தேசியக் கொடியும் தேசிய இனப்பிரச்சனையும் – குறியீடுகளும் யதார்த்தங்களும்

 

 

சமுத்திரன்

‘தேசியக்கொடிச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுடன் என்னால் ஒத்துப்போக முடியாது என்பதையிட்டு நான் வருத்தமடைகிறேன். எனது பார்வையில், ஒரு தேசியக்கொடி சகல குழுமங்களுக்கும் ஒரு கௌரவமான இடத்தைக் கொடுப்பதற்கும் அப்பால் தேசிய ஐக்கியத்தின் சின்னமாகவும் இருக்கவேண்டும். ….

… எனது பார்வையில், இந்த வடிவமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது ஒரு  தேசிய ஒற்றுமையின் சின்னமாக இருப்பதைவிட்டு நமது தேசிய ஒற்றுமையின்மையின் சின்னமாகவே இருக்கும்.’

– செனட்டர் S. நடேசன், தேசியக்கொடி செயற்குழுவின் அங்கத்தவர் (1948-1950)

இலங்கை அரசியலில் தேசியக்கொடி, தேசிய கீதம் பற்றிய விவாதங்கள் அடிக்கடி எழுகின்றன. பல தசாப்தங்களாகத் தொடரும் இந்த நிலைமை 1950ல் நடேசன் அவர்கள் முன்கணிப்புக் கூறியதுபோல் நாட்டில் நிலவும் தேசிய ஒருமைப்பாடின்மையையே காட்டுகிறது. தேசியக்கொடியை ஏற்க மறுப்பவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் சிங்களத் தேசியவாதிகளும் கூச்சலிடும் காலமிது. தேசியக்கொடியின் வடிமைப்பின் வரலாறுபற்றிச் சில தகவல்களை நினைவுகூருவது பயன்தரும்.[1] 1948 இரண்டாம் மாதம் இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது 1815ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவத்தால் கைப்பற்றப்பட்ட கண்டி இராஜ்யத்தின் கொடியாய் விளங்கிய சிங்கக்கொடியே முழு இலங்கையின் தேசியக்கொடியாகப் பயன்படுத்தப்பட்டது. 1948 மூன்றாம் மாதம் பின்வரும் அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு ‘தேசியக்கொடி செயற்குழு’ நியமிக்கப்பட்டது: S.W.R.D பண்டாரநாயக்க (தலைவர்), சேர் ஜோன் கொத்தலாவல, J.R. ஜயவர்த்தன, T.B. ஜயா, L.A. ராஜபக்ச, G.G. பொன்னம்பலம், S. நடேசன்.

ஒரு இலங்கைத் தேசியக்கொடியை வடிவமைப்பதில் இந்தச் செயற்குழுவிற்குள் முரண்பாடுகள் தோன்றின. நடேசனின் கருத்தில் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக செயற்குழு ஒருமித்த கருத்தை அடையக்கூடிய சாத்தியப்பாடுகள் அற்பமாகவே இருந்தபோதும் இறுதிநேரத்தில் G.G. பொன்னம்பலத்தின் சமரச ஆலோசனையைப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டனர். அப்பொழுது D.S.சேனாநாயக்க அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பொன்னம்பலம் சிங்கக்கொடியின் ஒரு புறத்தில் தமிழர் மற்றும் முஸ்லிம்களைக் குறிக்கும் சின்னங்களாக முறையே ஒரு மஞ்சள் மற்றும் பச்சைக் கோட்டினை உள்ளடக்கும்படி ஆலோசனை வழங்கினார். இதை நடேசனைத் தவிர மற்றைய அங்கத்தவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். தனது முடிவுக்கான காரணங்களை விளக்கித் தனியான அறிக்கை ஒன்றினை நடேசன் கையளித்தார். அதில் அவர் வலியுறுத்திய முக்கிய கருத்து செயற்குழுவினால் வடிவமைக்கப்பட்ட கொடி நாட்டின் சகல இனங்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்காது பிரிவினையையே வெளிக்காட்டுகிறது என்பதாகும். தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் சின்னங்களாக வரையப்பட்ட இரு கோடுகளும் சிங்கக்கொடியைச் சுற்றியுள்ள தங்கநிற எல்லைக் கோட்டிற்கு வெளியே இருப்பது பிரிவினையையே குறிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த இரு கோடுகளும் தேசியக்கொடியின் பிற்சேர்க்கைகள் போலவே தெரிகின்றன எனவும் கூறினார்.  பிரிவினையைக் குறிப்பதுபோல் அமைந்துள்ள அந்த எல்லைக் கோட்டை நீக்குவதன்மூலம் மூன்று மக்களையும் தொடர்புபடுத்தும் குறியீடாகக் கொடியை மாற்றலாம் எனவும் ஆலோசனை வழங்கினார். ஆனால் அந்த நியாயமான ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  ஆரம்பத்தில் நடேசன் மஞ்சள், சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள், சிவப்பு, பச்சை மூவர்ணங்களைக் கொண்ட ஒரு கொடியை வடிவமைக்கும் ஆலோசனையை முன்வைத்தார். ஆனால் அது சிங்கச் சின்னத்தின் முக்கியத்துவத்தின் பிரதிபலிப்பைப் பாதிக்குமென பல அங்கத்தவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். அந்த ஆலோசனையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தேசியக்கொடி நாட்டின் சகல சமூகங்களையும் ஒருங்கிணைக்கும் பரந்த சிந்தனையின் சின்னமாக விளங்கவேண்டும் என்பதே நடேசனின் வாதம். ஆனால் சிங்கள-பௌத்தமெனும் ஒரு இன-மத இணைப்பிற்கே இலங்கைத் தேசியக் கொடியில் மேலாதிக்க அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கொடியில் மையமுக்கியத்துவம் பெறும் வாளேந்திய சிங்கம் சிங்கள சமூகத்தின் வீரத்தையும், நான்கு மூலைகளிலும் காணப்படும் அரச இலைகள் பௌத்தத்தின் நான்கு விழுமியங்களான அன்புடைமை (மைத்ரீ அல்லது மெத்த), கருணை (கருணா), பரிவிரக்கமுடைய ஆனந்தம் (முடித்த), சாந்தம் (உபேக்கா) ஆகியவற்றையும் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஏழு தசாப்தங்களுக்கு முன்னிருந்ததையும் விட இன்றைய இலங்கையில் இன, மத ரீதியான பிரிவினைகள் மிகவும் ஆழப்பதிந்துவிட்டன. இந்தக் காலவெளியில் இலங்கையெனும் நாடு ‘பெரும்பான்மை-சிறுபான்மை’ எனப் பிரிந்துவிட்ட இனத்துவ அடையாள அரசியல் போக்குகளின் அசமத்துவம் மிக்க போட்டிக்களமாக உருமாற்றப்பட்டுவிட்டது.  ஆகவே இன்று தேசியக் கொடி தொடர்பான விவாதங்கள் இடம்பெறும் அரசியல் புலத்தின் யதார்த்தங்கள் 1948-1950 காலகட்டத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். 1948ல் பிரிட்டிஷ் காலனித்துவம் தனது ஏகாதிபத்தியத் தேவைக்கென உருவாக்கிய ஒரு அரசை விட்டுச்சென்றது. அந்த அரசை இலங்கை அரசென அழைக்கலாம். ஒரு இலங்கை அரசு இருந்தது ஆனால் ஒரு இலங்கைத் தேசியம் (a Lankan nation) இருந்ததா? இல்லை. அதைக் கற்பிதம் செய்து கண்டுபிடிக்கும் வரலாற்றுச் சவாலிருந்தது. இலங்கை பல்லின, பல்மத சமூகஅடையாளங்களை உள்ளடக்கிய ஒரு சமூக உருவாக்கமெனும் அடிப்படையில் சகல இலங்கையரையும் உள்வாங்கவல்ல ஒரு பரந்த  பொது அடையாளத்தைக் கட்டியெழுப்பும் வரலாற்றுத் தேவையிருந்தது. அந்தத் திட்டத்திற்கேற்ற ஒரு பல்லின, பல்தேசிய அரசை நிர்மாணிக்கும் தேவையிருந்தது. ஆனால் நடந்தது அதுவல்ல. காலனித்துவம் கையளித்த அரசு பல யாப்புரீதியான மாற்றங்களுக்கூடாக ஒரு சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்க அரசாக மீளமைக்கப்பட்டது. நடந்த வரலாறு பற்றி வேறு கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளேன். அவற்றை இதே இணையத்தளத்தில் (samuthran.net) பார்க்கலாம்.[2]

1948-1950ல் தேசியக்கொடி தொடர்பான செயற்குழுவின் கருத்தாடல் தேசிய இனப்பிரச்சனையைப் பெரும்பாலும் சின்னங்களின் மட்டத்திலேயே அணுகியது. அப்போது ஏற்கனவே மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுவிட்டது. அது தேசிய இனப்பிரச்சனையின் முரண்பாடுகளின் ஒரு பரிமாணத்தை வெளிக் கொணர்ந்தது. அது காலனித்துவத்திற்குப் பின்னான இலங்கையில் எழப்போகும் இனத்துவ தேசியவாத அரசியலின் ஆரம்பத்தை அறிவித்தது.  இன்று தேசிய இனப்பிரச்சனை மேலும் சிக்கலாக்கப்பட்டுள்ள நிலையில் தேசியக்கொடி பற்றிய சர்ச்சைகள் நம்மைச் சின்னங்களுக்கு அப்பால் நாட்டின் யதார்த்தங்களுக்கூடாகப் பிரச்சனையின் தீர்வுக்கு இழுத்துச் செல்கிறது. சின்னங்களுக்கு எதிரான செயற்பாடுகள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு வேண்டுமெனும் அடிப்படைக் கோரிக்கையின் எதிரொலிகளே. இந்தச் செயற்பாடுகள் தேசிய இனப்பிரச்சனையில் ஏற்பட்டுள்ள தன்மைரீதியான மாற்றங்களை நன்கறிந்து ஜனநாயகரீதியான அரசியல்தீர்வுக்கும் மனித மேம்பாட்டிற்கும்  உதவும் வகையிலான நடைமுறை சார்ந்ததாக இருந்தால் மட்டுமே கூடிய பயன்விளையும்.

2015 ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வகித்த பங்கு உலகறிந்ததே. அந்தத் தேர்தலின் வெற்றியின் பல்லினத்தன்மையை ஒரு ‘வானவில் புரட்சி’ என்றும் இலங்கை ஒரு ‘வானவில் தேசியமாக’ மாறும் என்றும் வெற்றிக் களிப்பிலிருந்த சில அரசியல்வாதிகளும் நல்ல நோக்கினால் உந்தப்பட்ட சில எழுத்தாளர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். ‘வானவில் தேசியம்’ (´rainbow nation´) எனும் உவமை 1994ல் தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சிதோற்கடிக்கப்பட்டு நெல்சன் மண்டேலா ஜனாதிபதியானபின் பேராயர் டெஸ்மொண்ட் டுட்டு (Archbishop Desmond Tutu)வினால் பிரபல்யப்படுத்தப்பட்டது. இந்தச் சுலோகத்திற்கேற்ப தென் ஆபிரிக்காவின் தேசியக்கொடி, தேசிய கீதம் மற்றும் யாப்பு உருவாக்கப்பட்டன. அதேகாலத்தில் ஒரு ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வும் நியமிக்கப்பட்டது. ஆறு நிறங்களைக் கொண்ட தேசியக் கொடி நாட்டின் சகல இனங்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவின் தேசிய கீதம் ஐந்து மொழிகளில் ஒரே பாடலாக இசைக்கப்படுகிறது. அந்த நாட்டின் ஜனநாயக யாப்பு 1996ம் ஆண்டு டிசெம்பர் மாதம் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்குப்பின் இதுவரை பதினேழு தடவைகள் திருத்தங்களுக்குள்ளானது. நாட்டின் பல்வேறு இனங்களை ஒருங்கிணைத்து ஒரு ‘வானவில் தேசியத்தை’ உருவாக்கும் பயணத்தில் தென் ஆபிரிக்கா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளபோதும் அதன் குறைபாடுகள் பற்றிய விமர்சனங்களும் நிறைய உண்டு. உதாரணமாக அந்த நாட்டின் பிரபல கவிஞரும் அரசியல் சிந்தனையாளரும், கொம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் (African National Congress) அங்கத்தவருமான ஜெரெமி குறொனின் (Jeremy Cronin) அவர்களின் கருத்தில் தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் தலைமையிலான தேசிய நிர்மாணிப்பு உண்மையான நல்லிணக்கத்திற்கு உதவுவதற்குப் பதிலாக இனிப்புமுலாம் பூசப்பட்ட மேலிருந்து கீழாக வழிநடத்தப்படும் போக்காக மாறிவிட்டது. அத்துடன் தென் ஆபிரிக்காவின் நவதாராளப் பொருளாதாரக் கொள்கை ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிப்பதால் நல்லிணக்கமும் தேசியத்தின் நிர்மாணமும் பாதிக்கப்படுகின்றன எனும் விமர்சனத்தையும் அவர் போன்றோர் முன்வைத்துள்ளனர்.

