர் நோர்வேக்குப் புலம்பெயர்ந்த பின்னர் எழுதப்பட்டு வெவ்வேறு வெளியீடுகளில் பிரசுரிக்கப்பட்டன. ஏறக்குறைய மூன்று தசாப்த காலம் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரைகளின் பிரதான பேசுபொருள் சாதியம், தலித்தியம் எனலாம், அதிலும் அருந்ததியர் சமூகம் மையமுக்கியத்துவம் பெறுகிறது. அதேவேளை இந்தப் பேசுபொருளுக்கும் இலங்கையில் மேலோங்கி நிற்கும் இனத்துவ அடையாள அரசியலுக்குமிடையிலான உறவும் இந்தத் தொகுப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இலங்கையின் ‘இந்திய வம்சாவழித்’ தமிழ் சமூகத்தின் மிகப் பெரும்பான்மையினர் தலித்துக்கள் என்பதால் அவர்களின் சமூக, கலாச்சார, அரசியல் பிரச்சனைகள் பெரும்பாலான கட்டுரைகளின் கருப்பொருட்களாகின்றன. மற்றைய கட்டுரைகளில் போரின் விளைவாக நோர்வே போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த வடக்குக் கிழக்குத் தமிழ் சமூகத்தில் தொடரும் சாதியம் மற்றும் அதன் நடைமுறை வடிவங்கள்பற்றிய அவருடைய அவதானிப்புக்களையும் விளக்கங்களையும் சரவணன் பகிர்ந்து கொள்கிறார். பல இடங்களில் தனது வாழ்க்கை அனுபவங்களையும் நேரில் கண்டவற்றையும் உயிர்ப்புடன் எழுதுகிறார். கட்டுரைகளில் இழையோடும் சுயவரலாறு சொல்லும் நடை இந்தத் தொகுப்பின் சிறப்பம்சம். 

சரவணன் எழுதுகிறார்:‘தலித்தியம் பேசுவது என்பது அவ்வளவு இலகுவானதுமில்லை, இன்பமானதுமில்லை. உயர்த்தப்பட்டவர்கள் பேசும்போது அவர்களுக்கு ஒரு மதிப்பும் கிடைத்துவிடுகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பேசும்போது அவர்களின் அடையாளம் வெளிப்பட்டு அவமானப் பார்வைக்கு உள்ளாக்கப்பட்டு விடுகிறார்கள். தலித் மக்களின் உரிமை குறித்து பேச சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து குரல்கள் உரியவகையில் பதியப்படாததன் அரசியல் இதுதான்.’ சரவணன் தலித்தியம் பற்றிப் பேசுவதையோ எழுதுவதையோ அவருடைய உறவினர்கள், நண்பர்கள் பலர் விரும்பவில்லை. அவர் தனது தலித் அடையாளத்தைப் பெருமிதமாக வெளிப்படுத்தித் தலித்துக்களின் பிரச்சனைகள் பற்றி எழுதத் துணிந்ததால் அவரை விட்டு விலகிய உறவினர்களுமுண்டு என்பதையும் பதிவு செய்கிறார். பலகாலமாக இந்தியாவில் பரவிய தலித்தியப் போக்குகளினால் அவர் 1990களில் ஆகர்சிக்கப்பட்டார் என்பதையும் அறியமுடிகிறது. இந்தக் கட்டுரைகளுக்கூடாகத் தலித்தியம் எனும் பதத்தையும் அது சொல்லும் கோட்பாட்டையும்  இலங்கையில் சாதியம் பற்றிய கதையாடலுக்கு அறிமுகம் செய்துள்ளார். இலங்கையில், விசேடமாக இந்த நூலில் பிரதான முக்கியத்துவம் பெறும் சமூகங்களில், சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் இதுவரை  கருத்தியல்ரீதியிலும், அரசியல்ரீதியிலான அணிதிரட்டலைப் பொறுத்தவரையிலும் தலித்தியத்தின் பங்கு என்ன என்ற கேள்வி வாசகர் மனதில் எழலாம். இது ஒரு முக்கியமான கேள்வி. ஆயினும் இது பற்றி ஆழ, முழுமையாக ஆராய்வது இங்கு சாத்தியமில்லை. இந்தத் தொகுப்பின் உள்ளடக்கங்களை விமர்சனரீதியில் அணுகும்போது தலித்தியம் வரையறுக்கும் அடையாள அரசியல் பற்றிச் சில கேள்விகள் எழுகின்றன. அவைபற்றி இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். 

‘தலித்திய குறிப்புகள்’ பேசும் விடயங்களும் அவை நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுப்பும் கேள்விகளும்   வாசகரை ஒரு நீண்ட வரலாற்றுக் காலத்துக்குள், அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரித்தானிய கொலோனிய ஏகாதிபத்திய காலத்திலிருந்து நவதாராள உலகமயமாக்கல் தொடரும் இருபத்தியோராம் நூற்றாண்டின் சமகாலம்வரை, அழைத்துச் செல்கிறது. இந்தக் காலகட்டத்தில் இலங்கையின் ‘இந்திய வம்சாவழி’ மக்களின் வரலாறு தனியே மாற்றமின்றி முழுக்க முழுக்க அசைவற்று உறைந்து போய் நின்றுவிடவில்லை. அது ஒரு புறம் மாற்றத்தையும் மறுபுறம் மாற்றத்தைத் தடுக்கும் நிறுவனங்களின், விழுமியங்களின் தொடர்ச்சியையும் உள்ளடக்கிய போக்குகளைக் கொண்டுள்ளது என்பதே உண்மை. இந்தப் போக்கினைப் புரிந்து கொள்ள இந்தத் தொகுப்பின் கட்டுரைகளும் உதவுகின்றன. 

ஆயினும் இந்த நூலை வாசிக்கும்போது நிரப்பப்படவேண்டிய இடைவெளிகள் சிலவற்றையும் சந்திக்கிறோம்.  இந்தத் தொகுப்பின் பயன்பாட்டினை நன்கு புரிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் இதில் உள்ளடக்கப்பட்ட கட்டுரைகள் பேசும் விடயங்களின் வரலாற்றுக் காலகட்டப் பின்னணிபற்றிய ஒரு விரிவான குறிப்பு உதவியாயிருந்திருக்குமென நம்புகிறேன்.அத்தகைய ஒரு அறிமுகம் இந்தத் தொகுப்பினைச் மேலும் சிறப்பித்திருக்கும். அந்தக் குறையை நிரப்புவது எனது நோக்கமில்லை. ஆயினும்  எனது உரையை வரலாற்றுப் பின்னணி பற்றிய சில குறிப்புகளுடன் ஆரம்பிக்க வுரும்புகிறேன். அதைத் தொடர்ந்து அருந்ததியர் சமூகம், மலையகத் தமிழர், புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகம், மற்றும் இனத்துவ அரசியல் பற்றி இந்த நூல் கூறும் விடயங்கள் பற்றிப் பார்ப்போம். இறுதியில் ஒரு கலந்துரையாடலை நோக்கிச் சில முடிவுரைகள். 

வரலாற்றுப் பின்னணி

 நீண்ட வரலாற்று நோக்கில் இலங்கையின் தமிழர்கள், சிங்களவர்கள் அனைவரும், அல்லது இவர்களில் மிகப் பெரும்பான்மையினர், இந்திய வம்சாவழியினர்தான். ஆனால் ‘இந்திய வம்சாவழித் தமிழர்’ எனும் பதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில்  தமிழகத்திலிருந்து பிரித்தானிய கொலோனிய ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்காகப் புலம் பெயர்க்கப்பட்டு இலங்கைக்கு வருவிக்கப்பட்ட மக்களையே குறிக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராச்சியம் கொடிகட்டிப் பறந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் அந்தக் கொலோனிய கிரீடத்தின் அதி உயர்ந்த மணிக்கல்லென விளங்கிய இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மற்றைய கொலொனிகளுக்கு தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனர். இதற்கு முன்பிருந்தே ஒரு சர்வதேச கொலோனிய தொழிற்பிரிவு உருவாகிக்கொண்டிருந்தது. இது கொலோனியத்தின் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைத் தன்மைகளில் முக்கியமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை பிரிட்டிஷ், பிரெஞ்ச், ஒல்லாந்த கொலொனிகளில் அடிமைகளே தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டனர். 1833இல் பிரிட்டிஷ் கொலொனிகளில் அடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது. இதற்குப்  பின்னர் வேறுவழிகளால் கட்டுப்படுத்தப்பட்ட, அதாவது சுதந்திரமற்ற நிலைமைகளில், தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து கொலொனிகளுக்கு ஏற்றுமதி செய்யும் போக்கு ஆரம்பமாகி 1920கள் வரை தொடர்ந்தது.[1] இப்படியாக ஏற்றுமதி செய்யப்பட்ட தொழிலாளர்கள் தமது தாயகத்தின் சாதியமைப்பினால் ஒடுக்கப்பட்டு கொலோனிய அரசாங்கத்தினால் கவனிக்கப்படாது பஞ்சத்தில் அல்லது அதன் விளிம்புகளில் வாழ்ந்து வந்தார்கள். காலாதி காலமாக இந்திய சாதியமைப்பினால் நிலமற்றவர்களாக்கப்பட்ட மக்கள், அதாவது தலித்துக்கள், விரிந்து செல்லும் பிரித்தானிய கொலோனிய சாம்ராச்சியத்தின் பல இடங்களில் தோன்றிய உழைப்பாளர் பற்றாக்குறையை நிரப்பும் மலிவான மனிதவள இருப்பாகப் (reserve) பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் பல்வேறு கொலொனிகளில் முற்றிலும் பரிச்சயமற்ற, இலாபத்தை நோக்காகக் கொண்ட உற்பத்தி அமைப்புக்குள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இணைக்கப்பட்டனர்.

இலங்கையில் 1815இல் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியபின் 1860களிலேயே பிரிட்டிஷ் பெருந்தோட்ட முதலீட்டாளர்கள் தேயிலைத் தோட்டங்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர். ஆயினும் அதற்கு மூன்று நான்கு தசாப்தங்களுக்கு முன்பிருந்தே தமிழகத்திலிருந்து தொழிலாளர்கள் இலங்கைக்குப் புலம்பெயரும் போக்கு ஆரம்பித்துவிட்டது. அப்படி வருவிக்கப்பட்டவர்கள்தேயிலைக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட கோப்பித் தோட்டங்களில் வேலைசெய்தார்கள். ஆனால் கோப்பிப் பயிரை அழிக்கும் வியாதியின் பரவலால் அந்த உற்பத்தி கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தேயிலை உற்பத்தி பெருமளவில் ஊக்கிவிக்கப்பட்டது.மலைநாட்டில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு உகந்த செழிப்பான நிலங்கள் காடுகளாயிருந்தன. காடுகளை அழித்துத் தேயிலைத் தோட்டங்களாக மாற்றுவதற்கும் மற்றைய தேவைகளுக்கும் வேண்டிய தொழிலாளர்களை இலங்கையில் பெற முடியவில்லையெனக் கொலோனிய நிர்வாகிகளும் வெள்ளை முதலீட்டாளர்களும் குறைபட்டபடி இருந்தனர். கண்டிய விவசாயிகளை அவர்களின் உற்பத்தி சாதனங்களிலிருந்தும் கிராமிய சமூக அமைப்பிலிருந்தும் பெருமளவில் பலவந்தமாகப் பிரித்து வெளியேற்றித் தோட்டத் தொழிலாளர்களாக மாற்றுவது சாத்தியமில்லை என்பதை ஆட்சியாளர்கள் அநுபவரீதியாக உணர்ந்திருந்தனர். கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் அங்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் இழந்த பிரபுக்களின் தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சிகளில் விவசாயிகள் முக்கிய பங்கு வகித்தனர். இந்த வகையில் விசேடமாக 1848இல் இடம்பெற்ற கிளர்ச்சி ஆங்கிலேயருக்குச் சில பாடங்களைப் புகட்டியது. பிரபுக்கள் வர்க்கத்தை அந்நியப்படுத்திய தவறினை உணர்ந்த ஆட்சியாளர் அவர்களுக்கு மேனிலை அந்தஸ்தையும் சலுகைகளையும் வழங்கித் தமக்குச் சார்பானவர்களாக்கினர். இது மேலும் கிளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக உதவியது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கண்டிய விவசாயிகளைத் தோட்டத் தொழிலாளர்களாக மாற்றுவதற்குச் சாதகமற்ற இன்னுமொரு காரணத்தையும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. கண்டிய சிங்கள விவசாயிகள் தமது கிராமங்களில் நெற்செய்கையிலும் சுற்றுமுறை (‘சேனா’) விவசாயத்திலும் (shifting cultivation) ஈடுபட்டிருந்தனர். நெற்காணிகள் பள்ளத்தாக்கின் கீழ்மட்டத்தில் இருப்பதால் தேயிலைப்பயிர்ச் செய்கைக்கு உகந்தவையல்ல. ஆகவே கொலொனிய அரசு அவற்றைச் சுவீகரிக்க முயற்சிக்கவில்லை. விவசாயிகளின் பிரதான உற்பத்தி சாதனமான நெற்காணிகளிலிருந்தும் கிராமியப் பொருளாதாரத்திலிருந்தும் அவர்கள் பிரிக்கப்படவில்லை. அதாவது அவர்கள் உற்பத்திச் சொத்துக்களற்றவர்களாக்கப்பட்டு உழைப்பு சக்தியை விற்பதில் மட்டுமே தங்கியிருக்கும் பாட்டாளிவர்க்கமயப் படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் அவர்கள் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய முன்வரவில்லை.[2]

 ஆகவே பெருந்தோட்டத் துறையை விருத்தி செய்யத் தமிழகத்திலிருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். புலம்பெயர்ந்தநிலையில் பெருந்தோட்டங்களில் சுதந்திரங்கள் மறுக்கப்பட்ட சூழலில் குடியமர்த்தப்பட்டனர். அதேகொலோனிய காலத்தில் தோன்றிய நகரங்களுக்கு நகரசுத்தித் தொழிலாளர்கள் தேவைப் பட்டனர். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழகத்திலிருந்து அருந்ததியர் கொண்டுவரப்பட்டனர். 

 நீண்டகாலமாக இலங்கைக் கொலொனியைப் பொறுத்தவரை  தமிழகத்திலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவரும் சேவை கங்காணிகளின் பொறுப்பிலேயே இருந்தது. Kangani என்பது கண்காணிப்பவர் (மேற்பார்வையாளர்)எனும் சொல்லின் ஆங்கிலமயமாக்கலே. இவர்கள் தம்மையும்விடக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு ஒடுக்கப்பட்டு அடிக்கடி பஞ்சத்துக்காளாக்கப்படும் விளிம்புநிலையில் வாழும் தலித் கிராமிய மக்களை அவர்களுக்குத் தொழில்பெற்றுத்தருவதாகக் கூறி இலங்கைக்குக் கொண்டுவரும் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். சரவணன் உட்படப் பல ஆய்வாளர்கள் சொல்வதுபோல் இந்த முறைமை நடைமுறையில் தமிழகத்திலிருந்த சாதியமைப்பையும் இறக்குமதி செய்தது. ஆயினும் புலம்பெயர்க்கப்பட்டுக் கொலோனிய சுரண்டல், அடக்குமுறை அதிகார உறவுகளைக் கொண்ட அமைப்புக்குள் குடியமர்த்தப்பட்டனர் என்பது முக்கியமான மாற்றம் என்பதைக் குறிப்பிடவேண்டும்.  பெருந்தோட்டங்களில் ‘லயினறைகளில்’ குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்களைக் கட்டுப் படுத்தவும் வேலைநேரத்தில் மேற்பார்வை செய்யவும் அவர்களுக்கு மேலே கங்காணிகளிருந்தனர். நீண்டகாலமாக அவர்கள் வாழ்ந்த தோட்டமே அவர்களின் முழு உலகமாயிருந்தது. நகரசுத்தித் தொழிலாளர்களான அருந்ததியர் ஒரு சிதறுண்ட விளிம்புநிலைச் சமூகமாக நகர்ப்புறங்களில் வசதிகளற்ற சூழலில் குடியமர்த்தப்பட்டனர். தொழிற்புலங்களில், குடியிருப்புகளில் சாதிய அடக்குமுறைகள் தொடர்ந்தன. 

பெருந்தோட்ட முகாமை அமைப்பில் வர்க்கரீதியான சுரண்டலுக்குச் சாதிய மற்றும் பால்ரீதியான அடக்குமுறை துணைபோனது.  இந்திய சாதியமைப்புடன் இணைக்கப்பட்டிருந்த உற்பத்தி அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு மூலதனக் குவியலை நோக்காகக் கொண்ட கொலோனிய சுரண்டல் உற்பத்தி அமைப்பின் அங்கமானபோதும் அவர்கள் சாதியத் தளையிலிருந்து முற்றாக விடுபடவில்லை. தலித் சமுகங்களிடமிருந்து எதிர்வினைகள் தோன்றாமலில்லை.  இவைபற்றி நூலில் பேசப்படுவனபற்றி விரிவாகப் பின்னர் பார்ப்போம்.

இரண்டாம் உலகப்போரின் முடிவு பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் சூரியன் மறைந்து செல்லும் செய்தியையும் அறிவித்தது. ஆயினும் 1948 இல் வந்த இலங்கையின் சுதந்திரத்துடன் இந்திய வம்சாவழி மக்களின் குடியுரிமையின் இழப்பும் கூடவே வந்தது. இதைத் தொடர்ந்து சுதந்திர இலங்கையில் இனத்துவ அரசியல் வர்க்க அரசியலுக்குப் பெரும் சவாலாக எழுந்தது. பல்லின நாட்டில் சிங்கள பௌத்த தேசத்தினதும் அரசினதும் உருவாக்கம் தொடர்ச்சியான போக்காகியது. பேரினவாதமும் அதற்கெதிரான தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்துவ தேசியவாதங்களும் அரசியல் வெளியை இனத்துவ அடையாள அரசியலின் களமாக மாற்றிவிட்டன. இனரீதியான பெரும்பான்மையே ஜனநாயகம் சொல்லும் பெரும்பான்மை எனும் அரசியல் ஜனநாயகத்தையே தலைகீழாக நிறுத்தியது. வர்க்கம், சாதி, பால் ரீதியான சுரண்டலும் ஒடுக்குமுறைகளும் இனத்துவ அடையாளக் கருத்தியலின் மேலாட்சிக்குக் கீழ் முக்கியத்துவம் குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 1964ஆம் ஆண்டு குடியுரிமை இழந்த மக்களின் பங்குபற்றலின்றி வந்த சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் 525,000 இந்திய வம்சாவழியினரை இந்தியாவுக்கு அனுப்புவது, 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை இன்னொரு 150,000 பேரின் நிலைபற்றிப் பின்னர் ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டது. இந்த ஜனநாயக விரோத ஒப்பந்தத்தின் அமுலாக்கல் பல தடைகளுக்குள்ளானது. எல்லாமாக 400,000 பேர்வரை இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் கணிசமானோர் உயர்சாதியினரென்பதும் தோட்டங்களில் தொழிலாளர்களையும்விட உயர்நிலையிலிருந்தவர்களென்பதும் குறிப்பிடத்தக்கது (ஜெயசீலன் & சந்திரபோஸ், 2018). இறுதியில் 2003இல் ஒருவித தீர்வு எட்டப்பட்டது. ஒரு பகுதியினரின் குடியிரிமை மீட்கப்பட்டது மலையகப் பாராளுமன்ற அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது என்பதை மறுக்கமுடியாது.   

உள்நாட்டுப்போரும் புலப்பெயர்வுகளும் முழு நாட்டிலும் விசேடமாக தமிழ் சமூகத்திலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. மறுபுறம் சமூகரீதியில், பிரதேசரீதியில் அசமத்துவமான முதலாளித்துவ விருத்தியுடன் இணைந்த  குறைவிருத்திப் போக்குகளின் முரண்பாடுகள் ஆழமடைகின்றன. இவையெல்லாம் தலித் சமூகங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் அதேவேளை பழைய நிறுவனங்களின் தொடர்ச்சியையும் சாதியத்தின் புதிய வடிவங்களையும் காண்கிறோம். இந்த ‘மாற்றம்-தொடர்ச்சி’ பரிமாணத்தின் சில அம்சங்கள் சரவணனின் கட்டுரைகளின் பொருட்களாகின்றன.

இலங்கையில் இந்திய வம்சாவழியினர் பற்றிப் பெருந்தொகையான நூல்கள் வெளிவந்துள்ள போதும் சாதியச் சாடலுக்கு அதிகம் பலியான அருந்ததியர் சமூகம் பற்றிய முதலாவது நூல் இது எனும் தகவலைத் தருகிறார் நூலாசிரியர். அவர்களின் நிலைமைகள் பற்றி பலரும் அறிந்திராத விடயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றது இந்த நூல். 

 அருந்ததியர் – ‘தலித்துக்களிலும் தலித்துக்கள்’

‘அருந்ததியர்களைப் பொறுத்தளவில் அவர்கள் தலித்துக்களிலும் தலித்துக்களாகவே எங்கெங்கிலும் உள்ளார்கள்.’ (ப42)

‘ஒரு வளமற்ற, பலமற்ற, ஆதரவற்ற சமூகம் என்றளவில் தமக்காகத் தாமே போராடும் சமூகத்தவர்கள் அவர்கள். அதற்கான திறனற்ற ஒரு சமூகமாகவும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. தமது வரலாற்றுப் பின்னணி குறித்து எந்த போதிய பதிவுமில்லாத சமூகமும்கூட. வாய்மொழி மூலம் கடத்தப்பட்ட சில தகவல்கள் மற்றும் சில எஞ்சிய ஆவணங்களும் மாத்திரமே அருந்ததியர் சமூகம் குறித்த ஓரளவு உண்மைகளை வெளித்தெரிய வைத்திருக்கிறது.’ (ப14)

 வரலாற்றுப் பின்னணி குறித்துப் போதிய பதிவில்லாத சமூகம் பற்றிப் பல முக்கியமான தகவல்களை அந்தச் சமூகத்துக்குள்ளிருந்து ஒரு பங்குபற்றுபவனின் அவதானிப்புகளுக்கும் உரையாடல்களுக்குமூடாக ஆவணப்படுத்துகின்றது இந்தத் தொகுப்பு. எனது அபிப்பிராயத்தில், இந்தத் தொகுப்பில் அருந்ததியர் சமூகம் பற்றிய கட்டுரைகள் மற்றவையையும்விட ஒப்பீட்டுரீதியில் மிகவும் செறிவானவை.  இவை அருந்ததியர்களின் மனித மேம்பாட்டிற்கு, சமூக முன்னேற்றத்திற்கு எதிரான அமைப்புரீதியான தடைகளை அம்பலப்படுத்துகின்றன. தலித்துக்குள்ளே இருக்கும் சாதியப் படிநிலை யதார்த்தத்தின் மிகக்கசப்பான தாக்கங்களை அருந்தியர்கள் அநுபவிக்கிறார்கள். இந்தப் படிநிலையில் அடிமட்டத்திலிருக்கும் அவர்கள் இந்தியவம்சாவழிச் சமூகதிற்குள்ளேயே அந்நியப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் பலர் இன்றும் நகரசுத்தியுடன் தொடர்புடைய தொழிலில் தங்கியிருப்பது மற்றும் அவர்கள் வாழும் மோசமான குடியிருப்பு நிலைமைகள் அவர்களின் சாதி அடையாளத்தைச் சுலபமாக வெளிப்படையாக்குகின்றன. அவர்கள் மத்தியில் உருவான சில சமூக இயக்கங்கள் அரசியல் இயக்கங்களாகப் பரிணமிக்கவில்லை. உதிரிச் சமூகங்களாக பல நகர்ப் புறங்களில் சிதறுண்டிருப்பதால் அரசியல்ரீதியிலும் ஆட்சியாளரின் கவனத்தை ஈர்க்கவல்ல குரலற்ற விளிம்புநிலையிலிருக்கின்றனர். இந்தச் சிதறுண்டிருக்கும் குழுக்களுக்கிடையே சமூகரீதியான வலைப்பின்னல்கள் இருந்தபோதும் அவை உரிமைகளுக்குக் குரல்கொடுக்கும் இறுக்கமான அமைப்புக்களாக மாறவில்லை. மலையகத்தில் செறிவான சமூகமாயிருக்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு இருக்கும் கூட்டான அரசியல் பலம் இந்தச் சிதறுண்ட சமூகத்திற்கு இல்லை. இதற்கு ஆதாரம்போல் அமைகிறது ஒரு சமீபகால அநுபவம்.

2015ஆம் ஆண்டு வந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுடனான வீடமைப்புத் திட்டமொன்றை அமுல்படுத்தத் தொடங்கியது. இதற்குப் பொறுப்பாக மலையகத் தமிழர் ஒருவர் தோட்ட வீடமைப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பல தலைமுறைகளாக லைன்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வு. பல தலைமுறைகளாக நாட்டின் பல்வேறு நகர்ப்புறச் சேரிகளில் சொந்தமற்ற குடிசைகளில்  வாழ்ந்துவரும் அருந்ததியர்களுக்கும் அதுபோன்ற ஒரு வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கவேண்டுமெனும் கோரிக்கையுடன் சரவணன் அந்த அமைச்சரைச் சந்திக்கிறார். அமைச்சர் அருந்ததியர் சமூகம்பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்களின் நிலைமையை விளக்கிய பின்னரும் அவரிடமிருந்து நம்பிக்கைதரும் பதில் கிடைக்கவில்லை. அருந்ததியர் சமூகம் அவருடைய அரசியல் தொகுதிக்கு வெளிவாரியான தென்பதும் அவரின் அக்கறையின்மைக்குக் காரணமாயிருந்த்திருக்கலாம்.  தொழில் காரணமாக அரசநிலங்களில் வழங்கப்பட்ட சொந்தமற்ற குடிசைகளில் வாழும் அருந்ததியர் அந்த வாழிடத்தை இழக்காமலிருப்பதற்காகவே தலைமுறை தலைமுறையாக நகரசுத்தித் தொழிலாளர்களாகத் தொடரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். அவர்களின் இளம் சந்ததியினர் இந்தக் குறைவிருத்திப் பொறியிலிருந்து வெளியேறுவது ஒரு பெரிய சவாலாகிறது. அருந்ததியர் சமூகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக அகமணமுறை, சாதிய வசவு, சமூகநகர்ச்சி, ‘அடையாளத் தற்கொலை’ போன்றவை பற்றிப் பலவிடயங்களை ஆவணப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு. 

சாதியமைப்பின் நிறுவனரீதியான மீளுற்பத்திக்கு அகமணமுறை ஒரு அடிப்படை விதியாகிறது. ‘உயர்சாதிகளின்’ சொத்துக்களையும் அதிகார அந்தஸ்தையும்  பேண இது அவசியமாகிறது. கலப்புத் திருமணங்கள் பரவலாகும் போதும் எல்லா சாதிகளிலும் அகமணமுறை இன்றும் தொடர்வதைக் காண்கிறோம். இலங்கையின் அருந்ததியர் சமூகத்தில் அகமணமுறையினால் சில மரபுரீதியான நோய்களும் சந்ததிகளுக்கூடாகக் கடத்தப்படுவதன் விளைவுகளை ஆதாரபூர்வமாக விளக்குகிறது ஒரு கட்டுரை (ப39-44). உதாரணங்களாக சொரியாசிஸ் (psoriasis), நீரிழிவு, மனநோய் போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அளவுரீதியில் சிறிதான இலங்கை அருந்ததியர் சமூகத்தில் அகமணத்தின் பாதகமான விளைவுகள் பெரிதாகின்றன.  

அருந்ததியர் சமூகத்தவர் சாதிமாறிக் கலப்புத் திருமணம் செய்யாமாலில்லை. இந்தக் கலப்புத் திருமணங்கள் பொதுவாக தலித் சாதிகளுக்குள்ளேதான் நடந்தன. வேறுசாதிகளை சேர்ந்தவர்களுடன் திருமணங்கள் விதிவிலக்காக நடந்தன வென்றும் அவற்றுள் கணிசமானவை சாதிமறுப்புத் திருமணங்களெனவும் பதிவிடும் நூலாசிரியர் அவற்றிற்குச் சில உதாரணங்களையும் தருகிறார். ‘தனது இளம் வயதில் 30 வருடங்களுக்குமுன் ஒரு யாழ்ப்பாணப் பெண்ணோடு மாயமான எனது பெரியப்பாவை என் அப்பா உள்ளிட்ட அவரின் சகோதரர்கள் அவரை இறந்தபோது சவப்பெட்டியில்தான் பார்த்தார்கள். அவர் மாளிகாவத்தை பகுதியில் எங்கள் குடியிருப்பில் இருந்து அருகாமையில் தான் அத்தனை காலமும் வாழ்ந்திருக்கிறார். ஆனால் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை’ (p42-43). மறுபுறம் சமூக முன்னேற்றத்திற்கு அமைப்புரீதியான தடைகளைத் தொடரவைக்கும் குறைவிருத்திச் சூழல் மாறாதவரை  இத்தகைய அநுபவங்கள் அருந்ததியர் சமூகத்திற்குள் அகமணமுறையை மேலும் வலுவூட்டும் போக்கிற்கு உதவுகிறது.  

சாதியம் நிலவும் சமூகத்தில் ஒருவரை மற்றவர் சொல்லால் புண்படுத்துவதற்கு  சாதிய வசவு ஒரு ஆயுதமாகிறது என்பதை நினைவூட்டுவதுடன் இத்தகைய சாதியச் சாடலுக்கு அதிகம் பலியாகிய இலங்கைச் சமூகம் அருந்ததியர்களே என்பதற்குப் பல ஆதாரங்களையும் தருகிறது இந்த நூல். உதாரணமாக அருந்ததியருக்குப் பிராமணியம் கொடுத்த பெயரான ‘சக்கிலி’ எனும் சொல் தமிழிலும் சிங்களத்திலும் ஒருவரை அல்லது ஒரு குழுவை, நிறுவனத்தை மிகவும் கீழ்த்தரமாக அவமதிப்பதற்கும் புண்படுத்துவதற்கும்  பயன்படுத்தப்படுகிறது. இதற்குச் சிங்களத்திலும் தமிழிலும் பல உதாரணங்களை இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கட்டுரை தருகிறது. அவற்றில் ஒரு சில: ‘சக்கிலி சந்தேசய’ – இது சிங்கள BBC  சேவை தமிழருக்குச் சார்பாக நடந்துகொள்கிறது எனக் குற்றம் சாட்டும் சொல்லாடல். ‘சக்கிலி மாலிங்கய’ – கிரிக்கெட் வீரர் மாலிங்க திறமாக ஆடவில்லை என்பதால் ஆத்திரமடைந்தவரின் சொல்லாடல். ‘சக்கிலி மகாராஜா’ – இது மகராஜா நிறுவனத்தின் ஊடகத்திற்கு எதிராக. ‘சக்கிலி பௌத்தயன்’ – இது முஸ்லிம்களுக்குச் சார்பாகப் பேசும் பௌத்தர்கள்மீதான வசவு. ‘சக்கிலி நாயே மேடையை விட்டு வெளியே வா’ – இது தந்தை செல்வா நினைவு தினத்தில் ராஜதுரைமீது சிவாஜிலிங்கம் வீசிய வசவு. ‘சக்கிலி இந்தியா கடந்த முப்பது ஆண்டு காலமாகத் தனது அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழர்களைப் பாவித்திருக்கிறது’ – இது முகநூலில் முன்னாள் ஈரோஸ் தலைவர் அருளரின் பதிவு. இத்தகைய வசவுகள் நாட்டின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்திப் புண்படுத்துமென்பதைக்கூட உணரமுடியாதளவுக்குச் சாதியச் சொல்லாடல் பலரின் அன்றாட வழக்கில் உள்வாங்கப்பட்டுள்ளது. 

அருந்ததியர் சமூகத்தில் இடம்பெற்றுவரும் பலவிதமான மாற்றங்கள் பற்றியும் விமர்சன நோக்கில் இந்தத் தொகுப்புப் பேசுகிறது. காலப்போக்கில் துப்புரவுத் தொழிலிருந்து ஒரு பகுதியினர் வெளியேறியுள்ளனர். கல்விக்கூடாகச் சிலரால் நடுத்தர வர்க்கத்தை நோக்கி நகரவும் முடிகிறது. ஆனால் இந்த நகர்ச்சி அவர்களைத் தம் பிறப்போடு வந்த சாதிய அடையாளத்திலிருந்து விடுவிக்கவில்லை. இவர்களில் பலர் சாதியை மூடிமறைக்க முயற்சிப்பதுண்டு. இந்தப் போக்கினை ‘அடையாளத் தற்கொலை’ எனக்கூறும் சரவணன் அதற்குப் பல உதாரணங்களையும் தருகிறார். அருந்ததியர் செறிந்து வாழும் குடியிருப்புக்களிலிருந்து வெளியேறுவது, ‘சாதி மறுப்புத் திருமணம்’, காலாகாலமாகப் பேசிவந்த தெலுங்கு மொழியைக் கைவிடுவது, மத மாற்றம், உயர்சாதியினரின் பேச்சு மொழியைப் பேசுவது மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது, இன அடையாள மாற்றம் போன்ற வழிகளுக்கூடாக இது நடைபெறுகிறது.  

கல்விக்கூடாக ஆங்கிலப் புலமை பெற்றவரும் அருந்ததியர் சங்கத்தின் தலைவருமாக இருந்த ஒருவர் ‘நான் ஒரு சக்கிலியன்’ எனத் தன்னைப் பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொண்டபோதும் அவருடைய பிள்ளைகள் இந்த விடயத்தில் தமது தகப்பனைப் பெருங்குற்றவாளியாகவே கருதினர். அவர்கள் தங்கள் சாதிய அடையாளங்களை மறைக்கும் நோக்கில் உறவினர்களுடனான தொடர்புகளைத் தவிர்த்து கொண்டது மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களை மணந்து அந்தச் சமூகங்களின் அடையாளங்களைப் பெற்றுக்கொண்டனர்.  இத்தகைய அடையாள மாற்றத்தைப் பலர் தேர்ந்தெடுக்கிறார்கள்.  சுயமுயற்சியால் அமைப்புரீதியான தடைகளையும் தாண்டி முன்னேறியவர்மீது தொடர்ந்தும் சாதிய லேபலைச் சுமத்துவது சமூகத்தின் ‘உயர்’ சாதியினரே. சாதிமறைப்பு இதன் உணர்வுபூர்வமான எதிர்வினை என்பதை மறந்துவிடலாகாது. 

தலித்துக்களை கிறிஸ்துவர்களாக மதம் மாற்றும் முயற்சியில் ‘பைபிள் சபைகள்’ ஈடுபடுகின்றன. இந்த மதமாற்ற அணுகுமுறையில் விளிம்புநிலையில் அல்லல்படும் தலித்துக்கள் தாம் சமூகத்தில் அநுபவித்திராத மரியாதையை, மனிதாபிமானத்தைக் காண்கிறார்கள். ‘எங்களை மனிசர்களாகவாவது மதிக்கிறார்களே’ என்று அவர்களில் சிலர் சொல்கிறார்கள். இப்படியாக வரும் மதமாற்றம் சாதிக்கு வெளியே கிறிஸ்துவரை மணமுடிப்பதுவரை செல்வதுண்டு. இந்த நிலைமயைப் பதிவிடும் கட்டுரை இப்படி விளிம்புநிலையில்  அல்லலுறும் மக்களை முற்போக்கு அல்லது புரட்சிகர அரசியல் சக்திகள் கவனிக்கவில்லை எனும் விமர்சனத்தையும் முன்வைக்கிறது. இன்றைய இலங்கையில் அந்த சக்திகள் உண்டா அப்படியென்றால் அவற்றின் அடையாளங்கள் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த விடயத்தை இந்த நூல் தொடவில்லை. இலங்கையில் தமிழ் சமூகத்தில் சாதியத்திற்கு எதிரான ஒரு இடதுசாரிப் போராட்ட மரபு  தோன்றி வளர்ந்து பின்னர் வலுவிழந்து போனது பற்றி, மற்றும் அது வட இலங்கைக்கு, குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு, அப்பால் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்காது போனதை நினைவூட்டுதல் தகும். 

வேறு மதத்திற்கு மாறும் போக்கு ஒருபுறமிருக்க அருந்ததியரும் வேறு தலித் சமூகத்தவரும்  இதுவரை பின்பற்றிய சிறுதெய்வ வழிபாட்டுக் கலாச்சாரத்திலிருந்து உயர்சாதியினரின் கடவுள்களை வழிபடும் வழக்கத்திற்கு மாறும் போக்குப் பற்றிப் பல தகவல்களைத் தருகிறது இந்தத் தொகுப்பு.  அருந்ததியரின் அடையாளங்களைப் பறைசாற்றும் முனியாண்டிசாமி, மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற சிறு தெய்வங்களுக்கு மத்தியில் சைவக் கடவுள்களின் விக்கிரகங்களை வைப்பது, சைவ இந்துச் சடங்குகளையும் பழக்கங்களையும் பின்பற்றுவது போன்ற நடைமுறைகள் பரவுகின்றன. சிறு தெய்வங்கள் முக்கியத்துவமிழந்து சைவ-இந்து தெய்வங்கள் பிரதான இடத்தைப் பெறுகின்றன. மனித மேம்பாடு மற்றும் சமூக நகர்ச்சிச் சந்தர்ப்பங்கள் குன்றிய சூழலில் அருந்ததியரைச் சைவமயமாக்க முயலும் இந்த மாற்றம் அவர்களைச் சாதியடக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்கு மாறாக இந்து சாதிப் படிநிலையமைப்பிற்குள் மேலும் இறுக்கமாக உள்வாங்கும் ஒரு வழியாகிறது. 

அருந்ததியரின் இனத்துவ அடையாள மாற்றத்தைப் பொறுத்தவரை சிங்கள மயமாக்கல் அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தறை, காலி, ஹம்பந்தோட்டை போன்ற பகுதிகளில் நிகழ்வதுபற்றி அறிகிறோம். வீட்டில் சிங்கள மொழியில் பேசுவது, பிள்ளைகளைச் சிங்களப் பாடசாலையில் சேர்ப்பது பொன்ற நடைமுறைகளைப் பெற்றோர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்கள் வாழுமிடங்களில் தமிழ்ப் பாடசாலைகள் இல்லாமையால் பிள்ளைகளைச் சிங்களப் பாடசாலையில் சேர்ப்பது ஒரு காரணமாயிருக்கலாம். ஆயினும் இன அடையாளத்தை மாற்றுவது சாதி அடையாளத்தை இழப்பதற்கு உகந்தவழி என்பதும் ஒரு அநுபவபூர்வமான உண்மை போலவே படுகிறது. இதற்கு ஆதாரம் போல் அமைகிறது சரவணன் காதில் பட்ட  ‘தமிழர்களே எங்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளாதபோது…..’ எனும் வார்த்தைகள். 