தென் ஆபிரிக்காவுடன் இலங்கையை ஒப்பிடுவதில் பிரச்சனைகள் உண்டு. ஆயினும் அந்த நாட்டின் பன்முகரீதியான முன்னெடுப்புகளுடன் ஒப்பிடும் போது இலங்கை இன்னும் முதலாவது அடியைக் கூடத் திடமாக எடுக்க முடியாது தத்தளிக்கும் நிலையிலேயே உள்ளது. ‘வானவில் தேசியம்’ ஒரு அழகான உவமைபோல் படலாம் ஆனால் அதை ஒரு மாயத்தோற்றமாகச் சிருஷ்டிப்பதில் அர்த்தமில்லை. இயற்கையில் வானவில் ஒரு கணநேரக் காட்சியே! புதிய யாப்புத் தொடர்பான செயற்பாடுகளைத் துணிவுடன் முன்னெடுக்கும் ஆற்றல்குன்றிய நிலையிலிருக்கிறது அரசாங்கம். கூட்டு எதிர்க் கட்சி மற்றும் பொதுதுபலசேனா (BBS) போன்ற அமைப்புக்கள் தமது தீவிர சிங்கள-பௌத்த இனவாதப் பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளன. இதற்கு நேர்மையாக முகம் கொடுக்கப் பயப்படும் ஜனாதிபதியும் பிரதமரும் பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதிலேயே அக்கறையாயிருக்கின்றனர். மறுபக்கம் வடக்கு-கிழக்கிலே தீவிர தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைமைக்குத் துரோகப்பட்டம் சுமத்தும் அரசியலில் இறங்கியுள்ளனர். இந்தச் சூழலில் புதிய யாப்பு ஒன்று வருமா என்ற கேள்வி எழுகிறது. அப்படித்தான் வந்தாலும் அது தேசிய இனப்பிரச்சனைக்கு ஜனநாயகரீதியான தீர்வினை உள்ளடக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. பௌத்த மதத்திற்கு விசேட அந்தஸ்து என்பதில் மாற்றமில்லை என்பது தெளிவாகியுள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசை ஒரு மதச்சார்பற்ற அரசாகச் சீர்திருத்துவது சாத்தியமில்லை என்பதும் தெளிவு. தேசியக்கொடியில் மாற்றங்களும் சாத்தியமில்லை. நடேசன் முனெச்சரிக்கை செய்ததுபோல் இன்று அது தேசிய ஒற்றுமையின்மையின் சின்னம்போல் ஆகிவிட்டது. மாகாண மட்டத்திலான அதிகாரப் பகிர்வு பற்றிய முடிவுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது இப்போது ஒரு பிரதான கேள்வியாகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தலையொட்டி வழமையான இனத்துவ அரசியல் காரணங்களுக்காக அரசாங்கத்தின் யாப்புத் தொடர்பான முயற்சிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. யாப்புப் பற்றிய சர்ச்சைகள் நாட்டின் இனரீதியான துருவமயமாக்கலை மேலும் பலப்படுத்தியிருப்பதாகவே படுகிறது. இந்தப் பாதகமான போக்கிற்கு எதிரான சக்திகள் அதையும்விடப் பலமடையும்போதே தேசிய இனப்பிரச்சனைக்கு முழுமையான ஜனநாயகரீதியான தீர்வுக்கான அரசியல் சூழல் உருவாகும். அந்தச் சூழல் தன்னியல்பாகப் பிறக்கப்போவதில்லை. அதை உருவாக்க ஒத்துழைத்துப் போராடுவதே சகல இனங்களையும் சேர்ந்த ஜனநாயக சக்திகளினதும் கடமை. இன்று இப்படியான ஒரு ஆலோசனை நடைமுறைக்கு ஒவ்வாததெனப் பலர் கருதலாம். ஆனால் இன்றைய வரலாற்றுத் தேவை ஒரு மாற்று அரசியலாகும். அதை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய கருத்துப்பரிமாறல்களும் விவாதங்களும் தேவை.

 

[1] இது தொடர்பாக February 2, 2003, Sunday Timesல், C. V. Vivekanandan, How National is the National Flag? எனும் தலைப்பில் ஒரு பயனுள்ள கட்டுரையை எழுதியிருந்தார். நடேசனின் அறிக்கை மற்றும் அவர் செனட்சபையில் ஆற்றிய உரைகள் ஆகிவற்றை இணையத்தில் S. Nadesan எனும்பெயரில் தேடினால் காணலாம்.

[2] Samuthran.net ல் விசேடமாகப் பின்வரும் கட்டுரைகளைப் பார்க்கவும்: i. சிங்களப் பெருந்தேசிய வாதம் – அதன் அடிப்படைகளூம் மேலாதிக்கமும் ii. வடக்குக் கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும்

 

மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – I

 

சமுத்திரன்[1]

‘மனிதனின் பௌதிக மற்றும் ஆத்மீக வாழ்வு இயற்கையுடன் இணந்துள்ளது என்பதன் தெளிவான அர்த்தம் இயற்கை தன்னுடனே இணைந்துள்ளது என்பதே, ஏனெனில் மனிதன் இயற்கையின் ஒரு அம்சமே.’ Karl Marx,1844, Economic and Philosophic Manuscripts

இயற்கையின் தனியுடைமையாக்கல், மூலதனமயமாக்கல், பண்டமயமாக்கல் மற்றும் சூழலின் சீரழிவாக்கல் உலகரீதியில் மிகவும் தீவிரமாகத் தொடரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருகிறோம். கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலமாக மனித செயற்பாடுகளின் விளைவாக மனித இனத்தினதும் மற்றைய உயிரினங்களதும் வாழிடமான பூகோளத்தில் பல பாதகமான மீட்டெடுக்க முடியாத மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக எச்சரித்துவரும் போதும் இந்தப் போக்குகள் தொடர்கின்றன. சுவீடனின் தலைநகரில் அமைந்துள்ள ஆய்வு நிறுவனமான Stockholm Resilience Centre (SRC) சூழல் தொடர்பான பல்வேறு விஞ்ஞான ஆய்வுகளை நடத்தி வருகிறது. Resilience என்பது அதிர்ச்சியிலிருந்து விடுபடும் ஆற்றலைக் குறிக்கிறது. SRC இயற்கையின் அத்தகைய ஆற்றல் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கைகளின்படி சுவாத்திய மாற்றம், உயிரினப் பல்வகைமையின் இழப்பு (biodiversity loss), காடழித்தல் போன்றவற்றால் ஏற்படும் நில வளங்களின் அழிவு, மற்றும் நைட்ரஜன் (வெடியம்), ஃபொஸ்ஃபொரஸ் (phosphorous) சுழற்சிகளின் பாதிப்பு ஆகிய நான்கும் ஏற்கனவே பூகோளத்தின் பாதுகாப்பு எல்லைகளைத் தாண்டிவிட்டன. விஞ்ஞானிகளால் பூகோளரீதியாகப் பாதுகாப்பு எல்லைகள் வகுக்கப்பட்ட ஒன்பது போக்குகளில் (processes) இந்த நான்கும் அடங்கும். மற்றைய ஐந்தும் பின்வருமாறு: மீவளிமண்டல ஓஸோனின் குன்றல் (stratospheric ozone depletion), சமுத்திரங்களின் அமிலமயமாக்கல், தூயநீர் பாவனை, வளிமண்டலத்தில் அழுத்தக் கொள்கலன்களால் வெளிப்படும் நுண்துகள்களின் சுமை (atmospheric aerosol loading), மற்றும் சூழலைப் பாதிக்கும் புதிய வகைகள் (உதாரணமாக கதிரியக்கமுடைய கழிவுப் பொருட்கள், மற்றும் பலவிதமான அதிநுண்துகள்கள்). SRCன் ஒரு பேச்சாளரின் கருத்தில் இந்தக் கோளரீதியான எல்லைகள் மனித சமூகங்கள் எப்படி அபிவிருத்தியடைய வேண்டும் என நிர்ப்பந்திக்கவில்லை ஆனால் மனித இனம் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வெளியை வரையறுப்பது பற்றிய முடிவுகளை எடுப்போருக்கு அவை உதவியாயிருக்கும். பூகோளத்தின் சூழலியல்ரீதியான (ecological) எல்லைகள் மதிக்கப்படவேண்டும் என்பதே SRC தரும் பிரதான செய்தியாகும்.

சூழல் மற்றும் அபிவிருத்தி பற்றி இடம்பெறும் விவாதங்களுக்கு SRC போன்ற நிறுவனங்களின் ஆய்வுகள் உதவியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை உலக சூழல் பிரச்சனைகள் பற்றிப் பலவிதமான, பெரும்பாலும் முரண்படுகின்ற, போட்டி போடும் கதையாடல்களைக் காண்கிறோம். இந்தக் கட்டுரையின் நோக்கம் மூலதனத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவு மற்றும் உலக சூழல் பிரச்சனை பற்றி மாக்சீய மரபில் தொடரும் சில செல்நெறிகள் பற்றிச் சுருக்கமான குறிப்புகளைத் தருவதே. இந்த விடயம் தொடர்பாக மாக்சிய பார்வையில் கட்டுரைகளும் நூல்களும் பெருமளவில் வெளிவந்துள்ளன, தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கின்றன. இங்கு இவை பற்றிய ஒரு அறிமுகமாக சில சிந்தனைப் போக்குகள், விவாதங்கள் பற்றியே குறிப்பிட விரும்புகிறேன்.

விஞ்ஞானிகள் அக்கறையுடன் ஆய்வுக்குட்படுத்தும் கடந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலம் அதையும்விட நீண்ட முதலாளித்துவத்தின் வரலாற்றின் ஒரு பகுதியே என்பதை மறந்துவிடலாகாது. அந்த வரலாற்றுடன் ஒப்பிடும் போது நடைமுறையிலிருந்த ‘சோஷலிசத்தின்’ வரலாறு சிறியதாயினும் சூழலைப் பொறுத்தவரையில் அதன் ஆவணப்பதிவு மிகவும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. ஆயினும் Foster மற்றும் Magdoff ஆகிய மாக்சிய ஆய்வாளர்கள் 2012ல் எழுதியுள்ளதை நினைவுகூருதல் தகும். 1920களில் சோவியத் யூனியன் சுற்றுச்சூழல் விஞ்ஞானத்துறையில் உலகிலேயே மிகவும் முன்னேற்றமடைந்த நாடாக விளங்கியது. இந்த வளர்ச்சியெல்லாம் ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் அழிக்கப்பட்டுவிட்டதென அவர்களின் ஆய்வு கூறுகிறது.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலுள்ள மேற்கோள் மாக்சின் பிரபல்யம்வாய்ந்த ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. 1844ல் அதை எழுதும் போது மாக்ஸ் இருபத்தி ஆறு வயது இளைஞன். அன்று அவர் மனிதரை இயற்கையின் ஒரு அம்சமாகப் பார்த்த கருத்தினை இறுதிவரையும் கொண்டிருந்தார் என்பதை அவரது பின்னைய கால எழுத்துகளிலிருந்து விசேடமாக அவரின் ‘மூலதனம்’ மற்றும் அந்த நூலுக்கான ஆய்வுகளின் குறிப்புகளைக் கொண்ட நூல்களிலிருந்து அறியலாம்.  ஆயினும் மாக்சிசம் வரலாற்றை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் வரலாறாகப் பார்க்கும் ஒரு கோட்பாடென்பதால் அது இயற்கையை மனிதத் தேவைக்குப் பயன்படும் ஒரு கருவியாக, மனிதரின் மேலாதிக்கத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவே பார்க்கிறது எனும் வாதம் பல சூழல்வாதிகளால் (environmentalists) முன்வைக்கப்பட்டது. தம்மைச் சூழலியல் சோஷலிச வாதிகள் (eco-socialists) எனச் சொல்லிக்கொள்ளும் சில ஆய்வாளர்களும் இந்தக் கருத்தினைக் கொண்டுள்ளனர். இவர்களின் அபிப்பிராயத்தில் இது மாக்சிசத்தின் ஒரு குறைபாடு, ஆகவே அது திருத்தப்படவேண்டும். மாக்சிசத்தில் குறைபாடுகள் உண்டு என்பதை மறுக்க முடியாது ஆனால் இந்த விமர்சனம் மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றி மாக்ஸ் பல இடங்களில் குறிப்பிட்டு விளக்க முற்பட்டுள்ள வற்றைக் கணக்கிலெடுக்கத் தவறிவிட்டது எனப் பல மாக்சிய ஆய்வாளர்கள் ஆதாரபூர்வமாகக் காட்டியுள்ளனர். இது தொடர்பாக மாக்சின் பல கருத்துக்கள் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தபோதும் மிகவும் தெளிவாகவே முன்வைக்கப்பட்டுள்ளன. அவை ஒரு மாக்சிய சூழலியலுக்கான அடிப்படைகளைத் தருகின்றன என்பதும் பல ஆய்வாளர்களின் கருத்தாகும். இன்று இந்த ஆய்வுச் செல்நெறியும் அது தொடர்பான விவாதங்களும் பல படிகள் முன்னேறியிருப்பதைக் காண்கிறோம்.