சாதிய அடையாளங்களை மூடிமறைக்கும் செயற்பாடுகள் அடிமட்ட சாதிகளில் காணப்பட்டுவந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைகளின் மறைவுக்கு இட்டுச்செல்வது பற்றிக் குறிப்பிடும் அதேவேளை சாதிய அடையாளங்களைத் தற்கொலை செய்வதால் சாதியத்திலிருந்து மீள முடிகிறது என்றும் சொல்கிறார் நூலாசிரியர். மறுபுறம் ‘இந்த அடையாளத் தற்கொலைகளானது தப்பித்தலாகவும், ஒளிவதாகவும், மறைத்து வைப்பதாகவும் தொடருவது நிலவுகின்ற கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்பபடுத்தப்போவதில்லை’ என வாதிடுகிறார் (ப85). இந்த வாதத்தில் நியாயமிருப்பதுபோல் படலாம். ஆனால் அது குறைபாடுள்ளது என்பதே எனது கருத்து. அடையாளத் தற்கொலை கட்டமைப்பு மாற்றத்துக்கூடாக வரும்போதுதான் அர்த்தமிக்கதாகிறது. ஆனால் இலங்கையில் இயக்கரீதியான அரசியல் பலமின்றி சமூக நகர்ச்சிச் சந்தர்ப்பங்கள் அற்பமாயுள்ள சூழலில் சாதியத்தினால் அவலத்திற்குள்ளாகும் அருந்ததியர் தனிமனித அல்லது சிறுகுழு மட்டத்தில் தமது மனிதத்துவத்தை முடிந்தவரை உறுதிசெய்ய சாதி மறைப்பை ஒரு எதிர்வினை உபாயமாகப் பயன்படுத்துகிறார்கள். சமூகரீதியில் பலவீனர்களாக ஆக்கப்பட்டவர்களுக்கு தமது அதிருப்தியை, எதிர்ப்பைக் காட்டக் கிடைத்த ஆயுதம் அதுதான். இது ஜேம்ஸ் ஸ்கொட்(James Scott) அறிமுகம் செய்த ´weapons of the weak´ – ‘பலவீனரின் ஆயுதங்கள்’ – எனும் கருத்துருவை நினைவூட்டுகிறது.  தனிமனித மட்டத்தில் சாதி அடக்குமுறையிலிருந்து தப்பித்துக் கொள்ளப் பலரும் பயன்படுத்தும் வழிமுறைகளைக் குறை சொல்வதில் நியாயமில்லை என்பதே எனது கருத்து. அவற்றை அவர்களின் உணர்வுபூர்வமான முனைப்பாற்றலின் வெளிப்பாடாகப் பார்ப்பதே நியாயமானது.  

சாதியத்திற்கெதிராக அடக்கப்பட்ட சாதி மக்களை அணிதிரட்டும் அரசியல் ஒரு அடையாள அரசியலாகவே கருத்தியல்மயப்படுத்தப்படுகிறது. இத்துடன் வரும் முரண்பாடுகளுக்கு முகம் கொடுக்கும் தேவை பற்றி இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்ப்போம்.

..தொடரும்..


[1]கொலொனிய அடிமைமுறை மற்றும் அதில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான சர்வதேசரீதியானதகவல்கள் Wikipedia மற்றும் அவை தொடர்பாக இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டன.   

[2]இந்த விடயங்கள் தொடர்பான ஆய்வுகள் பற்றியும் எனது விளக்கம் பற்றியும் மேலும் அறிய பின்வரும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை உதவியாயிருக்கும்: N. Shanmugaratnam, 1985, Colonial Agrarian Changes and Underdevelopment, in Charles Abeysekera (ed), Capital and Peasant Production Studies in continuity and discontinuity of agrarian structures in Sri Lanka, Social Scientists´ Association of Sri Lanka,1985: 1-20.  

மேதின வாழ்த்துக்கள்!

மேதின வாழ்த்துக்கள்!

மேதினத்தின் வரலாறு மற்றும் தொழிலாளர் அமைப்புக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சனைகள் பற்றி 2017 May 1 பிரசுரிக்கப்பட்ட கட்டுரை மீள்பிரசுரிக்கப்படுகிறது

‘வடமாகாண முதன்மைத் திட்டமொன்றிற்கான பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு’ ஆய்வறிக்கை பற்றிய விமர்சனக் கருத்துரை

சமுத்திரன்

மேலேகுறிப்பிட்டுள்ள ஆய்வறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் பொறுப்புரிமையளிக்கப்பட்டு துறைசார் அறிதிறமும் போருக்குப் பின்னைய வடமாகாண நிலைமைகள் பற்றிய பரிச்சயமும் கொண்ட ஏழுபேர்களைக் கொண்ட குழுவினால் வரையப்பட்டது. போருக்குப் பின்னைய வடமாகாணத்தின் அபிவிருத்தி பற்றிய ஒரு திறந்த கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை இந்த ஆய்வறிக்கை கொடுக்கிறது. போர் முடிவுக்குவந்தபின்னர் அதனால் பாதிக்கப்பட்ட சமூகத்தினால் மிகப்பெரிய ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புக்களுடனும் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது மாகாண சபை (ஒக்டோபர் 2103 – செப்டெம்பர் 2018)அந்த மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றம் எதிர்நோக்கும் சவால்களுக்குக் கூட்டுச் செயற்பாட்டுக்கூடாக முகம்கொடுக்க உதவும் ஒரு அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குவது பயனற்றது எனக் கருதியதுபோல் தெரிகிறது. இப்போது போர் முடிவுக்கு வந்து பத்துவருடங்களின்பின், மாகாண சபையின் ஐந்தாண்டுக் கால எல்லை முடிவுற்ற சிறுகாலத்தில், மத்திய அரச நிறுவனமொன்றின் பொறுப்புரிமையளிப்பில் கிடைத்த ஒரு ஆய்வறிக்கை மாகாணத்தின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலுக்கும் விவாதத்திற்கும் வழிதிறந்துள்ளது.

போருக்கு முன்பும் அதற்குப் பின்னரும் வடமாகாணத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் பற்றிய பொதுப்படையான பார்வையுடன் ஆரம்பிக்கும் இந்த ஆய்வு மாகாண அபிவிருத்தித் திட்டவரைவொன்றின் உருவாக்கத்திற்கு உதவும் நோக்குடன் ஒரு கட்டமைப்பினை முன்வைக்கிறது. நீண்டகாலப் போர் ஏற்படுத்திய அழிவு, இடம்பெயர்வு மற்றும் சனத்தொகை குறைப்பு ஆகியவற்றையும் அவற்றின் விளைவுகளையும் அழுத்திக் கூறுவதுடன் மாகாணத்தின் அபிவிருத்தி எதிர்நோக்கும் சமூக, பொருளாதார சவால்கள் சிலவற்றையும் இனங்காண்கிறது. அரசாங்கம் இந்தச் சவால்களை கணக்கிலெடுக்கத் தவறியதனால் உத்தியோகபூர்வமான கொள்கை திருப்திகரமான விளைபயன்களைத் தரவில்லை எனும் கருத்தினை முன்வைக்கிறது. பெருமப்பொருளாதாரப் (macroeconomic)பார்வையற்றநிலையில் அரசாங்கத்தின் அணுகுமுறை மாற்றுவினை (reactive) சார்ந்ததாக, தொடர்பறுந்த செயற்திட்டங்கள் அடிப்படையிலானதாகவே இருந்ததெனக் கூறுகிறது. போர் முடிந்தவுடன் விருத்திசெய்யப்பட்ட பாதைத்தொடர்பின் விளைவாக முன்னேற்றமடைந்த உற்பத்தியைக் கொண்ட  பரந்த சந்தையுடன் இணைக்கப்பட்டதால் உள்ளூர் உற்பத்தி ஒரு சந்தை அதிர்ச்சிக்குள்ளாகியது. போரின் தாக்கங்களுக்கு ஆளான குடும்பங்களின் பாதிப்புக்களைக் கணக்கிலெடுக்காது நாட்டின் சந்தையுடன் ஏற்படுத்தப்பட்ட திடீர் ஒருங்கிணைப்பும் கடன்கொடுப்பனவின் வளர்ச்சியும் பரந்தளவில் கடன்பிரச்சனையின் ஆழமாக்கலுக்கும் கிராமிய பொருளாதாரச் சிக்கலுக்கும் வழிகோலின என எடுத்துக்கூறுகிறது.

போருக்குப்பின் வடக்கில் மக்கள் நலனுக்குப் பாதகமான நிதிமயமாக்கல் துரிதமாக இடம்பெற்றது என்பதை மறுக்கமுடியாது. இன்றைய நவதாராள உலகில் வறியவர்களைப் பொறுத்தவரையில் கடன் என்பது சமூகப் பாதுகாப்புவலையின் ஆபத்துமிக்க பிரதியீடாகும் (அதாவது நவதாராளப் பொருளாதாரக் கொள்கையின் விளைவான சமூகப்பாதுகாப்பற்ற நிலைமைகளில்). ஏனெனில் அது வறியோரை மேலும் நலிவுக்குள்ளாக்கும் கடன்பொறிக்குள் இட்டுச் செல்கிறது,  இந்த ஆபத்துப் பலரைத் தற்கொலைக்குத் தள்ளுமளவிற்குப் பயங்கரமானது என்பதையும் கண்டுள்ளோம்.

புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட முதலீடுகள் வரவில்லை. அரசாங்கம் அறிவித்த வரிவிலக்கல் ஊக்கியால் மட்டும் போரால் நிர்மூலமாக்கப்பட்ட ஒரு பிரதேசத்திற்கு முதலீடுகளைக் கவரமுடியாது என்பது தெளிவாகியது. நிறுவனரீதியான மற்றும் மனிதவளரீதியான ஆற்றல்களின் குறைபாடுகள் பற்றிய புரிந்துணர்வில்லாமையுடன் போருக்குப்பின்னான வடக்கின் அரசியல் நிலைமைகள் பற்றிய சரியான கிரகிப்பும் அரசாங்கத்திடமிருக்கவில்லை.

உண்மையில் அரசாங்கத்தின் அணுகுமுறை மேலிருந்து கீழான, இராணுவமயமாக்கப்பட்ட, நிர்வாகரீதியில் மத்தியமயப்படுத்தப்பட்டதாகவிருந்தது. பாதுகாப்புமயமாக்கலும் பாதைத்தொடர்பும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்குடியமர்வு மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றின் முன்னுரிமைகளைப் பின்தள்ளிவிட்டன.  பாதைத்தொடர்புக்கான ஏறக்குறைய முழு முதலீடும்  A9 மற்றும் சில பிரதான வீதிகளின் மீள்விருத்திக்கே சென்றடைந்தது. உள்ளூர் உட்கட்டுமான அபிவிருத்தி கவனிக்கப்படவில்லை. சில விமர்சகர்கள் குறிப்பிட்டதுபோல் அரசாங்கம் மாற்றுவழிகளுக்கூடாகப் போரைத்தொடர்ந்தது. இந்தச் சூழலில் அரசாங்கம் தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் தீர்வினைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக ‘அபிவிருத்தி’யைப் பயன்படுத்த முயற்சித்தது. ஆதாரபூர்வமான உண்மையென்னவெனில் வட மாகாணத்தில் மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை இயலுமைப்படுத்தும் சூழல் இருக்கவில்லை. 

மேலும் இந்த ஆய்வறிக்கையின் பேசுபொருட்களை நோக்குமிடத்து நாட்டின் பெருமப் பொருளாதாரம் (macroeconomy)பற்றிய ஒரு விமர்சனரீதியான பார்வையை அது முன்வைத்திருக்கவேண்டும் ஆனால் அதைச்செய்யத் தவறிவிட்டது. இது ஒரு முக்கியமான குறைபாடு. இதனால் அறிக்கையின் போருக்குப்பின்னைய அபிவிருத்தி பற்றிய விமர்சனம் முழுமையற்றதாக இருக்கிறது. இலங்கையின் கீழ்நடுத்தர வருமான தகுநிலைக்கான எழுச்சி பொருள்ரீதியான ஏற்றத்தாழ்வின் வளர்ச்சியுடனும் சமூகபாதுகாப்பு உரித்துடைமைகளின் இழப்புடனும் மட்டுமன்றி சனநாயக சுதந்திரங்களை நசுக்கும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுடனும் இணைந்ததென்பது பொதுவாக அறியப்பட்டதே. போரின் முடிவுக்குப்பின்னைய ஆரம்ப வருடங்களில் இடம்பெற்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உயர்ந்த வளர்ச்சி வீதம் உட்கட்டுமான முதலீட்டினால் முன்னெடுக்கப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டிற்குபின் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அப்போதிருந்தே நாட்டின் பொருளாதாரம் பிரச்சனைக்குள்ளாகிவருகிறது. இன்றைய அரசாங்கம் ஒரு நவதாராள நிகழ்ச்சிநிரலைப் பற்றியவண்ணம் திசையறியாது தடுமாறிக் கொண்டிருப்பதாகவே படுகிறது. நாட்டின் இன்றைய பெருமப்பொருளாதார நிலைமை பற்றி இந்த ஆய்வறிக்கையின் மௌனம் சற்றுப் புதிரூட்டுவதாகவிருக்கிறது.

போருக்குப் பின்னைய அபிவிருத்திப் பாதை பற்றிய முற்றுபெறாத ஒரு விமர்சனத்தினது அடிப்படையிலும் ‘நிலைபெறு அபிவிருத்தி’ (‘sustainable development’) பற்றிய ஒரு தொலைநோக்கின் ஆகர்சிப்பிலும் வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒன்றோடொன்று தொடர்புள்ள ‘உற்பத்தி’, ‘அபிவிருத்திக்கான சமூக அடிப்படைகள்’, ‘இயலுமைப் படுத்தும் சூழல்’ எனப்படும் மூன்று தூண்களைக் கொண்ட ஒரு எண்ணக்கருரீதியான கட்டமைப்பினை ஆய்வறிக்கை முன்வைக்கிறது. ‘உற்பத்தி’ தூணுடன் தொடர்பட்டிருக்கும் மற்றைய இரு தூண்கள் பலமுக்கிய சமூகரீதியான, நிறுவனரீதியான, தொழில்நுட்பவியல் தொடர்பான அம்சங்களை உள்ளடக்குகின்றன. சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு ஆலைத்தொழில்கள் ஆகியவற்றினை அடித்தளமாகக் கொண்ட பங்கீடு மற்றும் தாக்குப்பிடிக்கவல்ல நிலையான வளர்ச்சி ஆகிய நோக்கங்களை அடைய உதவும் மூலோபாயத்தின் தேவையை ஆய்வறிக்கை முன்னிலைப்படுத்துகிறது. இது அபிவிருத்திக்கு ஒரு நியமரீதியான (normative)அணுகுமுறைக்கான முன்மொழிவுரை எனலாம்.

பொருளாதார வளர்ச்சி ஒரு இறுதி இலக்கல்ல அது நிலைபெறும் மனித மேம்பாட்டிற்கும் செழிப்புக்கும் வேண்டிய அபிவிருத்திப் போக்கிற்கான ஒரு வழிமுறையே. அபிவிருத்தியின் வேகம் மிதமானதாக இருக்கலாம் ஆனால் அதையும்விட முக்கியமானதென்னவெனில் அது நகரும் பாதை நலிவடைந்தோரை உள்வாங்குவதாகவும் அவர்களின் ஆற்றலுடைமைகளைத் தொடர்ச்சியாக விரிவாக்கவல்ல இயக்கப்பாடுள்ளதாகவும் இருக்கவேண்டும். 

ஆய்வறிக்கையின் கட்டமைப்பை இத்தகைய ஒரு விமர்சன ஒளியில் நோக்குமிடத்து அதன் மூன்று தூண்களின் ஒருங்கிணைப்பின் உண்மையான சோதனை கொள்கை வகுப்பில், திட்டமிடலில், அமுலாக்கலில் அது பயன்படுத்தபபடுவதிலேயே தங்கியுள்ளது. சுதந்திரமும் தகைமையும் (அதாவது தொலைநோக்கும் ஆற்றலும்)  படைத்த தலைமை மற்றும் அர்த்தமுள்ள மக்கள் பங்குபற்றல் ஆகியன இல்லாதவிடத்து இந்தக் கட்டமைப்பு சுலபமாக ஒரு பூரணமான தொழில்நுட்பவல்லுன (technocratic) முறைமைக்குள் நழுவிப்போய்விடும்.இதுநடக்கும் பட்சத்தில் சமூக, அரசியல் பிரச்சனைகள் பொருளாதார வினைத்திறனின் பெயரால் வல்லுனர்களால் – விசேடமாக நவதாராள அறிவீட்டவியல் சார்ந்தோரால் –   தொழில்நுட்பரீதியான பிரச்சனைகளாகத் தரம்குறைக்கப்படும். உண்மையில் என்ன நடக்கும் என்பது தேசிய மட்டத்திலான மாற்றங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து நல்விளைவுகளைத் தரவல்ல பங்கினை வகிக்கக்கூடிய ஆற்றல்மிகுந்த மாகாணசபை போன்றவற்றில் தங்கியுள்ளது. 

வட மாகாணத்தில் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் தன்மைபற்றியும் வங்கிகளின் வகிபாகம் பற்றியும் நமது கவனத்தை ஈர்க்கும் கருத்துக்களை ஆய்வறிக்கையில் காணக்கிடக்கிறது. இவற்றைப் பார்க்கும்போது வடமாகாண வங்கிகளிலிருக்கும் ‘சேமிப்பு உபரி’ உற்பத்திபூர்வமான முதலீட்டுக்கு பயன்படுவதற்கான வழிவகைகள் பற்றி ஆராயவேண்டிய தேவை எழுகிறது. இத்தகைய பயன்பாட்டிற்கான தடைகள் என்ன அவற்றை எப்படி அகற்றலாம் போன்ற கேள்விகள் எழுகின்றன. மாகாண அபிவிருத்தியில் அரசவுடைமைகளான வங்கிகளின் பங்கு என்ன?இது கொள்கை தொடர்பான ஒரு கேள்வி என்பதில் சந்தேகமில்லை. நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் மாகாண அபிவிருத்தி நிதியம் ஒன்றினை நிறுவுவது பற்றிய யோசனையை நடைமுறைப்படுத்துவது பயன்மிக்கது. ஆயினும் இதற்கு இன்னுமொரு கொள்கை மற்றும் நிறுவனரீதியான தேவை ஒன்றும் பூர்த்திசெய்யப்படவேண்டும். அதாவது உற்பத்தியாளர்கள் தொழில் நிறுவனங்களை விருத்திசெய்வதற்குத் தேவையான வளங்களையும், சந்தர்ப்பங்களையும் பெற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு மேல்நோக்கிய சமூக நகர்ச்சிக்கான வாய்ப்புக்கள் கிடைக்கவும் உதவும் சூழல் உருவாக்கப்படவேண்டும். 

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வழக்கமாக கொள்வனவு செய்வோரினால் உந்தப்படும் பண்டச் சங்கிலியில் மிகவும் அசமத்துவமான உறவின் அடிப்படையில் இணைக்கப்படுகின்றன. இதனால் அந்த நிறுவனங்களின் உற்பத்தியின் பெறுமதியின் பெரும்பங்கினைப் பொருட்களைக் கொள்வனவு செய்து சந்தைப் படுத்துவோரே இலாபமாக கைப்பற்றிக்கொள்கிறார்கள். இந்தத் தொழில்நிறுவனங்கள் கூட்டுறவு அமைப்புக்களுக்கூடாகத் தமது பேரம்பேசும் பலத்தை அணிதிரட்டித் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலைகளைப் பெறக்கூடிய கொள்கைரீதியான ஆதரவை அரசாங்கம் வழங்கவேண்டும். சந்தைப்படுத்தலுக்குச் சமத்துவமான அடிப்படையை உருவாக்குவது இந்த நிறுவனங்களின் பொருளாதார செயல்நிறைவாற்றலுக்கும் எதிர்கால விருத்திக்கும் அவசியம். வடக்கில் விவசாயம், கடற்றொழில், கைத்தொழில், ஆலை உற்பத்தி போன்றவை பற்றியே இங்கு சிந்திக்கிறோம். நலிவுற்றோரின் வாழ்வாதார மீள்விருத்திக்கும் மனித மேம்பாட்டுக்கும் உதவும் நன்கொடை, மானியம், கடன் போன்றவைபற்றி ஆய்வுக்குழு ஆராயத்தவறிவிட்டது. இந்த யோசனை போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டுமெனும் நிலைமாற்று நீதியின் ஒரு அம்சமென்பதை நினைவுகொள்ளல்தகும்.

ஆய்வறிக்கையில் தொழிலாளர் தொடர்பாக இனங்காணப்பட்டுள்ள பிரச்சனைகள் முக்கியமானவை. இளைஞர், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னைநாள் போராளிகள், வலுவிழந்தோர் போன்ற பிரிவினர்களின் பிரச்சனைகள்மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேலைபெறக்கூடிய தகைமை பெறுதல் மற்றும் சுயசார்பினைப் பலமூட்டல் போன்றவற்றிற்கான உதவிவழங்கலைப் பொறுத்தவரை இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய விசேடமான தேவைகள் உண்டு. இது மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் இணைந்து சிவில் மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்களின் வளங்களையும் அணிதிரட்டிச் செயற்படவேண்டிய ஒரு விடயமாகப் படுகிறது.

தொழிலாளர்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு தொழிற்சங்கங்களும் மற்றைய தொழிலாளர் நிறுவனங்களும் மீள்கட்டியெழுப்பப்படவேண்டுமென ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால் இதுசுலபமான காரியமல்ல. நாட்டின் மற்றைய பகுதிகள்போல் வடமாகாணத்திலும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் முறைசாராத் துறைகளிலேயே தற்காலிகமாக வேலைசெய்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் சமூக, பொருளாதார பாதுகாப்பற்ற மிகமோசமான நிலைமைகளிலேயே தொழிலாற்றுகிறார்கள், வாழுகிறார்கள். இந்த நிலைமைகளில் அவதியுறும் தொழிலாள வர்க்கத்தினரைச் சில எழுத்தாளர்கள் ´Precariat´ – அதாவது ‘இடர்பாட்டுநிலைத் தொழிலாள வர்க்கம்’ – என வகைப்படுத்தியுள்ளார்கள். இந்த விவரணம் இலங்கையின் முறைசாராத் துறைகளில் தொழிலுக்குத் தங்கியிருக்கும் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலைமைகளுக்கும் பொருந்தும். இன்னுமொரு முக்கியமான உண்மை என்னவெனில் இலங்கையில் தொழிற்சங்கமயமாக்கப்பட்ட தொழிலாளரின் வீதாசாரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்கிறது. இந்த விடயங்கள் கொள்கைமட்டத்தில் அணுகப்படவேண்டியவை.

தொடரும் புலம்பெயர்வு, தொழிலுக்காக வெளிநாடு செல்லும் போக்குகள் பற்றி ஆழமாக அறிந்து கொள்வது அவசியம். பல காரணங்களால் வடக்கின் தமிழ் சமூகத்தவர் புலம்பெயரும் நடத்தைப்போக்கினை அதிகமாகவே வெளிக்காட்டுகின்றனர். அதுமட்டுமன்றி மனித செயல்திறன் விருத்திக்கு அற்பமாகவே முதலீடுசெய்யும் அரசாங்கம் இலங்கையர் தொழிலுக்காக வெளிநாடு செல்வதை பல வருடங்களாகத் தீவிரமாக ஊக்கிவித்தவண்ணமிருக்கிறது. மறுபக்கம் வேலை வாய்ப்புக்களைத் தோற்றுவிக்காது செயல்திறன் மட்டுமே விருத்திசெய்யப்படுவது தொழிலாளரின் புலம்பெயர்வை மேலும் ஊக்கிவிக்கும். இலங்கையின் கடந்தகாலப் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தகுந்தளவில் வேலைவாய்புக்களைத் தரத் தவறிவிட்டது. பல்வேறு ஆய்வுகளின்படி வேலையில்லாமை, குறைமட்டவேலை (underemployment), கடன்பளு, வளங்கள் கிடையாமை ஆகியனவே தொழில்தேடும் புலம்பெயர்வுக்கான பிரதான காரணிகள். சமீப காலங்களில் வேலைபெறக்கூடிய திறனுள்ள ஆனால் வேலையில்லாதிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். இந்தச் சூழலும் வடமாகாணத்திலும் முழு நாட்டிலும் மாற்றமடைந்து செல்லும் சனத்தொகையியல் நிலைமைகளும் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஒரு ஊழியச்செறிவுரீதியான (labour intensive)அணுகுமுறையைப் பின்பற்றுவதற்குச் சவாலாகின்றன. இதுவும் தேசியக் கொள்கைமட்டத்தில் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

நிலம் மற்றும் இயற்கை வளங்களைப் பொறுத்தவரை வடமாகாணத்தின் விவசாய மற்றும் கடற்றொழில் சமூகங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்புக்கும் மனிதமேம்பாட்டுக்கும் முக்கியமான விளைவுகளைக் கொண்ட சில விடயங்களை ஆய்வறிக்கை கவனிக்கத் தவறிவிட்டது. வன்னியிலும் யாழ் குடாநாட்டிலும் நிலம் மற்றும் நீர் வளங்களின் பங்கீடு மற்றும் நிலைபெறு பயன்பாடு தொடர்பான பிரச்சனைகளுண்டு. நில அபகரிப்பு (சிறியளவிலும் பெரியளவிலும்), நிலமின்மை, நிலவுரிமை தொடர்பாகத் தீர்க்கப்படாத தகராறுகள், ஊரிலே குடியிராதோரின் (பெரும்பாலும் வெளிநாட்டில் வாழ்வோரின்) நிலச்சொத்துக்கள், அரசநிலங்களைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அல்லது புனித பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தி மூடுவதன் மூலம் காடுகளுக்கும், மேய்ச்சல்நிலங்களுக்கும் மக்களுக்கு மரபுரீதியாக இருந்த தொடர்புகளையும் உரிமைகளையும் மறுத்தல், இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள  தனியாருக்குச் சொந்தமான கணிசமான நிலப்பரப்புக்கள் போன்றன நன்கறியப்பட்ட பிரச்சனைகள். யாழ்ப்பாணத்தில் வளமான விவசாய நிலங்கள் வீட்டுநிலச் சொத்துக்களாக மாற்றப்படும் போக்குத் தொடர்கிறது. இதுவரை இடம்பெற்றதை மீட்க முடியாமலிருக்கலாம் ஆயினும் எஞ்சியிருக்கும் வளமான விவசாய நிலங்களைக் காக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம். குடாநாட்டின் நிலத்தடி நீரின் குறைதலும் தரச்சிதைவும் இன்னுமொரு பாரிய பிரச்சனையாகும்.

பாக்குநீரிணையில் சிறிய அளவில் கீழ்மட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் வடக்கு மீனவர்கள் இந்தியாவிலிருந்து பெருந்தொகையில் உட்புகும் உயர்சக்திவாய்ந்த பெரும்படகு மீன்பிடியாளரின் செயற்பாடுகளினால் ஒரு சர்வதேச எல்லைத் தகாராறில் மாட்டப்படுகின்றனர். இந்தப் பாரிய அசமத்துவமான போட்டியில் வடக்கு மீனவர்கள் நிரந்தர இழப்பாளர்களாகிவிட்டனர். ஒரு அறிக்கையின்படி 2500க்கு மேற்பட்ட இந்தியப் பெரும்படகுகள் இலங்கை நீர்ப்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக்கப்பட்ட மீன்பிடிக் கருவிகளையும் வழிமுறைகளையும் பயன்படுத்துகிறார்கள் என்பதும் அறியப்பட்டதே. இதனால் மீன்வளங்களின் இழப்பு மற்றும் தரச்சிதைவு இடம்பெறும் ஆபத்து மிகவும் அதிகமென்பதை மறுக்கமுடியாது. இந்தப் பிரச்சனை நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளபோதும் நடைமுறைப் படுத்தக்கூடிய ஒரு தீர்வு இதுவரை காணப்படவில்லை. முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இலங்கையின் தெற்கிலிருந்துவரும் மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையே தகராறுகள் தோன்றியுள்ளன. 

பாதிக்கப்பட்டவர்கள் தமது வாழ்வாதாரங்களை நிலைபெறுவகையில் மீள்கட்டியெழுப்ப உதவும் விதத்தில் இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும். இவை அதிகாரப்பகிர்வில் அரசநிலத்தின்மீதான (மற்றைய இயற்கை வளங்கள் உட்பட) அந்தஸ்துப் பற்றிய சர்ச்சையுடனும் தொடர்புள்ள பிரச்சனைகள். ஆய்வறிக்கை மாகாணத்தின் விவசாய அபிவிருத்தி தொடர்பாக வீட்டுக்குடும்பத்தின் தாக்குப்பிடிக்கும் ஆற்றல், உணவுப் பாதுகாப்பு (food security),நிலைபெறுசக்தி போன்ற அம்சங்களைச் சிலவகையில் விரிவாகக் கையாண்டுள்ளது. இவை வேண்டியவையே அத்துடன் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களும் பயனுள்ளவை. ஆயினும் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளைத் தவிர்க்கமுடியாது. மேலும் கடற்றொழிலுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறியுள்ளது ஆய்வறிக்கை. 

நிலம் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி மேலும் வெளிப்படையான ஒரு விமர்சன நிலைப்பாட்டை எடுப்பது அவசியம். நிலத்தை (அத்துடன் மற்றைய இயற்கை வளங்களையும்)வெறுமனே ஒரு உற்பத்திச் சாதனமாக மட்டுமே கணிப்பது நிலைபெறு அபிவிருத்தி பற்றிய ஒரு ஆழமான பார்வையுடன் ஒத்திசையக் கூடியதல்ல. ஒரு உற்பத்திச் சாதனமென்றவகையில் நிலத்தைத் துண்டாடவும், தனியுடைமையாக்கவும், ஒரு சந்தைப் பொருளாதாரத்தில், பண்டமயமாக்கவும் முடியும். மறுபுறம், பரந்த அர்த்தத்தில் நிலமெனும்போது பரந்துபட்ட முழுச் சூழலையும் அது குறிக்கிறது. அந்த, அதாவது பரந்துபட்ட சூழலெனும், அர்த்தத்தில் நிலம் துண்டாடப்படமுடியாத, பண்டமயமாக்கப்படமுடியாத ஒரு பொதுப் பொருளாகிறது. இந்த முரண்பாடு ‘தனியார்-சமூக’(private-social)  ‘செலவு-பயன்’ (cost-benefit) பகுப்பாய்வின் நுண்கணிதத்தின் மையத்திலுள்ளது. நடைமுறையில் தனியாரின் செயற்பாடுகளின் விளைவாகவரும் சகல சமூகரீதியான செலவுகளும் சமூகரீதியான பயன்களும் அளக்கப்படக் கூடியவையல்ல, ஆயினும் இந்த முரண்பாடு பற்றிய ஆழமான புரிந்துணர்வு வளங்களின் மற்றும் சூழலின் நிலைபெறு ஆட்சிமைக்கு அடிப்படையானது. உள்ளூர் சமூகங்களை அந்நியப்படுத்தி அரச நிலங்களை ‘காப்பு’ அல்லது ‘புனித’ இடப்பரப்புக்களாக மூடுவது நிலைபெறு அணுகுமுறைக்கு உகந்த வழிமுறையல்ல. அது வளங்கள் தொடர்பான நிரந்தர முரண்பாடுகளுக்கே வழிவகுக்கும். உல்லாசத்துறை விருத்தி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற இடம்பெறும் கடற்கரையோர வளங்களின் தனியுடைமையாக்கலினதும் மூடலினதும் சமூக மற்றும் சூழல்ரீதியான செலவுகள் பற்றிய முழுமையான மதிப்பீடுகளும் இனிமேல்தான் மேற்கொள்ளப்படவேண்டும். நிலைபெறு அபிவிருத்திக்காக வாதிடுவோர் இணை-பரிணாமப்போக்குச் (co-evolutionary) சிந்தனையால் ஒளியூட்டப்படும் ஒரு அணுகுமுறையைப் பயன்படுத்துவது பற்றிச் சிந்திப்பது பொருத்தமானது. சமூகம்-இயற்கை உறவுகளை அறியவும் வெப்பநிலை மாற்றம் மற்றும் இயற்கை அழிவுகள் பொன்ற சூழ்நிலைகளில் தாக்குப்பிடிக்கும் ஆற்றலைக் கட்டியெழுப்பும் மற்றும் மாறும் நிலைமைகளுக்கேற்பத்  தகவமைக்கும் போக்குகளைப் புரிந்து கொள்ளவும் அத்தகைய அணுகுமுறை ஒரு வழியாகிறது. அதிகாரப் பகிர்வு மாகாணத்தின் வள மற்றும் சூழலின் ஆட்சிமையில் மக்கள் அமைப்புக்கள் பங்குபற்றும் உரிமையை உள்ளடக்கவேண்டும்.

கவனிக்கப்படவேண்டிய சில விடயங்களையும் பிரச்சனைகளையும் இந்தக் கட்டுரையில் எழுப்பியுள்ளேன். வேறு பல பிரச்சனைகளும் உண்டென்பதில் சந்தேகமில்லை. மக்களுக்கு நெருக்கமாக எடுத்துச் செல்லும்வகையில் கட்டமைப்புப் பற்றி மேலும் விமர்சனரீதியிலான மறுசீராய்வு தேவைபடலாம். மாகாண அபிவிருத்தித் திட்டமொன்றை நோக்கிய செயற்பாட்டில் மக்களின் பங்குபற்றல் முழுமையான முன்தேவை. இந்தச் செயற்பாட்டுப் போக்கினை மாகாணசபை நியாயபூர்வமாக எப்போது பொறுப்பேற்கப்போகிறது எனும் கேள்வி மிகவும் பொருத்தமானதே. அடுத்துவரும் மாகாணசபையிடம் இதைச்செய்யவல்ல தூரநோக்கும் திடசித்தமும் இருக்குமென நம்புவதை மட்டுமே இன்றைய காலகட்டத்தில் ஒருவரால் செய்யமுடியும். இயலுமைப் படுத்தும் சூழலை உருவாக்கி அதற்கும் அப்பால் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வினை நோக்கி நகரும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டா எனும் கேள்வியும் மிகவும் பொருத்தமானதே.

சமுத்திரனின் குறிப்பு: இந்தக் கட்டுரையை 2019 மார்ச் 22 ஆம் திகதி இலங்கைப் பத்திரிகை தினகரன் எனது பெயருடன் பிரசுரித்தது. ஆனால் அதில் (தமிழில் சேந்தன்) எனும் முற்றிலும் தவறான தகவலும் அடைப்புக் குறிக்குள் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரை நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை மூலமாகக் கொண்டு என்னாலேயே முற்றிலும் எழுதப்பட்டது என்பதைத் தெரியத்தருகிறேன்.

அழகும் அர்த்தங்களும் ததும்பிய அசையும் கவிதைகளும் ஞானரதம் நடன நாடகமும் – நோர்வே கலாசாதனா கலைக்கூடம் வழங்கிய அரங்கம் 2018

 

சமுத்திரன்

இந்த வருடம் பத்தாம் மாதம் பதின்நான்காம் திகதி நோர்வேயின் பாரும் (Bærum)கலாச்சார மையத்தில் கவிதா லட்சுமியின் நடன அமைப்பிலும் நெறியாள்கையிலும் கலாசாதனா கலைக்கூடம் வழங்கிய ‘அரங்கம் 2018’ ஆக்கத்திறனுடன் அழகாக உருவாக்கப்பட்ட ஒரு மாலை நிகழ்ச்சி என்பதே இந்த இரசிகனின் அபிப்பிராயம். நான் முன்னர் விரும்பி வாசித்த புதுக்கவிதைகள் பாடல்களாக இசையமைக்கப்பட்டு பரதநாட்டியத்தினூடாக உயிர்ப்புடன் அசைவதைக் காண்பதும் கேட்பதும் எனக்கு ஒரு புதிய அனுபவமே. உரைநடையில் பாரதி வடித்த கற்பனார்த்தப் பயணங்களைச் சொல்லும் ‘ஞானரதம்’ கவிதைமயமாக்கப்பட்டு அதில் அவரின் கவிதைகள் பலவற்றின் பகுதிகளையும் உள்ளடக்கிய கலைத்துவமான நடனநாடகமாக மேடையில் பார்த்ததும் புதிய அனுபவமே. நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பும் மண்டபத்தின் ஒலி, ஒளி தொழில்நுட்பமும் அதன் கையாள்கையும் சிறப்பாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கவை. முழு நிகழ்வும் ‘அசையும் கவிதைகள்’, ‘ஞானரதம்’ என இரண்டு பாகங்களாக மேடையேற்றப்பட்டது. கோமதிநாயகம், அஸ்வமித்ரா, கணேசன் சுந்தரமூர்த்தி ஆகியோர் செவிக்கினிய அதேவேளை கவிதைகளின் செய்திகளுக்கேற்றவகையில் இசையமைத்துள்ளார்கள். இந்தியாவிலேயே பாடல்கள் பதிவுசெய்யப்பட்டன என அறிகிறேன்.

முதலாவது பகுதி (தில்லானா உட்பட)பதினெட்டுக் கவிதைகளை உள்ளடக்கியது. ஈழ, புலம்பெயர், தமிழகப் புதுக்கவிதைகளுடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நோர்வீஜிய, பாலஸ்தீன மற்றும் பாரசீகக் கவிதைகளும் இவற்றுள் இருந்தன. மகாகவியின் ‘ஊரெல்லாம் கூடி’ (‘தேரும் திங்களும்’), வில்வரத்தினத்தின் ‘புதுயுகச் சங்கொலி’, இளவாலை விஜயேந்திரனின் ‘அப்பா பிள்ளை பேசிக்கொண்டது’, கவிதாலட்சுமியின் ‘உள்ளத்தணல்’ மற்றும் ‘பெண்’, மேத்தாவின் ‘தந்தைக்கு ஒரு தாலாட்டு’, புதுவை இரத்தினதுரையின் ‘யாரோடு பேச’, பிரமிளின் ‘செவ்வானம்’, பாரதியின் ‘ஓடி விளையாடு பாப்பா’, ஊர்வசியின் காத்திருப்பு எதற்கு’, வெண்ணிலாவின் ‘யார் தேவர் யார் அசுரர்’, ஆத்மநாமின் ‘என்னை அழித்தாலும்’, இன்குலாப்பின் ‘மனிதம் என்றொரு பாடல்’, இவற்றுடன் ஹென்றிக் இப்சனின் ‘எனது நட்சத்திரத்திற்கு’, பாலஸ்தீனக் கவிஞர் தாவ்ஃபிக் சையத்தின் கவிதை (M. A. நுஃமானின் மொழிபெயர்ப்பு), பாரசீகக் கவிஞர் ரூமியின் கவிதைகள் (ரூபன் சிவராஜாவின் மொழிபெயர்ப்பு)எல்லாமே இசையுடன் இணைந்த கலாசாதனா கலைக்கூடத்தின் மாணவிகளின் நடனத்தால் புதுமெருகு பெற்றன.

இந்தக் கவிதைகள் பல்வேறு உணர்வுகளையும் செய்திகளையும் தருவன. இவற்றின் உள்ளடக்கங்கள் இயற்கை, சமூக ஒடுக்குமுறை, சாதிய எதிர்ப்பு, விடுதலை, போராட்டம், பெண்ணுரிமை, காதல், மனித நேயம், துணிவு, தனிமை,  எனப் பல அம்சங்களைக் கொண்டன. இத்தகைய கருப்பொருட்களைக் கொண்ட புதுக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருப்பது வரவேற்கப்படவேண்டியது. இவைதரும் செய்திகளை அழகியல்பூர்வமாக வடிவமைக்க பரதநாட்டிய அசைவுகளைப் பயன்படுத்த முடியுமமென்பதையும் செய்து காட்டியிருக்கின்றனர் கவிதா லட்சுமியும் அவரது குழுவினரும். எனக்குத் தெரிந்தவரை புதுக்கவிதையை நடனமாக வடிவமைப்பது ஒரு புதிய பரிசோதனை. கலைவடிவத்திற்கும் அது உள்ளடக்கும் பேசுபொருளுக்குமிடையிலான உறவு பற்றிக் கலாசாதனா கலைக்கூடம் சொல்வது நமது கவனத்தை ஈர்க்கிறது:

‘ஒரு கலைவடிவத்தினூடாக நாம் கொண்டுவரும் பேசுபொருள் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. காலத்துக்குக் காலம் வெவ்வேறுவகையில் அவை வெளிப்படலாம்….பரதக்கலையின் பேசுபொருளை அகலப்படுத்தி, மனித மனத்தின் ஆத்மார்த்தமான எல்லாத் தேடல்களுமே உயர்ந்த தன்மை கொண்டவையெனும் பரிமாணத்திற்கு நாட்டியக்கலையில் பேசுபொருளை எடுத்துச் செல்லவேண்டுமென்ற நோக்குடனேயே இந்த நிகழ்வை வடிவமைத்துள்ளோம்.’ (நிகழ்வின் அறிவிப்புத் தாளிலிருந்து)

முன்னோக்கிய பார்வை. துணிகரமான பரிசோதனை. இது ஒரு விவாதத்திற்கான அழைப்புபோலும் ஒலிக்கிறது. தொன்மை மிக்கது மாற்றமுடியாதது எனக்கருதப்படும் கலைவடிவங்கள் காலப்போக்கில் மாற்றத்திற்குள்ளாவதன் மூலமே முற்றாக மறையாமல் தொடர்கின்றன என்பதே வரலாறு தரும் பாடம். இந்த விவாதத்திற்குரிய விடயத்தைத் தொடர்வது இந்தக் குறிப்பின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது.

அந்த மாலையின் மகுடம்போலான நிகழ்ச்சியான ‘ஞானரதம்’ பற்றிச் சிலவார்த்தைகள். இது கனதியான பொறுப்புக்களைக் கொண்ட ஒரு திட்டத்தின் நிறைவேற்றம் எனக் கூறலாம். பாரதியின் ஞானரதத்தை நடன நாடகமாகப் பிரதியாக்குவதிலிருந்து அதற்குரிய இசையமைப்பு, நடனங்களின் தேர்வு, நடிகர்களின் பயிற்சி, மேடையமைப்பு எல்லாவற்றையுமே சிறப்பாக ஒருங்கிணைத்து அரங்கேற்றியிருப்பது ஒரு பெருமுயற்சியின் வெற்றி என்பது தெளிவு. இந்த நடன நாடகத்தில் ஐம்பது பேர் மேடையில் தோன்றினர். இவர்களில் நாற்பத்தியேழுபேர் கலாசாதனா கலைக்கூடத்தின் மாணவிகள். மற்ற மூவரில் இருவர் பாரதியாகவும் ஒருவர் மன்மதனாகவும் நடித்தனர்.

நடன நாடகப் பிரதியாக்கத்தில் பாரதியின்  இருபத்தைந்து கவிதைகளிலிருந்து பொருத்தமான பலவரிகளை உரிய இடங்களில் இணைத்து ஞானரதத்தைச் செழுமையாக மீளுருவாக்கியுள்ளார்கள். இதனால் இந்த நடன நாடகம் பாரதியின்சமூக விமர்சனப் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை அவரின் பல்பரிமாண ஆளுமையையும் அதன் முரண்பாடுகளையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. பலவகையில் தனது காலத்திற்கும் அப்பால் முன்னேறிய அறிவையும் புரட்சிகர சமூகப் பார்வையையும் கொண்டிருந்த பாரதி மறுபுறம் ஒரு ஆழ்ந்த தெய்வபக்தனாக வேதத்தில் ஈடுபாடுள்ள ஆத்மீகவாதியாகவுமிருந்தான். இந்த முரண்பாட்டினை ஆராய்ந்த சிலர் பாரதியின் பார்ப்பனிய எதிர்ப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். முன்னைய காலத்தில் பார்ப்பனர் வேதவிதிப்படி ஒழுகியதை வியந்தும் பின்னாளில் அவர்களின் சீரழிவை வன்மையாகத் தாக்கியும் எழுதியுள்ளான். இதை ஞானரதத்திலும் சந்திக்கிறோம். அத்துடன் இன்னொரு முரண்பாட்டையும் காண்கிறோம். அதுதான் தர்மத்தை அறிந்தபின்னும் போகத்திலிருந்து விடுபடமுடியாத மனநிலை. நீண்ட புனைகதையான ஞானரதத்தை அறிந்திராத வாசகருக்காக மிகக்குறுகிய சுருக்கமொன்றைக் கீழே தருகிறேன்.

மிகுந்த செல்வமில்லாமை உலகின் இழிவான இன்பங்களை மட்டுமல்ல உயர்ந்த இன்பங்களைக் கூடப் பெறுவதற்குத் தடையாயிருக்கிறதே என வருந்தும் பாரதியின் மனம் அவனுக்கு ‘ஈசன் ஞானம் என்பதோர் தெய்வீகரதத்தைக் கொடுத்திருக்கின்றார் அது விரும்பிய திசைக்கெல்லாம் போய்விரும்பிய காட்சிகளையெல்லாம் பார்த்துவரக்கூடிய வல்லமை உடையது’ என ஆலோசனை வழங்குகிறது. கனவு மெய்ப்படவேண்டும், வானகம் இங்கு தென்படவேண்டுமென மண்ணுலகில் மாற்றத்தை வேண்டிய பாரதி ஞானரதத்தில் உபசாந்திலோகம், கந்தர்வலோகம், சத்தியலோகம், தர்மலோகம் என்ற நான்கு கற்பனை உலகங்களுக்குப் பயணத்தை மேற்கொள்கிறான். கதையில் வரும் மண்ணுலகத்துடன் ஐந்து உலகங்கள். அவனுக்கு ‘மனம் என்ற மோகினியிடத்தில் காதல் அதிகம்’ என்பதால் உபசாந்தி லோகத்திற்கு அநுமதி கிடைக்கவில்லை. ‘மனம் எனும் பொய்ப்பொருளை’ விட்டுவிட்டால் மட்டுமே அந்த லோகத்திற்குள் பிரவேசிக்க முடியும். உள்ளே சென்றால் வெளியேவரமுடியாது. பாரதி அதற்குத் தயாரில்லை.

மறுநாள் ‘துன்பக்கலப்பற்ற இன்பங்கள் நிறைந்திருக்கும் உலகத்திற்குப் போய்வருவோமே’ என அவன் மனம் சொல்வதற்கிணங்க ஞானரதத்தில் கந்தர்வலோகம் செல்கிறான். அங்கே பர்வதகுமாரி என்ற கந்தர்வ அழகியைச் சந்திக்கிறான். அவனது மண்ணுலக சமூகத்தினரால் மதிக்கப்பெறும் ஆசாரதர்மங்களுக்கு விரோதமானதெனக் கருதப்படும் காட்சிகளைக் காண்கிறான் போகங்களை அனுபவிக்கிறான். அவளுடன் வானத்தில் பறக்கிறான். மது அருந்துகிறான். அங்கு எல்லாமே அழகென லயிக்கிறான். எல்லாம் இன்பமயம். ஆனால் ஒருநாள் தனியேஇருந்தபடி இன்பக் களஞ்சியமாகிய கந்தர்வலோகம்கூடத் தன்மனதிற்குத் திருப்திதரவில்லையே என உணர்கிறான். அனுதினமும் ஒன்றையே திரும்பச் செய்வதில் திருப்தியற்ற நிலையில் மறுநாள் சத்தியலோகத்திற்கு ஞனரதத்தில் பயணிக்கிறான். மாசற்ற ஒளிமிகுந்த அங்கே வித்தியாசமான அநுபவம். உண்மையை தேடத் தனியே துணையின்றிப்போகவேண்டுமென உணர்கிறான். சத்திய சொரூபமான பிரமனை ஒரு கிரணத்தைப் பற்றியபடி அணுஅணுவாக நகர்ந்தே நெருங்கமுடியும் எனும் தொனியைக் கேட்டவன் அதில் நாட்டமின்றிச் சத்தியலோகத்தைச் சுற்றிப் பார்க்கிறான். உண்மைக்குப்பல வர்ணங்களுண்டென அறிகிறான். சத்தியலோகத்து அநுபவம் அவனுக்குக் கந்தர்வலோகத்தின் சுகங்களை நினைவூட்டுகிறது. அங்கு போகவேண்டும் போலிருக்கிறது. அப்போது மனத்தின்மீது ஆத்திரமடைந்து அதை கொல்ல முயற்சிக்கிறான்.  மீண்டும் ஒரு தொனி சொல்கிறது. ‘மனதைக் கொல்லமுடியாது….வேடிக்கை பார்க்கவந்தவனுக்கு சத்தியம் புலப்படாது. கந்தர்வ நாட்டிலே போய் இன்பம் கண்டது போல் இங்கும் உண்மையைக் கண்டுவிடாலமென்ற பேதமையெண்ணத்தை விட்டுவிடு.’ எனக்கூறிய தொனி அவனை ஒருமுறை தர்மலோகத்திற்குப் போய் அங்குள்ள அநுபவங்களை அறிந்துவரச் சொல்கிறது.

இந்தக் கட்டத்தில் கனவு கலைகிறது. மண்ணுலக நிசவாழ்வின் ஏழ்மையை, குடும்பப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். மனைவியுடன் வாக்குவாதம். மண்ணுலகத்தின்மீது ஆத்திரமடைகிறான். இதில் மனிதர் வசிக்கலாமா? இது துன்பகளம், சிறுமைக் களஞ்சியம், இது நரகம் என்று திட்டித்தீர்க்கிறான். சில நாட்களின்பின் மீண்டும் ஞானரதமேறி தர்மலோகம் செல்கிறான். அங்கே வழிகாட்டியாக வந்த தபோமுனியிடம் தான் பிராமண தர்மத்தையும் சத்திரிய தர்மத்தையும் அறிய விரும்புவதாகக் கூறுகிறான். வழிகாட்டி பாரதியை யமசன்னிதானத்திற்கும் பின்னர் கண்வமுனியிடமும் அழைத்துச்செல்கிறார். கண்வமுனி வர்ணாச்சிர தர்மம் பற்றிய பாரதியின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார். பிறக்கும்போது மனிதர்களெல்லாம் மிருகங்களாகவே பிறக்கிறார்கள். வர்ணம் பிறப்பால் வருவதில்லை. பயிற்சியினாலும் குணகர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகின்றார்கள். சகல தேசங்களிலும் வர்ணாச்சிரம தர்மம் உண்டு ஆனால் பாரதத்தில் அது சீர்கெட்டுப்போயிருக்கிறதால் அங்கு வறுமை, நோய், அடிமைத்தனம் போன்ற இழிவுகளில் மனிதர் விழுந்துள்ளனர். பிராமண வர்ணத்தினதும் சத்திரிய வர்ணங்களின் தர்மங்கள் பற்றியும் மற்றைய வர்ணங்களான வைசிய, சூத்திர வர்ணங்களின் தர்மங்கள் பற்றியும் கண்வமுனி போதிக்கிறார். அந்தப் போதனையை ‘அடங்காத தாகத்துடன்’ கேட்டுப் பரவசமடைகிறான் பாரதி. ஆனால் பர்வதகுமாரியின் நினைவு மீண்டும் வருகிறது. அவள் வருகிறாள். அவளுடன் போகப் பரவசத்தில் இருக்கும் கணத்தில் ‘படேர்’ என்ற ஒரு சத்தத்தினால் மூர்ச்சை போட்டு விழுந்தவன் கண்விழித்தபோது மீண்டும் பழையபடி தன் வீட்டில் இருப்பதை உணர்ந்தவன் ‘தர்மத்தை விட்டேனே’ எனக்கண்ணீர் சிந்துகிறான். கந்தர்வலோகத்தில் அநுபவித்த போகத்தை மனதால் விட்டுவிடமுடியவில்லை. வர்ணாச்சிரம தர்மத்தில் பாரதி காட்டிய ஈடுபாடு நான் ஏற்கனவே குறிப்பிட்ட முரண்பாட்டையும் அது தொடர்பான சர்ச்சையையும் நினைவூட்டுகிறது. (இந்த விவாதத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் தொடர்வோம்.)

பல கற்பனார்த்தக் காட்சிகளை, நிகழ்வுகளை, பலவித உணர்வுகளின் வெளிப்படுத்தல்களை, முரண்பாடுகளை,வர்ணணைகளை, கதையாடல்களைக் கொண்ட இந்தப் புனைகதையை ஒரு நடனநாடகமாகச் சமகாலத்துடனும் தொடர்புபடுத்தும் வகையில் மீளுருவாக்குவது ஒரு கனதியான பொறுப்புக்களைத் கொண்ட திட்டமெனெ நான் ஏற்கனவே கூறியது இப்போ மேலும் தெளிவாகியிருக்குமெனெ நம்புகிறேன்.நடன நாடகத்தில் சேர்க்கப்பட்ட பாரதியின் பலவகையான கவிதைத் துண்டுகளில் ஒரு சிலவற்றின் வரிகளை இங்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். பாரதியின் கவித்துவமிக்க பகற்கனவுகாணும் பழக்கத்தை காட்டும் ஒரு கவிதையிலிருந்து:

‘மாலைப் பொழுதில் ஒரு மேடைமிசையே

வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்

……;

நேரங்கழிவதிலும் நினைப்பின்றியே

சாலப்பல நற்பகற்கனவில்

தன்னை மறந்தலயந்தனில் இருந்தேன்’.

கந்தர்வலோகத்தில் பாரதி பர்வதகுமாரியைக் கண்டு மயங்கியபோது:

‘சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா!

சூரிய சந்திரரோ?

வட்டக் கரியவிழி கண்ணம்மா!

வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்;

நட்டநடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி!…’

சமூகநீதி பற்றி:

‘சூத்திரனுக்கொரு நீதி – தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

சாத்திரம் சொல்லிடுமாயின் – அது

சாத்திரம் அன்று சரியென்று கண்டோம்’

இப்படியாகப் பாரதியின் பல கவிதைகளை நினைவூட்டும் வரிகள்  நடனநாடகத்திற்குப் பொலிவைக் கொடுக்கின்றன. ஐம்பது நடிகர்கள் சிறப்பாகப் பங்களித்த இந்த நிகழ்ச்சியில் ஒரு சிலரைப் பற்றி மட்டும் குறிப்பிடுவது சரியா என்ற கேள்வி எழுகிறது. ஆயினும் ஞானரதத்தின் சில பாத்திரங்கள் பற்றிச் சொல்லாமல் இருக்கமுடியாது. பாரதியாக நடித்த இருவர், உபசாந்திலோகத்தின் வாயிற்காவலனாக நடித்தவர், பர்வதகுமாரியாக நடித்தவர் மற்றும் முனிவர்களாக நடித்தவர்கள் தமது பாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்தனர். பாரதியாக நடித்தவர்களில் ஒருவர் நோர்வேயில் வாழும் சிவதாஸ் மாஸ்டர் மற்றவர் இலங்கையின் பொல்ககாவெலவைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் ரஷான் சம்சூல் எனும் இளைஞர். பர்வதகுமாரியாக வந்தவரின் நடனமும் முகபாவங்களும், அவரும் பாரதியாக நடித்த சம்சூலும் இணைந்து நடனமாடிய காட்சியும் மிக நேர்த்தியானவை என நிகழ்ச்சி முடிவில் பலர் சொல்லக்கேட்டேன். எனது அபிப்பிராயமும் அதுவே. அரங்க  அமைப்பு, ஆடை வடிவமைப்பு, மற்றும் ஒலி, ஒளி தொழில்நுட்பமும் அவற்றைக் கலைத்துவமாகக் கையாண்டவிதமும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு இன்றியமையாத பங்கினை வகித்துள்ளன.

கலாசாதனா கலைக்கூடத்தின் அரங்கம் 2018 நிகழ்வில் நாம் மேடையில் கண்டவர்களின் உழைப்புக்கும் பங்காற்றலுக்கும் பின்னுள்ள பலரின் பங்களிப்பை மறந்துவிடலாகாது. இந்த வகையில் கவிதா லட்சுமியின் செயற்பாட்டிற்கு உதவிய கலைஞர்களின் பங்களிப்பு மற்றும் மாணவிகளின் பெற்றோர்களின் ஒத்துழைப்பு முக்கியமானவை. மண்டபத்தை நிறைத்திருந்தோரின் உற்சாகமான வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்விற்காகக் கவிதா இரண்டு வருடங்கள் உழைத்ததாக அறிகிறேன். இவ்வாறான பிரயாசம் ஒரேயொரு மேடையேற்றத்துடன் நின்றுவிடக்கூடாது என்பதே எனதும் நிகழ்வைப் பார்த்து இரசித்த பலரினதும் ஆதங்கம்.

 

 

அபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும்

 

 

சமுத்திரன்

அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது.  உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘வடக்கின் வசந்தம்’ அரசாங்கத்தின் காட்சித் திட்டங்களாயின. அன்றைய அரசாங்கத்தின் கொள்கை பற்றி 2003 ஆம் ஆண்டு ‘அபிவிருத்தி மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா’எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையிலிருந்து சில வார்த்தைகளை இங்கே நினைவுகூருவது பொருத்தமாயிருக்குமென நம்புகிறேன்.

‘ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரங்களை மீள்நிர்மாணித்தல் ஒரு அவசிய தேவை என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதேபோன்று அழிவுக்குள்ளான அவர்களின் உட்கட்டுமானங்களின் புனரமைப்பும் விருத்தியும் அவசியம் என்பதையும் மறுப்பதற்கில்லை. வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் போரினால் மட்டுமன்றி சுனாமியினாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் எண்ணிலடங்கா.

ஆனால் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் காரணமாக இருந்த தேசியப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வின் அவசியத்தை ஒதுக்கிவிட்டு அபிவிருத்தியைமுன்வைப்பதும் அதையே அரசியல் தீர்விற்கு பிரதியீடாக காட்ட முயற்சிப்பதுமாகும். அபிவிருத்திக்கும் அரசியல் தீர்வுக்கும் இடையே நெருக்கமான உறவுண்டு ஆனால் முன்னையது பின்னையதின் பிரதியீடாக இருக்கமுடியாது. அரசியல் தீர்வின் தவிர்க்க முடியாத அவசியத்தினையும் அவசரத்தினையும் ஏற்க மறுக்கும் ஒரு அரசாங்கத்தினால் மக்களின் தொடர்ச்சியான மனித மேம்பாட்டிற்கு உதவும் ஒரு அபிவிருத்திப் போக்கினை ஏற்படுத்த முடியுமா எனும் கேள்வி நியாயமானதே. இது இரண்டாவது விடயத்திற்கு இட்டுச் செல்கிறது. அரசாங்கமும் அதன் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் அறிவாளர்களும் பிரச்சாரகர்களும் மிகைப்படக் கூறும் அபிவிருத்திஎன்பதன் உள்ளடக்கம் தான் என்ன?(மேலும் அறிய: https://samuthran.net/2017/04/24/அபிவிருத்தி-மனித-மேம்ப/ )

இன்றைய அரசியல் சூழல் வித்தியாசமானது. ஆயினும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கேள்விகளும் காலாவதியாகிவிடவில்லை. இந்தக் கேள்விகளுக்கான பதில்களின் தேடல் நம்மை தமிழ் அரசியலுக்கு அப்பால், வடக்கு கிழக்குக்கு அப்பால் அழைத்துச் செல்கின்றன. ஜனாதிபதி சிரிசேனா அமைத்த வடக்குக் கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவது அந்த அமைப்பின் அரசியல் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வெளிவந்த ஒரு அறிக்கையின்படிகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் பின்வரும் கருத்தை செயற்குழுவின் முதலாவது கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ‘அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழருக்கான தீர்வு விடயத்தை அரசு மூடிமறைக்க முடியாது. … அபிவிருத்திக்குக் கூட்டமைப்பு வழங்கும் ஆதரவு தீர்வுக்கான வாசலைத் திறப்பதற்கானதேயன்றி அதில் வேறெந்த நிகழ்ச்சி நிரலும் கிடையாது.’ சமீப காலம்வரை அரசியல் தீர்வின்றி அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கத்துடன் பேசவோ ஒத்துழைக்கவோ தயாராக இல்லை எனும் நிலைப்பாட்டையே கூட்டமைப்புக் கொண்டிருந்தது. அது மட்டுமன்றி வடக்கு கிழக்கு தமிழ் மக்களினால் தெரியப்பட்ட பிரதிநிதி என்றவகையில் அம்மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட, போருக்குப் பின்னான, அபிவிருத்தி பற்றி இன்றுவரை கூட்டமைப்பிடம் ஒரு தெளிவான, சுதந்திரமான கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை.தீர்வுக்கான வாசலைத் திறக்கும் ஒரு உபாயமாக அபிவிருத்திச் செயலணியில் பங்குபற்றும் முடிவில் நியாயமிருக்கலாம் ஆயினும் இதை எப்படித் தாம் செயற்படுத்தப்போகிறோமென்பது பற்றிக் கூட்டணி சொல்லவில்லை. பாராளுமன்றத்தில் மற்றும் இதுவரையிலான பேச்சுவார்த்தைகளுக்கூடாக அடையமுடியாத எவற்றையோ இந்தச் செயலணியில் பங்குபற்றுவதற்கூடாக அடையமுடியலாம் அல்லது அந்த முயற்சிகளுக்கு இந்தப் பங்குபற்றல் உதவக்கூடும், அதாவது தமது அரசியல் நம்பகத்தன்மையையும் பேரம்பேசும் பலத்தையும் அதிகரிக்க இது பயன்படும், எனும் நம்பிக்கை கூட்டமைப்பின் தலைமைக்கு இருப்பது போல் தெரிகிறது. உதாரணமாக, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் இனவாதநோக்கில் திட்டமிட்ட குடியேற்றத்தைத் தடுக்க மற்றும் இராணுவம் தொடர்ந்தும் கைப்பற்றியிருக்கும் மக்களின் நிலங்களை விடுவிக்க இந்தப் பங்குபற்றல் உதவலாமெனக் கூட்டமைப்பு நம்பக்கூடும். இதில் நியாயமிருக்கலாம்.

இங்கு ஒரு அரசியல் யதார்த்தத்தை மனங்கொள்ளல் தகும். போருக்குப்பின்னர் தமிழ்த் தரப்பின் அரசியல் பேரம்பேசும் பலம் ஒப்பீட்டுரீதியில் வீழ்ச்சியடைந்த நிலையிலே உள்ளது. இப்படிச் சொல்வது அதற்கு முன்னர் எப்போதும் அந்தப்பலம் உயர்வாக இருந்தது என்பதல்ல. போர்க்காலத்தில் சிலசந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளால் இராணுவரீதியில் எதிர்த்தரப்புடன் ஒருவித தற்காலிக சமநிலையை அல்லது நகரமுடியாநிலையை (stalemateஐ)ஏற்படுத்தமுடிந்ததால் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குச் சார்பான நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டது. ஆனால் இராணுவரீதியான வெற்றி தற்காலிகமாகக் கொடுத்த பேரம்பேசும் அனுகூலத்தை  நியாயமான யதார்த்தபூர்வமான அரசியல் இலாபமாக மாற்றவல்ல அணுகுமுறை புலிகளின் தலைமையிடம் இருக்கவில்லை. இது பேரினவாத ஆட்சியாளரின் மூலோபாயத்திற்குச் சாதகமாயிருந்தது.போருக்குப்பின்னான சூழலில் கூட்டமைப்பின் தலைவர்கள்தனிநாட்டுக் கோரிக்கையைவிட்டு  ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வையே தாம் கோருவதாக அறிவித்தனர். மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் கூட்டமைப்புக்குக் கிடைத்த அமோக ஆதரவும் வெற்றிகளும் பெரும்பான்மையான வடக்கு கிழக்குத் தமிழ்மக்கள் அதன் கொள்கைமாற்றத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பதைக் காட்டியது.

தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் தீர்வுபற்றிக் கூட்டமைப்புக்கு ஒரு நிலைப்பாடுண்டு. ஆனால் இங்கு விவாதத்திற்குரிய கேள்வி என்னவெனில் கூட்டமைப்பு அபிவிருத்தியை எப்படி அந்த அல்லது அதற்குக் கிட்டியஅரசியல் தீர்வுக்கான வாசலைத் திறக்கும் கருவியாகப் பயன்படுத்தப்போகிறது?இந்தக் கேள்வி இன்றைய இலங்கையையும் 30 வருட உள்நாட்டுப் போருக்குப்பின்னான வடக்கு கிழக்கையும் பொறுத்தவரை அபிவிருத்தி என்பதற்குக் கூட்டமைப்புக் கொடுக்கும் அர்த்தம் என்ன, விளக்கம் என்ன போன்ற கேள்விகளுக்கு இட்டுச்செல்கிறது. எனக்குத் தெரிந்தவரை இந்தக் கேள்விகளுக்கு இதுவரை கூட்டமைப்பு நேரடியாக முகம் கொடுத்ததாகத் தெரியவில்லை. இனிமேலாயினும் இதை அவர்கள் செய்யவேண்டிய அவசியத்தை அவர்களே ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஆனால் இங்கே ஒரு பிரச்சனை எழுகிறது. அபிவிருத்தியைப் பொறுத்தவரை அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதெனும் நிலைப்பாட்டையே கூட்டமைப்புக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதற்கூடாக அரசாங்கத்துடனான நல்லுறவைப் பலப்படுத்தி அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழலை உருவாக்கலாமென நம்புவதுபோல் படுகிறது. இந்த அணுகுமுறையின்படி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொள்வது ஒரு முன்நிபந்தனைபோலாகிறது. ஆனால் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை இன்று நாட்டில் ஒரு பாரிய சிக்கலுக்குக் காரணமாகியுள்ளது. 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP)கொண்டுவந்த நவதாராளத் திறந்த பொருளாதாரக் கொள்கையையே இன்றுவரையிலான அரசாங்கங்கள் பின்பற்றி வந்துள்ளன. உள்நாட்டுப்போர் காரணமாகவும் சந்தர்ப்பவாத அரசியல் நோக்கங்களுக்காகவும் இந்தக் கொள்கையில் காலத்துக்குக் காலம் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆயினும் உள்நாட்டின் விவசாய, ஆலைத்தொழில் உற்பத்தித்துறைகளின் விருத்தி,உற்பத்தித் திறனின் வளர்ச்சி, மற்றும் இவற்றுடன் நெருக்கமான உறவுள்ள தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் உட்கட்டுமானத்தின் விருத்தி மந்தநிலையிலேயே இருந்தன, இருக்கின்றன. இதனால் நாட்டின் தேசியப் பொருளாதாரம் சுலபமாக இடர்பாட்டுக்குள்ளாகக்கூடிய தன்மைகளைக் கொண்டிருந்தது. இன்றைய அரசாங்கம் மேலும் தீவிரமாக நவதாராளக் கொள்கையை அமுல்நடத்த முனைகிறது. இதனால் ஏற்கனவே பலவீனமடைந்த, ஊறுபடத்தக்க நிலையிலிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் மேலும் வெளிவாரிப் பொருளாதார சக்திகளின் பாதகமான தாக்கங்களுக்குள்ளாகிறது. ஆட்சியாளரும் அதன் ஆதரவாளர்களான நவதாராளவாத அறிவாளர்களும் இன்றைய உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிக்கும் அதன் சமூகரீதியான விளைவுகளுக்கும் முழுக்க முழுக்க நாட்டின் சக்திக்கு அப்பாற்பட்ட சர்வதேசமட்ட மாற்றங்களே காரணம் எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். இது பாதி உண்மை மட்டுமே. இதன் மறுபாதியை அவர்கள் மறைக்க முயன்றாலும் அது சுலபமல்ல. கடந்த பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நிலைபெறும் வழிகளில் விருத்திபெற வல்ல தேசிய பொருளாதார அடித்தளத்தைக் கட்டியெழுப்பும் கொள்கைகளைப் பின்பற்றவில்லை. இது தொடர்பான சில தகவல்களையும் விளக்கத்தையும் அபிவிருத்தி பற்றி மேலேகுறிப்பிட்டுள்ள எனது கட்டுரையில் காணலாம். பொருளாதாரம் வளரும்போது அதற்கான முழுப் புகழையும் தமக்குத்தாமே கொடுப்பதும், அது வீழ்ச்சியடையும்போது முழுப் பொறுப்பையும் வெளிவாரிப் படுத்துவதும் எல்லா அரசாங்கங்களும் கையாளும் தந்திரமாகும். இது பொது மக்களெல்லோருமே மூடர்களெனும் கணிப்பிலே செய்யப்படும் பிரச்சாரம்.

பொருளாதாரக் கொள்கையை விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத அரசாங்கம் மக்கள்மீது மேலும் சுமைகளைப் போடுகிறது.  ஏறிச்செல்லும் வாழ்க்கைச் செலவினால் சகல இன மக்களும் – குறிப்பாகத் தொழிலாளர்கள், சிறு பண்ணை விவசாயிகள், நிலமற்றோர், கடற்றொழிலாளர், வேலைவாய்ப்பற்றோர் மற்றும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோர் –  பாதிக்கப்பட்டுள்ளனர்.சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. அரசு வரிகளுக்கூடாகப் பெறும் வருமானத்தின் 80 வீதத்திற்கும் மேலானது பொதுமக்கள் வாங்கும் நுகர்பண்டங்கள்மீதான வரிகளுக்கூடாகவே திரட்டப்படுகிறது. செல்வந்தர்கள் வரிசெலுத்தாமல் அல்லது அற்பவரியுடன் மேலும் செல்வந்தர்களாகவே இந்தத் திட்டம் உதவுகிறது. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் அதன் விளைவுகள் பற்றி மக்கள் நலன்சார்ந்த ஒரு கொள்கைரீதியான விமர்சனத்தை, ஒருமாற்றுப் பார்வையை வெளிப்படுத்தும் நிலையில் கூட்டமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டின் இன, மத பிரிவுகளை ஊடறுத்துச் செல்லும் பொதுவான சமூக-பொருளாதார-சூழல் பிரச்சனைகள் பற்றி மக்கள் நலன்சார்ந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்குமிடையே புரிந்துணர்வை வளர்க்கும் ஒரு சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு மீண்டும் காணத்தவறியுள்ளது. அத்தகைய புரிந்துணர்வு விசேடமாக சிங்கள மக்கள் மத்தியில்அரசியல் தீர்வுக்குச் சாதகமான உணர்வை வளர்க்க உதவும் வாசலின் திறவுகோலாகலாம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டுமா? தேசிய இனப் பிரச்சனைக்கு ஒரு நிலைபெறும் நியாயமான அரசியல் தீர்வினைக் காண்பதற்கு சிங்கள மக்களின் கணிசமான ஆதரவு அவசியமென்பதை இப்போதாயினும் பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பலாம். ஆயினும் அதை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்குத் தமிழர் தரப்பிலிருந்து எவ்வகையான அரசியல் முன்னெடுப்பும் செயற்பாடுகளும் தேவை என்பது இதுவரைதமிழ்த் தேசியவாதிகளால் கவனிக்கப்படாத ஒரு முக்கிய கேள்வியாகும். இது ஒன்றும் ஏதோஅவர்களின் அறியாமையின் விளைவல்ல. உண்மையில் இது அவர்களின் குறுகிய தேசியவாதத்துடன் இணைந்த மேனிலை வர்க்கச்சார்பினையே காட்டுகிறது. இதுவே  கூட்டமைப்பின் தலைமையின் அரசியல் நடைமுறையை நிர்ணயிக்கிறது.

அபிவிருத்தியை அரசியல் தீர்வைத் தவிர்க்கும் ஒரு உபாயமாக அரசாங்கம் பயன்படுத்துவதை எதிர்ப்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றலுடைமைகளை வளர்க்கவல்ல அபிவிருத்திக்கான கோரிக்கையை நிராகரிப்பதாகாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகள் போரின் விளைவுகள், தொடரும் இராணுவமயமாக்கல், மற்றும் அரசாங்கத்தின் நவதாராளப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றுடன் தொடர்புடையவை. உதாரணமாக இடப்பெயர்வு, மனித இழப்புக்கள், போர்விதவைகளின் மற்றும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோரின் பிரச்சனைகள்,  நில மற்றும் கரையோர வளங்களின், கடல் வளங்களின் அபகரிப்பு. இவைபோன்ற விளைவுகள் அபிவிருத்தியுடனும் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வுடனும் தொடர்புடையவை. ஆகவே போருக்குப் பின்னான வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதார விருத்திக்கும் மனிதமேம்பாட்டிற்கும் முன்னுரிமை கொடுக்கும் அபிவிருத்திக் கொள்கையொன்றினை மக்களின் பங்குபற்றலுடன் உருவாக்கப்படுவது அரசியல் தீர்வுக்கான போராட்டத்துடன் இணைந்த ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படவேண்டிய ஒரு காலகட்டத்திலேயே நாம் இருக்கிறோம். வடமாகாண சபையைக் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியுடன் கைப்பற்றியபோது இந்தத் தேவை வெள்ளிடை மலைபோல் தெளிவாக மேலோங்கி நின்றது. அதை முறையாக அணுகும் சந்தர்ப்பமும் வந்தது. ஆனால் நடந்தது என்ன?வடமாகாண சபை பெருந்தொகையான தீர்மானங்களை நிறைவேற்றியது. இவற்றின் பலாபலன்கள் தனியாக ஆராயப்படவேண்டியவை. ஆனால் மாகாண மக்களின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட ஒரு அபிவிருத்தி பற்றிய கொள்கைப் பிரகடனம் கூட வெளிவரவில்லை. இந்த முதற் படியைக்கூட எடுக்காத மாகாண சபையிடமிருந்து மக்களைப் பங்காளர்களாகக் கொண்ட ஒரு மாகாண அபிவிருத்தித் திட்டத்தை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.ஆனால் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை அத்தகைய ஒரு அணுகுமுறையின் தேவை தொடர்கிறது. இதைக் காண மறுப்பது அரசாங்கம் அமுல்படுத்தும் மக்களின் நலன்களைப் புறக்கணிக்கும் நவதாராளக் கொள்கையின் மேலாட்சிக்குச் சரணடைவதற்கே இட்டுச் செல்லும் என்பதையே யதார்த்தத்தில் காண்கிறோம்.