அவரது காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பொருள்முதல்வாத சிந்தனையின் குறைபாடுகளை விமர்சித்த மாக்ஸ் மனித வரலாற்றுக்கு முன்பிருந்த இயற்கை (சமீப காலங்களில் உருவான சில அவுஸ்திரேலிய பவழத் தீவுகளைத் தவிர) இப்போது இல்லை, உண்மையில் நடப்பது என்னவெனில் மனிதர் இயற்கையுடனான பரிமாற்ற உறவுகளுக்கூடாகத் தம்மையும் இயற்கையையும் மாற்றிய வண்ணமிருக்கிறார்கள் எனும் நிலைப்பாட்டிற்கு வந்தார். இந்த ஆரம்பக் கருத்துக்களை அவர் தனது பின்னைய ஆக்கங்களில் மேலும் ஆழமாக ஆய்வதைக் காணலாம். மூலதனம் – இயற்கை உறவுக்கு இயங்கியல் அணுகுமுறைக்கூடான விளக்கத்தைக் கொடுக்கிறார்.  மூலதனம் எப்படி மனித உழைப்பையும் இயற்கையையும் சுரண்டும் அதே சமயம் மனிதரை மனிதரிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் அந்நியப்படுத்துகிறது என்பதை விளக்குகிறார். Grundrisse மற்றும் ‘மூலதனம்’ (மூன்று பாகங்கள்) ஆகிய நூல்கள் மற்றும் அவைக்கு முன்னர் வந்த அரசியல் பொருளாதார விமர்சனங்கள் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் பிரமிக்கத்தகுந்த அசுர, புறொமிதிய (Promethean) உற்பத்தி ஆற்றலைத் தெளிவுபடுத்தி விளக்கும் அதேவேளை அந்த ஆற்றலின் மறுபகுதியான அழிப்பு சக்திகள் பற்றியும் கூறுகின்றன. உபரிப் பெறுமதியின் அபகரிப்புக்கூடாக மூலதனக் குவியலை உந்தும் உள்ளார்ந்த தர்க்கவியல் (immanent logic) தேசிய எல்லைகளையோ இயற்கைரீதியான எல்லைகளையோ மதிப்பதில்லை. அதன் இயக்கப்போக்கிற்கு இந்த எல்லைகள் அர்த்தமற்றவை. அது மட்டுமன்று தடைகளுக்கும் எல்லைகளுக்கும் இடையிலான வேறுபாட்டினைக் கூட மூலதனத்தின் உள்ளார்ந்த தர்க்கவியல் மதிப்பதில்லை. மூலதனத்தைப் பொறுத்தவரை எல்லைகளும் உடைத்துத்தாண்டப் படவேண்டிய தடைகளே! மூலதனத்திற்கு ‘ஒவ்வொரு எல்லையும் ஒரு தடையாக மட்டுமே இருக்கமுடியும் அல்லாவிடில் அது மூலதனமாக – சுயமாக மீளுற்பத்தியாகும் பணமாக – இருக்கமுடியாது’ என்கிறார் மாக்ஸ்.[2] ஆகவே எல்லைகளைத் தற்காலிகமான தடைகளிலிருந்து வேறுபடுத்தும் ஆற்றலற்ற உற்பத்தி அமைப்பு ஆட்சி செலுத்தும் உலகில் விஞ்ஞானிகள் வகுக்கும் பூகோளரீதியான பாதுகாப்பு எல்லைகள் மீறப்படுவது ஆச்சரியமளிக்கும் விடயமல்ல.

ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து  ஏறக்குறைய ஏழு தசாப்தங்களாக உலகின் சூழல் பிரச்சனைகள், மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றிக் கோட்பாட்டுரீதியான மாக்சிய பங்களிப்புக்கள் சிறியளவிலேயே இருந்தன. பின்நோக்கிப் பார்க்கும்போது  இது ஆச்சர்யத்தை கொடுக்கலாம். ஏனெனில் அந்தக் காலகட்டத்தில் மாக்சிசம்  கோட்பாட்டுரீதியான எழுச்சிகளைக் கண்டது, சோஷலிச மற்றும் தேசிய விடுதலை போராட்ட இயக்கங்களின் தலையாய கருத்தியலாய், ‘இரண்டாம் உலக’ நாடுகளை ஆண்ட கொம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கையாய் விளங்கியது. மாக்சிசம் பற்றிய பலவிதமான வியாக்கியானங்கள், விளக்கங்கள் தோன்றி வளர்ந்தன. அதன் செல்வாக்கிற்குள்ளாகாத சமூக விஞ்ஞானத்துறைகளைக் காண்பது அரிது. ஆயினும் சூழல் பிரச்சனைகள், சூழலியல் தொடர்பான விவாதங்கள் இந்தப் போக்குகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. பிரபல மாக்சிய சிந்தனையாளர் David Harvey (1998) கூறியதுபோல் சூழல் பிரச்சனைகளுக்குரிய முக்கியத்துவத்தை கொடுப்பதற்கு மாக்சியவாதிகள் மிக நீண்ட காலத்தை எடுத்துள்ளனர். 1960-1970களில் மேற்கு நாடுகளில் எழுந்த சூழல் இயக்கங்களின் கருத்தியலாளர்கள் மாக்சிசத்தை ஒரு சூழல் விரோதத் தத்துவமாகச் சித்தரிக்க முயன்றனர். மாக்சிசம் ஒரு ‘உற்பத்திவாத’ (productivist), இயற்கைமீது மனித ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிற சிந்தனைப்போக்கு எனக் காட்ட முற்பட்டனர். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தனர். இதைப் பல மாக்சிய இடதுசாரிகள் ஒரு சவாலாக ஏற்றுச் சூழல் பிரச்சனைகளை மாக்சியப் பார்வையில் அணுகி ஆராயவிளைந்தனர். மூலதனம்- இயற்கை உறவுகள், சூழல் பிரச்சனைகள் பற்றி மாக்சும் ஏங்கல்சும் எழுதியவற்றைத் தேடித்துருவி ஆராய்ந்தனர். முன்னைய மற்றும் சமகால மாக்சியச் செல்நெறிகளை விமர்சன நோக்கில் மீளாய்வு செய்தனர். 1980களிலிருந்து வளர்ந்துவரும் மாக்சிய சூழலியல் போக்குகளின் வரலாற்றின் கோட்பாட்டுரீதியான பின்னணியை ஆழமாகவும் அறிவூட்டும் வகையிலும் தமது ஆய்வுகளில் தருகிறார்கள் John Bellamy Fosterம் அவரது சக ஆய்வாளர்களும் (Foster, 2000; 2015; Foster, Clark and York, 2010).

சோவியத் யூனியனின் ஆரம்ப காலத்தில் சூழலியல் கற்கைகள் அதிகாரத்துவத் தலையீடுகளின்றி வளர்ந்தன. உதாரணமாக 1926ல் Vladimir Vernadsky ´The Biosphere´ (உயிர்க்கோளம்) எனும் அவரது பிரதான ஆய்வுநூலை வெளியிட்டார். பிரபல மரபணு விஞ்ஞானியான Nikolai I. Vavilov மனிதர் இயற்கையிடமிருந்து தம் பயன்பாட்டிற்குத் தேர்ந்தெடுத்த தாவரங்கள் பற்றிய தனது உலகரீதியான ஆய்வுகளை வெளியிட்டார். இவற்றின் விளைவாக இத்தகைய தாவரங்களின் மையங்கள் Vavilov Centres எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளன. இப்படியாகப் பல சூழலியல்ரீதியான பங்களிப்புக்கள். ஆனால் இத்தகைய ஆய்வுகளின் சுதந்திரமான தொடர்ச்சி துரதிஷ்டவசமாக சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியில் வளர்ந்து வந்த அதிகாரத்துவவாதத் தலையீடுகளால் பாதிக்கப்பட்டது (மேலும் தகவல்களுக்கு: Foster, 2015).

இதே காலகட்டத்தில் சோவியத் யூனியனுக்கு வெளியே மூன்றாம் உலகிலும் மேற்கிலும் மாக்சிசம் பரந்த வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி பன்முகரீதியான தத்துவார்த்த விருத்திகளையும் கண்டது. 1940 களில் சீனப் புரட்சியின் வெற்றியும் மாஓவின் சிந்தனைகளும் பின்னர் வெற்றிபெற்ற கியூபாவின் புரட்சியும் மூன்றாம் உலக நாடுகளின் தேசியவிடுதலைப் போராட்டங்களுக்கு ஆகர்ஷமாய் விளங்கின. 1960களில் இவை மேற்கு நாடுகளின் மாணவ இயக்கங்களையும் கவர்ந்தன. ஆனால் சூழல் பிரச்சனைகள் தொடர்பான கதையாடல்களும் செயற்பாடுகளும் சூழல்வாதிகளின் செல்வாக்கிலிருந்து விடுபடவில்லை. சீனாவில் துரிதமான காடழிப்பு மற்றும் சூழல் பிரச்சனைகள் தோன்றின. காலனித்துவம், ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகின் இயற்கை வளங்களைச் சூறையாடுவது பற்றிய நவமாக்சிய ஆய்வுகள் பல வெளிவந்தபோதும்  அப்போது அதன் சூழல் பரிமாணம் ஆழமாகக் கவனிக்கப்படவில்லை.

1920களில் ஐரோப்பாவில் புதிய மாக்சிச செல்நெறி ஒன்று தோன்றி மிகவும் செல்வாக்குப் பெற்றது. இது ‘மேற்கத்திய மாக்சிசம்’ (Western Marxism) என அழைக்கப்பட்டது. இதன் பிரபலமான ஆரம்ப கர்த்தாக்களில் Georg Lukacs, Antonio Gramsci, Karl Korsch, Ernst Bloch ஆகியோர் அடங்குவர். இந்த செல்வாக்குமிக்க போக்கே பின்னர் Frankfurt Schoolன் ஆய்வுகளின் பிரதான ஆகர்ஷமாய், அடிப்படையாய் விளங்கியது. இந்தப் போக்கு மாக்சிசத்தின் கோட்பாட்டுரீதியான முன்னேற்றத்திற்கும் விவாதங்களுக்கும் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. ஆயினும் இயற்கை மற்றும் இயற்கை விஞ்ஞானம் தொடர்பான விடயங்களில் போதியளவு அக்கறை காட்டவில்லை. இந்தப் போக்கிற்கு ´Western Marxism` எனும் பட்டத்தை முதலில் சூட்டியது சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியே. இந்தப் பட்டம் சூட்டல் அதை இழிவுபடுத்தும் நோக்கிலேயே செய்யப்பட்டதாயினும் அதற்கு மாறாக அது பலராலும் வரவேற்கப்பட்டது. மேற்கத்திய மாக்சிசத்தின் குறை நிறைகள் பற்றி ஆழ ஆய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. இங்கு முக்கியமாக இயற்கை பற்றிய மாக்சிச நிலைப்பாடு தொடர்பாக ஆரம்பத்தில் Lukacs கொண்டிருந்த கருத்து மற்றும் அவரின் கருத்தின் செல்வாக்கின்கீழ் Alfred Schmidt (1962) எழுதிய ´The Concept of Nature in Marx´ எனும் நூல் தொடர்பான விமர்சனங்கள் உண்டு என்பதைக் குறிப்பிடவேண்டும். Lukacsன் பார்வையில் இயங்கியல் அணுகுமுறை வரலாறு மற்றும் சமூகம் பற்றிய அறிதலுக்கு மட்டுமே பயன்படவல்லது. இந்த நோக்கில் அவர் ஏங்கல்சின் Dialectic of Nature (இயற்கையின் இயங்கியல்) ஆய்வை ஒரு ஹேகலியத் தவறு எனக்கூறியுள்ளார். இயங்கியல் அணுகுமுறை பற்றிய Lukacs ன் கருத்தை கிராம்சி விமர்சித்தார் என்பதைக் குறிப்பிடுதல் தகும். ஆயினும் தனது குறுகிய வாழ்க்கையில் மாக்சிச சிந்தனை மரபின் விருத்திக்குப் பயனுள்ள பங்களிப்பினை செய்தவரான கிராம்சி  மூலதனத்திற்கும் இயற்கைக்குமிடையிலான இயங்கியல் உறவு பற்றிக் கவனம் செலுத்தவில்லை. தத்துவார்த்த மட்டத்தில் மாக்சிசம் நேர்மறையாக்கத்தின் (positivismன்) செல்வாக்கிற்குள்ளாவதை எதிர்ப்பதில் அன்றைய மேற்கத்திய மாக்சிஸ்டுகள் ஆர்வமாயிருந்தனர். இது இயற்கை தொடர்பான அவர்களின் கவனமின்மைக்குக் காரணமாயிருந்திருக்கலாம். பொதுவாக ‘சோஷலிச’ (சோவியத் முகாம், சீனா) நாடுகளில் இடம்பெற்ற சூழல் சீரழிவுகள்,  மேற்கத்திய மாக்சிச செல்நெறி சூழல் பிரச்சனையை நன்கு கையாளத் தவறியமை,  மற்றும் மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றிய மாக்சின் கருத்துகளைக் காணத்தவறியமை போன்ற காரணங்களால் மாக்சிசம் சூழலியலுக்கு எதிரானது எனும் கருத்துப் பரவலாக நம்பப்பட்டது.[3]