 

  

 

 

 

Marx200 கார்ல் மாக்ஸ் 200 முதலாளித்துவம் தொடரும்வரை மாக்சியத்தின் பயன்பாடும் தொடரும்

  சமுத்திரன்

I

ஒரு மேலோட்டமான வரலாற்றுப் பார்வை

1818 ஆம் ஆண்டு மேமாதம் ஐந்தாம் திகதி பிறந்த மாக்சின் இருநூறாவது பிறந்ததினத்தை நினைவுகூரும் செயற்பாடுகள் உலகின் பல இடங்களில் இடம்பெறுகின்றன. நவீன காலத்தில் உலகரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளனாக மாக்ஸ் கருதப்படுகிறார். ஆயினும் அவர் வாழ்ந்த காலத்திலிருந்து இன்றுவரை அவரின் கோட்பாடுகளை நிராகரித்து மாக்சியம் முற்றாகக் காலாவதியாகிவிட்டது எனும் பிரச்சாரப்போக்கும் ஓய்ந்தபாடில்லை. மாக்சியம் அந்தமற்ற, குறைகளற்ற ஒரு கோட்பாடல்ல. மாக்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதியவற்றின் சில பகுதிகள் இன்றைய நிலைமைகளைப் பொறுத்தவரை காலாவதியாகிவிட்டன என்பது உண்மை. அவருடைய நீண்டகால ஆய்வின் பிரதான விளைவான ‘மூலதனம்’ நூலின் முதலாவது பாகத்தையே இறப்பதற்குமுன் அவரால் பூர்த்தி செய்து பிரசுரிக்க முடிந்தது. மாக்சியம் என்பது மாக்சுக்குப் பின்னும் தொடரும் ஒரு வேலைத்திட்டம். மாக்சின் கோட்பாடு உண்மையில் காலாவதியாகிவிட்டதா எனும் கேள்வி தோன்றுவதற்கு, ஆகக்குறைந்தது ஒரு பிரதான முன்நிபந்தனை பூர்த்தி செய்யப்படவேண்டும். அதுதான் முதலாளித்துவத்தின் அஸ்தமனம். ஏனென்றால் மாக்சின் பங்களிப்புக்களில் பிரதானமானது முதலாளித்துவம் பற்றி அவர் விட்டுச் சென்றுள்ள மிக ஆழமான ஆய்வும் விமர்சனமும் ஆகும். ஆகவே முதலாளித்துவம் இருக்கும்வரை அது பற்றிய மாக்சின் கோட்பாட்டின் பயன்பாடுபற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் தொடரும். மறுபுறம் மாக்ஸ் முதலாளித்துவத்திற்கு அப்பாற்பட்ட சமூகம்பற்றியும் – அதாவது சோஷலிசம், கொம்யூனிசம் பற்றி – எழுதியுள்ளதால் அதுபற்றிய அவரின் சிந்தனைகளின் பயன்பாடும் தொடரும் என நம்பலாம். மேலும் மாக்சின் எழுத்துக்கள் தத்துவம், அரசியல் பொருளாதாரம், வரலாறு, கலை இலக்கியம் போன்ற பல துறைகளைச் சார்ந்ததால் அவரின் பங்களிப்புக்கள் எல்லாமே சுலபமாக ஒரேயடியாகக் காலாவதியாகிப் போய்விடமாட்டா.  மாக்சியத்தின் பயன்பாடு பற்றிய இந்த நியாயமான கருத்து ஒன்றும் புதிதல்ல. ஆயினும் இது மீண்டும் பலரால் புதுப்பிக்கப்பட்டு சமகால நிலைமைகளுக்கேற்ப விளக்கப்படுகிறது.[1]   

சமீபகாலங்களின் ஒரு சுவராஸ்யமான புதினமென்னவெனில் முதலாளித்துவம் பற்றிய மாக்சின் ஆய்வின் பயன்பாட்டை உலகின் பாரிய முதலாளித்துவ நிறுவனங்களின் பொருளியல் ஆலோசகர்கள் சிலர் வலியுறுத்தி வருவதுதான். உதாரணமாக, UBS (Union Bank of Switzerland)இன் பொருளாதார ஆலோசகரான George Magnus 2011ஆம் ஆண்டு எட்டாம் மாதம் Bloomberg இல் ‘உலகப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற கார்ல் மாக்சுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவும்.  (´Give Karl Marx a Chance to Save the World Economy´) எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.[2] இன்றைய உலகப் பொருளாதாரச் சிக்கல்களையும் அவற்றினால் வரும் பீதி மற்றும் எதிர்ப்புக்களையும் புரிந்துகொள்ளப் போராடும் கொள்கை வகுப்பாளர்கள் கார்ல் மாக்சைப் படிப்பதன் மூலம் பயன்பெறுவார்கள் என அந்தக் கட்டுரையில் அறிவுரை கூறுகிறார். இத்தகைய கருத்துக்களை வேறுபல பூர்ஷ்வா பொருளியலாளர்களும் தெரிவிக்கிறார்கள். அவர்கள் தரும் ஆலோசனை என்னவெனில் முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சிக்கல் பற்றி மாக்ஸ் தரும் விளக்கம் சரியானது, பயனுள்ளது ஆனால் அவர் முன்வைக்கும் மாற்றுப் பாதை ஏற்புடையதல்ல, அவரின் விளக்கத்தின் உதவியுடன் இந்த அமைப்பைப் பாதுகாக்க உதவும் கொள்கையை வகுப்போம்! எதிரி முகாமின் ஆலோசகர்களின் அங்கீகாரம் மாக்சிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால் அதை அவர் விரும்பியிருக்க மாட்டார்.  தனது ஆய்வு தொழிலாள வர்க்கத்தின் நலனுக்கு உதவவேண்டும் என்பதே அவரின் நோக்காயிருந்தது. அதற்கு எதிரான நோக்கிற்கு அவரின் அறிவு பாவிக்கப்படுவது அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும். ஆனால் இருபத்தி ஓராம் நூற்றாண்டில் நவீன பொருளியலாளர்கள் மாக்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முன்வைத்த பொருளியல் கோட்பாட்டை அறிய முயற்சிப்பது ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது: முதலாளித்துவம் காலத்துக்குக்காலம் அநுபவிக்கும் பொருளாதார சிக்கல்களை ஆழப் புரிந்து கொள்ள உதவும் அணுகுமுறையை இன்றுவரை அவர்கள் பின்பற்றும் பொருளியல் கோட்பாட்டின் வழியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவுறாத நிலையில் மாக்ஸ் விட்டுச் சென்ற ‘மூலதனம்’ நூலில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயக்கவிதிகளை இனங்கண்டு பிரதானமாக இங்கிலாந்தின் முதலாளித்துவ அபிவிருத்திபற்றிய ஆய்வின் உதவியுடன் கோட்பாட்டுரீதியில் விளக்குகிறார். இந்த நூலில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்புப்பற்றி மாக்ஸ் உருவாக்கியுள்ள மாதிரி முதலாளித்துவத்தின் இயக்கப்பாட்டை, மூலதனக் குவியலை, அது சிக்கல்களுக்குள்ளாகும் காரணங்களை புரிந்துகொள்ள உதவுகிறது. மாக்சுக்குப்பின் பல மாக்சிய ஆய்வாளர்கள் மாக்சின் மாதிரியை விமர்சனரீதியில் ஆராய்ந்து அதன் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இன்றைய காலத்திற்கேற்ப விருத்தி செய்துள்ளார்கள். ஏற்கனவே கூறியதுபோல் மாக்சியம் ஒரு தொடரும் வேலைத்திட்டம்.

இன்றைய ஜேர்மனியின் றைன்லாந்தில் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறிய, வசதி படைத்த யூத குடும்பத்தில் பிறந்து, இருபத்திமூன்று வயதில் தத்துவஞானத்துறையில் முனைவர் பட்டம் பெற்று, பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த தன் நீண்டகாலக் காதலியான ஜென்னியை இருபத்தி ஐந்தாம் வயதில் வாழ்க்கைத் துணைவியாய் பெற்ற மாக்ஸ் தனது அறுபத்தைந்தாவது வயதில் ஒரு நாடற்ற அகதியாக, கடவுள் நம்பிக்கையற்ற, அடிக்கடி கடன் தொல்லைகளுக்காளான, நீண்டகால நோய் வாய்ப்பட்டவராக, ஆனால் தன் இலட்சியப் புரட்சிகரப் பணியில் தவறாத மனிதராக  லண்டனில் மரணமடைந்தார். ஒரு இளம் பத்திரிகையாளராக, ஆய்வாளராக அவர் அன்றைய சமூகத்தின் அநியாயங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி அதிகாரத்தை விமர்சித்ததன் விளைவாகப் பிறந்த நாட்டிலிருந்து புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டு, தஞ்சமடைந்த பிரான்சிலும் அதைத் தொடர்ந்து பெல்ஜியத்திலும் இருந்து நாடு கடத்தப்பட்டு இறுதியில் 1849ஆம் ஆண்டு லண்டன் மாநகரத்திற்கு அகதியாகக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். முழுநேர ஆய்வாளனாக, எழுத்தாளனாக, அரசியல் செயற்பாட்டாளனாகத் தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்ட மாக்சிற்கு ஒழுங்கான, போதுமான வருமானம் இருக்கவில்லை. ஒழுங்கான ஊதியம் தரும் ஒரு தொழிலை அவர் செய்யவில்லை. லண்டனில் வாழ்ந்த காலத்தில் பொருளாதார நிர்ப்பந்தத்தினால் ஒரே ஒரு தடவை ஒரு எழுதுவினைஞர் வேலைக்கு மனுச்செய்தார். அவருடைய கையெழுத்துப் படுமோசமெனும் காரணத்தினால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. அவருடைய மிக நெருங்கிய தோழனும் நண்பனுமான ஏங்கெல்சின் பொருளாதார உதவியின்றி மாக்சினால் அந்த வாழ்க்கையைத் தொடர்ந்து அவருடைய பெறுமதிமிக்க பாரிய பங்களிப்பினைச் செய்திருக்க முடியாது.  இருவரும் முதல் முதலாக 1842ஆம் ஆண்டு பதினோராம் மாதம் மாக்ஸ் ஆசிரியராயிருந்த ஜேர்மன் பத்திரிகையான Rheinische Zeitung இன் அலுவலகத்தில் சந்தித்தபோது அவர்களிடையே நட்பு ஏற்படக்கூடிய பரஸ்பர உணர்வுகள் பிறக்கவில்லை. பின்னர் 1844ஆம் ஆண்டு அந்தப் பத்திரிகை ஆட்சியாளரால் தடைசெய்யப்பட்டதால் மாக்ஸ் புலம்பெயர்ந்து பாரிசுக்குச் சென்று அங்கே  ஆசிரியராக இருந்த சஞ்சிகைக்கு இளம் ஏங்கல்ஸ் அரசியல் பொருளாதாரம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையால் மிகவும் கவரப்பட்டார். அதை எழுதிய ஏங்கெல்சின் அறிவாற்றலை உயர்வாக மதித்து அவரை மீண்டும் சந்திக்க விரும்பினார்.  இங்கிலாந்தின் மாஞ்செஸ்டரில் தந்தைக்குச் சொந்தமான துணி ஆலைத் தொழிற்சாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஏங்கெல்சை ஜேர்மனிக்குத் திரும்பும் வழியில் பாரிசுக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி மாக்ஸ் அழைத்தார். ஏங்கெல்ஸ் அந்த அழைப்பினை ஏற்று பாரிஸ் சென்றார்.

பாரிசில் இருவரும் பத்து நாட்கள் கலந்துரையாடல்களிலும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்வதிலும் செலவிட்டார்கள். இருபத்திநான்கு வயதினரான ஏங்கெல்ஸ் அப்போது ஜேர்மன் மொழியில் எழுதி முடித்த ‘இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமை’ (The Condition of the Working Class in England) எனும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையை வாசித்த மாக்ஸ் பிரமிப்படைந்தார். இருவரும் மிக நெருங்கிய தோழர்களானார்கள். வெவ்வேறு வழிகளுக்கூடாக இருவரும் அரசியல்ரீதியில் ஒத்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதை அறிந்து கொண்டனர். அந்த நாட்களில் மாக்சைப் பற்றித் தான் கொண்டிருந்த உயர்வான மதிப்பினை ஏங்கெல்ஸ் தன் இறுதி மூச்சுவரை மாற்றவில்லை. தம்மிருவரில் மாக்சே உயர்ந்த அறிவாற்றலும் சிந்தனைக் கூர்மையும் மிக்கவர் எனும் முடிவுக்கு வந்த ஏங்கெல்ஸ் அவருக்கு உதவியாக ஒத்துழைப்பதென முடிவு செய்தார். தனியாகவும், மாக்சுடன் இணைந்தும் கட்டுரைகள் எழுதினார். மாக்ஸ் முழுநேரமும் தன் ஆய்விலும் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கு பொருளாதாரரீதியில் உதவும் நோக்கில் ஏங்கெல்ஸ் தனது தந்தையின் மாஞ்செஸ்டர் ஆலைத் தொழிற்சாலையைப் பொறுப்பேற்றார். மாக்ஸ் மறைந்தபின் அவர் அரைகுறையாக விட்டுச்சென்ற ‘மூலதனம்’ இரண்டாம், மூன்றாம் பாகங்களை முடிந்தவரை நன்கு தொகுத்துப் பிரசுரித்தார். அதேபோன்று மாக்ஸ் விட்டுச்சென்ற பிரசுரிக்கப்படாத எழுத்துக்களைப் பாதுகாத்தார். மாக்ஸ் மறைந்தபின் மாக்சிற்குச் சேரவேண்டிய பாராட்டுக்களைத் தனக்கு வழங்கியவர்களுக்கு அந்தப் பாராட்டுகளெல்லாம் மாக்சிற்கே உரியவை எனக்கூறி விளக்கினார்.[3] மாக்ஸ் – ஏங்கெல்ஸ் தோழமையும் நட்பும் அற்புதமானது.

சட்டவாளராக இருந்த கார்ல் மாக்சின் தந்தை தன் மகனும் சட்டத்துறையையே தேர்ந்தெடுக்கவேண்டுமென விரும்பினார். ஆனால் பல்கலைக்கழகம் சென்ற இளைய மாக்ஸ் தத்துவஞானத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் முனைவர் பட்டம் பெற்றபின் அரசியல் பொருளாதாரத்தைத் தானாகக் கற்றார். தத்துவஞானிகள் உலகை விளக்கியுள்ளார்கள் ஆனால் உலகை மாற்றுவதே முக்கியமானது என நம்பிய மாக்ஸ் முதலாளித்துவத்தின் இயக்கப்போக்கினை ஆழ ஆராய்ந்தறிவது உலகை மாற்றுவதற்கான முதற்படி எனக்கருதினார்.  பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் அரசியல் பொருளியல் கோட்பாடுகளை விமர்சித்து, முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயக்கவிதிகளை இனங்காண்பதிலும், அதை வரலாற்றுரீதியில்  விளக்குவதிலும் தன் ஆய்வினைத் தொடர்ந்தார். ‘மூலதனம்’ எனும் தலைப்பிலான அவருடைய பிரதான ஆய்வுநூலுக்கு ‘அரசியல் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம்’ எனும் உபதலைப்பினையும் கொடுத்தார். அவருடைய வாழ்நாள் பங்களிப்புக்கள் பல சமூக விஞ்ஞானத்துறைகளை ஊடறுத்துச் செல்பவை. இன்றைய சமூகவிஞ்ஞானப் பிரிவுகளைப் பொறுத்தவரை தத்துவம், அரசியல், பொருளியல், சமூகவியல், மானிடவியல், புவியியல், வரலாறு, சூழலியல், கலை இலக்கிய விமர்சனவியல், போன்ற பல துறைகளில் மாக்சின் செல்வாக்கினைக் காணலாம். மிகவும் முக்கியமாக, மாக்சின் சிந்தனைகள் மனித இனத்தின், விசேடமாக ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின், விடுதலையை நோக்காகக் கொண்டுள்ளன என்பதால் அவை மனித இனத்தின் பொதுச்சொத்தெனக்  கருதுவதில் தவறில்லை. இது உலகை மாற்றியமைக்க வேண்டுமெனும் அவரின் இலட்சியத்திற்கு ஏற்புடையதே. ‘பொருள்ரீதியான சக்தியைப் பொருள்ரீதியான சக்தியாலேயே தோற்கடிக்க முடியும். ஆனால் கோட்பாடு  மக்களை இறுகப் பற்றிக்கொண்டதும் பொருள்ரீதியான சக்தியாகிறது’ என 1844ல் எழுதினார்.[4]  தனது கோட்பாடு சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்களின் ஆயுதமாகவேண்டுமென அவர் விரும்பினார். இதை நடைமுறைப்படுத்தத் தன்னாலியன்றதைச் செய்தார். தொழிலாளர் அமைப்புக்களை உருவாக்குவதிலும் அவற்றினைக் கூட்டி விரிவுரைகள் வழங்குவதிலும் ஈடுபட்டார். 1864 செப்டெம்பர் மாதத்தில் முதலாவது அகிலத்தை (First International) – அதாவது முதலாவது சர்வதேச தொழிலாளர் சங்கத்தை – ஸ்தாபிப்பதில் முக்கிய பங்கினை வகித்தார். அந்த அமைப்பின் ஜேர்மன் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அவரே அதன் கொள்கைப் பிரகடனத்தையும் எழுதினார்.

ஆயினும் மாக்சின் இறுதி நாட்களில் அவர் 34 வருடங்கள் வாழ்ந்த இங்கிலாந்தில் அவருக்குப் பெருமளவில் அரசியல் ஆதரவாளர்களோ தனிப்பட்ட நண்பர்களோ இருக்கவில்லை. 1883, மார்ச் 14ஆம் திகதி மரணமடைந்த மாக்சின் உடல் 17ஆம் திகதி லண்டன் ஹைகேட் மயானத்தில் (Highgate Cemetry) அடக்கம் செய்யப்பட்டபோது பதினொரு பேர் மட்டுமே காணப்பட்டனர். அப்போது அவரின் மிகநெருங்கிய தோழனும் நண்பனுமாகிய ஏங்கெல்ஸ் தனது உரையை ‘நமது காலத்து மாபெரும் சிந்தனையாளன் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்’ என ஆரம்பித்து அவருடைய பெயரும் ஆக்கங்களும் காலங்களுக்கூடாக நிலைபெறும் எனும் வார்த்தைகளுடன் முடித்தார். ஏங்கெல்சின் வாக்கின் தீர்க்கதரிசனத்தை வரலாறு நிரூபித்துள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில் இடம்பெற்ற நிகழ்வுகள் மாக்சின், மாக்சிசத்தின் காலத்தின் வருகையையும் தொடர்ச்சியியையும் அறிவிப்பவையாயிருந்தன. ஆயினும்  அப்போது முதலாளித்துவம் மிகவும் விருத்தியடைந்த இங்கிலாந்திலோ அல்லது மேற்கு ஐரோப்பிய நாடுகளிலோ சோஷலிசப் புரட்சி வெற்றி பெறவில்லை. தனது வரலாற்றுரீதியான பங்கு பற்றிய அகநிலைபூர்வமான உணர்வினைக் கொண்ட பாட்டாளி வர்க்கமே சோஷலிச, கொம்யூனிச சமூகமாற்றத்தின் தலைமைச் சக்தி எனக்கருதிய மாக்ஸ் அந்த மாற்றத்திற்கு உகந்த பொருள்ரீதியான, புறநிலைபூர்வமான நிலைமைகளை முதலாளித்துவம் உருவாக்குகிறது எனவும் கருதினார். இந்தப் பார்வையிலே முதலாளித்துவமே வரலாற்றின் இறுதியான வர்க்க சமூக அமைப்பு என வாதிட்டார்.  இந்த நாடுகளில் இடதுசாரி இயக்கங்கள் இருந்தன, மாக்சிய மரபிருந்தது, சோஷலிசப் புரட்சி பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன, தொழிலாளர் போராட்டங்கள் இடம்பெற்றன, இந்தப் போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்கள் ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்தனர், முதலாளித்துவம் சீர்திருத்தங்களுக்கூடாக மக்களின் சம்மதத்துடன் தொடர்ந்தது. ஆனால் மாக்ஸ் எதிர்பார்த்த சோஷலிச மாற்றம் இடம்பெறவில்லை. அங்குள்ள சோஷலிசக் கட்சிகளுக்குள் (சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குள்) பாராளுமன்ற ஜனநாயகத்திற்கூடாக, தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கூடாக முதலாளித்துவத்தைப் படிப்படியாகச் சீர்திருத்திச் சோஷலிசத்தை நோக்கி நகரமுடியும் எனும் கொள்கை பலம்பெற்றது. இந்தக் காலத்தில் – இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் –  ‘சீர்திருத்தவாதமா, புரட்சியா?’ எனும் விவாதம் ஐரோப்பிய மாக்சிய முகாமில் எழுந்தது.

இந்தக் கேள்வியைப் பொறுத்தவரை மாக்ஸ் ஒரே மாற்றமற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பது அவருடைய மற்றும் ஏங்கெல்சுடைய எழுத்துக்களிலிருந்து அறியக் கிடைக்கிறது. ஏறக்குறைய 1870கள் வரை புரட்சிகரப்பாதையூடாகவே பாட்டாளிவர்க்கம் கொம்யூனிச மாற்றத்தை (சமூகப் புரட்சியை) ஏற்படுத்த முடியுமெனும் நிலைப்பாட்டிலிருந்தார். 1848 ஆம் ஆண்டு பிரான்சில் ஆரம்பித்து ஐரோப்பாவெங்கும் பரவிய புரட்சிகர எழுச்சிகளும் அவற்றை ஆளும் வர்க்கம் நசுக்கியவிதமும் சாத்வீக வழிகளில் மாக்சிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தாததில் ஆச்சரியமில்லை. இந்த எழுச்சிகளின்போது தொழிலாளார்கள் காட்டிய துணிவுமிக்க புரட்சிகர உணர்வும் தியாகங்களும் மாக்சுக்கும் ஏங்கெல்சுக்கும் நம்பிக்கையூட்டும் ஆகர்சமாயின. 1848ல் மாக்சும் ஏங்கெல்சும் எழுதிய கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையும் வெளிவந்தது. உத்வேகமூட்டும் கூர்மைமிக்கப் புரட்சிகர மொழிநடையில் வரையப்பட்ட இந்த அறிக்கையின் இறுதிப் படிவம் மாக்சினாலேயே எழுதப்பட்டது. இதன் சில பகுதிகள் பிரசுரிக்கப்பட்ட சிலநாட்களிலேயே காலாவதியாகிவிட்டபோதிலும் அதன் பிரதான அம்சங்களான முதலாளித்துவத்தின் வரலாற்றுப்பணி, வர்க்க உருவாக்கமும் மூலதனம்-உழைப்பு முரண்பாடும், முதலாளித்துவ உலகமயமாக்கலின் தவிர்க்கமுடியாமை, நிரந்தரமான விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பப்புரட்சி, சுழற்சிப்போக்கில் வரும் முதலாளித்துவ சிக்கல்கள், போன்றனபற்றிய கருத்துக்கள் மிகவும் தீர்க்கதரிசனமானவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ‘இன்றும்கூட, கொம்யூனிஸ்ட் அறிக்கை வெடிப்பதற்குத்தயாராக உங்கள் கையில் இருக்கும் ஒரு குண்டு போன்றது’ என 2016 ஒக்டோபர் மாதம் The New Yorker பத்திரிகையில் ஒரு கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.[5]   ஆயினும், இதுவரையிலான மனித சமூகத்தின் வரலாறு வர்க்கப்போராட்டங்களின் வரலாறே எனக்கூறும் அறிக்கை இந்தப் போராட்டங்களின் முடிவு பற்றிக் கூறும் கருத்தும் முக்கியமானது. வர்க்கப்போராட்டங்களின் முடிவு ஒன்றில் சமூகத்தின் புரட்சிகர மாற்றமாயிருக்கும் அல்லது முரண்படும் வர்க்கங்களின்  பொதுவான அழிவாயிருக்கும் (common ruin) எனக் கூறுகிறது அறிக்கை. ஆகவே புரட்சி எப்போதும் சுரண்டப்படும் வர்க்கத்தின் வெற்றிக்கே இட்டுச்செல்லும் எனும் உத்தரவாதமில்லை என்பதை மாக்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

1871ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் இடம்பெற்ற புரட்சிகர எழுச்சியின் விளைவான பாரிஸ் கொம்யூனின் வெற்றியும் தோல்வியும் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றி மேலும் சில பாடங்களைக் கொடுத்தன. இராணுவ பலத்தால் முற்றாக நசுக்கப்படமுன் இரண்டு மாதங்கள் தொடர்ந்த பாரிஸ் கொம்யூனை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் முன்னோடியாகப் பார்த்தார் மாக்ஸ்.[6] ஆனால் புரட்சிக்குப்பின் பாட்டாளிவர்க்கம் பூர்ஷ்வா அரச யந்திரத்தை அப்படியே எடுத்து அதற்கூடாகச் சோஷலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முயல்வது பிழை என்பது கொம்யூனின் தோல்வி தந்த ஒரு பாடமெனக்கருதிய மாக்ஸ் அந்த அரச யந்திரம் உடைத்தெறியப்படவேண்டுமெனக் கூறினார். ஆயினும் கொம்யூன் பற்றி மாக்ஸ் கொண்டிருந்த கருத்துக்களுக்கு மாக்சியவாதிகள் மத்தியில் முரண்படும் வியாக்கியானங்கள் பிறந்தன. அவசரத்தில் நடத்தும் ஆயுதக் கிளர்ச்சியால் வரும் வெற்றியைத் தக்கவைக்கமுடியாது போகலாம் என்பது ஒரு வியாக்கியானம். அரச யந்திரத்தை உடைத்தெறிந்து மாற்று அரசை அமைக்கும்வரை புரட்சி தொடரவேண்டுமென்பது இன்னொரு நிலைப்பாடு.

பிற்காலத்தில், சர்வஜன வாக்குரிமையும் வர்க்க உணர்வுமிக்க தொழிலாளர் கட்சியும் இங்கிலாந்து, ஒல்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சாத்வீகமான வழியில் சமூகப் புரட்சியைச் செய்ய உதவுமெனும் கருத்தினை மாக்ஸ் வெளிப்படுத்தினார்.[7]  விசேடமாக, ஐரோப்பா முழுவதிலும் சாத்வீகமான, சட்டபூர்வமான வழிகளால் சமூகப் புரட்சி இடம்பெறக்கூடிய ஒரே ஒரு நாடாக இங்கிலாந்து இருக்கலாம் எனும் சாத்தியப்பாட்டினைத் தெரிவித்த மாக்ஸ் இப்படியாகச் சமூகப்புரட்சி நடந்தாலும் ஆங்கிலேய ஆளும் வர்க்கம் அதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாது என எதிர்பார்க்கவில்லை எனவும் கூறத் தவறவில்லை என ஏங்கெல்ஸ் 1886 ஆம் ஆண்டு (November 5)  மாக்சின் ‘மூலதனம்’ முதலாம் பாகத்தின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதியுள்ள முகவுரையின் இறுதியில் குறிப்பிடுகிறார். ஆகவே சமூகப் புரட்சியின் பாதையை குறிப்பான வரலாற்றுச் சூழல்களே நிர்ணயிக்கின்றன. புரட்சி ஒரு சிறுகுழுவின் அல்லது அமைப்பின் சதித்திட்டமல்ல என மாக்ஸ் வலியுறுத்தினார். எந்த ஒரு சமூக ஒழுங்கும் அதன் எல்லா உற்பத்தி சக்திகளும் விருத்தியடையும் சந்தர்ப்பம் இருக்கும்வரை மறையப்போவதில்லை. பழைய சமூகத்தின் கர்ப்பப்பைக்குள் உரிய பொருள்ரீதியான நிலைமைகள் முதிர்வடையும்வரை புதிய உயர்நிலையான உற்பத்தி உறவுகள் தோன்றப்போவதில்லை என 1859ல் கூறுகிறார் மாக்ஸ்.[8]  கோட்பாடு மக்களைப் பற்றிக் கொண்டால் பொருள்ரீதியான சக்தியாகிறது என 1844ல் எழுதிய மாக்ஸ் பதினைந்து வருடங்களின்பின் இப்படி எழுதுவது கவனிக்கத்தக்கது. கோட்பாடு தரும் சக்தி முக்கியமானது ஆனால் குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழலில் வரலாறு தந்துள்ள புறநிலை யதார்த்ததை மனித விமோசனத்துக்கு உதவும் வகையில் எப்படி மாற்றுவது என்பது நடைமுறையோடிணைந்த கோட்பாட்டுரீதியான சவாலாகிறது.

முதலாம் உலகப் போரின் முரண்பாடுகள் 1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சிக்கு உதவின. முதலாளித்துவம் விருத்தி பெறாத ரஷ்யாவில் தோன்றிவரும் புரட்சிகர நிலைமையைத் தனது கடைசி நாட்களில் மாக்ஸ் அக்கறையுடன் அவதானித்துவந்தார். சாரிசம் தொடரமுடியாத நிலைமைகள் வளர்ந்துவிட்டன. ரஷ்ய சமூக அமைப்பில் மாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. ஆனால் அந்த மாற்றம் எத்தகையது? முதலாளித்துவத்தின் நீண்டகால விருத்தியா, சோஷலிச மாற்றுவழியா அல்லது சோஷலிசத்தை நோக்கிய வேறொரு இடைக்காலப் பாதையா? துரதிஷ்டவசமாக இது பற்றி மேலும் ஆழமாக ஆராயமுன் 1883ஆம் ஆண்டு மாக்ஸ் மரணித்தார்.[9]  ஒக்டோபர் புரட்சியை அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டாடியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பின்னர், குறிப்பாக லெனினின் மரணத்துக்குப் பின் அது நகர்ந்த பாதையை தீவிரமாக விமர்சித்திருப்பார், அது சோஷலிசமென ஏற்றிருக்கமாட்டார். முதலாளித்துவம் அபிவிருத்தியடையாத நிலமைகளில் குறிப்பான அரசியல் பொருளாதார சூழல்களில் புரட்சி சாத்தியமாகலாம் ஆனால் அதற்குப்பின் மனித விடுதலையை நோக்காகக் கொண்ட சோஷலிச ஜனநாயக அமைப்பின் நிர்மாணம் கோட்பாட்டுரீதியிலும் நடைமுறையிலும் பெரும் சவாலாகிறது. இதை தப்பான வழியில் எதிர்கொண்டால் சோஷலிசத்தின் பெயரில் ஒரு புதிய சர்வாதிகாரம் உருவாகலாம். இதுதான் சோவியத் பரிசோதனை தந்த பாடம். ஆயினும் இரண்டாம் உலகப்போரின்பின் இரண்டாம் உலகமென அழைக்கப்பட்ட ஒரு பரந்த ‘சோஷலிச முகாம்’ உருவாயிற்று. இது சர்வதேச அதிகார உறவுகளின் சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்த மாற்றம் மூன்றாம் உலக நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசிய விடுதலை போராட்டங்களுக்கும் இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சிக்கும் சாதகமான சூழலை உருவாக்கியது. இருபதாம் நூற்றாண்டு ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் பல மாக்சிய சிந்தனையாளர்களையும் தலைவர்களையும் தந்தது. சீன, கியூப, வியட்நாமிய விடுதலைப் புரட்சிகளின் வெற்றி வரலாற்றை மாற்றும் நிகழ்வுகாளாயின.

மறுபுறம் நடைமுறை ‘சோஷலிசம்’ சிக்கல்களுக்கும் விமர்சனங்களுக்குமுள்ளானது.   கட்சியின் தலமையின் சர்வாதிகாரம், அதிகாரவாதம், மனித சுதந்திரங்களின்மீது கட்டுப்பாடுகள், மனித தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்களின் போதாமை போன்றவை நடைமுறைச் சோஷலிசத்தின் தன்மைகளாயின. சோஷலிச ஜனநாயகம் என்பது கனவாயிற்று.  ‘சோஷலிச’ முகாமில் ஒரு ‘சட்டபூர்வமான’ மாக்சிசம் உருவாக்கப்பட்டது. இந்த மாக்சிசத்தைக் கேள்விக் குள்ளாக்கும் மாக்சிசவாதிகளுக்குப் பல்வேறு பட்டங்கள் சூட்டப்பட்டன. பலர் தண்டனைகளையும் அநுபவித்தனர். சோவியத்-சீன கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையிலான பிளவு சர்வதேசரீதியில் இடதுசாரி இயக்கங்ககளைப் பாதித்தது.

ஆயினும் மாக்சிச முகாமிற்குள்ளேயும் வெளியேயும் இருபதாம் நூற்றாண்டின் நடைமுறை சோஷலிசம் பெரிய விவாதப் பொருளாகியது. அதே காலத்தில் மாக்சிசம் பிரபல பல்கலைக் கழகங்களின் சமூக விஞ்ஞான, தத்துவஞானத் துறைகளின் ஆய்வாளர்களர் பலரின் ஆய்வுப்பொருளாகியது. மேற்கிலும், மூன்றாம் உலகிலும் புதிய சந்ததி மாக்சிச சிந்தனையாளர்கள் உருவானார்கள்.  இது ஒன்றுக்கு மேற்பட்ட போக்குகளைக் கொண்ட ஒரு பரந்த மாக்சிச சமூக விஞ்ஞான மரபின் எழுச்சிக்கு வழிவகுத்தது. 1970களிலிருந்து நவீனத்துக்குப் பின்னைய வாதம் (post-modernism), மாக்சிசத்திற்குப் பின்னைய வாதம் (post-Marxism), அமைப்பியலுக்குப் பின்னைய வாதம்   (post-structuralism) ஆகியவற்றின் வருகை புதிய விவாதங்களுக்கு வழிவகுத்தது. இந்தக் காலகட்டத்தில் மார்க்சிசம் அரசியல்ரீதியில் வலுவிழந்துபோகும் போக்கினை காணக் கூடியதாகவிருந்தது. நவதாராளவாதத்தின் வருகை இந்தப் போக்கினை மேலும் பலப்படுத்தியது.

1989 பதினோராம் மாதம் பேர்லின் சுவரின் வீழ்ச்சி சோவியத் முகாமின் அஸ்தமிப்பையும் இரண்டாம் உலகப் போரின்பின் ஆரம்பித்த நிழற்போரின் முடிவையும் அறிவித்தது. உலகரீதியில் கொம்யூனிசம் முதலாளித்துவத்திடம் இறுதியாக, மீட்சியின்றித் தோற்றுவிட்டது என ஏகாதிபத்தியமுகாம் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடியது. முதலாளித்துவ தாராள ஜனநாயகமே வரலாற்றின் இறுதி நிலையம் என அமெரிக்க அரசியல் விஞ்ஞானி Francis Fukuyama அவரது பிரபல நூலான  The End of History (வரலாற்றின் முடிவு)ல் அறிவித்தார். மாக்சிசத்திற்கு எதிர்காலமில்லையென மீண்டும் பலகுரல்கள். ஆனால் 2000 ஆண்டு செப்டெம்பர் மாதம் BBC கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மாபெரும் சிந்தனையாளர் யாரென நடத்திய கருத்துக் கணிப்பில் கார்ல் மாக்ஸ் முதலாம் இடத்தைப் பெற்றார். ஐன்ஸ்டைன் இரண்டாம் இடத்தைப் பெற்றார். மாக்சின் செல்வாக்கிற்கு இது ஒரு பலமான ஆதாரம். இருபத்தியோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் வந்த பொருளாதாரச் சிக்கலும் அதன் சமூகரீதியான விளைவுகளும் முதலாளித்துவத்தின் அமைப்புரீதியான தன்மைகளை மீண்டும் நினைவூட்டின. உலகரீதியில் வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகளும், சமூக, பொருளாதார, சூழல் பிரச்சனைகளும் பலரை மாக்சின் எழுத்துக்களுக்கும் நமது சமகால மாக்சிய ஆய்வுகளுக்கும் திரும்பவைத்துள்ளன. முதலாளித்துவத்தை ஆழ விமர்சித்து அதற்கும் அப்பால் ஒரு சமூக அமைப்பினைக் கற்பிதம் செய்யவேண்டிய தேவையை முற்போக்கு உலகம் உணர்கிறது. இந்தத் தேவை நம்மை விமர்சன நோக்குடன் மாக்சிடம் திரும்ப வைப்பதில் ஆச்சரியமில்லை.

[1]இந்த வகையில் எனது அபிப்பிராயத்தில் Terry Eagleton (2011) எழுதியுள்ள ´Why Marx was right´, (Yale University Press), மிகவும் சுவையான, பயனுள்ள நூல்.

[2] George Magnus, ´Give Karl Marx a Chance to Save the World Economy, Bloomberg, 29.08.2011

[3] மாக்ஸ் – ஏங்கெல்ஸ் நட்புப் பற்றிய மேலும்பல தகவல்களைப் பின்வரும் ஆக்கங்களில் அறியலாம்: T. A. Jackson, 1935, A Great Socialist – Fredrick Engels, https://www.marxists.org/archive/jackson-ta/pamphlets/engels.htm;

Francis Wheen, 1999, Karl Marx, Fourth Estate, London

[4] Karl Marx, 1844, Introduction to Contribution to The Critique of Hegel´s Philosophy of Right, https://www.marxists.org/archive/marx/works/1844/df-jahrbucher/law-abs.htm

[5] Lewis Menand, 10 October 2016, Karl Marx Yesterday and Today, The New Yorker

[6] Karl Marx, 1871, The Civil War in France, Karl Marx and Frederick Engels Selected Works, Progress Publishers, Moscow 1970

[7] Shloma Avineri, 1968, The Social & Political Thought of Karl Marx, Cambridge University Press.

[8] Karl Marx, 1859, Preface to the Contribution to the Critique of Political Economy, Progress Publishers, Moscow 1977

[9] ரஷ்யாவில் எழுந்துவரும் புரட்சிகரச் சூழல்பற்றி மாக்சும் ஏங்கெல்சும் கொண்டிருந்த கருத்துக்கள் பற்றிச் சுருக்கமாகப் பின்வரும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். சமுத்திரன், ஒக்டோபர் 2017 ஒரு மாபெரும் புரட்சியின் நினைவுகூரலும் விமர்சனமும்,https://samuthran.net/2017/11/05/ஒக்டோபர்-1917-ஒரு-மாபெரும்-ப/

இலங்கையில் மேதினத்தை இடம்பெயர்த்த வெசாக்

 

சமுத்திரன்

சென்ற வருடம் இலங்கையில் மேதினம் பற்றி நான் எழுதிய கட்டுரையைப் பின்வருமாறு ஆரம்பித்தேன்:  ´இலங்கையில் மேதினத்தின் வரலாற்றை தொழிலாள வர்க்க அமைப்புக்களின் மற்றும் இடதுசாரி இயக்கத்தின் எழுச்சியினதும் வீழ்ச்சியினதும் வரலாறாகவும், மறுபுறம் தொழிலாளரின் வர்க்க நலனுக்கு எதிரான கட்சிகள் உலகத் தொழிலாளர் தினத்தை தமது அரசியல் நோக்கங்களுக்கு உதவும் வகையில் நடத்திப் பெரும் பணச்செலவில் ஒரு விழாவாகக் கொண்டாடும் மரபின் வரலாறாகவும் பார்ப்பதில் தவறில்லை.´ இந்த வருட மேதினத்தை அரசாங்கம் ஏழாம் திகதிக்குப் பின்போட்டுள்ளதற்கான காரணம் அந்த வரலாற்றுக்குப் பின்னுள்ள கருத்தியல் யந்திரத்தின் அரசியல் செல்வாக்கைப் பறைசாற்றுகிறது. வெசாக் வாரம் மே மாதம் இரண்டாம் திகதிவரை நடைபெறுவதால் மேதினத்தை அரசாங்கம்  ஏழாம் திகதிக்குப் பின்போட்டுள்ளது. மஹாசங்கத்தின் பீடாதிபதிகளின் கோரிக்கைக்கேற்ப ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட  இந்த முடிவு அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வெசாக் வாரத்தில் உலகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவது நாட்டின் யாப்பில் பௌத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் விசேட அந்தஸ்தினை மீறுவதாகாதா எனும் கேள்வியை எழவிடக்கூடாது என்பதில் ஜனாதிபதியும் அவரைச் சுற்றியுள்ளோரும் கண்ணாயிருந்தனர் போலும். ஆனால் உண்மையில் போயா ஏப்றில் 29ஆம் திகதியாகும், அதாவது மேதினத்திற்கு இரண்டுநாட்களுக்கு முன். அப்படி இருந்தும் மே முதலாம் திகதியன்று உலகத் தொழிலாளர்களுடன் இலங்கையின் தொழிலாளர்களும் இந்த வருடம் மேதினத்தைக் கொண்டாடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. போயா மே மாதத்திற்கு முன்னரே வந்துவிட்டதால் அது வெசாக் போயா ஆகாது எனப் பீடாதிபதிகள் சொல்கிறார்கள். ஆயினும் வெசாக் மே மாதத்திலேயே கொண்டாடப்படவேண்டுமென்பதே அவர்களின் கருத்து. அது பிரச்சனைக்குரிய விடயமில்லை. ஆனால் அதற்காக ஏன் உலகத் தொழிலாளர் தினம் பின்போடப் படவேண்டும்?