1960-70களில் சூழல்வாதிகள் மாக்சிசம் பற்றிக் கொண்டிருந்த விமர்சனங்களையும் அவற்றின் விளைவாக 1980-90 களில் பிறந்த சூழலியல் (ecology) சார்ந்த மாக்சிச செல்நெறிகளையும் நோக்கும்போது இந்தப் பின்னணியையும் நினைவுகூர்தல் பயன்தரும். இந்தக் காலகட்டத்தில் சில மாக்சிய ஆய்வாளர்கள் மாக்ஸ் ஆலைத்தொழில் புரட்சியின் மற்றும் அத்துடன் பிறந்து பரந்து வளர்ந்த நவீன நாகரீகத்தின் இயற்கை விரோதத்தன்மை பற்றி ஆழ்ந்த விமர்சனரீதியான கருத்தினைக் கொண்டிருக்கவில்லை எனும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இந்தக் குறையைத் திருத்தவேண்டும் என வாதிட்டுத் தமது கருத்துக்களை முன்வைத்தனர். உதாரணமாக Michael Lowy, Ted Benton, James O´Connor இந்த முகாமைச் சேர்ந்தவர்கள். இன்னொரு சாரார் இதை ஏற்கமறுத்து மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றி நீண்ட காலமாக மாக்சியவாதிகள் கவனிக்காதுவிட்ட மாக்சின் கருத்துக்களை எடுத்துக் கூறி அவை ஒரு மாக்சிய சூழலியலின் கோட்பாட்டுரீதியான விருத்திபோக்கின் அடிப்படைகளாகப் பயன்படவல்லன என வாதிட்டனர். இந்தப் போக்கின் பிரதிநிதிகளாக John Bellamy Foster, Brett Clark, Richard York, Paul Burkett, Fred Magdoff, Kohei Saito போன்றோரைக் கொள்ளலாம். இன்னும் பல மாக்சியவாதிகள் இந்த இரு போக்குகளுக்கும் இடைப்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர் – உதாரணங்களாக David Harvey, Andreas Malm, Jason Moore ஆகியோரைக் குறிப்பிடலாம். இங்கு நான் முக்கிய பங்களிப்புக்களைச் செய்தோரில் ஒரு சிலரின் பெயர்களை மட்டுமே அதுவும் ஆங்கில மொழியில் எழுதுவோர் பற்றியே குறிப்பிடுள்ளேன். சூழல் தொடர்பான மாக்சிச ஆய்வுகள் வரலாற்று நோக்கிலானவை மட்டுமல்லாது அவை பல விஞ்ஞானத் துறைகளை ஒருங்கிணைத்து ஆயும் பண்புடையவை.

இன்னுமொரு முக்கியமான தகவல் என்னவெனில் ஆரம்பத்தில் இருந்ததை விடக் காலப்போக்கில் இந்த எழுத்தாளர்களிடையே பல விடயங்களில் பொதுமைப்பாடு அதிகரித்துள்ளது எனலாம். மாக்சிய சூழலியல் தொடர்பான சர்வதேச ஆய்வுகளைப் பல சஞ்சிகைகள் பல மொழிகளில் பிரசுரிக்கின்றன. ஆங்கில மொழியைப் பொறுத்தவரை விசேடமாக மூன்று மாக்சிச சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்: James O´Connor 1980களில் ஆரம்பித்த Capitalism, Nature, Socialism; தற்போது John Bellamy Fosterஐ ஆசிரியராகக்கொண்ட Monthly Review (இது 1949ம் ஆண்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகை என்பது குறிப்பிடத்தகுந்தது) மற்றும் Susan Watkins ஐ ஆசிரியராகக் கொண்ட New Left Review. சூழல் தொடர்பான மாக்சிச ஆய்வுக் கட்டுரைகள் கருத்துப் பரிமாறல்கள் பல இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன.

வேதியியல்ரீதியான பிளவு (Metabolic Rift): மாக்சின் விளக்கமும் அதன் பயன்பாடும் 

 முதலாளித்துவ ஆலைத்தொழில் மயமாக்கல், நகர்மயமாக்கல், விவசாயத்தின் நவீனமயமாக்கல், மற்றும் நெடுந்தூர வணிகம் போன்றவை இயற்கை வளங்களின் உபயோகம் மற்றும் சூழல்மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி மாக்ஸ் ஆழ்ந்த அக்கறையுடன் அவதானித்துவந்தார். முதலாளித்துவ உற்பத்தி உறவுகளும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் இயற்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களை அன்றைய காலத்தில் கிடைக்கக்கூடிய விஞ்ஞான ஆய்வுகளின் உதவியுடன் புரிந்துகொள்ள விளைந்தார். நகரம் – நாட்டுப்புறம் எனும் பிரிவினை சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையே நிலவும் வேதியியல்ரீதியான பரஸ்பர தங்கிநிற்றலில் (metabolic interdependence ல்) சீர்படுத்தமுடியாத பிளவினை (irreparable rift ஐ) ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டார். தனியுடைமையாளரின் இலாப நோக்கினால் உந்தப்படும் அமைப்பில் இந்தப்பிளவு விரிவடைவது எதிர்பார்க்கப்படக்கூடியது. இந்த நோக்கிலேயே மாக்ஸ் 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவெடுத்த சூழல் பிரச்சனைக்கு ஒரு கோட்பாட்டுரீதியான அடிப்படையைக் கொடுக்க முற்பட்டார். மாக்சின் இந்த அடிப்படைக் கருத்திற்கு  metabolic rift (வேதியியல்ரீதியான பிளவு) எனும் பதத்தினை Foster (1999) அறிமுகம் செய்தார். 1867ல் முதல்முதலாக ஜேர்மன் மொழியில் பிரசுரமாகிய ‘மூலதனம்’ முதலாம் பாகத்தில் (Capital, Volume I) பேரளவு ஆலைத்தொழில் மற்றும் விவசாயம் பற்றிய ஆய்வில் மாக்ஸ் விரிவாகக்கூறுவதைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.[4]

முதலாளித்துவ உற்பத்தி மக்களை பெரிய மையஇடங்களில் ஒன்றுசேர்க்கிறது. அது நகர்ப்புற ஜனத்தொகையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குக் காலாயிருக்கிறது. இதனால் இரண்டு விளைவுகள் ஏற்படுகின்றன: ஒரு புறம் அது வரலாற்றுரீதியான இயக்கசக்தியைச் செறிவாக்குகிறது. மறுபுறம் அது மனிதனுக்கும் பூமிக்குமிடையிலான வேதியியல்ரீதியான தொடர்பினைச் சீரறுக்கிறது – அதாவது கிராமத்தின் உற்பத்திகள் (உணவு மற்றும் பலவிதமான உள்ளீடுகள்) நகரத்திற்கு ஏற்றுமதியாவதால் மண்ணிடமிருந்து அவை அகற்றும் கனிமங்கள் போன்றன மீண்டும் மண்ணிடம் போய்ச்சேரும் சுழற்சிப் போக்குத் தடைபடுகிறது. இதனால் நித்தியமாக மண்ணின் வளத்தைப் பராமரிக்கும் இயற்கையான செயற்பாடு, அதாவது மண்வளத்தின் இயற்கையான மீளுருவாக்கம், பாதிக்கப்படுகிறது. இதனால் மண்வளம் சீரழிகிறது. முதலாளித்துவம் உருவாக்கும் ‘நகரம் – நாட்டுப்புறம்’ எனும் பிரிவினைப் போக்கின் விளைவுகளால் நகர்ப்புறத் தொழிலாளியின் உடல்நலமும் நாட்டுப்புறத் தொழிலாளியின் அறிவுசார்வாழ்வும் ஒரேகாலத்தில் அழிக்கப்படுகின்றன.

நகர்புறத்தின் சூழல் பிரச்சனைகளும் கிராமப்புறத்தின் இயற்கை வளங்களின் சீரழிவும் இருபதாம் நூற்றாண்டில் அதிக முக்கியத்துவம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவற்றின் தோற்றம் மற்றும் விளைவுகள் பற்றி மாக்ஸ் கூர்மையான பார்வையைக் கொண்டிருந்தார்.  சமகால ஜேர்மனிய விவசாய இரசயானவியல் விஞ்ஞானியான Justus von Liebigன் ஆய்வுகளை மாக்ஸ் கவனமாகப் படித்தார். நகர்மயமாகிவரும் ஐரோப்பாவில் விவசாய உற்பத்தியின் தீவிரமயமாக்கலும் நீண்டதூர ஏற்றுமதியும் மண்வளத்தின்மீது ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் பற்றிய ஆய்வுகளில் Liebig ஈடுபட்டிருந்தார். இதுபற்றிய அவரது இறுதியான முடிவுகள் நீண்டகாலமெடுத்தன. Liebigன் கருத்துக்களால் மாக்ஸ் கவரப்பட்டார். இயற்கை விஞ்ஞானத்தில் முக்கியமான வேதியியல் (ஆங்கிலத்தில் metabolism ஜேர்மனில் stoffwechsel) எனும் பதத்தினை அவர் Liebig  இடமிருந்து பெற்றே அதற்கு ஒரு சமூகவிஞ்ஞான அர்தத்தையும் கொடுத்தார் எனக் கருத இடமுண்டு. இயற்கைக்கும் மனிதருக்குமிடையிலான உறவினை  சமூக வேதியியல் (social metabolism) என மாக்ஸ் குறிப்பிடுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் விவசாய உற்பத்தியின் தீவிரமாக்கலின் விளைவாக மோசமாகத் தலையெடுத்த மண்வளச்சீரழிவினை ஈடுசெய்யத் தென் அமெரிக்காவின் பெரு (Peru) நாட்டில் பல நூற்றாண்டுகளாகக் குவிந்திருந்த கடற்பறவைகளின் எச்சம் (guano) இயற்கை உரமாக இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது இது மிக இலாபம்மிக்க வணிகமாகியது. ஆனால் இதனால் பெருவிற்கு நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம். பிரித்தானிய மற்றும் பிரஞ்சு கொம்பனிகளே பெரியளவில் இலாபங்களைச் சுருட்டிக்கொண்டன. அப்போது பெரு பிரித்தானியாவிடம் பெருமளவு கடன்பட்டிருந்தது. ஸ்பெயினிடமிருந்து விடுதலைபெறும் போராட்டத்திற்காகப் பெரு இந்தக் கடனைப்பெற்றது. இதைத்திருப்பிக் கொடுக்கவே தனது விவசாயத்திற்கு நீண்டகாலம் பயன்படவல்ல இயற்கை உரத்தை ஏற்றுமதி செய்ய முன்வந்தது. நாற்பது வருடங்களாகத் தொடர்ந்த இந்த வியாபாரத்திற்கு பெருவில் தொழிலாளர் போதாமையால் ஆயிரக்கணக்கில் சீனாவிலிருந்து கூலியாளார்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். இந்த guano வணிகத்தினதும் அதன் சூழல் மற்றும் சமூகரீதியான விளைவுகளினதும் அரசியல் பொருளாதாரத்தை ஆராய்ந்த Fosterம் அவரது சகாக்களும் இதை ‘சூழலியல் ஏகாதிபத்தியம்’ (ecological imperialism) என விபரிக்கின்றனர். இன்றைய மாக்சிய கருத்தாடல்களில் ‘சூழலியல் ஏகாதிபத்தியம்’ ஒரு ஆய்வுப்பொருளாகவும் விவாதத்திற்குரிய விடயமாகவும் விளங்குகிறது.

இருபதாம் நூற்றாண்டில் செயற்கையான கனிமஉரவகைகள் (inorganic fertilizers) பெருமளவில் பயன்பாட்டிற்கு வந்தன. அத்துடன் அதிக விளைச்சலைத்தரும் பயிரினங்களும் உருவாக்கப்பட்டன. இது தீவிரமான இரசாயன விவசாய உற்பத்தியின் உலகமயமாக்கலுக்கு உதவியது. இந்த விவசாயவிருத்தியின் சூழல் விளைவுகள் மற்றும் அவற்றின் சமூகரீதியான தாக்கங்கள் பற்றிப் பெருந்தொகையான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இவை மற்றும் ஆலைத்தொழில்மயமாக்கலின் சூழல் தாக்கங்கள் பற்றிய பொது அறிவும் சமூக உணர்வும் இப்போது பரவிவருவதைக் காண்கிறோம்.