மேதினத்தைக்  தொழிலாள வர்க்கநலன்களுக்கு விரோதமான தமது அரசியலுக்குப் பயன்படுத்தும் விழாவாகக் கொண்டாடும்  பெரிய கட்சிகளையும் அவற்றுடன் தொங்கிக்கொண்டிருக்கும் சிறிய கட்சிகளையும் பொறுத்தவரை இந்தப் பின்போடல் பிரச்சனையல்ல. மேதினம் பிரதிபலிக்கும்  வர்க்க, சர்வதேசியவாத விழுமியங்களுக்கு விரோதமான கொள்கைகளைக் கொண்ட இந்தக் கட்சிகளுக்கிடையே வேறுவிதமான ஒரு போட்டி இடம்பெறுகிறது. ஒவ்வொரு கட்சியையும் பொறுத்தவரை, தனது சிங்கள-பௌத்த தேசபக்தியானது மற்றக் கட்சியினதையும்விடக் குறைவானதல்ல, மாறாக உயர்வானது, எனக் காட்டிக் கொள்வது மேதினத்தை எப்போது கொண்டாடுவது என்பதையும்விட முக்கியமானது. ஆகவே UNP, SLFP, SLPP ஆகியன பின்போடலை எதிர்க்கமுடியாத நிலையிலிருப்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

2015ஆம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் பல்லினப் பெரும்பான்மையின் வாக்குகளால் ஜனாதிபதியான சிறிசேன, அதுவும் பெரும்பான்மையான சிங்கள வாக்காளார்களினால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளினாலேயே வெற்றி பெற்ற அவர், இப்படி ஒரு முடிவை எடுத்தது நியாயமா எனும் கேள்வி எழலாம். ஆனால் சமீப காலங்களில் ஜனாதிபதி நடத்திவரும் அரசியலை அவதானிப்பவர்களுக்கு இது ஒரு பெரிய கேள்வியாக இருக்கமுடியாது. இந்த முடிவு பௌத்த மதத்தின் பிரத்தியேக அந்தஸ்தைப் பாதுகாப்பதுபோல் இருந்தாலும் உண்மையில் பௌத்த தொழிலாளர்களின் உரிமையை உதாசீனம் செய்கிறது. அத்துடன் மற்றைய மத, மற்றும் எதுவித மதநம்பிக்கையுமற்ற, தொழிலாளர்களின் உரிமையையும் மறுக்கிறது. நாட்டில் ஏற்கனவே ஆழப்பதிந்துவிட்ட இன, மத பிரிவினைகளை மேலும் ஆழமாக்குகிறது. இலங்கையில் பலதசாப்தங்களாக  உழைக்கும் வர்க்கங்களின் உரிமைகளை, மற்றும் பல்லின சமத்துவத்தை, மனித சுதந்திரங்களை, முன்னெடுக்கும் ஜனநாயக அரசியல் இனவாத அரசியலினால் தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் இதற்கான விளக்கத்தின் சில அடிப்படைகளை நினைவுகூருதல் பயன்தரும். கொலோனியம் விட்டுச்சென்ற அரசு சுதந்திரத்திற்குப் பின் இனத்துவ மேலாதிக்க அரசாக (ethnocratic state ஆக) மாற்றப்பட்டது பற்றி, சிங்கள-பௌத்த பேரினவாதக் கருத்தியலின் மேலாட்சி கல்வி, மத மற்றும் கலாச்சார நிறுவனங்கள், பொதுமக்கள் தொடர்பு சாதனங்களுக்கூடாகத் தொடர்ச்சியாக மீளுற்பத்தி செய்யப்படுவது பற்றி, முன்னைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன். சந்ததிகளுக்கூடாக இடம்பெறும் இந்தக் மேலாட்சியின் மீளுற்பத்திக்குப் பெரும்பான்மை சமூகத்திற்குள்ளிருந்து எழும் எதிர்ப்பு மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. அரச அதிகாரத்திற்கூடாக அடக்குமுறையை அவிழ்த்துவிடும் பேரினவாதத்திற்கு எதிராகத் தோன்றிய தமிழ் தேசியவாதமும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை குறுகிய இனவாதத்திற்குள் கட்டுப்படுத்தியது. இனத்துவ அடையாளங்களின் அரசியலின் மேலாதிக்கம் ஒரு தொடரும் சரித்திரம்.

இந்த நிலைமைகளில் நாட்டின் சில இடதுசாரி அமைப்புக்களும் பதின்நான்கு தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் தடையை எதிர்த்து மேதினத்தை முதலாம் திகதி கொண்டாடுவதென முடிவெடுத்திருப்பது வரவேற்கப்படவேண்டியது, நம்பிக்கை தருகிறது. இலங்கையில் நீண்ட காலமாகத் தொழிலளார்கள் உரிமைமீறல்களினால் பாதிக்கப்படுகிறார்கள். மெய் ஊதியத்தின் வளர்ச்சியின்மை அல்லது வீழ்ச்சி, தொழிலாற்றுமிடத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கெதிராகப் போதிய பாதுகாப்பின்மை, தொழிற்சங்க உரிமை மறுப்பு, பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பின்மை, தொழிலின் தற்காலிகமயமாக்கல், தொழிலாளரின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டங்களின் பூரண அமுலாக்குலுக்குத் தடைகள்  போன்ற பல பிரச்சனைகள். 1977ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஜயவர்த்தன தலைமையிலான யு. என். பி ‘திறந்த பொருளாதாரக் கொள்கை’ எனும் பெயரில் நவதாராள பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்த ஆரம்பித்தது. இத்துடன் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான, தொழிலாளர்களுக்குப் பாதகமான சட்டங்களும், நடைமுறைகளும் வந்தன. அப்போது ஜே. ஆர். ஜயவர்த்தன பெருமையுடன் ´Let the robber barons come´ – ‘கொள்ளைக்காரக் கோமான்கள் வரட்டும்’ – என வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விட்டார். ‘robber barons´எனும் பதம் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்காவில் விதிமுறைகளுக்கு மதிப்புக் கொடுக்காது, ஏகபோக வழியில் பெருலாபம் தேடும் முதலீட்டாளர்களைக் குறிக்கும். ஜயவர்த்தனவின் அழைப்பு ஒரு வெற்றிக்களிப்பின் புளகாங்கிதக்கணத்தில் எழுந்த வெறும் வார்த்தைகளில்லை என்பதை நிரூபிப்பதுபோல் 1978ஆம் ஆண்டு முதலீட்டாளர்களுக்கு பல்வேறு விசேட சலுகைகளை வழங்கும் ‘சுதந்திர வர்த்தக வலையங்கள்’ தோன்றின. இன்றும் அவை பரந்து தொடர்கின்றன. இந்த வலையங்களின் தொழிலாளர்களில் எழுபது வீதமானோர் பெண்கள். அங்கு முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் உட்கட்டுமானங்கள் வருடந்தோறும் பராமரிக்கப்பட்டு மேலும் முன்னேற்றப்படும்போதும் தொழிலாளர் நலனில் முன்னேற்றம் இல்லை என இவ்வலையங்கள் பற்றிய ஆய்வுகளும் அறிக்கைகளும் சொல்கின்றன. முழு நாடுமே இப்போ ஒரு சுதந்திர வர்த்தக வலையம்போலாகிவிட்டது என ஒரு தொழிலாள அமைப்பச் சேர்ந்த செயற்பாட்டாளர் குறிப்பிட்டார். 1977க்குப்பின் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையின் இராணுவமயமாக்கல் துரிதமாக்கப்பட்டு உள்நாட்டுப் போர் தொடங்கியது.  இது அரசின் இனத்துவ மேலாதிக்கமயமாக்கலை (ethnocratization ஐ) மேலும் ஆழமாக்கியதுடன்  ‘பயங்கரவாத எதிர்ப்பு’ எனும் காரணத்தைக் காட்டி அதிகாரவாத அடக்குமுறையை நியாயப்படுத்தவும் உதவியது. இந்த காலகட்டத்தில் ‘தேசிய பாதுகாப்பு’ எனும் பெயரில் தொழிலாளர்களின் உரிமைகளும், போராட்டங்களும் மேலும் நசுக்கப்பட்டன. அதேவேளை இன உணர்வும் இனவாதமும் முன்பையும்விடப் பெருமளவில் தொழிலாளர்களையும் பல தொழிலாளர் அமைப்புக்களையும் பற்றிகொண்டன. இது தொழிலாளர்களின் நலன்களுக்குப் பாதகமானதென்பதே இதுவரையிலான நடைமுறை அநுபவம்.

இன்றைய உலகமயமாக்கல் காலத்தில் மூலதனம் புதிய தொழில் நுட்பங்களின் மற்றும் முகாமை முறைகளின் உதவியுடன் உலகின் உழைக்கும் மக்களின் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்திச் சுரண்டலை அதிகரிக்க முயல்கிறது.  இன்றைய தகவல் யுகத்தில், அறிவுப் பொருளாதார யுகத்தில், மூளை உழைப்பாளர்களின் தொகை வளர்கிறது. ஆனால் இந்தத் துறைகளில் பெரும் ஊதிய வேறுபாடுகளும் தொழிலின் தற்காலிகமயமாக்கலும் பெரும் பிரச்சனைகளாகும். உதாரணமாக அமெரிக்காவின் சிலிக்கொன் பள்ளத்தாக்கில் வேலை செய்வோருக்கும் அதேநாட்டில் சாதாரண சேவைத் துறைகளில் கடமையாற்றுவோருக்குமிடையே மலைக்கும் மடுவுக்கும்போல் வருமான வேறுபாடுண்டு. செல்வந்த நாடுகளின் ஆலைத்தொழில் உற்பத்தி முதலீடுகளின் கணிசமான பகுதி தெற்கத்திய நாடுகளுக்கு மாற்றப்படுவதால் முன்னைய நாடுகளில் பலர் வேலை இழக்கிறார்கள். தரமான, கட்டுப்படுத்தச் சுலபமான அதேநேரம் குறைந்த ஊதிய உழைப்பாளர்கள் கிடைக்கும் தெற்கத்திய நாடுகளுக்குப் பலவிதமான தொழிற்போக்குகள் மாற்றப்படுவதால் தெற்கிலே பாட்டாளி வர்க்கம் வளர்ச்சி பெறுகிறது. அத்துடன் சீனா, இந்தியா, ரஷ்யா, பிராசில் போன்ற நாடுகள் உலக பொருளாதார வளர்ச்சியின் மையங்களாகியுள்ளன. இந்த நாடுகளின் அரசாங்கங்கள் மூலதனத்தின் நலன்களைத் தீவிரமாகப் பாதுகாக்கின்றன. இந்த நாடுகளின் கொம்பனிகள் பல நாடுகளில் முதலீடுகள் செய்கின்றன. பல நாடுகள் சீனாவிடம் பெருமளவில் கடன் பெற்றுள்ளன. இவற்றில் சில ஏற்கனவே கடன் பொறிக்குள் மாட்டிக் கொண்டன. இலங்கையும் இதற்கொரு உதாரணம். மாறிவரும் உலகத் தொழிற்பிரிவில் உழைப்பாளர்களின் வாழ்க்கைத்தரமும் பாதுகாப்பும் முக்கிய பிரச்சனைகளாகியுள்ளன. உலகமயமாக்கல் மிகவும் முன்னேறியுள்ள இருபத்திஓராம் நூற்றாண்டில் தெற்கத்திய நாடுகளில் பலதுறைகளில் மூலதனம் தொழிலாளர்கள்மீது பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சுரண்டல்முறைகளைப் பயன்படுத்துகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.  இலங்கையின் தொழிலாளர்களில் பெரும்பாலோரின் நிலையும் இதுவே.

இலங்கையில் தொழிலாளர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியலைப் பலப்படுத்துவதன் அவசியம் வெளிப்படை. இதை ஒரு பரந்த நோக்குள்ள இடதுசாரி இயக்கத்தாலேயே செய்யமுடியும் என்பதும் வெளிப்படை.  அத்தகைய இயக்கம் எதிர்கொள்ளும் சவால்களில்  இனவாதத்தின் செல்வாக்கிலிருந்து தொழிலாளர்களை விடுவிப்பதும் இனங்களின் சமத்துவத்தின் ஆதரவாளர்களாக அவர்களை மாற்றுவதும்  அதிமுக்கியம் பெறுகின்றன. சிங்கள-பௌத்த அரசின் சீர்திருத்தமின்றி இனங்களின் சமத்துவம் சாத்தியமில்லை. சிங்கள மக்களின் சம்மதமின்றி அரசின் சீர்திருத்தம் சாத்தியமாகாது. இனவாதக் கருத்தியலின் மேலாட்சி தொழிலாளர்களின் நலன்களுக்கு விரோதமானது என்பது அப்பட்டமான உண்மையாயினும் ஒரு மாற்று மேலாட்சியைக் கட்டி எழுப்புவது சுலபமான காரியமல்ல என்பது இதுவரையிலான அநுபவம். இதற்கு ஒரு தெளிவான, ஆழமான அரசியல் கல்வித்திட்டமும் அதனுடன் இணைந்த செயல்திட்டமும் வேண்டும். இது பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் தேவை. இதுவே இந்த வருட மேதினத்தைச் சூழ்ந்துள்ள அரசியல் மீண்டும் நமக்கு நினைவூட்டும் பாடம்.

 மாற்றமும் மரபு பேணலும் இந்து சாதனம் திருஞானசம்பந்தபிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ பற்றி ஒரு விமர்சனம்

 

சமுத்திரன்

நூல் விமர்சனம்

உலகம் பலவிதம்

ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை (1885-1955)

பதிப்பாசிரியர்: சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார்

வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

பதிப்பாளர்: நவரத்தினம் அசோகன், தலைவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கம், கொழும்பு, 2017. பக்கங்கள்: 687

அறிமுகம்

ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை 1912 – 1947 காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியில் முப்பத்தைந்து வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றியவர். அத்துடன் 1912 – 1951 காலத்தில் யாழ்ப்பாணத்தில் 1888ல் உருவாக்கப்பட்ட சைவபரிபாலன சபையினால் வெளியிடப்பட்ட ‘இந்து சாதனம்’ பத்திரிகையில் நாற்பது ஆண்டுகள் முதலில் உதவி ஆசிரியராகவும் அதைத் தொடர்ந்து ஆசிரியராகவும் பணியாற்றியவர். இந்தக் காலத்தில் அவர் அந்தப் பத்திரிகைக்கு பத்தி மற்றும் புனைகதை எழுத்தாளராகத் தொடர்ச்சியாகப் பங்களிப்புக்களைச் செய்துள்ளார். ‘உலகம் பலவிதம்’ எனும் தலைப்பிலேயே இவரது எழுத்துக்கள் இந்து சாதனத்தில் பதிவு செய்யப்பட்டன. மேலும் பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது தந்தையார் மட்டுவில் க. வேற்பிள்ளை உபாத்தியாயர் ஆறுமுக நாவலரின் மாணவராகவும் பின்னர் சிதம்பரத்திலிருந்த நாவலர் கல்விக்கூடத்தின் தலைமை ஆசிரியராகவும் இருந்தவர்.

‘உலகம் பலவிதம்’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப் பாரிய பதிப்பில் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை (ம.வே.தி) 1922 -1951காலத்தில் இந்துசாதனத்தில் எழுதிய பத்திகள் மற்றும் புனைகதைகளைத் திரட்டித் தந்துள்ளார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையைச் சேர்ந்த சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார். இது ஒரு சுலபமான காரியமல்ல என்பதை இந்த நூலைப் பார்ப்பவர் அறிவர். பல தசாப்தங்களுக்கு முன் பிரசுரிக்கப்பட்ட இந்து சாதனம் இதழ்களைத் தேடி அலசி ஒருவரின் எழுத்துக்களைச் சேகரித்து வகைப்படுத்தி ஒரு ஒழுங்குமிக்க தொகுப்பாக்குவது ஒரு பாரிய வேலை என்பதில் சந்தேகமில்லை.  சில ஆக்கங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதையும் அறியத்தருகிறார். பதிப்பாசிரியர் சோமேசசுந்தரிக்கு எனது பாராட்டுக்கள். இந்த நூலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 125 ஆம் ஆண்டு விழாவின் (2015) ஒரு பதிப்பாக வெளியிட்ட அந்தக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கும் பாராட்டுக்கள்.

பதிப்பாசிரியர் கருத்தில்: ‘20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஈழத்தமிழர்களின், குறிப்பாக யாழப்பாணத் தமிழர்களின், சமூகவியல், மானுடவியல், ஊடகவியல், அரசியல், தேசியம், புலப்பெயர்வு, இலக்கிய ஓட்டம், தமிழ்நடை போன்றவற்றை வரலாற்றுப் பார்வையுடன் ஆராய விரும்புவோருக்கு திருஞானசம்பந்தப்பிள்ளையின் எழுத்துக்கள் அரியதொரு ஆவணம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் கற்கும் மாணவருக்கு, ஈழத்தமிழ் உரைநடை – படைப்பிலக்கிய வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைத் தரிசிக்க தரமான பயிற்சிநூல். ஏனையோருக்கு சுவையான வாசிப்பு.’ உண்மைதான். ஆயினும் இந்த நூலின் பயன்பாட்டை மதிப்பிடும்போது ம. வே. தி அவர்களின் சமூகக் கண்ணோட்டமும் பிரதானமாக ஆராயப்படும். சமூகப் பின்னணியைப் பொறுத்தவரைஅவர் யாழ்ப்பாணத்தின் சைவவெள்ளாள (சைவ வேளாள) பிரிவைச் சேர்ந்த கல்வியாளர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலரின் (1872-1879) முன்னெடுப்பில் கிறிஸ்துவமயமாக்கலுக்கு எதிராக முகிழ்த்து வளர்ந்த சைவசமய மறுமலர்ச்சி இயக்கத்தின்  இருபதாம் நூற்றாண்டின் போக்கினைப் பிரதிபலிக்கும் அறிவாளர், ஆற்றலும் விசுவாசமும் மிக்க பிரச்சாரகர், என அவரை இனங்காண்பது நியாயமானது என்பது அவரின் எழுத்துக்களிலிருந்து தெளிவாகிறது. அவரின் உலகப்பார்வையை அன்றைய யாழ்ப்பாணத்தில் மேலாட்சி நிலை பெற்ற சைவமதக் கலாச்சார மறுமலர்ச்சிக் கருத்தியலே வரையறுத்து நெறிப்படுத்தியது. ‘சமயாபிமானம், சாதியபிமானம், தேசாபிமானம், பாஷாபிமானம் என்ற நான்கினுள் முதல் வைத்து எண்ணப்பட்ட சமயாபிமானமே சிறந்ததாகும்’ எனும் அவரின் கூற்று அவருடைய நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள உதவுகிறது.[1]

பிரித்தானிய கொலோனிய ஆட்சியின் கீழ் (1796 – 1948) பலவிதமான மாற்றங்கள் இடம்பெறும் ஒரு காலகட்டத்தில் அவர் வரைந்த கட்டுரைகளும் ஆக்க இலக்கியப் படைப்புக்களும் சமூக, அரசியல், கலாச்சார பரிமாணங்களைக் கொண்டவை. அவருடைய பங்களிப்புக்கள் ஆய்வாளர்களால் பல துறைசார் கோணங்களிலிருந்து ஆராயப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த நூலைப் பற்றிய எனது பார்வை ஒரு சமூக விமர்சனப் பார்வை எனலாம். இந்த நூல் நாவலர் பரம்பரையில் வந்த ஒரு சைவாசாரிய அறிஞரின் ஆக்கங்களின் திரட்டு.  அவரது நிலைப்பாட்டிலிருந்து  எப்படி அவர் வாழ்ந்த கால யாழ்ப்பாணத்தின் சமூக மாற்றங்களை, முரண்பாடுகளைப் பார்த்தார், ஆராய்ந்தார், விமர்சித்தார் என்பதை அறிய உதவும் பயன்பாடுமிக்க ஆவணம். அத்துடன் அன்றைய இலங்கை அரசியல், சர்வதேச போக்குகளின் உள்நாட்டுத்தாக்கங்கள் பற்றிய அவரின் கருத்துக்களையும் அறியமுடிகிறது.

ம. வே. தியின் 70 வருட வாழ்க்கையின் (1885-1955) பெரும்பகுதி (ஏறக்குறைய 63 வருடங்கள்) பிரிட்டிஷ் கொலோனிய ஆட்சியின் (1796-1948) கீழே கழிந்தது. இந்தக் காலப்பகுதியில் இலங்கை தொடர்ந்தும் பல சமூக, பொருளாதார மாற்றங்களுக்குள்ளானது. கொலோனிய ஆக்கிரமிப்பின் கீழேயே இலங்கையின் நவீனமயமாக்கல் இடம்பெற்றது. இந்த மாற்றங்களுக்கு விசேட பிரதேச-சமூகரீதியான தன்மைகளிருந்தன. வடபகுதியில் சந்தை உறவுகளும் அவற்றுடன் பணப்புழக்கமும் பரவி வளர்ந்த போதும் அங்கு கொலோனிய கால பெரு முதலீட்டாளர்களைக் கவரும் வளங்கள் இருக்கவில்லை.[2] ஆயினும் பிரிட்டிஷ் ஆட்சியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் கிறிஸ்துவ மிஷனரிகள் பெருமளவில் வந்திறங்கி மதமாற்றத்துடன் இணைந்த ஆங்கில, தமிழ்க் கல்வி நிறுவனங்களை நிறுவிப் பல செயற்பாடுகளில் ஈடுபட்டதும் அவை மேற்கொண்ட மதமாற்றத்திற்கு எதிராக எழுந்த சைவமத மறுமலர்ச்சி இயக்கத்தினரின் செயற்பாடுகளும் அந்தப் பிரதேசத்தின் வரலாற்றுப் போக்கில் முக்கிய செல்வாக்குச் செலுத்தின. அன்றைய யாழ்ப்பாணத்தில் மாற்றத்திற்கும் மரபு பேணலுக்கு மிடையிலான முரண்பாடுகளை, சமரசங்களை அறிய இந்த நூல் பயனுள்ளது. பின்னோக்கிப் பார்க்குமிடத்து, மாற்றம்-மரபு பேணல் முரண்பாட்டில் மரபுகளும் மதமும் மாற்றமடைவது தவிர்க்கமுடியாதது என்பது தெளிவாகிறது. நூலின் சில அம்சங்களைப் பார்க்குமுன் அந்தக் காலகட்டத்தின் வரலாற்றுச் சூழல் பற்றிய சில தகவல்கள் ம. வே. தியின் பங்களிப்பினைத் தெளிவாக விளங்கிக்கொள்ளவும் விமர்சிக்கவும் உதவும் என நம்புகிறேன்.

வரலாற்றுப் பின்னணி

இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வியைப் பல மிஷனரி அமைப்புக்கள் கொலோனிய அரசின் அனுசரணையுடன் கிறிஸ்துவமயமாக்கலை நோக்காகக் கொண்டு அறிமுகம் செய்தன. யாழ்ப்பாணத்தில் மதமாற்றத்தாலும் ஆங்கிலக் கல்வியாலும் பெரிதும் பயனடைந்தவர்கள் வெள்ளாள சாதியைச் சேர்ந்த ஒரு சிறுபான்மையினரே. மதம் மாறாது பல சைவர்கள் கிறிஸ்துவப் பாடசாலைகளில் கல்வி கற்றனர் என்பதும் உண்மை. மதம் மாறுவதை ஊக்கிவிக்க அமெரிக்க மிஷனரிகளுக்கூடாக அமரிக்கத் தனிநபர்கள் மாணவர்களுக்குக் கல்விகற்கப் பண உதவிகள் செய்தனர். இப்படி மதம் மாறியோர் தமக்குப் பண உதவி செய்த அமெரிக்கரின் பெயர்களைத் தமது கிறிஸ்துவப் பெயர்களாக ஏற்றுக்கொண்டனர்.[3] தாழ்த்தப்பட்ட சாதி (தீண்டாச்சாதி) மாணவர்களுக்கும் கிறிஸ்துவ, ஆங்கில, தமிழ் கல்வியை வழங்க மிஷனரிகள் தயாராயிருந்த போதும் வெள்ளாளரின்  எதிர்ப்பினால் அந்தச் சாதிகளைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே அந்தச் சந்தர்ப்பத்தினால் பயனடைய முடிந்தது. வெள்ளாளருக்கும் தீண்டாச்சாதியினருக்கும் இடையேயுள்ள சாதிகளைச் சேர்ந்த சிலரும் கிறிஸ்துவ பாடசாலைகளில் கல்வி கற்றனர். யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்திலிருந்து ஒரு கிறிஸ்துவ மேனிலையாளர் மட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. அதே வெள்ளாள சமூகத்தின் சைவ மேனிலையாளரிடமிருந்து கிறிஸ்துவ மயமாக்கலுக்கு எதிராகப் பலமான சைவசமய மறுமலர்ச்சி இயக்கமும் தோன்றியது.  இந்த இயக்கம் மிஷனரிகள் கொண்டுவந்த கொலோனிய ஆங்கிலக் கல்வியை எதிர்க்கவில்லை, கிறிஸ்துவ மதமாற்றத்தையே எதிர்த்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து (1813) புரொட்டெஸ்டண்ட் (Protestant)  கிறிஸ்துவ மிஷனரி அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் நிலைகொள்ளத் தொடங்கின.[4] அமெரிக்க, வெஸ்லிய, மற்றும் அங்கிளிக்கன் மிஷனரி அமைப்புக்கள் கிறிஸ்துவக் கோவில்கள் மற்றும் கிறிஸ்துவ தமிழ், ஆங்கிலப் பாடசாலைகளை  ஸ்தாபிப்பதில் குடாநாட்டின் பல பகுதிகளில் தீவிரமாக ஈடுபட்டன. உதாரணமாக தெல்லிப்பழை, வட்டுக்கோட்டை, மானிப்பாய், உடுவில், பண்டத்தரிப்பு, யாழ் நகர்ப்புறம் போன்ற இடங்கள் பிரதான நிலையங்களாயின. மிஷனரியினர் மருத்துவ சேவை, பாடநூல்களின் உருவாக்கம், மொழிபெயர்ப்புப் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். மிஷனரிகள் பெண்களின் கல்வியை ஊக்கிவித்தனர். அத்துடன் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சிலரும் கிறிஸ்துவ பாடசாலைகளுக்கு அநுமதிக்கப்பட்டனர். ஆயினும் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் உயர்சாதிக் கிறிஸ்துவர்களின் எதிர்ப்பினால் இது பிரச்சனைக்குள்ளானது. வெள்ளாள சாதி மாணவர்கள் ‘கீழ் சாதி’ மாணவர்கள் தம்முடன்  சமஆசனத்தில் அமர்வதை ஏற்க மறுத்தனர். மிஷனரிப் பாடசாலைகள் கிறிஸ்துவத்தையும் ஆங்கிலத்தையும் மட்டுமன்றி நவீன விஞ்ஞானம், கணிதம், மேற்கத்திய நாகரீகத்தின் வரலாறு போன்றவற்றையும் போதித்தன. சுருங்கக் கூறின் பிரிட்டிஷ் கொலோனிய சேவைக்கு உதவ வல்ல கல்வியை அவை உள்நாட்டவருக்கு வழங்கின. அதேவேளை ஆங்கில மொழிப்புலமை ஒருவருக்கு நவீன அறிவின் திறவுகோல்போலானது.

1841ல் இரண்டு கிறிஸ்துவத் தமிழர்கள் ‘Morning Star’, ‘உதய தாரகை’ எனும் பெயர்களில் ஆங்கில, தமிழ் பத்திரிகைகளை மாதம் இரு முறை பிரசுரித்தார்கள். கிறிஸ்துவத்தை பரப்புவதுடன் விஞ்ஞானம், விவசாயம் போன்ற துறைகள் பற்றியும் இந்தப் பத்திரிகைகள் கட்டுரைகளைப் பிரசுரித்தன. சைவமதத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் இந்தப் பத்திரிகைகள் தீவிரமாக ஈடுபட்டன. யாழ்ப்பாண சமூகத்தின் சைவமதத் தலைவர்கள் இதற்கெதிரான தமது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தினர். யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவமயமாக்கலுக்கு எதிரான கருத்துக்கள், நடைமுறைகள் ஆறுமுக நாவலருக்கு முன்னரே ஆரம்பித்திருந்தன. ஆயினும் அந்த எதிர்ப்பை ஒரு சைவசமய மறுமலர்ச்சி இயக்கமாக சைவ சித்தாந்த மார்க்கத்தில் கருத்தியல்ரீதியாகக் கட்டியெழுப்பி முன்னெடுப்பதில் ஆறுமுக நாவலர் தலையாய பங்கினை வகித்தார். மிஷனரிகளின் செயற்பாடுகள் மற்றும் கிறிஸ்துவம் பற்றி அவருக்கிருந்த நேரடியான அறிவையும் அனுபவத்தையும் தனது திட்டத்தை வகுப்பதற்கு நாவலர் நன்கு பயன்படுத்தினார். யாழ்ப்பாணத்தில் வெஸ்லிய மிஷன் பாடசாலையில் (பின்னர் இது யாழ் மத்திய கல்லூரியாகியது) கல்வி கற்ற நாவலர் அதே பாடசாலையில் 1841-1848 காலகட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியராகக் கடைமையாற்றினார். அதேகாலத்தில் தலைமை ஆசிரியர் பேர்சிவல் பாதிரியார் மேற்கொண்ட பைபிளின் தமிழ் மொழி பெயர்ப்பு முயற்சியில் ஒரு உதவியாளராகவும் செயற்பட்டார். இவற்றிற்கூடாக அவர் பெற்ற அறிவு, அநுபவம், மற்றும் நவீன கல்வியூட்டல், தொடர்பாடல் நுட்பவியல்கள் பற்றிய பரிச்சியம் ஆகியவற்றை கிறிஸ்துவமயமாக்கலுக்கு எதிரான பிரச்சாரத்தை வகுப்பதற்கும், அதற்கு ஏற்றவகையில் சைவ சித்தாந்தம் பற்றிய அவரது வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் உரைநடையில் பிரசுரங்களாக வெளியிடவும் உதவின. அவரது ஆங்கிலப் புலமை கிறிஸ்துவ மதம் தொடர்பான இலக்கியங்களை அறிய உதவியதுபோல் சமஸ்கிருத மொழியாற்றல் அந்த மொழியிலிருந்த சமய சாத்திரங்களைக் கற்றறிந்து தமிழில் பயன்படுத்த உதவியது.

கல்விக்காகக் கிறிஸ்துவர்களாக மாறும் போக்கினைத் தடுக்கும் நோக்கில் 1842 ஆம் ஆண்டு குடாநாட்டின் பல உயர்சாதிச் சைவப் பிரமுகர்கள் ஒரு சைவப்பாடசாலையையும் பதிப்பகத்தையும் நிறுவும் முன்னெடுப்பில் இறங்கியபோது நாவலர் வெஸ்லிய பாடசாலையில் ஆசிரியராயிருந்தபோதும் ஒத்துழைப்பு வளங்கினார். 1848ல் அந்தப் பதவியிலிருந்து முற்றாக விலகித் தனது செயற்பாடுகளைத் முழுமூச்சுடன் தொடர்ந்தார். கிராமந்தோறும் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை நிறுவவேண்டுமென்பது அவரது நோக்கமாயிருந்தது. அதேவேளை ஆங்கிலக் கல்வியூட்டலில் மிஷனரிகள் கொண்டிருந்த ஏகபோகத்தை உடைக்கும் நோக்கில் 1872ஆம் ஆண்டில் ஒரு சைவ ஆங்கிலக் கல்லூரியை நிறுவினார். இதுவே 1890ல் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியாக ஸ்தாபிக்கப்பட்டது. கிறிஸ்துவமயமாக்கலுக்கு எதிராக சிந்தனாரீதியிலும் நிறுவனரீதியிலும் செயற்படக்கூடிய சைவசித்தாந்த அறிவாளர்களை உருவாக்குவதில் நாவலர் கண்ணாயிருந்தார். அதில் வெற்றியும் கண்டார். மிகுந்த வளங்களுடனும் ஆட்சியாளரின் ஆசிகளுடனும் மிஷனரிகள் தமது மதமாற்றத் திட்டத்தைக் குடாநாட்டில் நடைமுறைப்படுத்தினர். அவற்றின் செயற்பாடுகளின் விளைவாக நவீன கல்வி, விசேடமாக ஆங்கிலமூலக் கல்வி, யாழ்ப்பாணத்திற்கு வந்தது. ஆனால் மிஷனரியினரின் பிரதான நோக்கமாயிருந்த மதமாற்றம் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஒரு சிறுபான்மைத் தொகையினரையே மதமாற்றம் செய்ய முடிந்தது. அவர்களின் முதலீடுகளுடனும் விடாமுயற்சியுடனும் ஒப்பிடும்போது இந்த விடயத்தில் அவர்களுக்குக் கிடைத்த முடிவு ஏமாற்றத்தையே கொடுத்திருக்க்வேண்டும். இதை ஏற்றுக்கொள்ளும் யாழ் பேராயர் சபாபதி குலேந்திரன் இதற்கான பிரதான காரணம் நாவலரின் செயற்பாடுகளே என நம்புகிறார்.[5]

இந்தச் சைவசமய மறுமலர்ச்சி இயக்கத்தின் பிரதான சமூகத்தளம் யாழ்ப்பாணத்தில் அதிகார மேலாதிக்க நிலையிலிருந்த  வெள்ளாள சாதியினரே. மாறும் சூழலில் அன்றைய நிலமானிய சாதிமுறையைப் பேணுவது நாவலரின் சைவசித்தாந்த மறுமலர்ச்சியின் கொள்கையாகவும் நடைமுறையாகவும் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கொலோனிய கால யாழ்ப்பாண சமூகத்தில் சைவ வெள்ளாளிய கருத்தியலைக் கட்டமைப்பதில் பிரதான பிதாமகராக நாவலர் விளங்கினார். ஒருபுறம் இது குடாநாட்டில் கிறிஸ்துவத்தின் பரவலைத் தடுக்க உதவியது மறுபுறம் அங்கு பெரும்பான்மையினராயிருந்த வெள்ளாரின் சாதி-மதரீதியான கூட்டு அடையாளத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கொலோனிய சூழலில் கட்டியெழுப்பியது. வெள்ளாள சமூகத்திற்குள் வர்க்க, அந்தஸ்து வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆயினும் சைவ வெள்ளாளிய கூட்டு அடையாளம் இந்த வேறுபாடுகளை உள்ளடக்கும் கருத்தியலாகக் கட்டமைக்கப்பட்டது. இது யாழ்ப்பாண சமூகத்தில் வெள்ளாளரின் சாதி மற்றும் சொத்துடைமைரீதியான மேலாதிக்கத்தை மேலும் பலப்படுத்தியது. கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு எதிராகவும் சைவாசாரப் பிரச்சாரத்திற்கும் நவீன வழிகளைப்பயன்படுத்திய நாவலரிடம் சமூகத்தின் எதிர்காலம் பற்றி நவீன ஜனநாயக விழுமியங்களால் ஆகர்சிக்கப்பட்ட பரந்த பார்வை இருக்கவில்லை. புறநிலை மாற்றங்களின் மத்தியிலும் சைவவெள்ளாளிய கருத்தியலின் தொடர்ச்சியான செல்வாக்கையும் அதன் தாக்க எதிர்த்தாக்கங்களையும் இருபதாம் நூற்றாண்டில் கண்டோம். குடாநாட்டில் ஒரு பலமான பிராமண-வெள்ளாள இணைப்பும் இருந்தது. ஆயினும் அதிகாரம் சூத்திர வர்ணத்திரான வெள்ளாள மேனிலையாளரின் கைகளிலேயே இருந்தது. பிராமணர் சடங்குரீதியில் மட்டுமே அதியுயர் சாதியாக மதிக்கப்பட்டனர்.

அன்றைய யாழ்ப்பாணச் சூழலில் கிறிஸ்துவமயமாக்கலின் எதிர்ப்பென்பது அந்தப் பிரதேசத்தவரின் மிகப்பெரும்பான்மையினரின் மதமான சைவமதத்தினைப் பாதுகாப்பதென்பது தவிர்க்கமுடியாததாயிருக்கலாம். ஆயினும் அந்த ‘மறுமலர்ச்சி’ சமூகரீதியில் முன்நோக்கிய சீர்திருத்த இயக்கமாக மலரவில்லை. ஆகக்குறைந்தது தீண்டாமையை அகற்றும் சீர்திருத்தச் சிந்தனைகூட அதனிடம் இருக்கவில்லை. மாறாக நிலமானிய சாதிய அதிகாரத்தையும் மரபுகளையும் பேணும் போக்கே மேலாதிக்கம் செலுத்தியது. சூத்திர வர்ணத்தினரான வெள்ளாளரைப் பிராமணியமயப்படுத்துவதில் கண்ணாயிருந்த நாவலர் அவர்களை சற்சூத்திரர் – அதாவது உயர்ந்த சூத்திரர் – எனப்பெருமையுடன் குறிப்பிட்டார். சைவ வெள்ளாளருக்குள் சைவக்கிரியைகளை ஒழுங்காக அனுட்டிக்கும் ஒரு தூய சைவ வெள்ளாளர் மட்டமும் உருவானது.