தனியாரின் இலாபநோக்கினால் உந்தப்படும் உற்பத்தி அமைப்பில் தனியுடைமையாளர் தனியார்செலவினங்களை முடிந்தவரை தொழிலாளர், சூழல் மற்றும் நுகர்வாளர் மீது வெளிவாரிப்படுத்துகிறார்கள். நுகர்வாளர்களும் கழிவுப்பொருட்களைச் சுலபமாக சூழலில் வெளிவாரிப்படுத்தும் போக்கினைக் காணலாம். நகர்ப்புறங்களில் கழிவுப்பொருட்களின் முகாமை பெரும் பிரச்சனையாகியுள்ளது. இயற்கை வளங்களை அகழ்ந்தெடுப்பதிலிருந்து, உற்பத்தி, போக்குவரவு மற்றும் நுகர்வுவரை வெளியேறும் கழிவுகளை உள்வாங்கி உறிஞ்சி அவற்றை மீள்சுழற்சிசெய்யும் சூழலின் இயற்கையான சக்திக்கும் அப்பால் அதன்மீது கழிவுகள் சுமத்தப்படுகின்றன. இந்தப்போக்கு உலகமயமாக்கப்படுகிறது. இதன் விளைவாக வேதியியல்ரீதியான பிளவும் உலகமயமாக்கப்படுகிறது. இதுவே இன்றைய யதார்த்தம். ஆனால் இந்தச் சிக்கலையும் இலாபம் தேடும் ஒரு சந்தர்ப்பமாக மூலதனம் மாற்றியுள்ளது. இன்று சூழல் சீரழிவைச் சீர்படுத்தும் அல்லது குறைக்கும் தொழில்நுட்ப உற்பத்தி ஒரு பாரிய முதலீட்டுத்துறையாகிவிட்டது. தான் உருவாக்கும் பிரச்சனையைக் கூட இலாபம்தரும் ஒரு சந்தர்ப்பமாக்கும் ஆற்றல் மூலதனத்திற்கு உண்டு. அது மூலதனத்தின் விசேடபண்பு. ஆனால் உண்மையில் மூலதனம் செய்வது பிரச்சனயின் தீர்வல்ல அதைத் தற்காலிகமாக வேறொரு பக்கத்திற்கு அகற்றி விடுவதே. தனியுடைமை அடிப்படையிலான மூலதனக் குவியலின் தேவைகளுக்கும் இந்தப்பூமியில் வாழும் மனித மற்றும் மற்றைய உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கு இன்றி அமையாத பொதுச் சொத்துக்களை (commons) உள்ளடக்கும் சூழலின் பாதுகாப்பின் தேவைகளுக்குமிடையிலான முரண்பாடு உச்சமடைந்த வண்ணமிருக்கிறது. மூலதனம் தனக்கே உரிய வகையில் இந்த முரண்பாட்டைக் கையாள்கிறது. இவை பற்றி மேலும் அடுத்த பாகத்தில்.

தொடரும்

[1] இந்தக் கட்டுரை 2015ல் நான் ஆங்கிலத்தில் எழுதிய பின்வரும் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. N. Shanmugaratnam, Marxism and Ecology – Notes on some theoretical developments, http://ssalanka.org/marxism-and-ecology-notes-on-some-theoretical-developments/  published November 2015.

[2] Karl Marx (1857-1858), Grundrisse, English translation by Martin Nicolaus, 1974:334. இந்த நூல் 1857-58ல் மாக்ஸ் ஜேர்மன் மொழியில் எழுதிய ஏழு குறிப்புப் புத்தகங்களை உள்ளடக்குகிறது. இந்தக்குறிப்புக்கள் மாக்சின் ‘மூலதனம்’ நூலுக்கான ஆய்வுகளின் ஒரு பகுதியாகும். நீண்ட காலமாகத் தவறிப் போயிருந்த இந்தக் குறிப்புக்கள் 1953ம் ஆண்டிலேயே அவை மூலமுதலாக எழுதப்பட்ட ஜெர்மன் மொழியில் முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டன. ஆங்கில மொழிபெயர்ப்பு 1974ல் வெளிவந்தது. இந்தக் குறிபுக்களைப் பிரசுரிக்கும் நோக்கில் மாக்ஸ் எழுதவில்லை. பொருளியல் மற்றும் பல விடயங்கள் பற்றிய தன் சுயதெளிவாக்கலுக்காகவே இவைபோன்ற வேறு (உதாரணமாக Theories of surplus value) குறிப்புக்களையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரின் சிந்தனைப் போக்கினை ஆழ அறிந்துகொள்ள இந்தக் குறிப்புக்கள் மிகவும் பயன் தருவன.

[3] இதுபற்றி மேலும் அறிய: Foster (2000); Foster et al (2010)

[4] Karl Marx, Capital (Vol. I) English Edition, Penguin Classics, 1999

கடன் ஏகாதிபத்தியம் – கடன் வாங்கி ஆக்கிரமிப்பு யுத்தங்கள் புரியும் அமெரிக்க வல்லரசு

 

 

சமுத்திரன்

May2017

தனது அணியைச் சேர்ந்த நாடுகளின் செலவில் தனது மேலாதிக்க நலன்களுக்காகச்  சில குறிப்பிட்ட நாடுகள் மீது ஆக்கிரமிப்பு யுத்தங்களைத் தொடுக்கும் ஒரு உபாயத்தைத் திறனுடன் கையாண்டு வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்தத் திட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்காளிகளாயிருக்கும் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுடன், ஜப்பான், தென் கொரியா, தைவான், அவுஸ்திரேலியா மற்றும் குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகளும் அடங்கும். அமெரிக்காவிற்கும் இந்த நாடுகளுக்குமிடையிலான உறவுகளின் ஒரு பரிமாணம் அந்த நாட்டின் அரசாங்கம் இவற்றிடமிருந்து தொடர்ச்சியாகப் பெறும் கடன்களாகும். அமெரிக்க அரசின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடனுக்கும் அதன் இராணுவ மற்றும் போர்ச் செலவுகளுக்கும் நெருங்கிய உறவு இருப்பதை நீண்டகாலப் புள்ளிவிபர ஆதாரங்களுடன் ஆய்வுகள் காட்டியுள்ளன. அமெரிக்கா உலகரீதியில் பாரிய போர் இயந்திரத்தைக் கொண்டுள்ளது. எழுபது நாடுகளில் 800 மேற்பட்ட இராணுவத் தளங்களை வைத்திருக்கிறது. இவற்றின் பராமரிப்பும் அபிவிருத்தியும், ஆக்கிரமிப்பு யுத்தங்களும் பெருஞ் செலவுகளுக்கான காரணங்கள். நீண்ட காலமாக அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை (trade deficit) ஒரு பிரச்சனை. வெளிநாட்டுக் கடனை அமெரிக்க அரசாங்கம் தனது திறைசேரிப் பிணைமுறிப் பத்திரங்களை (US Treasury Bonds ஐ) அமெரிக்க டொலர்களைப் பெருமளவில் வைத்திருக்கும் நாடுகளுக்கு விற்பதன் மூலம் பெறுகிறது. தனது நாட்டுச் செலாவணியிலேயே சுலபமாகக் கடன் பெறுவதும் அதைத் திருப்பிக் கொடுப்பது பற்றி அலட்டிக் கொள்ளாதிருப்பதும் அமெரிக்காவின் வரப்பிரசாதம் போலும். அமெரிக்க டொலரின் உலக நாணய அந்தஸ்து அமெரிக்காவிற்கு மற்ற நாடுகளின் மத்திய வங்கிகள்மீது செல்வாக்குச் செலுத்தும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. சமீப காலங்களில், உலக அரங்கில் அமெரிக்க வல்லரசுடன் போட்டி போடும் எழுந்துவரும் வல்லரசான சீனாவும் பெருமளவில் அமெரிக்க பிணைமுறிப் பத்திரங்களை வாங்கிவருகிறது. ஆனால் சீன-அமெரிக்க உறவு வேறுவகையானது. இது பற்றிப் பின்னர்.

பொருளாதார பலம் மிக்க கடன் கொடுக்கும் நாடாக இருந்து பின்னர் கடன் வாங்கும் நாடாக மாறியபோதும் பெற்ற கடனைத் திருப்பிக் கொடுப்பதில் அக்கறையின்றித் தொடர்ந்தும் கடன் வாங்கித் தனது ஏகாதிபத்திய அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அமெரிக்க அரசின் போக்கினைக் ‘கடன் ஏகாதிபத்தியம்’ (debt imperialism) என அழைக்கிறார் அந்த நாட்டின் பொருளியலாளர் மைக்கேல் ஹட்சன் (Michael Hudson). அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ‘மாஏகாதிபத்தியம்’ (super imperialism) எனப் பெயர் சூட்டியுள்ளார்.[i] இரண்டாம் உலகப் போருக்குப்பின் இந்தோசீனத்தில், மத்திய கிழக்கில் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் நடத்திய அல்லது நடத்தும் யுத்தங்கள் எல்லாமே அமெரிக்க அரசைக் கடனாளி அரசாக்கியுள்ளன. ஆயினும் நாட்டின் உயர் செல்வந்த அந்தஸ்து, உலகரீதியான இராணுவ அதிகாரம், பல நாடுகளுடன் செய்துள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள், பல்பக்க நிறுவனங்கள் (உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக ஸ்தாபனம், ஐ. நா. சபை) மீதான ஆதிக்கம், மற்றும் அமெரிக்க டொலரே மிகச் செல்வாக்குமிக்க உலக நாணயம் எனும் அந்தஸ்து ஆகியவற்றால் தனது வல்லரசு ஸ்தானத்தைத் தொடர்ந்தும் பல பிரயத்தனங்களுக் கூடாகத் தக்கவைத்துக் கொள்கிறது அமெரிக்கா.

அமெரிக்கா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படுதோல்வியைத் தழுவிக்கொண்ட வியட்நாம் யுத்தம் பற்றிப் பலருக்கு – குறிப்பாக எனது சந்ததியினருக்கு – நினைவிருக்கலாம். 1955 பிற்பகுதியிலிருந்து 1975 நாலாம் மாதத்தின் இறுதிவரை தொடர்ந்த இந்தப் போர் வியட்நாமை மட்டுமன்றி அதன் அண்டை நாடுகளான லாஓஸ் மற்றும் கம்போடியாவையும் உள்ளடக்கியது. இந்த நீண்ட இந்தோசீனப் போரின் செலவினால் அமெரிக்க மாவல்லரசு கடனாளியாகியது. அமெரிக்க பொருளாதாரத்தின் சென்மதி நிலுவையில் (balance of paymentல்) பெரிய விழுக்காடு தொடர்ச்சியான ஒரு பிரச்சனையாயிற்று.[ii] அந்த நாட்டின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்கும் நோக்கில் 1971 எட்டாம் மாதம் 15ம் திகதி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் உலகை அதிர்ச்சியிலாழ்த்தும் ஒரு முடிவினை அறிவித்தார். வெளிநாடுகளில் வைப்பிலிருக்கும் அமெரிக்க டொலர்களைத் இனிமேல் தங்கமாகப் பரிமாற்றம் செய்யமுடியாது என்பதுதான் அந்த அறிவிப்பு. அந்த எதிர்பாராத முடிவு 1930 களிலிருந்து சர்வதேச அங்கீகாரத்துடன் நடைமுறையிலிருந்து வந்த அமெரிக்க டொலருக்கும் தங்கத் தராதரத்திற்கும் (Gold Standard) இருந்த இணைப்பைத் துண்டித்தது. இதற்குப் பின்னர் வெளிநாட்டு மத்திய வங்கிகள் தமது டொலர்களை அமெரிக்க திறைசேரிக் கடன் பத்திரங்களுடனேயே பரிமாற்றம் செய்யும் நிலை ஏற்பட்டது. சென்மதி நிலுவை விழுக்காடுக்கூடாக இழந்த டொலர்களை அமெரிக்கா மீட்க இது உதவுகிறது. மறுபுறம் ஏற்றுமதியின் வளர்ச்சியால் கிடைக்கும் வர்த்தக உபரியை மற்றைய நாடுகள் (அவற்றின் மத்திய வங்கிகள்) அமெரிக்கத் திறைசேரிப் பிணைமுறிப் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இது அமெரிக்க அரசுக்கும் மற்றய அரசுகளுக்குமிடையிலான நிதிரீதியான பரிவர்த்தனையாகும். மைக்கேல் ஹட்சனின் கருத்தில் இந்த உறவு அமெரிக்க அரசாங்கம் மற்ற அரசாங்கங்களைச் சுரண்டும் உறவாகும். அவர் இந்த ஏகாதிபத்தியத்தை தனியார் கூட்டுத்தாபனங்களுக்கூடான ஏகாதிபத்திய பொருளாதார உறவிலிருந்து வேறுபடுத்துகிறார். இன்றைய ஏகாதிபத்தியம் பற்றி வேறு விளக்கங்களுமுள்ளன.[iii]