நாவலருக்குப் பின்

நாவலருக்குப்பின் அவரது முயற்சியைத் தொடரும் நோக்கில் அவருடன் நெருக்கமாக ஒத்துழைத்தவரான பொன்னம்பலபிள்ளையின் தலைமையில் 1888ல் சைவ பரிபாலன சபை நிறுவப்பட்டது. இந்த அமைப்பால் 1889 ஆம் ஆண்டிலிருந்து  ‘இந்து சாதனம்’, ´The Hindu Organ´ ஆகிய இரு பத்திரிகைகளும் மாதம் இருமுறை பிரசுரிக்கப்பட்டன. சபையின் முயற்சிகளால் குடாநாட்டில் பல தமிழ், ஆங்கில சைவப்பாடசாலைகள் தோன்றின. ஆங்கிலக் கல்வி வழங்குவதில் கிறிஸ்துவக் கல்லூரிகளுடன் போட்டிபோடவல்ல இந்துக் கல்லூரிகள் உருவாயின. 1869ஆம் ஆண்டு கொலோனிய அரசு எல்லா மதங்களுக்கும் மதச்சார்பற்ற கல்வியை வழங்கத் தமது பாடசாலைகளை நிறுவும் உரிமையைச் சட்டபூர்வமாக்கியது. அத்தகைய பாடசாலைகளை அமைப்பதற்கு அரச உதவியைப் பெறும் வாய்ப்பும் இருந்தது. ஆங்கிலக் கல்வியை மேலும் பரவலாக்கும் நோக்கிலேயே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதுவும் இந்து/சைவப் பாடசாலைகளை நிறுவ உதவியது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் ஆங்கில மற்றும் தமிழ்ப் பாடசாலைகள் இயங்கின. எழுத வாசிக்கத்தெரிந்தோர் தொகை அதிகரித்தவண்ணமிருந்தது. இதனால் ஆங்கில, தமிழ் பத்திரிகைகளை வாசிப்போரின் தொகையும் அதிகரித்தது. ஆயினும் பாடசாலைகளில் சாதிப்பாகுபாடு, தீண்டாமை, பெரிய பிரச்சனையாகவிருந்தது. பல பாடசாலைகள் ‘பஞ்சமர்’ சாதிகளைச் சேர்ந்த மாணவர்களை அநுமதிக்க மறுத்தன. அவர்களை அநுமதித்த பாடசாலைகளில் அவர்களுக்கு உயர்சாதி மாணவர்களுடன் சம ஆசனம் மறுக்கப்பட்டது. கொழும்புக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான பாடசாலைகளிருந்தாலும் வெள்ளாள ஆதிக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினர் கல்வி கற்பதற்குப் பல தடைகளைப் போட்டது.

ஆங்கிலக் கல்வி பெற்ற யாழ்ப்பாணத்தவர்களுக்கு அரசின் பல சேவைகளிலும் தனியார் துறைகளிலும். வேலைவாய்ப்புக்கள் கிடைத்தன. துறைசார் உயர் கல்வியைப் பெற்றவர்கள் நிர்வாக சேவை, மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் கடைமயாற்றினார்கள். இலங்கையில் மாத்திரமன்றி மற்றைய பிரிட்டிஷ் கொலொனிகளிலும் யாழ்ப்பாணத்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைத்தன. விசேடமாக மலாயாவுக்கும் சிங்கப்பூருக்கும் பலர் புலம் பெயர்ந்தனர். கல்விக்கூடான சமூக நகர்ச்சி யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியது. சாதியமைப்பும் அதன் அம்சமான நிலமானிய விழுமியங்களும் பலமாயிருந்தபோதும் அங்கு வர்க்கரீதியான சமூக வேறுபடுத்தலும் நவீன வாழ்முறை மாற்றங்களும் இடம்பெற்றவண்ணமிருந்தன. கல்விக்கூடான சமூக நகர்ச்சியின் விளைவாக ஒரு நடுத்தர வர்க்கம் உருவாகிக் கொண்டிருந்தது. இதிலிருந்து ஒரு சிலர் கொலோனிய பொருளாதாரம் கொடுத்த சந்தர்ப்பங்களைப் பயன் படுத்தி நாட்டின் செல்வந்த வர்க்கத்துடன் இணையும் போக்கும் இருந்தது. இன்னொருபுறம் வர்த்தகர்களாகப் பலர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் தெற்கின் பிறபகுதிகளுக்கும் சென்று கடைகளை நிறுவித் தொழில் செய்தனர். கைவினைஞர் சமூகங்களைச் சேர்ந்த சிலர் யாழ் நகரில் தமது சொந்த சிறுதொழில் நிலையங்களை நிறுவினர். தெற்கிலே வளரும் சந்தையை நோக்கி யாழ்ப்பாணத்தில் சிறு பண்ணை விவசாயத்தின் பணப்பயிர்மயமாக்கல் மேலும் விருத்தி பெற்றது. இதேபோன்று கடற்றொழில் உற்பத்தியின் சந்தைமயமாக்கலும் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பெருமளவில் ஒரு குட்டி முதலாளித்துவத் தன்மைகொண்ட பணப்பொருளாதாரமாக தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்ட சாதியினர் கூலி உழைப்பாளர்களாகும் போக்குத் தொடர்ந்தது. வர்க்க வேறுபடுத்தல் சாதியை ஊடறுக்கும் போக்கு சமூகமாற்றத்தின் குணாம்சங்களில் ஒன்றாகிறது. சமூக நகர்ச்சியும் உள்நாட்டு, வெளிநாட்டுப் புலப்பெயர்வும் யாழ்ப்பாண தமிழ் சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்தின் புவியியலை குடாநாட்டிற்கும் அப்பால் விரிவாக்கிய வண்ணமிருந்தது. இந்தப் புவியியல்ரீதியான போக்குப் பல காரணங்களால் இன்றும் தொடர்கிறது.  இது குடாநாட்டின் சமூகமாற்றத்தின் ஒரு முக்கிய பரிமாணம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தெற்கிலே அநகாரிக தர்மபாலா (1864-1933) போன்றோரின் முன்னெடுப்பில் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் உருவாகிப் பரந்த ஆதரவுடன் வளரத் தொடங்கியது.[6] கொலோனிய ஆட்சியாளர் ஆரம்பித்த சிங்கள, தமிழ் இனத்துவ அடையாள வேறுபடுத்தல் அந்த இனங்களின் அரசியல் மேனிலையாளர்களால் மேலும் பலமூட்டப்படும் போக்கு இருபதாம் நூற்றாண்டில் எழுகிறது. அதேவேளை மேற்கிலிருந்து தாராளவாத, ஜனநாயக, சோஷலிச சிந்தனைகள் இலங்கைக்கு வருகின்றன.

இந்த வரலாற்றுப் பின்னணியிலேயே இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ம. வே. தி இந்துசாதனத்தில் கடமையாற்ற ஆரம்பிக்கிறார். அவர் பத்திரிகையாளராக இருந்த சமகாலத்தில் இலங்கையின் அரசியல்  புதிய முனைப்புக்களையும் சில முக்கிய மாற்றங்களையும் கண்டது. இந்தியாவில் எழுந்துவந்த சுதந்திரப் போராட்டத்தால் இலங்கையில் படித்த இளைஞர்கள் பலர் ஆகர்சிக்கப்பட்டார்கள். விசேடமாக யாழ்ப்பாணத்தில் 1924ஆம் ஆண்டு முற்போக்கு இளைஞர்கள் குழு ஒன்று ‘மாணவர் கொங்கிரஸ்’ எனும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியது. பின்னர் இது 1930ல்

யாழ்ப்பாண வாலிபர் கொங்கிரஸ் (Jaffna Youth Congress – JYC) என பெயரிடப்பட்டது. யாழ்ப்பாணக் கல்லூரியில் இளம் ஆசிரியராயிருந்த காந்தியவாதி ஹண்டி பேரின்பநாயகம் இதன் முக்கிய தலைவர்களில் ஒருவர். இவருடன் நடேசன் (பின்னர் பிரபல சட்டவாளராகவும் செனட்டராகவும் இருந்தவர்), நேசையா, ஒறேற்றர் சுப்பிரமணியம் போன்ற பலர் JYCல் முக்கிய பங்கு வகித்தனர். JYC நாட்டிற்குப் பூரண சுதந்திரம், மதச்சார்பற்ற அரசு, இனங்களின் ஐக்கியம், தாய்மொழிக் கல்வி, சாதி ஒடுக்குமுறையின் ஒழிப்பு, இறக்குமதி பொருட்களில் தங்கியிருப்பதைக் குறைக்கும் நோக்கில் உள்நாட்டு உற்பத்தியை விருத்தி செய்தல் போன்ற முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டிருந்தது. இதனால் அது தெற்கிலும் பல அறிவாளரின் ஆதரவைப் பெற்றது. ‘சூரியமல்’ இயக்கமும் அதைத்தொடந்து 1935ல் பிறந்த லங்கா சமசமாஜக் கட்சியும் JYCக்கு நெருக்கமான கொள்கைகளைக் கொண்டிருந்தன. இந்தக் கட்சியின் வருகையுடன் இலங்கையில் சர்வதேசத் தொடர்புகளைக் கொண்ட ஒரு இடதுசாரி இயக்கம் உருவாகி முன்னேறியது. தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடிய இந்த இயக்கம் அப்போது திடமான ஏகாதிபத்திய, கொலோனிய எதிர்ப்புக் கொள்கையைக் கொண்டிருந்தது. மறுபுறம் சிங்கள, தமிழ் இனத்துவ அரசியலும் வளர்ந்தது.

1931ல் டொனொமூர் சீர்திருத்தங்கள் வந்தன. கொலோனிய ஆட்சிக்குள் சர்வஜன வாக்குரிமையை டொனொமூர் ஆணைக்குழு சிபார்சுசெய்தது. பூரண சுதந்திரத்திற்கு குறைந்த எந்த மாற்றத்தையும் ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டினை கொண்டிருந்த JYC டொனொமூர் சீர்திருத்தங்ளை எதிர்த்தது மட்டுமல்லாமல் அவற்றைத் தொடர்ந்து 1931ல் வந்த அரச சட்டசபைத் தேர்தலையும் பகிஷ்கரிக்கும் இயக்கத்தையும் வெற்றிகரமாக முன்னெடுத்தது. முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக பொன் இராமநாதனும் அவர் போன்ற சிங்கள, முஸ்லிம் தலைவர்களும் சர்வஜன வாக்குரிமையை எதிர்த்தனர். இராமநாதன் 1930 நவம்பர் மாதம் மரணமடைந்தார். அதற்கு முன்னர், 1927ல் டொனொமூர் ஆணைக்குழு தனது வேலையை ஆரம்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து இடம்பெற்ற விவாதங்களில் அவர் சர்வஜன வாக்குரிமைக்கு எதிரான தன் கருத்துக்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் நேரடியாகக் கொலோனிய ஆட்சியாளர்களுக்குதன் நிலைப்பாட்டை எடுத்துரைக்க இங்கிலாந்துவரை சென்றார். ஆயினும் அவருடைய கருத்து அங்கும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவமயமாக்கல், அதற்கெதிரான சைவமத மறுமலர்ச்சி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டு மதச்சார்பற்றதும் கொலோனியத்திற்கு எதிரானதுமான முற்போக்கு இயக்கமாக மலர்ந்த JYC துரதிஷ்ட வசமாக நீண்டகாலம் நிலைக்கவில்லை. 1935க்குப் பின்னர் அது ஒரு இயக்கமாகச் செயலிழந்து போயிற்று. ஆனால் அத்தகைய ஒரு இயக்கம் அன்றைய யாழ்ப்பாணத்தில் உதித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.[7] JYCன் ஆரம்பகர்த்தாக்களில் பலர் தொடர்ந்தும் முற்போக்கு அரசியல் போக்குகளுடன் தம்மை இனங்காட்டிவந்ததுடன் குடாநாட்டில் சிறந்த ஆசிரியர்களாகவும், பின்னர் (1940களிலும் பின்னரும்) பாடசாலை அதிபர்களாகவும், சமூக சீர்திருத்தவாளர்களாகவும் பங்காற்றினார்கள். அவர்கள் கடமை ஆற்றிய பாடசாலைகளில் சாதிப் பாகுபாட்டை இல்லாதொழிக்க உழைத்தார்கள். உதாரணமாக 1944ஆம் ஆண்டு ஒறேற்றர் சுப்பிரமணியம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் தலைமை ஆசிரியராகப் பதயியேற்றபின் அந்தப் பாடாசாலையின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கும் உயர் சாதியினருடன் சமமாகத் திறந்து விட்டார். அத்துடன் தெற்கிலிருந்து வந்த சில சிங்கள மாணவர்களுக்கும் அனுமதி வழங்கினார். அவர் காலத்திலே ஒரு பௌத்த பிக்குவை சிங்கள மொழி ஆசிரியராகவும் நியமித்தார். அதேபோன்று ஹண்டி பேரின்பநாயகம் 1949ல் கொக்குவில் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியரானபின் அந்தக் கல்லூரியைத் தன் பரந்த பார்வைக்கேற்ப விருத்தி செய்தார். இவை இரண்டு உதாரணங்கள்.

சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்த ஒரு குழுவினர் 1943ஆம் ஆண்டு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தனர். இவ்விரு கட்சிகளும் யாழ்ப்பாணத்தில் கிளைகள் அமைத்துச் செயற்பட்டன. இந்த இரு கட்சிகளின் தோற்றத்திலிருந்தே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில அறிவாளர்கள் அவற்றில் முக்கிய பங்குகளை வகித்தனர்.[8] 1945ஆம் ஆண்டு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் அறிவாளராகவும் செயற்பாட்டாளாராகவும் யாழ்ப்பாணத்தில் நன்கறியப்பட்ட மு. கார்த்திகேசன் சம்பந்தபிள்ளை கடமையாற்றிக் கொண்டிருந்த யாழ் இந்துக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.  அந்தக் காலகட்டத்தில் 1942ல் தோன்றிய சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் உரிமைகளுக்காகச் செயற்பட்டது. 1944 ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ் கொங்கிரஸ் உருவானது. ஆகவே ம. வே. தி வாழ்ந்த கால யாழ்ப்பாணத்தில் மதச்சார்பற்ற, சாதியத்திற்கு எதிரான முற்போக்கு, இடதுசாரி அமைப்புக்களும், பின்னைய காலத்தில் வலதுசாரிக் கட்சியான தமிழ் கொங்கிரசும் செயற்பட்டுகொண்டிருந்தன.

 திருஞானசம்பந்தபிள்ளை: பத்திரிகையாளர், படைப்பிலக்கியகர்த்தா

உலகம் பலவிதம் நூலில் ம.வே.தியை ஒரு பத்திரிகையாளராகவும் படைப்பிலக்கிய கர்த்தாவாகவும் சந்திக்கிறோம். இந்த இரண்டுவகையான எழுத்துக்களும் ஒரு பேனாவுக்கூடாகவே பிறக்கின்றன. அவருடைய காலத்தில் இந்து சாதனம் வாரப் பத்திரிகையாகவும் பின்னர் வாரமிருமுறையாகவும் வெளிவந்தது. பதிப்பாசிரியர்  சோமேசசுந்தரி நூலின் உள்ளடக்கங்களை பத்திகளாக இல்லாமல் வெளியானவை, பத்திகள், உரைச்சித்திரங்கள், கதைகள் நாவல்கள் என வகைப்படுத்தியுள்ளார். சமூக, அரசியல் செய்திகள், நிலைமைகள் பற்றிய  எழுத்துக்களில் ம.வே.தியின் பண்டைய இலக்கிய அறிவும் கதைசொல்லும் பண்பும் பலமாகத் தென்படுகின்றன. பல இடங்களில் தான் சொல்லவரும் செய்தியை இருவருக்கூடான உரையாடலாகவோ, அல்லது ஒரு உருவகக் கதையாகவோ தருகிறார். இடைக்கிடை பழைய காப்பியங்களிலிருந்து உதாரணங்களும் உவமைகளும் நிறைய வரும். அவருடைய ஆக்க இலக்கியப் படைப்புக்கள் (கதைகள், நாவல்கள் எனப் பதிப்பாசிரியர் குறிப்பிடுபவை) யாழ்ப்பாண வெள்ளாள நடுத்தர, கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பங்களை மையமாகக்கொண்டவை. இந்தச் சமூக மட்டத்தவரின் வாழ்நிலைமைகளை, ஏற்றத்தாழ்வுகளை, விழுமியங்களை, ஆதங்கங்களை அவர் நன்கறிந்திருந்தாரென நம்பமுடிகிறது. வறுமையைப் பற்றி எழுதும்போதும்கூட பொதுவாக இந்தச் சமூகப்பிரிவினைச் சார்ந்த வறியோரின் பிரச்சனைகள் பற்றியே எழுதுகிறார். யாழ் நடுத்தர வர்க்கத்திலிருந்து மேலே நகர்ந்து கொழும்பின் பூர்ஷ்வா வர்க்கத்துடன் இணைந்துவிட்ட குழுவினர் பற்றி இந்த நூலில் அதிகம் இல்லை.

கொலோனிய ஆங்கிலக் கல்வி, சமூக நகர்ச்சி, வர்க்கவேறுபடுத்தல், இளம் சந்ததியினரின் விழுமிய மற்றும் வாழ்முறை மாற்றங்கள், சந்ததிகளுக்கிடையிலான முரண்பாடுகள், பெண்களின் அந்தஸ்து, திரவியம் தேடத் திரைகடலோடிப் பலர் மலாயாவுக்கும், சிங்கப்பூருக்கும் புலம்பெயர்ந்ததால் வந்த புதிய மாற்றங்கள் போன்ற பல சமகால மாற்றப்போக்கின் அம்சங்களால் ஈர்க்கப்படுகிறார் என்பதை அவரின் எழுத்துக்களில் காண்கிறோம். அந்த எழுத்துக்களில் அவருடைய சைவாசார நிலைப்பாட்டின் மேலாட்சியையும், கிறிஸ்துவ மதமாற்றத்திற்குத் திடமான எதிர்ப்பினையும் காண்கிறோம். சைவாசார மரபிலான வாழ்வியல் பொருள் தேடலுக்கு எதிரானதல்ல என்பதைக் காட்ட முற்படும் அதேவேளை இவற்றிற்கிடையிலான முரண்பாடுகளுடன் போராடுகிறார். நடைமுறையில் சைவர்களெனப்படுவோர் மரபுகளை மாற்றுவதையும் உதாசினம் செய்வதையும் கண்டு புழுங்குகிறார்.     நகைச்சுவை, கிண்டல், மாற்று நிலைப்பாட்டாரின் கேள்விகளுக்குச் சாதுரியமான பதில்கள், இவையெல்லாம் அவரின் உரைநடையுடன் இணைந்த அம்சங்கள். ஆனால் அவரைச் சுற்றி இடம்பெறும் மாற்றங்களைக் கண்டு ‘உலகம் பலவிதம்’ எனும் தலைப்பில் பத்தி எழுத முன்வந்த ம.வே.தி அந்த மாற்றப்போக்குத் தான் பாதுகாக்க விழையும் பழைய விழுமியங்களை அடித்துச் செல்லவல்லது எனக்கண்டு அஞ்சுகிறார்.  மாற்றமே விதி என்பதை அவர் அநுபவத்திற்கூடாக உணர்கிறார். ஆனால் மாற்றத்தை எற்படுத்துவதில் அல்லது வரலாற்று சக்திகளால் உந்தப்படும் மாற்றத்தை எதிர்கொள்வதில் மனிதரின் உணர்வுபூர்வமான பங்கு என்ன எனும் கேள்வியைப் பொறுத்தவரை அவர் ஜனநாயகத்தின் முழுமையான மலர்ச்சிக்கு, மனித விடுதலைக்குத் தடைபோடும் பழைய கலாச்சார விழுமியங்களில் தஞ்சமடைகிறார். கிறிஸ்துவத்தின் செல்வாக்கினை மட்டுமன்றி கொலோனிய-முதலாளித்துவ சக்திகளின் விளைவான சமூக, கலாச்சார மாற்றங்களை எதிர்ப்பதற்கும் இதுவே வழியென நம்புகிறார். இதற்கு மாற்றாக முழு நாடும் தழுவிய ஒரு முன்னோக்கிய கொலோனிய எதிர்ப்பு விடுதலை அரசியலின் தேவை இங்கு புலப்படுகிறது.

இயங்கியல் பார்வையில் வரலாறென்பது மாற்றத்தையும் தொடர்ச்சியையும் உள்ளடக்கிய போக்கு. மாக்ஸ் சொல்வது போல் மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் ஆனால் தாமாகத் தேர்ந்தெடுத்த சூழ்நிலைகளில் அல்ல, ஏற்கனவே வரலாறு கையளித்த சூழ்நிலைகளிலே, அவற்றின் குறிப்பான அதிகார உறவுகளின் முரண்பாடுகளின் அங்கங்களாகத் தனியர்களாகவும் கூட்டாகவும் அதைச் செய்கிறார்கள். கொலோனியம் தந்த மாற்றங்கள் மேலிருந்து கீழானவை. இவை உள்நாட்டிலும் ஒருசாராரின் நலன்களுக்கு உதவின. ஆனால் கொலோனியத்தின் அரசியல், சமூக, பொருளாதார தாக்கங்கள் பரவலானவை. யாழ்ப்பாணத்து உயர்சாதி-உயர் வர்க்கத்தினர் எத்தகைய மாற்றப்போக்கைப் பலப்படுத்தினர் எத்தகைய பழைய நிறுவனங்களைப் பாதுகாத்து சமகாலத்தில் தம் நலன்களுக்கு உதவும் வகையில் சீர்படுத்தினர்? இதில் சாதிகளாகவும், வர்க்கங்களாகவும், பால்ரீதியிலும் வேறுபடுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பங்குகள் என்ன, அவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகின்றனர்? இதில் ம.வே.தி போன்ற ஒரு அறிவாளரின் பங்கு என்ன? போன்ற கேள்விகள் முக்கியமானவை. இந்தக் கட்டுரையில் இவை எல்லாவற்றையும் ஆழமாக ஆராயமுடியாத போதும் நூலின் சில அம்சங்கள் பற்றிய எனது கருத்துக்களை பின்வரும் ஐந்து உபதலைப்புக்களின் கீழ் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

  • அரசியல், பொருளாதாரம், சமூகமாற்றம்
  • சைவாசாரமும் சாதியமும்
  • பால்நிலை
  • ஐரோப்பிய கலாச்சாரச் செல்வாக்கு
  • ஆக்க இலக்கியப் படைப்புக்கள்

அரசியல், பொருளாதாரம், சமூக மாற்றம்

இந்து சாதனம் பிரிட்டிஷ் கொலோனியக்கால யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட சைவமதக் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கத்தின் பத்திரிகை.  பிரிட்டிஷ் கொலோனியத்துடன் வந்த புரொட்டெஸ்டண்ட் கிறிஸ்துவமயமாக்கலே இந்தக் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கத்தின் பிறப்புக்குக் காரணமாயிருந்தது. பொதுவாகக் கொலோனியத்திற்கு எதிரான இயக்கங்கள் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கங்களாகவே ஆரம்பித்து அரசியல் இயக்கங்களாகப் பரிணமிக்கின்றன எனும் கருத்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆயினும் கொலோனியகாலத்திய எல்லாக் கலாச்சார மறுமலர்ச்சி இயக்கங்களும் அத்தகைய ஒரு மாற்றத்தைக் காண்பதில்லை. நாவலர் உருவாக்கிய சைவமத மறுமலர்ச்சி இயக்கமும் இதற்கு ஒரு உதாரணம். அது ஒரு வெகுஜனத்தன்மை கொண்ட கொலோனிய எதிர்ப்பு இயக்கமாகப் பரிணமிக்கும் தன்மைகளையோ, ஒரு நவீன எதிர்காலம் பற்றிய பார்வையையோ கொண்டிருக்கவில்லை. ஒரு குறுகிய சமூக அடிப்படையைக் கொண்டிருந்த அந்த இயக்கம் சைவசித்தாந்தத்தைக் கிறிஸ்துவத்தின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து நிலைநிறுத்தும் நோக்கிலான செயற்பாடுகளுக்கு அப்பால் கொலோனியத்தை அரசியல்ரீதியில் எதிர்ப்பதைத் தவிர்த்துக் கொண்டது. சைவப்புராண, ஆகம மரபுகளின் வியாக்கியானங்களில் வேரூன்றியிருக்கும் அதன் கருத்தியல் அன்றைய சாதிய, வர்க்க, ஆணாதிக்க அதிகார உறவுகளைப் பலப்படுத்தவே உதவியது.

இந்துசாதனத்தில் ம. வே. தி அவருக்கேயுரிய சமயாபிமானத்திற்கேற்ப சைவசாரத்தின் மேன்மைபற்றியும் கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு எதிராகவும் தனது ஆக்கத்திறனையும் எழுத்தாற்றலையும் பிரதானமாகப் பயன்படுத்திய போதும் அவர் காலத்திய அரசியல், பொருளாதார விடயங்கள் தொடர்பாகவும் எழுதியுள்ளார், அபிப்பிராயம் தெரிவித்துள்ளார். அவருடைய அரசியல் பார்வை மேற்கூறிய கருத்தியலின் செல்வாக்கிற்குள்ளானது.  அந்த நிலைப்பாட்டிலிருந்தே  இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்ற அரசியல் விவாதங்களையும் போக்குகளையும் அவர் அணுகினார், உலக அரசியல் போக்குகள், முரண்பாடுகள் பற்றியும் அபிப்பிராயங்கள் தெரிவித்தார். 1935 ஒக்டோபரில் (ப 305) இத்தாலிய பாசிசத் தலைவனான முசோலினியை ‘ உலகமெல்லாம் ஒப்பப் புகழ இட்டாலியின் சர்வாதிகாரியாக இருந்துவரும் மகாவீரர்’ என வியந்துரைத்து, ‘இப்படிப்பட்ட நாகரிகமான மனுஷனுடைய மனைவி’ பகிரங்க நிகழ்வுகளில் தோன்றாது பிள்ளைகளுடன் இல்லறம் நடத்தும் ‘ஓர் உண்மைப் பெண்மணி’ எனப் போற்றிப் புகழ்கிறார்! யாழ்ப்பாணத்தில் ‘போலிச்சுவாதீனத்தை’ விரும்பும் ‘நவீன பெண்மணி’களுக்கு இந்தச் செய்தியைக் கொடுப்பதே அவருடைய நோக்கம். 1936 மார்ச்சில் ஹிட்லரைத் ‘தீரபுருஷன்’ என வர்ணிக்கிறார். ‘தன்னுடைய தாய்நாட்டைத் தலையெடுக்காதபடி பகைவர்கள் பலவகையாகக் கட்டியிருக்குங் கட்டுக்களை ஒன்றொன்றாக’ அறுக்கும் தேசிய வீரனாகவே அவர் ஹிட்லரைப் பார்த்தார் (ப 318) . ஹிட்லரின் ஆரியஉயர்வு நிறவாத ஆக்கிரமிப்புத் திட்டத்தை, கொடிய பாசிசக் கருத்தியலை அவர் கவனிக்கவில்லை. 1935-1936ல் முசோலினியையும் ஹிட்லரையும் வியந்து மெச்சியவர் பின்னர் – இரண்டாம் உலகப் போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரும் – தனது அபிப்பிராயத்தை மாற்றியதாகத் தெரியவில்லை.

1929-1931காலத்தில் மேற்கில் ஆரம்பித்து உலகரீதியில் பாதிப்புக்களை விளைவித்த பொருளாதார நெருக்கடி இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி 1931-1933 காலத்தில் குறிப்புரைகள் எழுதியுள்ளார். இலங்கை சர்வதேச கொலோனிய தொழிற் பிரிவாக்கலில் உள்வாங்கப்பட்டிருந்தது.  உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஆங்கிலக் கல்வி பெற்ற யாழ்ப்பாணத்தவர்கள் இலங்கையின் ஏனைய பாகங்களிலும் மலாயா போன்ற பிரித்தானியக் கொலொனிகளிலும் வேலையிழந்து யாழ் திரும்பியுள்ளது பற்றியும் உலகரீதியான பணமுட்டின் உள்நாட்டுத்தாக்கங்கள் மற்றும் இதனால் யாழ்ப்பாணத்துக் கல்யாணச்சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது பற்றியும் குறிப்பிடுகிறார். மலாயா சென்று உழைத்தவர் வேலையிழந்ததால் யாழ்ப்பாணத்தில் காசாதாரத்தில் தங்கியிருந்த குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்தப் புலப்பெயர்வும் காசாதாரமும் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தின் உருவாக்கத்திற்கு பங்களித்தன.[9] உலகப் பொருளாதாரச் சிக்கலின் தன்மையை புரிந்து கொள்ளாத யாழ்ப்பாணத்தவர் பற்றி 1933 மார்ச் 16ஆம் திகதி பின்வருமாறு எழுதுகிறார்:

‘இரும்புத்துண்டை எடுத்து விழுங்கிவிட்டு, அது சீரணிக்கும்படி சுக்கு  (வேர்க்கொம்பு) அவித்துக் குடித்தால் அது சீரணமாகிவிடுமா? உலகம் முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் பண முட்டினையும் தொழிலின்மையையும், உத்தியோகப் பஞ்சத்தையும், யாழ்ப்பாணத்திற்கே பிரதானமாக வந்தனவென்று பேய்த்தனமாய் நினைத்துக்கொண்டு, இவை வந்தமைக்குக் காரணம் இங்கிருந்து நாலுபேர்களென்று சொல்லிக்கொண்டு நூதனமான அரசாங்க சபைக்குப்போய், அங்கே தேசாதிபதியாகிய நட்டுவனால் ஆட்டப்படும் சூத்திரப்பாவை போல் நின்று ஆடினால், பணமுட்டு நீங்க, தொழிலின் முயற்சியும் உத்தியோகமும் யாழ்ப்பாணத்தவருக்கு வந்துவிடுமா? சிங்களருக்குப் பணமுட்டு முதலியன இல்லையா?……… இக்கரைக்கு அக்கரை பச்சனவுபோலத் தோன்றுகிறதே யல்லாமல் உண்மையில் அக்கரையும் பச்சையல்ல. நாம் அக்கரையில் போய் நின்று பார்த்தால் நம்கண்ணுக்கு இக்கரை பச்சனவாகத்தான் புலப்படும்.’ (ப 275)

இந்த நிலைமையில் ஆங்கிலக்கல்வியை விமர்சித்துக் கமத்தொழில், கைத் தொழில்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

‘..இந்தக் கஷ்டமான காலத்திலே ஜீவனார்த்தமாகப் பயன்தராதாகிய ஆங்கிலக் கல்வியை பல பிள்ளைகள் பெருங்கஷ்டப்பட்டுப் படிக்கிறார்களே. இக் கல்வியினாற் சிறிது இக்காலத்திய அறிவைப் பெற்றுக்கொள்ளலாகும்; ஆனால் இதுவாயிலாக இனிமேற் சீவியம் நடத்த முடியாது. ஆனதால் ஏதுந் தொழிற்கல்வியை நமது கலாசாலைகளில் ஊட்டுவித்தற்கான முயற்சிகளைச் செய்யவொண்ணாதா? சிக்கனமாக வாழும்படி சனங்களுக்குத் தெருட்டவொண்ணாதா? கமத்தொழில் கைத்தொழில்களைச் செய்து சீவித்தல் கௌரவக்குறைவென்ற பேய்த்தனமான எண்ணம் இக்காலத்து வாலிபரிடத்தும் வளர்ந்தவரிடத்தும் உண்டுபட்டிருக்கின்றதே! இந்த எண்ணம் வீணாணதே; ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்’ என்றும் ‘போனகமென்பது தானுழைத்துண்டல்’ என்றும் சனங்களுக்குப் புத்தி புகட்ட வொண்ணாதா? (ப 276)

அன்று நிலவிய ஆங்கிலக் கல்வியின் குறைபாட்டை விமர்சிக்கிறார். அன்றைய கல்விக்கு மாற்றாக அவர் முன்வைக்கும் கமத்தொழில், கைத்தொழில் ஆகியன சுதந்திரமான வாழ்வாதாரங்களெனச் சொல்கிறார். ‘எந்தப் பொருள்களையும் இயன்றவரையிற் சொந்த நாட்டிலேயே ஆக்கி உபயோகியுங்கள், இயலாதவைகளைத்தான் அந்நிய நாட்டிலிருந்து தருவியுங்கள் என்று அரசாங்க சபைக்குட் பிரவேசிக்க விரும்புவோர் மற்றக் கட்சியினரையும் சேர்த்துக்கொண்டு எங்கும் சென்று பிரசாரணஞ் செய்யவொண்ணாதா?’ என வாதிடுகிறார். உலகப் பொருளாதார சிக்கல்களின் தாக்கங்ளைத் தவிர்க்கும் நோக்கில் ஒரு சுயசார்புப் பொருளாதாரப் பார்வையை அவர் கொண்டிருக்கலாம் போல் படுகிறது. இந்த விடயத்தில் அவர் JYC உடன் ஒத்த போக்கினைக் கொண்டிருந்த போதும் கோட்பாட்டுரீதியில் அதன் அரசியலை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.

நடைமுறையில் அன்றைய யாழ்ப்பாணத்து வேளாண்மையில் நிலமற்ற தீண்டாச்சாதியினரின் உழைப்பு முக்கிய பங்கு வகித்தது. அவர்கள் சுதந்திரமின்றிப் பலவகையில் தினமும் கமக்காரர்களைத் ‘தொழுதுண்டு பின்செல்லும்’ நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். கமத்தொழிலுக்காகப் பல தடவைகள் வக்காலத்துவாங்கும் ம.வே.தி இந்த உழைப்பாளர்களின் பங்களிப்புப் பற்றியோ அவர்களின் ஒடுக்கப்பட்ட நிலைபற்றியோ அக்கறை காட்டவில்லை. வேலையற்றிருக்கும் உயர்சாதி இளைஞர்களுக்குக் கமத் தொழிலில் நாட்டமில்லாமை பற்றிப் பல இடங்களில் வருத்தத்துடன் வெளிப்படுத்துகிறார். அன்றைய சமூகப்போக்கின் ஒரு யதார்த்தத்தை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்.

‘ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்பதையும் நம்மனோர் அறவே மறந்துவிட்டார்கள். இனி, கமத்தொழில் செய்யவில்லையேயென்று நமது வாலிபர்களை நாம் முற்றாகக் குறை சொல்வதும் முறையல்லவெனப் புலப்படுகின்றது. ஏனென்றால் கமத்தொழில் செய்யப்புகின் நமது வாலிபர்கள் விவாகமின்றி நித்திய பிரமசாரிகளாகவே யிருத்தல் வேண்டும். கமக்காரனும் தன் மகளுக்கு ஒரு உத்தியோகத்தன் மணஞ்செய்யவேண்டுமென்ற பிடிவாதம் கொண்டேநிற்கின்றான். அவன் மகளும் அப்படியே நிற்கின்றாள். தோட்டக்காரனுக்கு என்மகள் வாழ்க்கைப் படுவதா வென்று கமக்காரனுடைய மனைவியே சொல்லி அருவருக்கிறாள். இந்தக் காரணங்களினால்தான் நமது வாலிபர் மனம் கமத்தொழிலிற் செல்வதில்லை.’ (ப185)

ஆனால் முழுமையான உண்மை நிலைமை என்ன? நடுத்தர வர்க்க வெள்ளாள இளைஞர்கள் விவசாயத்தை ஒதுக்கியபோதும் யாழ்ப்பாணத்தில் விவசாயம் மறைந்துவிடவில்லை. அது சந்தைமயப்படுத்தப்பட்ட பணப்பயிர் விவசாயமாக மாறிக்கொண்டிருந்தது. இந்தப் போக்கு ஒல்லாந்த ஆட்சியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. ஒல்லாந்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் புகையிலை ஒரு ஏற்றுமதிப் பணப்பயிராக அறிமுகம் செய்யப்பட்டது. புகையிலை ஏற்றுமதியால் ஒல்லாந்த அரசு பெரும் வருமானத்தைப் பெற்றது. இந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலச்சந்தையும் வளர்ந்தது. இதற்கு உதவும் சட்ட அமைப்பினை உருவாக்கிய ஒல்லாந்த ஆட்சி குடாநாட்டில் வெள்ளாளரின் வீட்டுவேலையாட்களான ‘தீண்டத்தக்க’ சாதியினரான கோவியரையும், கமங்களில் வேலை செய்த ‘தீண்டத்தகாதவரான’ நளவ, பள்ள சாதியினரையும் அடிமைகளென வரையறுத்தனர். இது இந்தச் சாதியினர்மீது, குறிப்பாக பின்னைய இரு சாதியினர்மீது, வெள்ளாளர் கொண்டிருந்த அதிகாரத்தை மேலும் பலப்படுத்தியது. [10]  ஒல்லாந்த ஆட்சியின்கீழ் தேசவழமையும் சட்டபூர்வமாக்கப்பட்டது.

புகையிலை உற்பத்தியுடன் யாழ்ப்பாணத்தில் சுருட்டு உற்பத்தி வளர்ந்தது. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பல வெள்ளாள ஆண்களும் சுருட்டுத் தொழிலாளர்களானார்கள். இருபதாம் நூற்றாண்டில் பணப்பயிர் செய்கைமேலும் வளர்ச்சிபெற்று 1970களில் ஒரு உச்சநிலையை அடைந்தது. 1950களில் நீரிறைக்கும் இயந்திரங்களின் பாவனையும் பரவ ஆரம்பித்தது. விவசாயத்தில் ஈடுபடுவோர் தொகை குறைந்து சென்றபோதும் விவசாயத்தின் பணப்பயிர்மயமாக்கல் தொடர்ந்தது. இதுவும் வர்க்க வேறுபடுத்தல் போக்கிற்கு உதவியது. இந்த மாற்றத்தின் ஒரு முக்கிய அம்சமென்ன வெனில் இந்தப் பயிர்ச்செய்கை நிலமற்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கிராமியத் தொழிலாளர்களின் கூலி உழைப்பில் பெருமளவு தங்கியிருந்தது. சாதிரீதியில் ஒடுக்கப்பட்ட இந்த மக்கள் வர்க்கரீதியில் சுரண்டப்பட்டார்கள். ஒடுக்குமுறையும் சுரண்டலும் பின்னிப்பிணையும் நிலையில் இவர்கள் இரண்டு வகையில் உரிமை மீறல்களுக்காளானார்கள்.