அமெரிக்காவிற்குப் பெருமளவில் கடன் வழங்கிய நாடுகளில் ஜப்பானும் தென் கொரியாவும் அடங்கும். இரண்டாம் உலகப் போருக்குப்பின், பனிப்போர் (அல்லது நிழற்போர்) காலகட்டத்தில், இவ்விரு நாட்டு ஆட்சியாளர்களும் அமெரிக்காவின் அரசியல்-இராணுவரீதியான ஆதிக்கத்தை ஏற்று அந்த மாவல்லரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. ஜப்பான் போரில் தோல்வியடைந்து அமெரிக்காவிடம் சரணடைந்து அந்த நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தனது கொலொனிகளாயிருந்த கொரியா, மற்றும் தைவான், மஞ்சு போன்ற சீனாவின் பகுதிகளை இழந்தது. அத்துடன் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் வரலாறு முடிவுக்கு வந்தது.  உலகப் போரின் முடிவுக்குப்பின் இடம்பெற்ற கொரியப் போர் அந்த நாட்டின் பிரிவினையில் முடிந்தது. வட கொரியா ´சோஷலிச´ முகாமிலும் தென் கொரியா அமெரிக்க முகாமிலும் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக ஜப்பானிலும் கொரியாவிலும் பல பெரிய அமெரிக்க இராணுவத் தளங்கள் இன்றும் உள்ளன. அமெரிக்காவைத் தமது காவலனாக ஏற்று துரித முதலாளித்துவப் பொருளாதார விருத்திக்கூடாக செல்வந்த நாடுகளாகிவிட்ட இவ்விரு நாடுகளும் அந்தநாட்டுக்கு தாம் கொடுத்த கடனைத் தமது இராணுவரீதியான பாதுகாப்பினை மேலும் உறுதி செய்யும் ஒரு உபாயமாகக் கருதக்கூடும். இது உண்மையில் கடனா அல்லது அமெரிக்க வல்லரசு பெற்றுக் கொள்ளும் பாதுகாப்புப் பணமா? மறுபுறம் பொதுமக்களின் எதிர்ப்புக்கும் மத்தியில் அமெரிக்க இராணுவத் தளங்களைத் தொடர்ந்தும் இருக்க அனுமதிப்பது இந்த அரசாங்கங்களுக்கு அமெரிக்காவுடன் பேரம்பேசும் பலத்தைக் கொடுக்கிறது. அத்துடன் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் இவை விரும்பமாட்டா. ஏனெனில் அவற்றின் உயர் பெறுமதி ஏற்றுமதிகளின் ஒரு முக்கிய சந்தை அமெரிக்காவாகும். இந்த ஏற்றுமதிகளுக்கூடாக இவற்றின் உபரி டொலர்களும் வளர்ந்துள்ளன. இங்கு ஜப்பான், தென்கொரியா பற்றிக்கூறியது தாய்வானுக்கும் பொருந்தும். சீனப்புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து சியாங்கை ஷேக்கும் அவரது கோமின்டாங்க் கட்சியினரும் தைவான் தீவுக்குத் தப்பியோடி அங்கே அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி அமைத்தனர். ஆகவே ஜப்பான், தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய மூன்றும் அமெரிக்காவின் கொம்யூனிச எதிர்ப்புக் கூட்டின் கிழக்காசிய அரண்களாயின. நிழற்போர் (பனிப்போர்) முடிந்த பின்னரும் இந்த நாடுகள் பாதுகாப்பெனும் பெயரில் அமெரிக்காவிலேயே தங்கியுள்ளன. ஒரு வல்லரசாகச் சீனா துரிதமாக எழுச்சிபெறுவது இந்த தங்கிநிற்பினை மேலும் வலுவூட்டியுள்ளது போல் படுகிறது.

இன்று கிழக்காசியாவில் இரு கொரியாக்களுக்கு மிடையைலான முரண்பாட்டையும் அதில் அமெரிக்காவின் பங்கினையும் புரிந்து கொள்ள இந்தப் பின்னணியைப் புரிந்து கொள்ளல் அவசியமாகும். வடகொரிய அரசமைப்பும் அதன் தலைமையும் பிரச்சனைக்குரியவை. அந்த அமைப்பு சோஷலிச அமைப்பல்ல. ஆயினும் அந்தப் பிராந்தியத்தின் சிக்கலுக்கு ஒரு வரலாறுண்டு. இரு கொரியாக்களும் அமைதியான வழியில் தமது பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாதிருப்பதற்கு இந்த வரலாறும் அமெரிக்காவின் ஆதிக்கப்போக்கிலான தலையீடும் பெரும் தடைகளாயுள்ளன. இன்றைய அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒரு புதிய போர் தேவைப் படலாம் ஆனால் அமெரிக்காவின் துணைநாடுகள் அதற்குத் தயாராயில்லை. அவை அனுபவத்திற்கூடாகச் சில கசப்பான பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளன போல் படுகிறது.

அமெரிக்க அரசு கடனுக்கூடாகப் பெறும் டொலர்கள் அதன் செலவுக்கான பற்றாக்குறையை நிரப்ப உதவும் அதேவேளை அதன் பாதுகாப்பு, மற்றும் நேரடி ஆக்கிரமிப்புத் தொடர்பான செலவுகள் அந்த நாட்டின் தனியார் கூட்டுத்தாபனங்களுக்குப் பெரும் இலாபம் தரும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கின்றன. அத்துடன் அமெரிக்க அரசு தனது பிராந்திய அரசியல் நலன்களுக்கேற்ப வளர்முக நாடுகளுக்குக் கடன் மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குகிறது.

அமெரிக்க டொலரே உலக நாணயமாக அரசோச்சுகிறது. பின்னர் வந்த யூரோ (Euro) வால் இதுவரை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு முன்னேற முடியவில்லை. ஆசியாவிலிருந்தும் இன்னும் டொலருக்கு ஒரு மாற்று நாணயம் சர்வதேசரீதியில் எழவில்லை. ஆனால் அமெரிக்காவின் உலகரீதியான இராணுவ பலமும் அதிகாரமும் வீழ்ச்சியடையும் போது இந்த நிலை மாறும். அப்போது அந்த நாடு பெற்ற கடன்களை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறது எனும் கேள்வியும் எழும். 

கடன் பொறிகளில் சிக்கித்தவிக்கும் நாடுகளும் அமெரிக்காவும்

இன்றைய உலகில் செல்வந்த நாடுகள் சுலபமாகக் கடன் பெறுகின்றன. செல்வந்தருக்குக் கடன் கொடுக்க வங்கிகள் போட்டி போடுவது போல் செல்வந்த நாடுகளுக்குக் கடன் வழங்க நாடுகள், வங்கிகள், செல்வந்தர்களான தனிமனிதர்கள் தயங்குவதில்லை. கிரேக்கமும் அமெரிக்காவும் கடனாளி நாடுகள் ஆனால் முன்னையது பொருளாதார வீழ்ச்சியில், கடன் பொறிக்குள் அவஸ்தைப் படுகிறது, மேலும் கடன் பெறும் ஆற்றலற்ற நாடாகக் கணிக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனாலும், சர்வதேச நாணய நிதியத்தாலும் தொடர்ந்து மிரட்டப்படுகிறது. அமெரிக்கா பாரிய பொருளாதாரச் சிக்கலால் பாதிக்கப்பட்டதாயினும் அதற்கு வெளிநாட்டுக் கடன் பெறுவதில் பிரச்சனையில்லை.

தான் பெற்ற கடன்களைத் திருப்பிக் கட்டும் அழுத்தங்களின்றி இருக்கும் அமெரிக்கா சர்வதேசக் கடன் பளுவில் அகப்பட்டுள்ள வளர்முக நாடுகள் தமது கடன்களைத் திருப்பிக் கொடுக்கவேண்டுமெனப் பலவழிகளால் நிர்ப்பந்திகிறது. இது அமெரிக்காவின் வழமையான இரட்டை நியமம். விசேடமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற நிறுவனங்களுக்கூடாக இத்தகைய அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது. இந்த நிறுவனங்கள், விசேடமாக  IMF, கடன் பொறிக்குள் மாட்டிக் கொண்ட வளர்முக நாடுகளுக்கு மிகவும் இறுக்கமான நிபந்தனைகளுடன் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் கொள்கையைக் கொண்டுள்ளன. இந்த நிபந்தனைகள் பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டிருப்பினும் பல பாதகமான சமூக விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இது பல நாடுகளின் அனுபவம்.

சமீப காலங்களில் இலங்கை உட்படப் பல வளர்முக நாடுகள் சீனாவிடம் பெருமளவில் கடன் பெறுகின்றன. இதிலும் பல பிரச்சனைகள். மறுபுறம் சீனா தனது பொருளாதாரத்தில் ஏற்றுமதிக்கூடாகக் குவியும் உபரி டொலர்களை மத்திய வங்கிக்கூடாகத் தேசிய நாணயத்தைப் (renminbi ஐப்) பயன்படுத்திக் கொள்வனவு செய்து அமெரிக்க பிணைமுறிப் பத்திரங்களில் பெரிய அளவில் முதலீடு செய்கிறது. இந்த வழிக்கூடாக renminbi ன் பெறுமதி மிதமிஞ்சி ஏறாதவாறு பார்த்துக் கொள்கிறது. அப்படி ஏறவிடுவது சீனாவின் ஏற்றுமதிப் பண்டங்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும். இது சர்வதேச ஏற்றுமதிச் சந்தைப் போட்டியில் சாதகமானதல்ல. சீனாவின் உயர் பெறுமதி ஏற்றுமதிகளின் பிரதான சந்தைகளில் அமெரிக்கா முக்கியமான இடத்தை வகிக்கிறது. எழுந்து வரும் வல்லரசுகளில் ஒன்றான சீனா வளர்முக நாடுகளுக்குக் கடன் வழங்கும் கொள்கையின் அரசியல் வேறாக ஆராயப்படவேண்டிய விடயம்.

[i] இதுபற்றி ஹட்சன் பல நூல்களையும் கட்டுரைகளையும் 1972 லிருந்து இன்றுவரை எழுதிவந்துள்ளார். இந்தக் கட்டுரைக்குப் பின்வரும் நூல் உதவியுள்ளது. Hudson, Michael, 2003, Super Imperialism – The origins and fundamentals of US world dominance, Pluto Press. இந்த நூல் 1972 அவர் எழுதிய நூலின் புதிப்பிக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட பதிப்பு ஆகும். ஹட்சனின் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்த வேறு ஆய்வுகளில் பின்வரும் நூல் அமெரிக்காவின் கடனுக்கும் அதன் சர்வதேச ஆதிக்கத்திற்குமிடையிலான உறவுகள் பற்றிக் கூறுகிறது. David Graeber, 2014, Debt The First 5000 Years, Melville House Publishing. இந்த நூல் கடனின் வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களை மானிடவியல் நோக்கில் அணுகுகிறது.

[ii] இந்தப் பிரச்சனை இரண்டாம் உலகப் போருக்குபின் வந்த கொரியப்போரின் போதே இருந்தது என ஹட்சனின் ஆய்வு காட்டுகிறது (Hudson, 2003)

[iii] உதாரணமாக – David Harveyன் பின்வரும் நூல்கள், 2005, The New Imperialism, Oxford University Press. 2005, A Brief History of Neoliberalism, Oxford University Press. 2010, The Enigma of Capital and the Crises of Capitalism, Profile Books. 2014, Seventeen Contradictions and the End of Capitalism, Oxford University Press.

உள்நாட்டு யுத்தம், சமாதானம், உலகமயமாக்கல்

சமுத்திரன்

(உயிர்மெய் சித்திரை- ஆனி 2006)

இரண்டாம் உலகயுத்தத்திற்குப் பின்னர் அரசுகளுக்கிடையிலான யுத்தங்களை விட உள்நாட்டு யுத்தங்களே அதிகரித்துள்ளன. இந்த உள்நாட்டு யுத்தங்கள் ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நிழல்யுத்தத்தின்( Cold war) முடிவுக்குப்பின் அதாவது சோவியத்முகாமின் மறைவுக்குப்பின் கிழக்கு ஐரோப்பாவிலும் இடம்பெற்றுவந்துள்ளன அல்லது இடம்பெறுகின்றன. பல ஆய்வுகளின்படி அரசுகளுக்கிடையே ஏற்படும் யுத்தங்களைவிட உள்நாட்டு யுத்தங்கள் பொதுவாக நீண்டகாலம் தொடர்வனவாகவும் சுமூகமான தீர்வைப் பெறுவதில் மிகவும் கடினமானவையாகவும் இருக்கின்றன. உள்நாட்டுயுத்தம் எனும்போது அது ஒருவித வெளிநாட்டுத் தொடர்புமற்ற தனியான நிகழ்வெனக் கொள்ள முடியாது. ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்திற்கும் சர்வதேச தொடர்புகளுண்டு. அதன் தொடர்ச்சிக்கும் சிக்கல்களுக்கும் தீர்வின் தடைகளுக்கும் வெளிவாரிச் சக்திகளின் பொறுப்புகளும் தாக்கங்களும் உண்டு.

உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளும் யுத்தங்களும்

சர்வதேசமயமாக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் யுத்தங்களை அரசியல் ரீதியில் தீர்த்து வைப்பதிலும், சமாதானத்தை உருவாக்குவதிலும் சமூக பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளை வகுப்பதிலும் பல்பக்க நிறுவனங்களும் முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்கியுள்ளன. இன்றைய உலகமயமாக்கல் கட்டத்தில் இந்தப் போக்கானது சமீபத்திய காலங்களில் மிகவும் பலம் பெற்றுள்ளது. ஆகவே ஒருபுறம் உள்நாட்டு முரண்பாடுகளும், யுத்தங்களும் சர்வதேசமயமாக்கப்படுகின்றன. மறுபுறம் அவற்றின் தீர்வுகளுக்கான வழிமுறைகளும் செயற்பாடுகளும் சர்வதேச மயமாகின்றன. இந்தக் கட்டுரையில் இந்தப் போக்குகள் பற்றிய சில பொதுப்படையான கருத்துக்களைக் குறிப்பிட்டு உரையாட விரும்புகிறேன்.

  • உள்நாட்டு யுத்தங்களும் ‘சர்வதேச சமூகமும்’

இன்றைய உலகில் மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயக நாடுகள் அமைதியின் உறைவிடமாகவும் அதே உலகின் மற்றைய பகுதி உள்நாட்டுக் கொந்தளிப்புக்கள் மிகுந்ததாகவும் இருப்பதாகச் சில வலதுசாரி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி Bush ன் தத்துவத்தின்படி ஜனநாயகங்களிடையே போர்கள் இடம்பெறுவதில்லை ஏனெனில் அவை நாகரீகமான வழிகளில் தமது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்கின்றன. வரலாறு பற்றி Bushன் அறியாமை உலகறிந்தது. ஆனால் ‘ஜனநாயகங்கள் போர் செய்வதில்லை’ என்ற சுலோகம் அறியாமையின்பால் வந்ததல்ல. அது இன்றைய உலகமயமாக்கலின் நடத்துனர்களின் மேலாட்சித்திட்டத்தின் கவர்ச்சிகரமான கொள்கைப் பிரகடனம் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் இன்றைய உலகில் அமைதியின் உறைவிடமெனப்படும் வளர்ச்சிபெற்ற முதலாளித்துவ நாடுகளின் முகாமின் வரலாறு பல தொடர்ச்சியான உள்நாட்டு யுத்தங்களுக்கூடாகவும், இரண்டு உலக யுத்தங்களுக்கூடாகவும் பிறந்தது. இன்றைய ‘அமைதி நாகரீகத்தின்’  வரலாறு வன்செயல்களும் யுத்தங்களும் மிகுந்தது. ஒருவகையில் பார்த்தால் இந்த வரலாறுதான் வேறு வடிவங்களில், போக்குகளில் தொடர்கிறது எனக் கூறலாம். அதுமட்டுமல்ல ‘ அமைதி நாடுகளுக்கும்‘ யுத்தங்கள் இடம்பெறும் மற்றைய பகுதிகளுக்குமிடையிலான உறவுகள் முக்கியமானவை.

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்திற்கும் அதற்கேயுரிய சர்வதேச தன்மைகள், தொடர்புகள் உண்டு. 1945-1989 காலகட்டத்தில் மூன்றாம் உலகநாடுகளின் விடுதலைப்போராட்டங்கள், புரட்சிகள் பகிரங்கமான சர்வதேச உறவுகளைக் கொண்டிருந்தன. ஒருபுறம் சோவியத்தயூனியன், புரட்சிக்குபின்னான சீனா, கியூபா போன்ற நாடுகள் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தன. மறுபுறம் அமெரிக்க உளவு ஸ்தாபனமாகிய CIA இந்தப் போராட்டங்களுக்கு எதிராக சர்வாதிகார பாசிச அரசுகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது. அதுமட்டுமல்ல சோவியத்யூனியன், கியூபா, சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக சீர்குலைவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. வியட்நாமில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு, நிக்கரகுவாவின் புரட்சிகர அரசுக்கெதிராக உருவாக்கி உதவிய எதிர்ப்புரட்சி இயங்கங்கள், சிலியில் ஜனநாயகரீதியில் ஆட்சிக்குவந்த இடதுசாரி அரசாங்கத்தைப் பாசிச ராணுவச் சதிக்கூடாக கவிழ்த்தது போன்ற அமெரிக்க ஏகாதிபத்தியச் செயற்பாடுகளை மறக்க முடியுமா ?

சரி, நிழற்போருக்குப் பின் நடப்பது என்ன? சோவியத்முகாமின் மறைவிற்குப் பின்  ‘யுத்தங்கள் வரலாறாகிவிட்டன நிரந்தர அமைதிக்கான காலம் தோன்றிவிட்டது’ போன்ற பிரச்சாரங்கள் வெளிவந்தன. ஆனால் உலக யதார்த்தங்களோ வேறாக இருந்தன. கடந்த இருபது வருடங்களாக செல்வந்தநாடுகள் பலவற்றின் ஆயுத உற்பத்தியும் ஏற்றுமதியும் முன்பை விட அதிகரித்துள்ளன. ஐநாவின் பாதுகாப்புச்சபையின் (Security Council) அங்கத்துவ நாடுகளான  USA , ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய மூன்றும் உலக ஆயுத ஏற்றுமதியின் 80 வீதத்திற்குப் பொறுப்பாயுள்ளன. USA உலக ஆயுத ஏற்றுமதியின் 50 வீதத்தைக் கொண்டுள்ளது. ரஷ்யா அதற்குப் போட்டியாகவுள்ளது. உலக ஆயுதவிற்பனையின் 60 வீதம் வளர்முக  (மூன்றாம் உலக) நாடுகளுக்குச் செல்கிறது. இது சட்டபூர்வமான வர்த்தகம். கறுப்புச்சந்தைக்கூடாக இடம்பெறும் ஆயுதக்கொள்வனவுகளும் பெருமளவில் வளர்முக நாடுகளுக்குத்தான் சென்றடைகின்றது.

சட்டபூர்வமாக வளர்முக நாடுகளுக்குச் செல்லும் ஆயுதங்களின் ஒருபகுதி பல வழிகளினூடாக வேறு நாடுகளுக்கும், ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இயக்கங்களுக்கும், பாதாள உலக குழுக்களுக்கும் விற்கப்படுகிறது. பல ஆயுத விற்பனைத் தரகர்கள் அரசாங்கங்களுக்கும், அவற்றை எதிர்த்துப் போராடும் இயக்கங்களுக்கும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய உதவுகிறார்கள். ஜனநாயகங்கள் போருக்குப் போவதில்லை என்றும் யுத்தம் தேவையற்றது என்றும் கூறும் நாடுகள் ஆயுத உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் ஈடுபட்டிருப்பது அவற்றின் இரட்டை நியமங்களைக் காட்டுகிறது. இதில் ஆச்சரியம் தரும் விடயமென்னவெனில் உலக சமாதானத்தூதுவராக, நடுவராக, அனுசரனையாளராகச் செயற்படும் நோர்வேயும் ஆயுதஉற்பத்தியில் ஈடுபட்டுள்ளதென்பதாகும். நோர்வேயின் ஆயுதஉற்பத்திச்சாலையின் அரைவாசிப் பங்குதாரராக நோர்வே அரசு விளங்குகிறது. இந்தத்துறையில் 5000 பேர் வரை வேலைவாய்ப்புப் பெற்றுள்ளார்கள். நோர்வேயின் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அதாவது தலா ஆயுத ஏற்றுமதியைப் பொறுத்தவரை நோர்வே உலகின் பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாகிறதென அறிக்கைகள் கூறுகின்றன. இது நோர்வேயின் தொழிற்கட்சிக்கோ அல்லது தேசிய தொழிலாளர் அமைப்பிற்கோ ஒரு பிரச்சனையாகப்படவில்லை. இத்தகைய இரட்டை நியமப்போக்கு நோர்வேயின் தனிச்சொத்தல்ல. தனது யாப்பு சமாதானயாப்பு அதன்படி ஆயுதம் விற்பது சட்டவிரோதமானது எனச் சொல்லிக் கொள்ளும் ஜப்பான் பிலிப்பைன்சுக்கும் வேறு சில நாடுகளுக்கும் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்துள்ளதென்பதற்கும் ஆதராங்களுண்டு. ஜப்பான் இரகசியமாகச் செய்வதை நோர்வே சட்டபூர்வமாகச் செய்கிறது. ஆனால் இரு நாடுகளும் சமாதானம் பற்றிப் பேசுவதைக் கேட்போருக்கு அவை ஆயுதவிற்பனையில் ஈடுபட்டிருப்பது நல்ல செய்தியாக இருக்க மாட்டாது. ஏனெனில் அவை விற்கும் ஆயுதங்கள் எப்படியோ யுத்த தேவைகளுக்கு உதவக்கூடும்.

ஆயுதம் சமாதானத்தை அடைய உதவமாட்டாது என்பது எனது விவாதமல்ல. ஆயுதப்போராட்டங்கள் எல்லாமே தவறானவை என்பதும் எனது நிலைப்பாடல்ல. நான் இங்கு விமர்சிப்பது யுத்தம் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது எனும் நாடுகளின் நடைமுறையைத்தான். இந்த வகையில் நோர்வேயின் நடைமுறை விசித்திரமானது.

இரட்டை நியமங்களாகத் தெரியும் இந்த சர்வதேசப்போக்கின் உண்மையான அரசியல் என்ன?

எனது அபிப்பிராயத்தில் சமாதானம் நாகரீகமானது, ஜனநாயகம் சார்ந்தது, யுத்தம் அநாகரீகமானது, ஜனநாயகத்திற்கு மாறானது எனும் பிரச்சாரம் ஒரு கருத்தியில் ரீதியான பொய்ப்பிரச்சாரம். இங்கு அடிப்படையான விடயம் என்னவெனில் பலாத்கார இயந்திரமும், கருவிகளும் தேசிய மட்டத்திலும் சர்வதேசமட்டத்திலும் தமக்குச் சார்பான, தமது அணியிலுள்ள அரசுகளின் தனியாதிக்கத்தில் இருக்க வேண்டும் என்பதே USA ன் தலைமையிலுள்ள உலக அதிகாரக் கூட்டணியின் நோக்கமும் திட்டமுமாகும். அத்தகைய அரசுகளைப் பலப்படுத்துவதே இந்தக் கூட்டணியின் கொள்கை நிலைப்பாடு. ஆயினும் இதற்குப் பல சவால்கள் கிளம்பியுள்ளன. உள்நாட்டு யுத்தங்களைப் இந்த நோக்கிலேயே உலக அதிகார சக்திகள் அணுகுகின்றன. இதனால்தான்  ‘பயங்கரவாதத்திற்கு எதிராக ‘ யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படிச் சொல்வது வல்லரசு முகமாமின் முழுத்திட்டமும் ராணுவ ரீதியானது என்பதல்ல. முதலாளித்துவ அரசின் பலாத்காரத் தனியாதிக்கம் உறுதி செய்யப்படுவது ஒரு முக்கிய தேவையாக இருக்கும் அதேவேளை அரசினதும் ஆள்பரப்பின் அரசியற் பொருளாதார அமைப்புகளினதும் நியாயப்பாட்டை உறுதிசெய்யும் மேலாட்சித்திட்டமும் (Hegemony) முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மேலாட்சி சிந்தனைரீதியானது, கலாச்சார ரீதியானது. தனியுடமை, தனிமனிதசுதந்திரம் போன்ற விழுமியங்களை உள்ளடக்கிய ஒரு மேலாட்சித்திட்டம் இது. இது சமாதானம் – ஜனநாயகம் அபிவிருத்தி என்னும் இணைப்பாக முன்வைக்கப்படுகிறது. இதன் தோற்றம் நியாயமானதாகவே படுகிறது. இந்த நோக்கங்களை யார் எதிர்ப்பார்கள்?  இவை உலக மயமாக்கலின் நல்ல விளைவுகளாகுமென்றால் நாம் அதை ஏன் எதிர்க்க வேண்டும்? இவை நியாயமான கேள்விகளே.

பிரச்சனை இந்த திட்டத்தின் அடிப்படைகளிலும் நடைமுறைகளிலும்தான்.

  • சந்தை ஜனநாயகத்தின் அடிப்படையில் சமாதானமும் அபிவிருத்தியும்

உள்நாட்டு யுத்தங்களின் தீர்வும் அதைத் தொடர்ந்து சமாதானத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதையும் சர்வதேசமயமாக்கும் திட்டம் கடந்த பத்தாண்டுகளின்போதே முழுமையான ஒரு பொதியாக உருவாக்கம் பெற்றது. தற்போது பாதுகாப்பும் அபிவிருத்தியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு செப். 11 க்குப்பின் (9/11) மிகவும் முன்னுரிமை பெற்று சர்வதேசக் கொள்கையாகிவிட்டது. USA ன் தலைமையிலான OECD நாடுகள் இந்தக் கொள்கையைப் பல வழிகளில் அமுல் நடத்துகின்றன. இதற்கு அவை ஐ. நா, உலகவங்கி போன்ற பல்பக்க நிறுவனங்களைப் பயன்படுத்துகின்றன. உலக வல்லரசு முகாமின் நலன்களுக்கமைய உருவாக்கப்பட்ட இந்தப் பொதியின்படி சமாதானம் என்பது  ‘பயங்கரவாதம்‘ முற்றாக அகற்றப்பட்டு சுய போட்டிச்சந்தைப் பொருளாதாரத்துக்கு வேண்டிய நிறுவனரீதியான சீர்திருத்தங்களின் அடிப்படையில் ‘ஜனநாயக’ ரீதியில் கட்டியெழுப்பப்பட வேண்டியதாகும். தூய சந்தைப் போட்டி உறவுகளுக்கு அடிப்படை முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த அணுகுமுறையை ‘சந்தை ஜனநாயகம்’ என ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர். நீண்ட காலமாக உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் சமாதானத்தையும், மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு இது உகந்த ஒரு கொள்கையா என்ற கேள்வி எழுவது இயற்கையே. வரலாற்று அனுபவங்களை நோக்கும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் புனர்நிர்மாணத்தில் அரசு முக்கிய பங்கினை வகித்திருப்பதைக் காணலாம். குறிப்பாக சமூக பொருளாதார சந்தர்ப்பங்கள் வருமானம் போன்றவற்றின் அசமத்துவங்கள் மோசமாகத வகையில் நிர்வகிக்கும் பொறுப்பினை அரசு கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இத்தகைய ஒரு சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்திப்போக்கு உள்நாட்டில் நிலைபெறும் அமைதியைக் கட்டியெழுப்ப உதவும் என்பது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கத்தைய நாடுகளினதும், ஜப்பானினதும் அனுபவம். சந்தை ஜனநாயக அணுகுமுறை இதற்கு உதவமாட்டாது என்பதை சமீபத்திய அனுபவங்கள் காட்டுகின்றன. இந்த வழியைப் பின்பற்றி சமாதானத்தையும், சமூகத்தையும் கட்டியெழுப்ப முற்பட்ட கம்போடியா, எல்சல்வடோர், நிக்கராகுவா, மொசாம்பிக், அங்கோலா, ருவாண்டா, பொஸ்னியா போன்ற நாடுகள் பல பிரச்சனைகளுக்குள்ளாகி இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த ஆய்வுகளின்படி இந்நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி மந்தமாகவும், ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகமாகவும் உள்ளன. அத்துடன் இவையும் வேறு காரணிகளும் ஜனநாயக மயமாக்கலைப் பாதித்துள்ளன. இந்தப் போக்குகள் தொடர்ந்தால் சமூக அமைதி பாழடையும் சமானதானத்துக்கும், மக்கள் நலன்களுக்கும் உதவக்கூடிய முதலாளித்துவ அமைப்பு, சந்தை ஜனநாயகமா சமூக ஜனநாயகமா என்ற கேள்வி எழுகிறது. இவை இரண்டும் முதலாளித்துவத்துக்குள்ளான மாற்று வழிகள். ஆயினும் இன்றைய உலகமயமாக்கலை வழிநடத்தும் வல்லரசு முகாம் சந்தை ஜனநாயகப் பொதியையே யுத்தத்தாலும் வேறு காரணிகளாலும் பலவீனமடைந்துள்ள நாடுகள் மீது திணிக்கிறது.