கமநிலங்களின் உடைமையாளர்களாக இருந்த வெள்ளாளரில் பலர் பகுதிநேர விவசாயிகளாக அல்லது அவர்களது நிலங்களைக் குத்தகைக்கு விடுபவர்களாக (absentee landlords  ஆக) மாறிக்கொண்டிருந்தனர். வேறு தொழில் வாய்ப்பு, புலப்பெயர்வு, வயோதிபம், இளம் சந்ததி விவசாயம் செய்யவிரும்பாது வேறு தொழில் தேடல், போன்றவை இதற்கான காரணங்களில் அடங்கும். ஆகவே யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்குக் கமத்தொழிலில் நாட்டமில்லையென ம.வே.தி பலதடவைகள் விசனத்துடன் கூறுவது அன்றைய சமூகமாற்றப்போக்கின் ஒரு குறிப்பிட்ட அம்சம், அதாவது கமம் செய்ய விரும்பாத வெள்ளாள இளைஞர்கள், பற்றிய கூர்நோக்கே. ஐந்தாம் ஆறாம் வகுப்புவரை படித்த இளைஞர்கள் கமம் செய்வதைவிட மோட்டார்வாகனம் ஓட்டும் தொழிலை விரும்புகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இது இளம் சந்ததியின் விழுமிய மாற்றத்தைக் காட்டும் இன்னொரு அறிகுறி. அன்றைய சமூக மாற்றப்போக்கின் வேறுசில அம்சங்களையும் குறிப்பிடல் வேண்டும். சீதனம் மற்றும் நிலச் சந்தைக்கைகூடாக நிலச்சொத்தின் பங்கீடும் மீள்பங்கீடும் உயர் சாதியினருக்குள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. அரசாங்கத்திலும், தனியார் துறைகளிலும் தொழிலாற்றும் ஆண்களுக்குக் ‘கல்யாணச் சந்தையில்’ மதிப்பு உயர்ந்தது. தொழிலின் அந்தஸ்துடன் சீதனமும் உயர்ந்தது. இதுவும் உயர், இடைத்தர சாதிகளுக்குள்ளே வர்க்கரீதியான, அந்தஸ்து ரீதியான சமூகவேறுபாடாக்கல் போக்குகளின் ஒரு அம்சமாயிற்று. உயர்கல்வி, உயர் பதவி பெற்றோர் பெருஞ்சீதனத்துடன் விவாகம் செய்து செல்வந்தராயினர். சீதனம் கொடுக்க முடியாமையாற் பலகுடும்பங்கள் சீரழிந்தன. இவற்றிற்கு இடையே மேலும் சில அடுக்குகள். இந்தப் பரந்த மாற்றச் சூழலின் ஒரு அம்சமாகவே சம்பந்தபிள்ளையின் அவதானிப்புகளைப் பார்க்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் முன்னெப்போதுமில்லாதவகையான வறுமை, ஏற்றத்தாழ்வுகள் தோன்றியிருப்பது பற்றி எழுதியுள்ளார். 1932 மார்ச்சில் வறுமையின் கொடுமையினால் நிலாவரையில் வீழ்ந்து உயிர் விட்டவர்கள் பற்றி அக்கறையாக எழுதியுள்ளார் (ப 237). முன்னர் குறிப்பிட்டதுபோல் பொதுவாக உயர் சாதிக் குடும்பங்களின் வறுமையைப்பற்றியே இவரது கட்டுரைகளிலும் கதைகளிலும் காண்கிறோம். அவருடைய சொற்களில் சொல்வதானால்:

‘நமது ஊரிலே இடைத்தர வகுப்பினரென ஒருபாலார் இருக்கின்றனர். இவர்கள் குலங்குடியிற் பிறந்தவர்கள்; நல்லாயிருந்து கெட்டவர்கள்; மானம் மரியாதைக்கு உட்பட்டவர்கள்; மானத்தின் பொருட்டு உயிரையும் விடத்தக்கவர்கள்; ஒருவரிடத்தில் இரக்கவும் மனம்  பொருந்தார்; வெளியே புறப்பட்டுக் கூலிவேலை செய்யவும் பின்னிற்பர்; ஏதோ தக்களிடத்துள்ள அற்ப பொருளை ஒருவாறு விருத்தி பண்ணி அதனால்வரும் ஊதியத்தையெடுத்து வறுமையிற் செம்மையென்றபடி ஒருவாறு மரியாதையாகக் காலம் கழிப்பவர்.’ (ப 100).

இந்த வறியகுடும்பங்கள் பொதுவாக விதவையான பெண்தலைமைத்துவக் குடும்பங்கள். அந்தப் பெண்ணின் விடா முயற்சியால் குடும்பம் மீண்டும் தலையெடுத்து, மகனின் உழைப்பால் முன்னேறுகிறது. இந்த யதார்த்தத்தை அவரது கதைகளிலும் கையாண்டுள்ளார். ஆனால் இந்த இடைத்தர வகுப்பினருக்கும் கீழே ஒடுக்கப்பட்டோராயும் சுரண்டப்படுவோராயும் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வறுமையைப்பற்றி அவர் அறிந்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. அவருடைய அபிப்பிராயத்தில் சுருட்டுத் தொழிலாளர் போன்ற கூலி உழைப்பாளர்கள் போதியளவு கூலிபெறுவதால் அவர்கள் மேற்கூறிய வறிய குடும்பங்களைவிட வசதியாக வாழ்கிறார்கள்.  தொழிலாளருக்குப் பணவேதனம் கிடைப்பதால் அவர்கள் ஓரளவுக்கு தமது அடிப்படைத் தேவைகள் சிலவற்றைப் பூர்த்தி செய்யமுடிகிறது. ஆயினும் அவர்கள் வறுமையிலிருந்து முற்றாகத் தப்பிக் கொண்டார்களெனச் சொல்லமுடியாது.

டொனொமூர் அரசியல் சீர்திருத்தத்திட்டமும் ம.வே.தியும்

1931ல் வந்த டொனொமூர் ஆணைக்குழுவின் சிபார்சில் வந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக நாட்டில் கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் பிறந்தன. ஏற்கனவே குறிப்பிட்டது போல் இந்த விவகாரத்தில் யாழ்ப்பாண வாலிபர் கொங்கிரஸ் (JYC)  ஒரு தீவிரமான பங்கினை வகித்தது. பூரண சுதந்திரமே தமது குறிக்கோளெனும் நிலைப்பாட்டிலிருந்து JYC டொனொமூர் சீர்திருத்தங்களை நிராகரித்தது. ம.வே.தி சுதந்திரத்திற்குச் சாதகமான கருத்துக்களை கொண்டிருந்தபோதும், அரச சபைத்தேர்தல் பகிஷ்கரிப்பை ஆதரித்தபோதும் JYCன் அரசியல் கொள்கையை ஆதரித்தார் எனக்கூறமுடியாது. அரசியல்ரீதியில் அவர் பொன் இராமநாதனின் கொள்கைகளையே பின்பற்றினார். டொனொமூர் திட்டத்தை ஒரு ‘வெள்ளை யானை’ எனக் கூறும் ம.வே.தி அதன் ஒரு பிரதான அம்சமாகிய சர்வஜன வாக்குரிமை பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்.

‘இனி, கற்றார் கல்லாதார் சிறியார், பெரியார் அறிவுடையேர் பாமரர் ஆண்கள் பெண்கள் நல்லார் பொல்லார் என்ற பேதமின்றி எல்லாரும் சம்மதஞ் சொல்லலாமென்ற இந்த ஒரு கொள்கையே இலங்கை மக்களுக்குப் பெருங்கேடாக விளைந்தது. இந்தத் தேர்தல் முறை இந்தியாவிலும் ஏனைய குடியேற்ற நாடுகளிலும் இல்லாததாகும். சீர்திருந்திய இங்கிலாந்திலும் இந்தத் தேர்தல்முறை இற்றைக்கு இருபது இருபத்தைந்து வருடந் தொடக்கமாகவே நடைபெற்று வருவதாகும். அந்தத் தேர்தல்முறை இலங்கை மக்களுக்கு இப்போதைக்குத் தகாததென்றும் அதனாற் பல கெடுதிகள் நேருமென்றும் எல்லாரும் சம்மதஞ் சொல்வதைக் காட்டிலும் மிருகங்கள் மரந்தடிகள் சம்மதம் சொல்ல இயலுமானாற் சொல்வது நல்லது என்றும் அரசியல் ஞானம் பழுத்த பெரியாராகிய ஸேர் இராமநாதனவர்கள் அந்தச் சமயத்தில் ஓலமிட்டனர் அல்லவா? அவர் போன்ற பெரியார் சொல்லும் பழுதாகுமா? பொய்யாகுமா? இந்தத் தேர்தல் முறையினாலே வந்துள்ள அநர்த்தம் கொஞ்சமல்லவே!’ (ப 316)

சர்வஜன வாக்குரிமையை சேர் பொன்னம்பலம் இராமநாதன் மட்டுமன்றி அன்றைய சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல் மேனிலையாளர்களும் எதிர்த்தனர். இராமநாதனின் மேனிலைத்துவ அகங்காரம் அவர் நாட்டின் பொதுமக்களை மிருகங்களுக்கும் மரந்தடிகளுக்கும் ஒப்பிடுவதில் வெளிப்படுகிறது. ‘பின்னடைந்த நிலமைகளில்’ உழலும் ஆசிய, ஆபிரிக்க மக்களை நவீன நாகரீக உலகுக்கு இழுத்துச் செல்வது தமது வரலாற்றுக் கடனென ஐரோப்பிய காலனித்துவ வல்லரசுகள் தமது கொலோனிய ஆக்கிரமிப்புக்களை நியாயப்படுத்தின. அந்த மக்களை நாகரீகமயப்படுத்துவது ‘வெள்ளை மனிதனின் சுமை’ (white man´s burden) எனத் தமது ‘வரலாற்றுக் கடமை’க்கு வரைவிலக்கணம் கொடுத்தார்கள் அவர்கள். அந்த வெள்ளை ஆட்சியாளர்  சர்வஜன வாக்குரிமையைப் பரீட்சித்துப்பார்க்கத் தேர்ந்தெடுத்த முதலாவது கொலொனி இலங்கைதான். ஆனால் இராமநாதன், ஜயதிலக்க, ஜாயா போன்ற உள்நாட்டு மேனிலையாளர்கள் தமது நாட்டு மக்கள் அந்த உரிமையைப் பெறத் தகுதியற்றவர்கள் எனக் கருதினர். ம. வே. தியும் அந்த நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். டொனொமூர் யாப்பின்கீழும் பின்னர் வந்த யாப்புகளின் கீழும் சர்வஜன வாக்குரிமை ஒரு இனத்துவமயமாக்கப்பட்ட எண்களின் அரசியலான வரலாறுபற்றி இவ்விடத்தில் ஆராய்வது சாத்தியமில்லை. இதுபற்றி எனது கருத்துக்களை வேறு கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.[11]

சைவாசாரமும் சாதியமும்

‘இந்தியாவிலோ இங்கிலீசென்றாற் பறையரோடிருந்து படித்தற்குங் கூசாதார் பிராமணருள்ளும் பலர்; இத்தேசத்திலோ வண்ணாரோடிருந்து படித்தற்கும் உடன்படாதார் சற்சூத்திரளுள்ளும் பலர்.’  – ஆறுமுக நாவலர், 1872, யாழ்ப்பாண சமய நிலை

‘எவர்களிடத்திலே போசனம் பண்ணலாகாது? ‘தாழ்ந்த சாதியாரிடத்திலும், கள்ளுக் குடிப்பவரிடத்திலும், மாமிசம் புசிப்பவரிடத்திலும், ஆசாரம் இல்லாதவரிடத்திலும் போசனம் பண்ணலாகாது.’ ஆறுமுக நாவலர், சைவவினாவிடை (வினா-விடை 76 )

‘இனி தாழ்ந்த வருணத்தாரென்றிருப்பவர்க ளெல்லாரும் போலிச்சுவாதீனத்தை மாத்திரம் விரும்பி அதன் பொருட்டு ஏனைய சாதியினரோடு வாதாடி அவர்களைக் குறைகூறி அவமதிக்கிறார்களேயன்றி, தாங்கள் தங்களைத் திருத்திக் கொள்ளுதல் வேண்டும், மற்சமாமிச போசனத்தையும் மதுபானத்தையும் தவிர்த்தல் வேண்டும், துப்புரவாயிருத்தல் வேண்டும் என்ற இவைகளையிட்டுச் சிந்திக்கிறார்கள் இல்லை.’ – ம. வே. தி, 1928, உலகம் பலவிதம், ப193

‘தாழ்ந்த வருணத்துதித்தோரும் தக்கோராவர் ஒழுக்கத்தால்.’ – ம. வே. தி, 1948, உலகம் பலவிதம், ப 629

நாவலரின் சைவ ‘மறுமலர்ச்சி’ யாழ்ப்பாண நிலமானிய சாதியத்திற்குப் புனர்வாழ்வும் நியாயப்பாடும் கொடுக்கும் தன்மை கொண்ட சைவ வெள்ளாளியமையத் தூய்மைவாதம் என்பதை இந்த மேற்கோள்கள் காட்டுகின்றன. 1872ஆம் ஆண்டு நாவலர் எழுதிய நூலான ‘யாழ்ப்பாண சமய நிலை’ யாழ்ப்பாணத்து சைவசமயிகட்கு  சைவாசாரம் பற்றி அவர் வழங்கும் ஆணைகள் அல்லது பயிற்றுரை எனலாம். அவர் எழுதிய ‘சைவவினாவிடை’ சைவர்கள் எப்படி சைவத்தை கடைப்பிடிக்கவேண்டும், அவர்கள் தம் அன்றாட வாழ்வின் ஒழுக்கவியல் நடைமுறை விதிகள் என்ன போன்ற விடயங்களை விளக்குகிறது. சைவர்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானின் இலக்கணங்களையும் வழிபடும் முறையையும் அறிந்து வேதபராயணம், தேவார திருவாசக பராயணம், சைவசமயப் பிரசங்கம் முதலிய நற்கருமங்களைச் செய்வதுடன் சைவக் கோவில்களில் ‘பொதுப் பெண்களின்’ நடன சங்கீதம், வாணவிளையாட்டு, மிருகபலி போன்ற தீய கருமங்களைச் செய்தலாகாது, கோபுரங்களில், தேர்களில் நிர்வாணப் பிரதிமைகள் அமைக்கக்கூடாது, சைவர் மது, மாமிசம் அருந்தலாகாது போன்ற ஆணைகளைப் பிறப்பிக்கிறார்.

நாவலர் வகுத்த சைவாசாரக் கொள்கையின் அடிப்படையிலேயே ம. பொ. தி தனது கால யாழ்ப்பாண சமூக மாற்றங்களை அணுகி மதிப்பிட்டார்.  அதேவேளை நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வகுத்த சைவாசார வாழ்வியலை இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பதில் ஏற்படும் முரண்பாடுகளை ம. வே. தி யின் கட்டுரைகளிலும் கதைகளிலும் காணமுடிகிறது. உதாரணமாக வருடந்தோறும் இடம்பெறும் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் பற்றி தவறாது ம. வே. தி கருத்துரைகள் எழுதியுள்ளார். அந்த நாட்கள் பற்றிய அவரது விவரணங்கள் சில முரண்பாடுகளைச் சுவராசியமாகத் தருகின்றதுடன் அவருடைய சைவாசார ஏக்கத்தையும் வெளிக்கொணர்கின்றன.

‘கந்தசுவாமி கோயில் மகோற்சவம் தொடங்குநாள் சமீபிக்கவே இங்குள்ள ஆடவர் மகளிரெல்லாரும் தங்கள் தங்கள் இல்லங்களைச் சுத்திசெய்து உற்சவகால விரதத்தை யனுட்டிக்கத்தற்காகிய ஆயத்தங்களைச் செய்கின்றனர். மாமிச போசனிகளாயுள்ளார் அந்த உணவை யொழித்து விடுகின்றனர். மதுபானிகள் அந்தப் பானத்தைத் தவிர்க்கின்றனர். விரதம் அநுஷ்டிப்போர் தொகை அதிகமாகவும் அநுஷ்டியதார் தொகை சொற்பமாகவுமிருக்கும். உற்சவ விரதம் அநுஷ்டிக்காதவர்களும் ஆசாரசீலராக இந்த 26 நாட்களும் ஒழுகிக்கொள்கிறார்கள்.’ (ப 200)

‘இனி, நல்லூர் கந்தசுவாமி மகோற்சவ காலம் உற்சவ தரிசனத்திற்கும் கடவுள் வழிபாட்டிற்கும் மாத்திரந்தான் ஆகிய காலமென்று நாம் எண்ணிக் கொள்ளக்கூடாது. இங்குள்ள பெண்கள் தாங்கள் விரும்பிய ஆடையாபரணங்களை நாயகனைக் கொண்டு வாங்குவித்தற்கும் உற்சவ தரிசனத்தையும் விரதத்தையும் காரணமாகக் காட்டிச் சிறிது சுவாதீனம் பெறுவதற்கும் இதுவே வாய்த்த காலமாகும். வியாபாரிமார்களாகவுள்ளவர்கள் ஏதோ லாபத்தையடைதற்கு இதுவே காலமாகும். வாத்தியக்காரர், காவடி வாடகைக்குக் கொடுப்போர், பூத்தொடுப்போர் பரங்களென்று சொல்லப்படும் பண்டாரங்கள் என்னுமிவர்களும் லாபமடையும் காலமும் இதுவே…….. இக்காலத்தில் இங்குள்ளார் எல்லாரும் மகிழ்ச்சியடைய மற்சமாமிசம் விற்போரும் சோரமாக மதுபானம் விற்போரும் மாத்திரம் தங்கள் பிழைப்புக் குறைந்துவிட்டதேயென்று துயரமுறுவர்.’ ( ப 200 )

‘ஆனால் இந்த மகோற்சவம் முடிந்த பின்னர் இவர்கள் நடந்துகொள்ளும் விதத்தையிட்டே நாம் யோசிக்க வேண்டியது. மற்சமாமிசம் புசியாத மதுபானமில்லாத அன்பர்கள் எக்காலத்திலும் ஒரே தன்மையாக ஆசாரசீலராய்க் காணப்படுகின்றனர். மற்சமாமிச போசனிகளும் மதுபானிகளும் இந்த 26 நாளும் தாங்கள் அநுஷ்டித்த விரதங்களையும் வழிபாடுகளையும், ஒழுக்கத்தையும் மறந்து, கழுவிக் கழுவிச் சேற்றில் மிதிப்பார்போற் பின்னரும் இவ்வனாசாரங்களைக் கைக்கொள்ளத் தலைப்படுகின்றனர். மகோற்சவ காலம் முடிந்து இவர்கள் முழுகும் எண்ணெய் முழுக்கு மிகப்பயங்கரமானது. புறக்கோடிகளிற் கவிழ்த்து வைக்கப்பட்ட புலாற்சட்டிகளெல்லாம் பழையபடி சமையலறையிற் புகுகின்றன. மதுபானம் இவர்களைப் பரவசமாக்கி விடுகின்றது. இவர்கள் அருளையும் அறத்தையும் விட்டு மருளையும் மறத்தையும் அடுத்து நிற்கின்றனர்…. ஐயோ இவர்களெல்லாரும் மகோற்சவ காலத்தில் ஒழுகி வந்த பிரகாரம் வருஷம் 365 நாளும் ஒழுகிவந்தாலோ என்று முருகேசுவே வாயூறுகின்றார்.’ (ப 201 )

உலகம் பலவிதத்தில் பல இடங்களில் நாம் சந்திக்கும் முருகேசு ம. வே. தி யின் ஒரு அவதாராமே. முருகேசுக்குடாகத் தன் அபிப்பிராயங்களையும் ஆதங்கங்களையும் அவர் வெளிப்படுத்துகிறார். சைவாசாரத்திலிருந்து யாழ்ப்பாணச் சைவமதத்தினர் விலகிப் போவதால் ஏமாற்றமடையும் ம. வே. தி யாழ்ப்பாணத்தில் மழைபெய்யாமைக்கும் இந்தப் போக்கே காரணமென்று முருகேசருக்கூடாகச் சொல்கிறார்.

‘தம்பீ, மழை பெய்யாதது நூதனமென்றாய்; அப்படியல்ல; இந்தக் காலத்தில் மழை பெய்தால் அதுதான் பெரிய நூதனமாகும்; நான் அறிய இப்படி மழை பெய்யாமல் எக்காலத்திலும் இருந்ததில்லை;… மழை முற்றாக இல்லாமற் போனது இப்பொழுதுதான்; ஆனால் இது நூதனமல்ல; ஏனென்றால் நமது நாட்டிலே நூற்றுக்கு 99 பங்கு பாவமும் ஒருபங்கு புண்ணியமும் இப்போது நடைபெறத் தொடங்கிவிட்டது; இப்படியானால் மழை எப்படிப்பெய்யும்; .. இக்காலத்திலே சாதியபிமானமில்லை, சமயாபிமானம் தேசாபிமானமில்லை .. கடவுளிடத்தில் பக்தியில்லை; சமய சாத்திரங்களில் நம்பிக்கையில்லை, சத்தியமில்லை… இப்படியானால் மழை எப்படிப் பெய்யும்.’ (ப191-192)

மழை பெய்யாமைக்கான காரணம் பற்றித் தான் எழுதியதைத் சம்பந்தபிள்ளை உண்மையில் நம்பினாரா இல்லையா என்பதையும்விட முக்கியமான செய்தி என்னவென்றால் யாழ்ப்பாணத்து சைவசமயிகளின்  வாழ்வியல் யதார்த்தத்திற்கும் நாவலர் வகுத்த சைவாசார நெறிகளுக்குமிடையே வெகுதூரம்.  இதுதான் சைவ அறநெறிப் பிரச்சாரகரான அவரின் ஆதங்கம். மறுபுறம் தாழ்த்தப்பட்ட சாதியினர் தமது சுதந்திரத்திற்காக வாதாடுவது உயர்சாதியினருக்கு அவமதிப்பெனக் குறைப்படும் ம. வே. தி அவர்களுக்கு உயர்சாதியின் ஒழுக்கவியலைப் போதிக்கிறார்! சாதியம் பற்றி அவர் 1928ல் கொண்டிருந்த நிலைப்பாட்டையே இருபதாண்டுகளுக்குப்பின் 1948ஆம் ஆண்டிலும் கொண்டிருந்தார் என்பது மேலே தரப்பட்டுள்ள இரு மேற்கோள்களிலிருந்து தெளிவாகின்றது.[12]

1933 மார்ச் மாதம் கொழும்பில் ‘தீண்டாதார் கோயிற்பிரவேச முயற்சி, பொய்யாய்ப் பழங் கனவாய்க் கதையாய்ப் போய்விட்டது போலும்’ என அந்த முயற்சியை ஏளனம் செய்யும் தொனியில் எழுதுகிறார் (ப 276). அதேகாலத்தில் இந்தியாவில் தீண்டாதாரின் கோயிற்பிரவேசம் தொடர்பாக காந்தியின் செயற்பாடுகளை எதிர்த்தவர்களுக்குச்சார்பாக எழுதுகிறார்.[13]  1930ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பாடசாலைகளில் சம ஆசனம், சமபந்திப் போசனம் நடைமுறைப் படுத்தப் படவேண்டும் எனும் விதியைக் காலனித்துவ அரசு பிறப்பித்தது. JYC மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க 1927ல் உருவான ஒடுக்கப் பட்டோர் ஊழியர் சங்கமும் இத்தகைய உரிமைகளைக் கோரின என்பதைக் குறிப்பிடவேண்டும். ஆனால் 1930ஆம் ஆண்டு பொன் இராமநாதன் தலைமையில் ஒரு குழு தேசாதிபதியைச் சந்தித்து அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதைமாற்றும்படி கோரினர். அரசின் ஆணையை நடைமுறைப்படுத்திய சில பாடசாலைகள் தீக்கிரையாக்கப்பட்டன.[14] இதுபற்றிச் சம்பந்தபிள்ளையின் கருத்துரைகளை இந்த நூலில் காணமுடியவில்லை. அவர் பொன் இராமநாதனின் நிலைப்பாட்டைச் சார்ந்திருந்தாரா அல்லது சம ஆசனக் கொள்கையை ஆதரித்த அவருடைய இளைய சகாவான சைவபரிபாலன சபைத் தலைவர் ராஜரத்தினத்தின் நிலைப்பாட்டைச் சார்ந்திருந்தாரா? இதுபற்றி அவர் எங்காவது எழுதியிருப்பார் என நம்புகிறேன். ராஜரத்தினம் அப்போது The Hindu Organ பத்திரிகையின் ஆசிரியராகவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் சம ஆசனம் பற்றிய ராஜரத்தினத்தின் நிலைப்பாட்டினை பொன் இராமநாதன் போன்ற பல உயர்சாதி மேனிலையாளர் பகிர்ந்து கொள்ளவில்லை. இது அவர்களுக்கும் JYCக்குமிடையிலான வேறுபாட்டைக் காட்டியது.

பால்நிலை

மாற்றமடையும் யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில் கலாச்சார மரபுபேணும் சுமையைப் பிரதானமாகப் பெண்களே சுமக்கவேண்டுமெனும் சிந்தனை ம. வே. தியின் கட்டுரைகளிலும் தொடர்கதைகளிலும் வலியுறுத்தப்படுகிறது. அதற்கு உதவும் வகையில்  தமது பெண்பிள்ளைகளை நெறிப்படுத்தி வளர்க்கவேண்டுமெனப் பெற்றோருக்கும் புத்தி சொல்கிறார். யாழ்ப்பாணத்துப் புதிய உயர்சாதி நடுத்தர வர்க்கத்தின் நவீனமயமாக்கல் மேலெழுந்தவாரியானது, பால்நிலையைப் பொறுத்தவரை ஆணாதிக்க மரபுபேணலே மேலாதிக்கம் செலுத்துகிறது என்பதை அவரது தொடர்கதைகள் பலவிதமாகப் பிரதிபலிக்கின்றன. அவருடைய சிந்தனையை அவருடைய வார்த்தைகளுக்கூடாகவே அறிவது நல்லது. முதலில் 1922 ஒக்டோபரில் அவர் எழுதிய கட்டுரையிலிருந்து:

‘நாங்கள் அரசனையே கண்கண்ட தெய்வமெனக் கொண்டாடும் இயல்புடையேம். தன்னுயிர்போல் மன்னுயிரையும் ஓம்பும் காருண்ணியம் பொருந்திய மாட்சிமைதங்கிய இத் தேசாதிபதியவர்கள் தாம்  பரிபாலிக்கின்ற இந்நாட்டிலுள்ள ஆடவர்கள் நலத்தையும் பெண்கள் நலத்தையும் பெரிதும் அபேட்சிக்கிறவரென்பதற்கு எட்டுணையும் சந்தேகம் வேண்டாம். ஆனால், யாம் சொல்லக்கூடிய குறையொன்றுள்ளது. ஐயோ, தெய்வமே, நமது நாடு இவ்வளவாகக் கெட்டுப்போய்விட்டதா? என்ன பரிதாபம்! வீட்டைவிட்டு வெளிமுற்றத்திற்றானும் வரப்பெறாதவர்கள், ஆதவனும் அரிதிற் காணப்பெறும் பெண்மணிகள், மணப்பந்தரிலே, சிங்காரித்துச் சூழ்ந்து செல்ல, மடம் நாணம் அச்சம் பயிர்ப்பு என்னும் நாற்குணங்களும் கிளர, சூத்திரப் பாவைபோலத் தம் அவயவங்களைப் பிறர் இயக்க, விவாக காலத்திலே தம்மாற்செய்யவேண்டிய கிரியைகளைச் செய்து வந்த கன்னிகாரத்தினங்கள் இப்பொழுது நமது சாதிக்கெல்லாம் வடுவுண்டாக்கப் புறப்பட்டு விட்டார்களே. இதற்குத்தானா இவர்கள் படிக்கப் புறப்பட்டார்கள்? இக்கன்னியர் கல்லூரிக்குப் புறப்பட்ட பின்னரும் நாற்குணங்களுமிருக்குமானால், அவற்றுள் கல்லூரியிலிருந்து புகைரதஸ்தானத்திற்குப் புறப்படவே மடமும், புகைரதஸ்தானத்திற் புகைவண்டியில் ஏறவே நாணமும், மருதானைப் புகைரதஸ்தானத்தில் இறங்கவே அச்சமும் அகன்றுவிடுமே. எஞ்சிய பயிர்ப்பு எவ்விடத்திற்போமோயாமறியேம். ஆ! நளமகாராசனைப் பிடித்தலைத்த கலியே! உன்காலத்தில் இன்னும் என்னென்ன விபரீதங்களை விளைக்க விருக்கின்றாயோ யாமறியேம்!’ (ப 89)

யாழ்ப்பாணத்திலிருந்து பெண் சாரணரான Girl Guides மாணவிகள் கொழும்பில் நடை பெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதற் கெதிராக அன்று நிலவிய  கருத்தைத் திருஞானசம்பந்தபிள்ளை தெரிவிக்கிறார். இதைச் சொல்லமுன் கொலோனிய ஆட்சிமீதான விசுவாசத்தை மிகப்பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறார். அதே பத்தியில் பெற்றோர்களுக்கும் பின்வரும் புத்திமதி வழங்கப்படுகிறது:

‘சைவாசாரத்தையும் புராதன ஒழுக்கங்களையும் அனுசரித்து உங்கள் பெண்பிள்ளைகள் கல்வி பயிலுதல் கூடுமானால் அவர்களுக்குக் கல்வி பயிற்றுங்கள். அநாகரிகக் கல்வியை அவர்களுக்குப் பயிற்றிவிட்டுப் பிற்காலத்தில் வசைக்கு ஆளாகாதீர்கள்.’

‘பெண்ணாய்ப்பிறந்தவர்கள் இல்லறத்துக்குத்துணையாயும் தம்நாயகனுக்குத் துணைவியாயும் பிள்ளைகளுக்குத் தாயாராகவும் இருந்தார்கள். அந்தக்காலம் போய்விட்டது’ என 1932ல் (ப 240) விசனிக்கும் அவர் அந்த நிலைமைக்குக் காரணம் விதேசிய நாகரிகமும் கல்வியும் எனக்கூறுகிறார். இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்தில் பெண்கல்வியை எதிர்ப்பது கடினமாகிக்கொண்டிருந்தது. ஆரம்பத்திலிருந்தே மிஷனரிகள் பெண்கல்வியை ஊக்குவித்தனர். ஆயினும் ஒரு சில பெண்களே மதம் மாறி ஆங்கிலக் கல்வியைப் பயின்றனர். ஆங்கிலக்கல்வியைப் பொறுத்தவரை பெற்றோர் ஆண்பிள்ளைகளுக்கே முன்னுரிமை கொடுத்தனர். பெண்கல்வியைப் பொறுத்தவரை மிஷனரிமார் சைவசமய மறுமலர்ச்சி யாளர்களையும்விடப் பல ஆண்டுகள் முந்திக் கொண்ட போதும் ஆரம்பத்தில் ஒரு சில பெண்களே உயர்வகுப்புவரை ஆங்கிலக் கல்வி கற்றனர். இந்த வகையில் மிஷனரிகளின் உடுவில் பெண்கள் கல்லூரி ஒரு முன்னோடி எனலாம்.  காலப்போக்கில் உருவான பெண்களுக்கான சைவப் பாடசாலைகள் மிஷனரிகள் கல்விக்கூடாகப் பெண்களையும் மதம் மாற்றுவதை எதிர்க்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்து நிலைமைகளில் ம. வே. தி பெண்கல்விக்கு ஆதரவாக எழுதியுள்ள போதும் நிலமானிய சைவாசார ஆணாதிக்கக் கட்டுக்கோப்பிற்குள்ளேயே பெண்களின் அந்தஸ்தை வரையறுத்தார். விதவை மறுமணத்தையும் அதே கட்டுக் கோப்புக்குள்ளேயே நியாயப்படுத்துகிறார். யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கல்வி கற்று மலாயாவில் ஒரு தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியையாகும் பாக்கியலட்சுமி எனும் பெயரில் ஒரு துணிவுமிக்க பாத்திரத்தை ஒரு தொடர் கதையில் படைத்திருக்கிறார்.[15] பால்யவிவாக விதவையானதால் துறவிக்கோலம் பூண்ட இரஞ்சிதமெனும் பிராமணப் பெண் மனம்மாறிக் குடும்பத்தவரின் ஆசியோடு மறுமணம் செய்வதை அவரது இன்னொரு தொடர்கதையில் காண்கிறோம்.[16]  ஆனால் அந்தப் பெண்கள் நாற்குணங்களையும் (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு) கொண்ட சைவாசார ஒழுக்கசீலிகள் என்பதை வற்புறுத்தும் வகையிலே அவர்களை இலட்சிய பாத்திரங்களாகத் தன் கதைகளில் படைத்திருக்கிறார். இப்படிப் பல சைவாசார இலட்சிய பெண்பாத்திரங்களை அவருடைய கதைகளில் சந்திக்கிறோம். இந்தப் பாத்திரங்களின் வாய்களுக்கூடாகப் பல சந்தர்ப்பங்களில் ஆணாதிக்க மரபினை நியாயப்படுத்தும் வாதங்களும் வெளிவருகின்றன.

இதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். ஒரு உதாரணம், ‘கோபால – நேசரத்தினம்’ தொடர்கதையில் வரும் பாதிரியாருக்கும் நேசரத்தினத்திற்கு மிடையிலான சம்பாஷணையாகும். சைவமதத்தினனான கோபாலனை ஒரு போதகரின் மகளான நேசரத்தினம் காதலிக்கிறாள். கதையின்படி போதகர் அந்த சைவ இளைஞனை மதம் மாற்றும் திட்டத்திற்குத் தன் மகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவள் அவனை உண்மையாகவே காதலிக்கிறாள். கோபாலன் மதம் மாறமறுப்பதால் நேசரத்தினம் சைவமதத்திற்கு மாறத்தயாராகிறாள். இதனால் போதகர் ஆத்திரமடைகிறார். அவருடைய பதவியும் பறிபோகும் ஆபத்து. இந்தக் கட்டத்தில்  பாதிரியார் அவளின் மனதை மாற்ற முயற்சிக்கிறார். ‘கணவன் தன் மனைவியைத் தன் சமயத்திற்கு வா என்று கற்பிப்பது சரியல்லவென’ச் சொல்லும் பாதிரியாருக்கு அவள் பின்வருமாறு பதிலளிக்கிறாள் (ப 66 ). ‘கணவன் மனைவியென்ற விஷயத்தில் மாத்திரம் அது பொருந்தாது; ஏனென்றால், எங்கள் பெரியோர் கொள்கைப்படி ஒரு பெண்ணுக்குக் கண்கண்ட தெய்வம் அவள் கணவனேயாம். ‘தெய்வம் தொழாள் கொழுனற்றொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ யென்றும் ‘கற்புடைய மாதர்கட்குத் தரணி வேந்தே கணவனல்லால் வேறோர் தெய்வங் கருதவுண்டோ’ என்றுஞ் சொல்லியிருக்கிறார்கள். மேலும் ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’, ‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற முதியோர் குறிப்பறிந்து நடப்பதே ஒரு பெண்ணுக்குக் கற்பாகும். [17]  ஆனால் புதுமைக் கவிஞன் பாரதியார் ‘கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ எனப் பாடுகிறார்.

ம. வே. தியின் கதைகளில் வரும் பல பழமொழிகளில் ஒன்று ‘மழைக்காலிருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப்பாயாது’. இந்தப் பழமொழியை ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியுள்ளார். பெண்களைப் பொறுத்தவரை, என்னதான் இக்கட்டான சூழலில் அகப்பட்டுகொண்டாலும் தன்கற்பைக் காக்கத் தவறமாட்டாள் சைவாசார உத்தமி என்பதைக் குறிக்கவே இந்தப் பழமொழியைப் பயன்படுத்துகிறார். தனியாக வெளியே செல்லும் பெண்கள் ஆண்களால் பால்ரீதியான தொல்லைகளுக்காளாகும் நிலைமைகளை வெளிப்படுத்துகிறார். இத்தகைய தொல்லைகளைத் தவிர்ப்பதற்கு பெண்கள் ஒருபோதும் ஆண்துணையின்றி வெளியே செல்லக்கூடாது என அவர் அறிவுரை கூறுவது அன்றைய நிலையில் யதார்த்தபூர்வமானதே. ஆயினும் பெண்களின் பாதுகாப்பு ஆணாதிக்க சைவாசாரக் கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியைப் பேணுவதிலேயே தங்கியுள்ளதெனும் அவரின் நிலைப்பாடு பெண்களின் இரண்டாந்தர அந்தஸ்துத் தொடர்வதை நியாயப்படுத்துகிறது.

எதிர்காலத் துணைவி பற்றி புதிய நடுத்தரவர்க்க இளம் ஆண்களின் நவீனத்துவப் பார்வை மேலெழுந்தவாரியானதென்பதும் அவர்களிடம் மரபுரீதியான ஆணாதிக்க சிந்தனையும் எதிர்பார்ப்பும் ஆழமாக வேரூன்றி உள்ளதும் ம. வே. தி படைத்துள்ள சில பாத்திரங்களுக்கூடாக வெளிப்படுகின்றன. மாற்றம் – தொடர்ச்சி உறவுகளை, முரண்பாடுகளை அறிய இவை உதவுகின்றன. உதாரணமாக ‘ஆநந்தன் – அன்னம்’ எனும் தொடர்கதையில் வரும் சம்பாசணைகள் இதை நன்கு பிரதிபலிக்கின்றன. ஆநந்தனுக்கு எழுதுவினைஞர் வேலை கிடைத்ததும் கல்யாணப் பேச்சுக்கள் ஆரம்பிக்கின்றன. சாதி, குலம், சீதனம், நாற்குணங்கள் போன்ற எல்லாமுடைய பெண்களை அவனுடைய பெற்றோர் அவனுக்கு மணம்பேசிய போது அவன் சம்மதிக்கவில்லை. இறுதியில் பெற்றோர் அவன் விரும்பியபடி ஒரு பெண்ணைத் தேடச் சம்மதிக்கிறார்கள் ஆனால் ‘சாதியைவிட்டு இறங்கிகிவிடக் கூடாதென்பதை மாத்திரம் மனத்தில் வைத்துக்கொள்’ என்று சொல்கிறார்கள். அப்பொழுது ஆநந்தன் தன் எண்ணத்தைப் பெற்றோர்களுக்குச் சொல்கிறான்.

‘… நான் என் மனசிற்கு இசைந்த பெண்ணையே கல்யாணஞ் செய்வதன்றி அவர் சொல்லும் இவர்சொல்லுங் கேட்டுச் செய்யமாட்டேன்; காலத்திற்குத் தக்க கோலம் என்ற பிரகாரம் பெண் இக்காலத்து மாதிரியையறிந்து அதற்குத்தக நடக்கக்கூடியவளா யிருத்தல் வேண்டும். தமிழ் படியாவிட்டாலும் இங்கிலிஷ் நல்லாய் எழுத வாசிக்க, எவரோடுங் கூச்சமின்றிப் பேசப்பயின்றிருத்தல் வேண்டும்; … அபசுரத்தோடாயினுங் காரியமில்லை, வையோலின், ஹார்மோனியம் என்னும் இவைகளை வாசிக்கவும் இனிமையாய்ப் பாடவும் தெரிந்திருக்க வேண்டும்; கோயிலுக்குப் போதல் விரதங்காத்தல் முதலிய இந்தப் பேய்த்தனங்களை யெல்லாம் விட்டு, கற்புடைய பெண்களுக்குக் கணவனே தெய்வம் ஆனதினால் என்னைக் கும்பிட்டுக் கொண்டு என்னுடன் கூடிக்கொண்டு கூட்டம் விருந்து கூத்து படக்காட்சி என்னுமிவைகளுக்கு வரத்தக்கவளாயிருக்க வேண்டும். இந்தக் குணங்களும் செயல்களும் இருக்குமேயானால் இன்னும் வேண்டிய செயல்களையும் பழக்கங்களையும் பின் நான் பழக்கிக் கொள்வேன்.’ (ப 243)

இந்த வார்த்தைகளின் முரண்பாடுகள் தெளிவாகவே தெரிகின்றன. ஓரளவு நவீனமயமான ஆனால் தனது அதிகாரத்துக்கும் தேவைகளுக்கும் கீழ்ப்பட்டவளான துணைவியே ஆநந்தனின்  ஒருதலைப் பட்சமான விருப்பு, எதிர்பார்ப்பு. இந்தத் தொடர் கதையின் கடைசிப் பகுதியுட்படச் சில பகுதிகள் கிடைக்கவில்லை. ஆயினும் ஆநந்தன் விரும்பித் தேர்ந்த அன்னலட்சுமி ‘அகந்தை பேய்த்தனங்கள்’ கொண்டவளாக இருந்து பின்னர் பல பிரச்சனைகளை அனுபவித்ததன் விளைவாகவும் அவளுக்கும் ஆநந்தனுக்கும் முதியோர்கள் கொடுத்த அறிவுரையின் பயனாலும் ‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி என்ற வாக்கியத்திற்கு இலக்காய்த் தன் கணவன் குறிப்பறிந்து இதமாக நடப்பாளாயினள்’ (ப 272).

ஐரோப்பிய கலாச்சாரச் செல்வாக்குப் பற்றி

மேலைத்தேச வாசிகளின் உடைநடை பாவனைகளையும் சில பழக்கங்களையும் கைக்கொள்ளுவோர் பற்றி 1930 ஆகஸ்டில் பின்வருமாறு எழுதுகிறார்.

‘..இவர்கள் நெய்யரி (பன்னாடை) போல் மேலைத்தேச வாசிகளிடத்தில் நல்ல செயல்கள் ஒழுக்கங்களையொழுக விடுத்து அவர்களிடத்துள்ள தீய செயல்களையும் பழக்கவழக்கங்களையுமே ஏந்தி வைத்துக் கொண்டாடுகிறார்கள். உள்ளபடி சொல்லுதல், குறித்த குறித்த நேரத்திற் குறித்த கருமங்களைச் செய்தல், இடையறாவூக்கம், கெம்பீரம் முதலாம் சுகுணங்களும் நற்பழக்கங்களும் காணப்படுகின்றன. ஆனால் அவர்களைப் பின்பற்றி நடக்கும் நம்மனோர் இந்தச் சுகுணங்களையும் நற்பழக்கங்களையும் ஒழுக விட்டுவிட்டு, அவர்களிடத்துள்ள மதுபானம், உடைநடை பாவனைகள், டாம்பீகம் முதலாந் தீச்செயல்களையே ஏந்தி வைத்துக் கொண்டு இடர்ப்படுகின்றார்கள். இவர்கள் ஐரோப்பியர் செய்வதுபோல் அவற்றை மட்டாகவும் முறையாகவும் கிரமமாகவுஞ் செய்யப் பின்பற்றியிருக்கிறார்களோவென்றால், அதுவுமில்லை.’ (ப 217)

ஐரோப்பிய பழக்கவழக்கங்களில் பின்பற்றக்கூடிய சில நல்லவற்றைக் காணுமவர் தனது சமூகத்தவர் பன்னாடை போன்று அவற்றை ஒழுகவிட்டுத் தீயவற்றையே பற்றிக்கொள்கிறார்கள் என ஆத்திரமடைகிறார். ஆனால் கொலோனியக் கல்வியைப் பெற்ற யாழ்ப்பாணத்தவர்கள் கொலோனிய அமைப்புக்கு விசுவாசமாகவும் திறமையாகவும் சேவையாற்ற வல்லவர்களென்பதே ஆட்சியாளர்களின் அனுபவரீதியான நம்பிக்கை. இதனாலேயே அவர்களை இலங்கைக்குள் மட்டுமன்றி மற்றைய பிரிட்டிஷ் கொலொனிகளிலும் சேவைக்கு அழைத்தார்கள். இதற்கான ஆதாரத்தை சம்பந்தபிள்ளையின் கட்டுரைகளிலும் கதைகளிலும்கூடக் காண்கிறோம். ஆகவே அந்தப் பன்னாடைக்குப் பிறிதொரு பக்கமுண்டு. மறுபுறம் அந்தக்கல்வியைப் பெற்ற ஹண்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம் போன்ற பலர் கொலோனிய எதிர்ப்பு முற்போக்குவதிகளாயினர் என்பதையும் மறக்கக்கூடாது.

ஐரோப்பியரைப் பற்றியும் தம்மவர் பற்றியும் மேலும் இவ்வாறு குறைப்படுகிறார்:

‘இப்போது நோக்குங்கால் ஐரோப்பியரெனிலோ நம்மை ஆளப்பிறந்த சாதியினராவர்; நாங்களோ ஆளப்படப் பிறந்த சாதியினராவோம். செல்வம் தரித்திரமென்ற இரண்டினுள் செல்வம் அவர்களிடஞ் செல்ல, தரித்திரம் நம்மிடம் வரலாயிற்று. முயற்சி அவர்களையடைய, சோம்பல் நம்மனோரிடங் குடிகொண்டுவிட்டது; அதிகாரம் அவர்கட்குச் சொந்தமாக, அடிமைத்திறம் எங்கட்கு அறுதியாயிற்று. இப்படியே இன்னும் எத்தனையோ பேதங்கள் அவர்களுக்கும் எங்களுக்குமிடையேயுள்ளன. இங்கனமெல்லாமிருப்பவும், நாம் அவர்களைப் பின்பற்றி உடுக்கவும் உண்ணவும் எண்ணவும் முயன்று நிந்தைக் குள்ளாகி இடர்படுதல், கானமயிலாடாக் கண்டிருந்த வான்கோழி – தானுமதுவாகப் பாவித்து தானுந்தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற் போலவிருக்குமல்லவா.’ (ப218)

கொலோனிய ஆதிக்கத்தை அவர் விரும்பவில்லை ஆனால் தம்மவர்களின் ஒரு சாராரின் போக்கினைப் பார்க்குமிடத்து அதுதான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சமூகத்தின் மாற்றமுடியாத தலைவிதியோ என வருந்துகிறார். இங்கே கொலோனிய எதிர்ப்புணர்வுக்கும் போராட்டமனப்பாங்கிற்கும் பதிலாகத் தாழ்வுணர்ச்சியையும் ஊழ்வினைவாதத்தையும் காண்கிறோம். JYCன் முற்போக்குச் சிந்தனைகளையும் பின்னர் வந்த இடதுசாரி இயக்கத்தின் கொள்கைகளையும் அவர் ஒதுக்கிவிட்டார்.

சமகாலத்தில் இந்தியாவில் இடம்பெற்ற கொலோனிய எதிர்ப்பு மற்றும் முற்போக்கான சமூக சீர்திருத்தப் போக்குகளில் அவர் ஆகர்சத்தைத் தேடவில்லை. அவர் தமிழகத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் அவருடைய சைவாபிமானம் பாற்பட்டதே. அவர் காலத்தில் அங்கு எழுந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சமூக சீர்திருத்த இலக்கியங்களால் அவர் ஈர்க்கப்படவில்லை. உதாரணமாக சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகள், செயற்பாடுகள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. பாரதியார்  அவரது முப்பத்தொன்பதாவது வயதில் 1921ஆம் ஆண்டு இறந்தார். அப்பொழுது முப்பத்திஆறு வயதினாரன சம்பந்தபிள்ளை இந்து சாதனத்தில் சேர்ந்து ஒன்பது வருடங்களாகிவிட்டது. ஆத்மீகவாதியாகவிருந்த பாரதியார் ஒரு கொலோனிய, ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக மட்டுமன்றி சாதி ஒடுக்குமுறைக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிராகவும் தனது கவிதைகளுக்கூடாக முழக்கமிட்டார். பாரதியார் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவான ஒரு பத்திரிகையாளராகவும் செயற்பட்டுச் சிறைசென்றார். அவர் போன்ற சிந்தனையுடையோர் பலர் தமிழகத்தில் இருந்தார்கள். அத்தகைய சிந்தனைப் போக்குகளால் சம்பந்தபிள்ளை கவரப்படவில்லை.

ஆக்க இலக்கியப் படைப்புக்கள்

இந்தத் திரட்டில் ஆறு தொடர்கதைகளும் ஆறு சிறு கதைகளும் உள்ளன. சில தொடர்கதைகளில் பல பகுதிகள் கிடையாமையால் விடுபட்டுள்ளன. இந்த ஆக்கங்கள் பற்றிச் சில பொதுப்படையான கருத்துரைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சம்பந்தபிள்ளையின் தொடர்கதைகளை நாவல்களெனக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது. இவற்றில் நாவல்களின் தன்மையையும் ஒருவிதக் காவியத்தன்மையையும் காண்கிறோம். இவற்றை வசன காவியங்களெனக் கருதலாமா? தமிழ் நாவல் இலக்கியத்தின் பரிணாம வரலாற்றின் ஒரு கட்டத்தினை இவை பிரதிபலிக்கின்றன எனப்படுகிறது.  இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியின் உரைநடையில் அவர் எழுதியுள்ள சிறுகதைகளும் தொடர்கதைகளும் அவர் வாழ்ந்த சமூகத்தின் நிலைமைகள், மாற்றங்களின் அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன. அவர் படைத்துள்ள பாத்திரங்கள் பெரும்பாலும் அதே சமூகத்தின் நடுத்தர, கீழ்நடுத்தர மட்டங்களிலிருந்து வருகின்றன. மறுபுறம் தொடர்கதைகளில் புராணங்கள், தோத்திரங்கள் கிளைக்கதைகளாக அவருடைய உரைநடையில் உருவெடுக்கின்றன. அத்துடன் பல பழமொழிகளும், தோத்திரங்களும் அவற்றிற்கான விளக்கங்களும். இவையெல்லாம் சைவாசார ஒழுக்கத்தின் சமகால முக்கியத்துவத்தை பலப்படுத்தும் நோக்கில் குறிப்பான பாத்திரங்களுக்கூடாகச் சிலஇடங்களில் நீண்ட பிரசங்கங்களாக வெளிப்படுகின்றன. கனக செந்திநாதன் இந்தத் தொடர்கதைகளை கதைநூல்களென அழைக்கிறார்.[18]  பேராசிரியர் கைலாசபதி ‘தமிழ் நாவல் இலக்கியம்’ எனும் நூலில் நிலமானிய காவிய உலகிலிருந்து நவீனகால நாவல் உலகிற்கான மாற்றப் போக்கில் காவியத்திற்கும் நாவலுக்குமிடையிலான உறவு பற்றி விளக்குகிறார். அதன் அடிப்படையில் பார்க்கும்போது ம. வே. தியின் தொடர்கதைகளை தமிழ் நாவலின் பரிணாமப் போக்கில் காவியத்திற்கும் நாவலுக்கும் இடைப்பட்டவையாகக் கொள்ளலாமா எனும் கேள்வி எழுகிறது.[19] இது விவாதத்திற்குரிய விடயம்.

ஏற்கனவே கூறியதுபோல் ம. வே. தியின் படைப்புக்களின் பிரதான சமூகப்புலம் யாழ்ப்பாண வெள்ளாளர்களே. மாற்றத்திற்கும் மரபு பேணலுக்குமிடையிலான முரண்பாடுகளே ம. வே. தியின் படைப்பிலக்கியத்தின் இலக்கணமெனலாம். சைவாசார விழுமியங்களின் பேணல், கிறிஸ்துவ செல்வாக்கிற்கும் மதமாற்றத்திற்கும் எதிர்ப்பு போன்ற நோக்கங்கள் பலமாக இழையோடும் இந்த ஆக்கங்களில் வெள்ளாள சமூகத்திற்குள்ளே இருக்கும் சமூக-பொருளாதார, அந்தஸ்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் பலவழிகளுக்கூடாகப் பிரதிபலிக்கப் படுகின்றன. சீதனப் பிரச்சனை, நகர-நாட்டுப்புறவேறுபாடுகள் போன்றவற்றினால் பெண்களின் கல்யாணம் பாதிக்கப்படுவதையும் சில கதைகளில் கையாண்டிருக்கிறார். கதைகள் யாழ்ப்பாணத்தவர் ‘திரவியம் தேடும்’ நோக்கில் புலம்பெயர்ந்து செல்லும் இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.  சைவாசார ஒழுக்கம் பொருள்ரீதியான முன்னேற்றத்திற்கு எதிரானதல்ல எனும் செய்தியையும் இந்த ஆக்கங்களில் சில தரமுயற்சிக்கின்றன. பொருள் தேடுவதற்காக மதம் மாறத்தேவையில்லை என்பது இந்தச் செய்தியின் இன்னொரு அர்த்தமெனலாம். ஆனால் கல்வி, பொருள் தேடல், சமூக நகர்ச்சி, புலப்பெயர்வு, நகரவாழ்க்கை போன்றனவின் விளைவுகள் சைவாசார மரபுகளை மீறும், மறுதலிக்கும், யதார்த்தம் ம. வே. தியின் தலையிடியாகிறது. பொதுவாக அவரது கதைகளில் சைவாசாரமே இறுதியில் வெற்றிபெறுவது அவரின் ஆழ்ந்த சமையாபிமானத்திலிருந்து பிறக்கும் ஒரு கொள்கைப் பிரகடனம்போலவே ஒலிக்கிறது.

முடிவுரை

‘உலகம் பலவிதம்’ ஒரு பாரிய திரட்டு. இந்த நூலின் சமகாலப் பயன்பாடு என்ன? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்பவரின் நிலைப்பாட்டையும் ஆய்வுத்துறையையும் பொறுத்துப் பதில்கள் வேறுபடும் என்பதில் சந்தேகமில்லை.   இந்தக் கட்டுரையில் திருஞானசம்பந்தபிள்ளையின் பங்களிப்பின் சில முக்கிய அம்சங்களை – விசேடமாக அரசியல், பொருளாதாரம், சைவாசாரமும் சாதியமும், பால்நிலை, ஐரோப்பிய கலாச்சாரச் செல்வாக்கு,  இலக்கியப் படைப்புக்கள் ஆகியவற்றை – எனது சமூக விமர்சனக் கண்ணோட்டத்தில் அன்றைய வரலாற்றுப் பின்னணியில் அணுகியுள்ளேன். இது தவிர்க்க முடியாதபடி அன்றைய யாழ்ப்பாண சைவசமூகத்தில் மேலாட்சி செய்த கருத்தியலின் ஒரு செயற்பாடுமிக்க பிரதிநிதியான அவரின் சமூகப் பார்வை பற்றிய ஒரு விமர்சனமாகவும் அமைகிறது. கிறிஸ்துவத்திற்கு எதிராகச் சைவமதத்தை பாதுகாக்க வகுக்கப்பட்ட சிந்தனையிலும் செயற்திட்டத்திலும் முன்னோக்கிய மதச்சீர்திருத்தத்திற்கு இடமிருக்கவில்லை. சாதிப் பாகுபாடும் தீண்டாமையும், ஆணாதிக்கமும் தொடர்ந்தன. இந்தத் தொடர்ச்சியைத் தக்கவைக்கும் கருத்தியலின், கலாச்சார விழுமியங்களின் சிந்தனாரீதியான மூலத்தையும் உற்பத்தியையும், மீளுற்பத்தியையும் அறிந்து கொள்ள உதவும் ஆவணமாக ‘உலகம் பலவிதம்’ பயன்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையை வாசித்தவர் புரிந்து கொள்வர். அதேவேளை தீண்டாமையைப் பொறுத்தவரை, ஏன் 1960களில் தீண்டாமைக்கெதிராக ஒரு வெகுஜனப் போராட்டம் எழுந்ததென்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளவும் அது உதவுகிறது. சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு முன்னர், 1957ல் சமூகரீதியிலான குறைபாடுகளைத் தடுக்கும் சட்டம் (Prevention of Social Disabilities Act, 1957) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள், கோவில்கள், உணவுசாலைகள், போன்றவற்றில் சாதிகாரணமாக அநுமதி மறுப்பது சட்டவிரோதமாகும். ஆயினும் யாழ்ப்பாணத்தில் இதன் அமுலாக்கலுக்கு அதிகாரத்திலுள்ள உயர்சாதியினர் தம்மாலியன்ற தடைகளைப் போட்டனர்.  பல பாடசாலைகள் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களை அநுமதித்தன. ஆயினும் பொது இடங்களில், நிறுவனங்களில் சாதிப் பாகுபாடும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்டோருக் கெதிரான வன்செயல்களும் சட்டவிரோதமாகத் தொடர்ந்தன. சாதியத்தின் ஆதிக்கம் சமூகத்தின் பல்வேறுநிறுவனங்களை மட்டுமன்றி உயர்சாதியினர் பதவிகள் வகிக்கும் அரச நிறுவனங்களையும் பீடித்திருந்தது. இந்தச் சூழலில் அணிதிரண்ட எழுச்சியும் போராட்டமும்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கிருந்த ஒரே வழி என்பதை அழுத்திக் கூறவேண்டிய அவசியமில்லை.

மத அடிப்படையிலான குறுகிய கலாச்சார மறுமலர்ச்சி இயக்கத்திற்கு மாற்றாக ஒரு கொலோனிய எதிர்ப்பு விடுதலை இயக்கத்தின் தேவை புலப்படுவது பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தேவை முழுநாட்டையும் அதன் எல்லா மக்களையும் தழுவிய ஒன்றாகும். இலங்கையில் நம்பிக்கைதரும் ஆரம்ப அறிகுறிகள் இருந்த போதும் ஏன் அத்தகைய ஒரு விடுதலை இயக்கம் பரிணமிக்கவில்லை என்ற விடயம் இந்தக் கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற் பட்டது.

[1]மகாலிங்கசிவம், ம. பா. 2007, பண்டிதர் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை, கொழும்பு தமிழ்ச்சங்கம் (ப 7)

[2] கொலொனியப் பெருமுதலீடுகள் நாட்டின் மலையகம் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் பெருந்தோட்டங்களை உருவாக்குவதற்குச் சென்றன. அத்துடன் கொழும்பு நகர்ப்பகுதியில் அரச நிர்வாகம், வணிகம், வங்கித்துறை, பெருந்தோட்டப் பொருளாதாரத்திற்கு வேண்டிய மற்றைய சேவைகள் போன்றன விருத்தி பெற்றன. வடக்குக்கு மட்டுமன்றி நாட்டின் மற்றைய பகுதிகளுக்கும் பெருமுதலீடுகள் செல்லவில்லை.

[3] Kumari Jayawardena, 2000, Nobodies to Somebodies The rise of the colonial bourgeoisie in Sri Lanka, Social Scientists´Association and Sanjiva Books

[4] ஆயினும் இலங்கைமீதான கிறிஸ்துவத்தின் செல்வாக்கு 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துக்கீசிய கொலொனித்துவத்தின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. போர்த்துக்கீசர் கத்தோலிக்க மதத்தைக் கட்டாயமாகத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அரசனின் மதமே குடிகளின் மதமெனும் கொள்கையைக் கொண்டிருந்த அவர்கள் தாம் கைப்பற்றிய பகுதிகளிலிருந்த உள்நாட்டு மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பதிலும் மக்களை கட்டாயப்படுத்தி கத்தோலிக்கர்களாக்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டனர். 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தை வீழ்த்திக் குடாநாட்டைக் கைப்பற்றிய 40 ஆண்டுகளில் ஒல்லாந்தரினால் அகற்றப்பட்டனர். ஒல்லாந்தர் புறொட்டெஸ்டிசத்தின் ஒரு கிளையான கல்வினிச கிறிஸ்துவத்தைப் புகுத்தினர். போர்த்துக்கீசியர் போல் வன்முறைகளைப் பயன்படுத்தாதபோதும் ஒல்லாந்த காலத்திலும் உள்நாட்டவர் தமது மதங்களைக் கடைப்பிடிக்கும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விடயத்தில் பிரிட்டிஷ் கொலோனியம், மிஷனரிகளுக்குச் சாதகமாக இருந்தபோதும், முன்னைய இரண்டையும்விடத் தாராளவாதப் போக்கினைக் கொண்டிருந்தது. பௌத்த, சைவ மறுமலர்ச்சி இயக்கங்கள் செயற்பட வெளிகள் இருந்தன.

[5] Hudson, Denis. D, 1992, Arumuga Navalar and the Hindu Renaissance Among the Tamils, in K. W. Jones (ed),1992, Religious Controversy in British India: Dialogues in South Asian Languages, SUNY Press

[6]அநகாரிக தர்மபாலா போன்றோர் முன்னெடுத்த சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் பற்றிய சிலமுக்கிய தகவல்களையும் எனது விமர்சனத்தையும் பின்வரும் நூலில் பார்க்கலாம்: சமுத்திரன், 1983, இலங்கை தேசிய இனப்பிரச்சனை சிங்களப் பெருந்தேசிய இனவாதத்தின் தோற்றமும் வளர்ச்சியும், காவியா பதிப்பகம், பங்களூர். இந்த நூலை 2017 ஆம் ஆண்டு எழுதிய புதிய முன்னுரையுடன் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்:  https://samuthran.net/wp-content/uploads/2017/04/NationalEthnicProblem.pdf

[7] JYCன் வரலாறுபற்றி சீலன் கதிர்காமர் பின்வரும் நூலை எழுதியுள்ளார். Kadirgamar, Santasilan, 2013, The Jaffna Youth Congress, Kumaran Book House. இந்தக் கட்டுரையில் வரும் JYC பற்றிய தகவல்கள்  பெரும்பாலும் கதிர்காமரின் நூலிலிருந்தும் மற்றும் கடந்த காலங்களில் அவருடனும் வேறு பலருடனும் நடத்திய பல சம்பாஷனைகளுக்கூடாகவும் கிடைக்கப்பெற்றன.

 [8] உதாரணங்களாக, சமசமாஜக் கட்சியில் ஜெயம் என அழைக்கப்பட்ட தர்மகுலசிங்கம், மற்றும் P. நாகலிங்கம்; கொம்யூனிஸ்ட் கட்சியில் A. வயித்திலிங்கம், P. கந்தையா, M. கார்த்திகேசன், N. சண்முகதாசன் ஆகியோர் முக்கிய பதவிகளை வகித்தனர்.

[9] ஆகவே யாழ்ப்பாணத்தில் காசாதாரப் பொருளாதாரத்திற்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. அன்று கொலோனியம் கொடுத்த ஆங்கிலக் கல்வியின் உதவியுடன் இலங்கையின் பிறபகுதிகளிலும் பிரிட்டிஷ் கொலொனிகளிலும் வேலை பெறும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தினர். பின்னைய காலங்களில் வேறு சூழ்நிலைகளில் ஏற்பட்ட பெருமளவிலான புலப்பெயர்வுகளின் விளைவாக குடாநாட்டின் காசாதாரப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது.  இந்த வரலாறும் அதன் பலாபலன்களும் ஆழ ஆராயப்படவேண்டிய விடயங்கள்.

[10] Pfaffenberger, Bryan, 1982, Caste in Tamil Culture The Religious Foundations of Sudra Domination in Tamil Sri Lanka, Syracuse Unversity and Vikas Publishing House Pvt Ltd.

[11] பார்க்கவும் Samuthran.net

[12]ஆயினும் தாழ்ந்த வர்ணத்தவரென அவர் எந்தச் சாதியினரைக் குறிக்கிறார் என்பது தெளிவில்லாமலிருக்கிறது. இந்து தர்மசாஸ்திரத்தில் வர்ணப்படிநிலை அமைப்பு மேலிருந்து கீழாக பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வர்ணங்களையும் அவற்றிற்குக்கீழ் தீண்டத்தகாதோரையும் கொண்டுள்ளது. இதன்படி தீண்டத்தகாதோர் வர்ணங்களுக்குள் அடங்கவில்லை.

[13] யாழ்ப்பாணத்தில் சைவ வெள்ளாளியவாதிகள் ‘தாழ்ந்த வர்ணத்தவருக்கு’ உயர்சாதியின் ஒழுக்கவியலைப் போதிப்பதிலும் தீண்டாமையை நியாயப் படுத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளை, தென் இந்தியாவில் 1920களிலிருந்து ஈ. வே. ராமசாமிப்பெரியார் சாதியத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்தார் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.

[14] Russel, Jane, 1982, Communal Politics Under the Donoughmore Constitution 1931-1947, Tisara Prakasakayo Ltd.

[15] ‘சிவபாக்கியம் கண்ணகியம்மை’, தொடர்கதை 1947-1951 (ப 513-634)

[16] ‘விசாலாட்சி – விசுவநாதன்…..’, தொடர்கதை, 1944-1946  (ப 327-512)

[17] ‘கோபால-நேசரத்தினம்’ தொடர்கதை, (ப 27-71) ப 66

[18] மகாலிங்கசிவம், ம. ப., 2007, பண்டிதர் ம.போ. திருஞானசம்பந்தபிள்ளை, கொழும்பு தமிழ்ச் சங்கம்

[19] கைலாசபதி, க. 1984, தமிழ் நாவல் இலக்கியம், குமரன் பப்ளிஷேர்ஸ்

அ. சிவானந்தன் (1923-2018) அரசியலும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றே எனும் தனது வாக்கிற்கமைய முடிந்தவரை வாழ்ந்த ஒரு ஆளுமையின் மறைவு

 

சமுத்திரன்

சிவானந்தனின் மரணம் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்களுடன் தன்னை அடையாளப்படுத்திய ஒரு பேரறிஞரின் மறைவென அவரை நன்கறிந்தோர் சர்வதேச ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர். ‘நாம் எந்த மக்களுக்காகப் போராடுகிறோமோ அந்த மக்களுக்காகவே எழுதுகிறோம்’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த சிவா ஜனவரி மூன்றாம் திகதி தொண்ணூற்றுநாலு வயதில் அவர் ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக வாழ்ந்து வந்த லண்டனில் மறைந்தபோது விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவது சுலபமல்ல. அந்த ஆளுமைக்குள் ஆற்றல்மிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் இருந்தன      என அவரைப் பற்றி நண்பர்கள் வியந்துரைப்பதில் ஆச்சர்யமில்லை.

கொழும்பில் இலங்கை வங்கியில் பதவி வகித்து வசதியுடன் குடும்பத்துடன் வாழ்ந்த சிவானந்தன் 1958ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் விளைவாக லண்டனுக்குப் புலம்பெயர்ந்தார். அவர் அங்கு சென்றடைந்தபோது நொட்டிங்ஹில் எனும் பகுதியில் வாழ்ந்து வந்த கரீபிய கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் கலவரத்தின் நேரடிச் சாட்சியானார். ஒரு இனக்கலவரத்திலிருந்து தப்பி இன்னொன்றுக்குள் சென்றடைந்த தனது அநுபவத்தை ‘இரட்டை ஞானஸ்நானம்’ (´double baptism´) என அவர் வர்ணித்துள்ளார். இந்த அநுபவமும் அவர் புகுந்த நாட்டில் வாழப்போகும் வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுக்க ஒரு உந்துதலாயிற்றுப் போலும்.

ஆங்கிலமொழி ஆற்றல், பல்கலைக்கழகப் பட்டம், வங்கியாளர் தொழில் அநுபவம் போன்ற தகைமைகளைக் கொண்டிருந்த அவர் போன்ற ஒருவரால் பிரித்தானியாவில் – நமது காலனித்துவக்காலத் ‘தாய் நாட்டில்’ –  ஒரு ‘நல்ல’ வேலையைப் பெறுவது சுலபம் போல் பட்டிருக்கலாம். ஆனால் வேலை தேடுதலே அவருக்கு ஒரு அரசியல் அநுபவமாயிற்று. முன்பிருந்தே இடதுசாரிப் போக்குடையவராய் இருந்த தனது முழுமையான புரட்சிகர மாற்றம் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த பின்னரே ஏற்பட்டதென அவர் பலதடவை கூறியதை நான் கேட்டுள்ளேன். ஒரு நூலகராகப் பயிற்சி பெற்றபின்  அரசாங்கத்தின் கொள்கைவகுப்புக்கு உதவும் அரச கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிறுவனமாயிருந்த இனங்களிடையிலான உறவுகள் நிறுவனத்தில் (Institute of Race Relations – IRR ல்) நூலகராகப் பதவி ஏற்றார். இனப்பிரச்சனை பற்றிய அந்த நிறுவனத்தின் ஆய்வுகளையும் கொள்கை நிலைப்பாடுகளையும் அங்கு பணியாற்றிய ஒரு குழுவினர் ஆழமாக விமர்சித்தனர். சிவானந்தனே இந்தக் குழுவின் பிரதான சிந்தனையாளர். இடதுசாரிகளான இந்தக் குழுவினரின் கருத்தில் அரசாங்க உதவியில் தங்கியிருக்கும்வரை அந்த நிறுவனத்தால் சுதந்திரமாக இயங்கமுடியாது. தனது இடதுசாரிச் சகாக்களின் ஒத்துழைப்புடனான போராட்டத்திற்கூடாகச் சிவானந்தன்  IRRஐ அரசாங்கத்தின் பிடியிலிருந்து முற்றாக விடுவித்து அதை நிறவாதத்திற்கு எதிரான மற்றும் மூன்றாம் உலகின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவான நிலையமாக மாற்றியமைத்தார். புதிய IRRன் இயக்குனாராகப் பதவி ஏற்றபின்னர், ‘இனமும் வர்க்கமும்’ (Race and Class) எனும் சர்வதேச சஞ்சிகையையும் வேறு சில முற்போக்குச் சிந்தனையாளர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். அதன் கொள்கையையும் சுதந்திரத்தையும் மதித்து ஏற்றுக்கொள்ளும் அமைப்புக்களின், தனிமனிதரின் உதவியுடன் IRR இன்றுவரை வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

‘சிந்திப்பதற்காகச் சிந்திப்பதில் அர்த்தமில்லை, செயற்படுவதற்காகச் சிந்திக்கவேண்டும்’ எனத் தன் அறிவுரீதியான நடைமுறையை வகுத்துக் கொண்டார். மெய்யியலாளர்கள் உலகைப் பலவிதமாக விளக்கியுள்ளார்கள் ஆனால் உலகை மாற்றுவதே முக்கியமானதெனும் மாக்சின் பிரபலமான வார்த்தைகளை நினைவூட்டுகிறது சிவானந்தனின் செயற்பாட்டை நோக்காகக் கொண்ட எழுத்துப்பணி. பிரித்தானியாவில் இன (நிற) அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வர்க்கரீதியில் மோசமாகச் சுரண்டப்பட்ட கறுப்பினத் தொழிலாளர்களின் – இவர்கள் ஆபிரிக்க, ஆசிய, மற்றும் கரீபிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் – உரிமைப் போராட்டங்களின் பேச்சாளனாக, எழுத்தாளனாக விளங்கினார் சிவா. அதே காலத்தில் இனமும் வர்க்கமும் ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் புறநிலை யதார்த்ததைக் கூர்மையாக இயங்கியல்ரீதியில் அவதானித்துக்  கோட்பாட்டுமயமாக்கிப் புதிய விவாதங்களுக்கு மேடை அமைத்தார். இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப்பின் பிரித்தானியாவின் பொருளாதார மீள்நிர்மாணத்திற்கும் அபிவிருத்திக்கும் மேலதிக தொழிலாளர் பெருமளவில் தேவைப்பட்டனர். இந்தப் பற்றாக்குறையை நிரப்புவதற்கு பிரித்தானியா தனது முன்னைய காலனி நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்தது. இது அந்த நாட்டிற்கு மிகவும் மலிவான ஊதியத்திற்கு வேலைசெய்யும் உழைபாளர்களைக் கொடுத்தது. இது பிரித்தானியாவின் போருக்குப்பின்னான அபிவிருத்திக்குப் பெரிதும் உதவியது. முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குகந்த தொழிற்படையின் போதாமையை நிரப்புவதற்கேற்ற வகையில் நாட்டின் குடிவரவுக் கொள்கை அமுல்படுத்தப்பட்டது. இந்த மக்களின் தொழிலாற்றும் சூழல் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் அதே நாட்டின் வெள்ளைத் தொழிலாளர்களின் நிலைமைகளைவிட மோசமாக இருந்தன. இவர்களின் குடியேற்றமும் பல கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது.

வெள்ளையர்கள் செய்ய விரும்பாத தொழில்களே பெரும்பாலும் கறுப்பர்களுக்குக் கிடைத்தன. காலனித்துவ காலத்தில் ஆரம்பித்த இனரீதியான தொழிற்பிரிவு (racial division of labour) போருக்குப்பின் பிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்ததென விளக்கிய சிவா இந்தக் கறுப்பு மக்களின் உரிமைப் போராட்டம் தனியே வர்க்கப் போராட்டம் மட்டுமல்ல, இருக்கும் சமூக அமைப்பில் அதற்கு ஒரு இனப்பரிமாணமும் உண்டெனக் கூறினார். கறுப்பர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களையும் நிறவாதக் கலவரங்களையும் அவர் தலைமைதாங்கிய IRR ஆவணப்படுத்தியது. பிரித்தானியாவில் கறுப்பினத்தவர்கள் நிறுவனமயமாக்கப்பட்ட நிறவாதத்திற்காளாகிறார்கள் என வாதாடிய அவர் இனமும் வர்க்கமும் (race and class) ஒன்றை ஒன்று ஊடறுத்த வண்ணமிருக்கும் யதார்த்தமே அந்த மக்களின் போராட்டத்தை வரையறுக்கும் புலமாகிறது என ஆதாரபூர்வமாகச் சுட்டிக் காட்டினார்.  சிவானந்தனின் வாதம் சகல சமூக முரண்பாடுகளையும் ஒற்றைப் பரிமாணப் பார்வையில் வர்க்க அடிப்படைவாதத்திற்குள் குறுக்கிவிடுவோருக்குப் பிரச்சனையாயிருந்தது. ஆனால் அவர் பயன்படுத்திய ‘ஊடறுத்தல்’ (intersection) கோட்பாடு யதார்த்தத்தின் சிக்கல் மிகுந்த இயக்கப் போக்குகளை முழுமையாக அறிய உதவியது.

முதலாளித்துவ உலக மயமாக்கலின் அரசியல் பொருளாதாரப் போக்குகள் மற்றும் கலாச்சாரத் தாக்கங்கள் பற்றியும் அவை ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின் போராட்டங்களுக்கு எழுப்பியுள்ள சவால்கள் பற்றியும் பல ஆய்வுக் கட்டுரைகளை வரைந்தும் பகிரங்க உரைகளை நிகழ்த்தியும் உள்ளார். நவதாராளவாதத்தின் எழுச்சியின் விளைவான சந்தை அரசு (market state) பற்றியும் சமகால ஏகாதிபத்தியத்தின் புதிய போக்குகள் பற்றியும் ஆழ ஆராய்ந்துள்ளார்.  நிறவாதம் என்பது சமூக-பொருளாதார அமைப்பு மற்றும் அரசியல் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு வெளியே தனியாக இயங்கும் ஒன்றல்ல. அது அவற்றுக்குள்ளே கவிந்திருப்பதால் அவை மாற்றமடையும்போது நிறவாதத்தின் நடைமுறைப் போக்கும் மாற்றமடைகிறது. இன்றைய தகவல்யுக மூலதனத்தின் ஏகாதிபத்தியம் முன்னைய ஆலைத்தொழில்யுக ஏகாதிபத்தியத்திலிருந்து வேறுபட்டது. நிறவாதத்தின் அமைப்புரீதியான வெளிப்பாடுகளும் இதற்கேற்ப மாற்றமடைகின்றன. உலகமயவாதமே (globalism) இன்றைய ஏகாதிபத்தியத்தின் வரைவிலக்கணமாகிறது. ஆகவே இருபத்தியோராம் நூற்றாண்டின் நிறவாதம் பற்றிய ஆய்வினை உலகமயமாக்கலின் அமைப்புக்களின் ஆய்விலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் எனும் கருத்தை முன்வைக்கிறார். அவரது எழுத்துக்களும் பேச்சுக்களும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பத் தவறவில்லை. நானும் சில தடவைகள் அவருடன் முரண்பட்டு விவாதித்துப் பயனடைந்திருக்கிறேன். 1980களுக்குப்பின் எழுந்த மாக்சிய செல்நெறிகள் தொடர்பாக அவருக்கும் அவரது நீண்டகால மாக்சிய நண்பர்கள் சிலருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

சிவாவின் படைப்பிலக்கியப் பங்களிப்பும் அவருடைய அரசியலுடன் நெருங்கிய தொடர்புடையது. பல சிறுகதைகளை எழுதிய அவர் 1997ல் பிரசுரிக்கப்பட்ட ´When Memory Dies´ எனும் ஒரு நாவலை மட்டுமே எழுதினார். சர்வதேசப் பரிசு பெற்ற பிரபலமான இந்த நாவல் இலங்கையின் மூன்று சந்ததிகளின் வாழ்க்கையை அந்த நாட்டின் அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து தரும் ஒரு கலைத்துவமான படைப்பு. அவருக்கே உரிய கவித்துவம் மிக்க உரைநடையில் எழுதப்பட்டது. அவரதும் அவர் அவதானித்து உள்வாங்கிய வேறுபலரதும் வாழ்க்கை அநுபவங்கள் அவரின் படைப்பின் மூலவளங்களாயின. இந்த நாவலுக்கான ஆய்வினை அவர் நீண்ட காலமாகச் செய்துவந்தார் என்பதை நான் அறிவேன். பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரையிலான இலங்கையின் அரசியல், சமூக வரலாற்றாய்வுகளை, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் போராட்டங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டினார். இனப்பிரச்சனை மற்றும் இனங்களுக்கிடையிலான உறவுகள் பற்றி ஆராய்ந்தார். இலங்கைக்குப் பல பயணங்களை மேற்கொண்டார்.

1970களில் பலதடவைகள் இலங்கை வந்த போது தவறாது யாழ்ப்பாணம் செல்வார். அங்கே அவருடைய சொந்த ஊரான சண்டிலிப்பாயில் வாழ்ந்த உறவினர்களைப் பார்க்கச் செல்வார். 1976ல் அவரை முதல் முதலாகக் கொழும்பில் சந்தித்தேன். அந்தச் சந்திப்புக்கு முன்னர் கொழும்பில் வாழ்ந்து வந்த அவருடைய இளைய சகோதரர் இரகுநாதனின் நட்புக் கிடைத்தது. அவரே என்னைச் சிவாவுக்கு அறிமுகம் செய்தார். தன்னுடன் யாழ்ப்பாணம் செல்ல அழைத்தார். நான் சம்மதித்தேன். அந்தப் பிரயாணத்தின்போது அவரது வாழ்க்கை வரலாறு, லண்டனில் அவரின் அரசியல் செயற்பாடுகள் பற்றிப் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். தனது வேர்களை இழக்க விரு