உயிர்மெய் சித்திரை- ஆனி 2006

 

 

எழுந்து வரும் நவ லிபரலிச அலைகள் – இவை நிலைகொள்ளுமா ?[1]

சமுத்திரன்

1994

1970 களின் பிற்பகுதியிலிருந்து லிபரலிசப் போக்குகள் பல வடிவங்களில் எழுந்த வண்ணமிருக்கின்றன. சோவியத்அமைப்பின் வீழ்ச்சி, சீனாவின் கொள்கை மாற்றங்கள் பூகோளத்தின் வடக்கிலும் தெற்கிலும் சோஷலிச இயக்கத்தின் தோல்விகள் பின்னடைவுகள் – இவை எல்லாமே லிபரல் அலைகளின் வளர்ச்சிப்போக்குகளுக்கு உதவியுள்ளன. ஆனால் லிபரல் போக்குகளுக்கு வரைவிலக்கணம் கொடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனெனில் லிபரலிசம் என்னும் போது அந்த வார்த்தையைப் பிரயோகிப்பவரையொத்து அதன் கருத்து வேறுபடலாம். உண்மையில் லிபரலிசத்திற்கு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு பொதுவான கோட்பாட்டு ரீதியான விளக்கத்தைக் கொடுப்பது இன்றைய நிலையில் முடியாது. ஒரு புறம் எழுச்சிபெற்றுவரும் புதியவலதுசாரிப்போக்கின் பிரதிநிதிகள் தம்மை லிபரல்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். மறுபுறம் தனிமனிதரினதும் சமூகத்தினதும் விடுதலைக்குப் புதிய மார்க்கங்களைத் தேடும் இயக்கத்தினரும் லிபரல் மரபில் வந்த அல்லது அதனுடன் தொடர்புள்ள பூர்ஷ்வா புரட்சிகளின் மரபுதந்த சுலோகங்களைத் தம் பதாதைகளில் பதிக்கின்றனர். வலதுசாரிகள் சுயபோட்டிச் சந்தைப் பொருளாதாரம் பற்றிய கனவுகளைப் பொருளாதாரக் கொள்கையாக்கி இன்றைய மேற்கு நாடுகளின், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின், பின்தங்கிய நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளின் தீர்வுகளாய் முன்வைக்கின்றன. புதிய இடதுசாரிகளோ பிரெஞ்சுப்புரட்சியின் அமெரிக்கப் புரட்சியின் உரிமைப்பிரகடனங்களின் மொழியிலே பேசுகின்றனர். சமத்துவத்திற்கும் விடுதலைக்கும் அடிநாதமான புதிய ஜனநாயகமொன்றின் தேடலுக்கு இப்புரட்சிகளிடமிருந்து ஆகர்ஷ்த்தைத் தேடும் இவர்கள் அரசுக்கெதிரான அரசியலுக்கு ஒரு புதிய உள்ளடக்கத்தைக் கொண்ட சுயாதீன சமூகத்திற்கான, சிவில் சமூகத்திற்கான (Civil Society) போராட்டத்திற்கு லிபரல் சிந்தனைமரபுசாரிகளிடமிருந்து கோட்பாடுகளைத் தேடுகின்றார்கள். அவற்றின் உதவியுடன் புதிய சோஷலிச சிந்தனைப்போக்கிற்கு வித்திட முயற்சிக்கின்றனர். தோல்வியடைந்த சோசலிசம் பற்றிய விமர்சனங்களும் புதிய விடுதலைப்பாதைகளின் தேடல்களும் நம்மை மனித வரலாற்றின் பொதுவான விடுதலைப் போக்குகள் பற்றிய தத்துவங்களுக்கும் பிரெஞ்சுப் புரட்சி போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கும் இழுத்துச் செல்கின்றன. இன்றைய போக்குகளை அவதானிப்போர் குழப்பமடையலாம். புதிய நம்பிக்கைகளைப் பெறலாம். விரக்தியடையலாம். ‘மேற்கத்திய‘ சிந்தனைகளுக்கெதிராக மாறி தேசியவாதிகளாக மாறலாம்.

ஆனால் இந்தப் போக்குகளிடமிருந்து ஒரு தெளிவான அடிப்படைப் பாடத்தை நாம் கற்கலாமென நம்புகிறேன். இடதுசாரிகள், சோசலிஷவாதிகள் மட்டுமல்ல சமீபகாலம் வரை மிகவும் தன்நம்பிக்கையுடன் இயங்கிய முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தோரும் நிலைகுலைந்துள்ளனர். இருசாராருமே வேறொரு நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்தவண்ணம் இருக்கின்றனர். சோஷலிசத்தின் வீழ்ச்சி வலதுசாரிகளுக்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் சாதகமான நிலைமைகளை உருவாக்கியிருக்கலாம். ஆனால் இது முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கொடுக்கவில்லை. உலக முதலாளித்துவத்தின் பொருளாதார மந்தமும் சிக்கல்களும் அதன் உள்ளார்ந்த இயக்கப்பாடுகளினால் ஏற்பட்டவை. சோஷசலிசத்தின் உலக ரீதியான வீழ்ச்சி முதலாளித்துவத்தின் சிக்கல்களுக்குத் தீர்வாகாது என்பதை இன்றைய வரலாற்றுக்கட்டம் உணர்த்துகின்றது. வலதுசாரிகள் சுயபோட்டித் சந்தைப் பொருளாதார லிபரலிசத்திடம் சரணடைய அவர்களின் பரந்த வலயத்தின் மற்றொரு வலதுசாரிக் கோஷ்டியினர் நிறவாதத்தையும் நவநாற்சிசத்தையும் (Neonazism) கிளறிவிடுகின்றனர். லிபரல்மரபின் அரசியல் உரிமை மனிதசமத்துவம் பற்றிய விழுமியங்களை இவர்கள் (நவநாற்சிஸ்ட்டுகள்) நிராகரிக்கின்றனர். இந்த விழுமியங்களையே புதிய சமூக இயக்கங்கள் உள்வாங்கியுள்ளன.

ஆகவே வரலாற்றின் விபத்தோ என்னவோ சோஷலிசத்தின் வீழ்ச்சியைக் கண்டு முதலாளித்துவம் கொட்டி வரும் வெற்றிப் பேரிகையின் ஒலியையும் விட முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான சிக்கல்களினால் வரும் பெரும்மூச்சுக்களும், ஓலங்களும் பயங்கரமாய் ஒலிக்கின்றன.

மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக வேலையில்லாத்திண்டாட்டம், நிறவாதம், சர்வதேச வர்த்தகமுரண்பாடுகள், பொருளாதாரத் தேசியவாதம் இப்படியே பல தெட்டத்தெளிவாய்த் தெரியும் போது அமெரிக்க அரசியல் விஞ்ஞானியான Francis Fukuyama லிபரல் ஜனநாயகமே வரலாற்றின் இறுதிக்கட்டமென அறிவித்துள்ளார். Fukuyama வின் தத்துவார்த்தப் பார்வையில் மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மாற்றி எழுதப்படுகிறது. Fukuyama சொல்கிறார்; ‘கம்யூனிசமல்ல லிபரல் ஜனநாயக முதலாளித்துவமே மானிடத்தின் இறுதி நிலையம். இதுவே மார்க்ஸ் காண விளைந்த வர்க்கமற்ற சமூகம்.’ வாசகர் முகத்தைச் சுழிப்பதைக் காண்கிறேன். என்ன Fukuyama வும் மார்க்சிஸ்டா? அவர் மார்க்சின் சிந்தனையை ‘திருத்தி’த் தன் திட்டத்திற்கேற்ப லிபரல் மொழியில் போடுகிறார். ஆகவே சொற்களுக்கும் அப்பால் சென்று உட்கருத்தைத் தேடுதல் இன்றைய தேவை. புதிய கோட்பாடுகள் தேவை. ஆனால் பழைய சொற்களே உதவிக்கு வருகின்றன. வெறும் சொற்களல்ல விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் எனும் போது வரலாற்றை மாற்ற முனைந்த போராட்டங்களல்லவா முக்கியத்துவம் பெறுகின்றன. அடிப்படைப் பிரச்சனை என்னவெனில் பூர்ஷ்வா ஜனநாயகப்புரட்சியின் இலட்சியங்களை இதுவரை பூரணமாக எந்தச் சமூகமும் அடையவில்லை. இது பிரஞ்சுப்புரட்சியின் அல்லது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பிரச்சனை என நாம் சொல்லி விலகிக்கொள்வதில் நியாயமில்லை. ஐரோப்பிய மையவாதிகள் எப்படி இத்தகைய சர்வலோக ரீதியாயான விழுமியங்களைத் தேசியமயப்படுத்த முயல்கின்றார்களோ அதேபோல் நம்மில் பலர் (தெற்கத்திய நாட்டவர்கள் ) அவ்விழுமியங்களை விதேசமயப்படுத்துவதன் மூலம் நமது நாகரீகப் பின்னடைவுகளை தேக்கத்தன்மைகளை நியாயப்படுத்த முயல்கின்றார்கள். இரண்டையும் நிராகரித்தல் அவசியம்.

சுயபோட்டிச் சந்தை லிபரல்வாதிகளுக்கு ஏற்கனவே வரலாறு பலம்வாய்ந்த பாடத்தைக் கற்பித்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் மூலதனத்திற்கெதிரான வர்க்கப்போராட்டங்கள் சுயபோட்டிச் சந்தையைக் கட்டுப்படுத்தும் போராட்டங்களாக, சமூகநலன்களைப் பேணும் போராட்டங்களாக அமைந்தன. இதன்விளைவுகளால் பிறந்த வர்க்க சமரசமே முதலாளித்துவ சமூகநல அமைப்பெனும் சமூகஉடன்படிக்கை (Social Contract) . இன்று மேற்கின் புதிய வலதுசாரி சக்திகள் இந்த சமூக உடன்படிக்கையை முற்றாக அழிக்க முற்பட்டுள்ளன. அதில் கணிசமானளவு வெற்றியும் கண்டுள்ளன. இதற்கெதிரான போராட்டங்கள் இன்னும் தெளிவான வேலைத்திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் பலவடிவங்களில் அவை தொடர்கின்றன.

தெற்கத்திய நாடுகளில் நவ லிபரலிசம் பூரண பொருளாதாரவாதமாக சர்வதேச மூலதனத்தின் சேவகனாகச் செயல்படுகின்றது. இதை எதிர்ப்பவர்கள் பலர் பின்னோக்கிய தேசியவாதத்தைப் பின்பற்ற முயற்சிக்கின்றார்கள். ஆனால் இது பயன்தராது. இங்கு முக்கியமானது ஜனநாயக உரிமைகளைச் சமூக நலன்களுடன் இணைக்கும் போராட்டமே. அதாவது ஜனநாயகப்புரட்சியின் மீட்சியே வெகுஜன இயக்கங்களின் நோக்கமாய் அமைய வேண்டும்.

வடக்கின் புதியதேடல்கள் சோஷசலித்திற்கான மாற்றுப்பாதைகளைத் திறக்கலாம். அதேபோல் தெற்கின் அடிப்படைத் தேவைகள் உரிமைகள் என்பவற்றிற்கான போராட்டங்கள் மக்கள் ஜனநாயகத்திற்குப் புதிய வழிகளைக் காட்டலாம்.

மெளனம் பெப்- மார்- ஏப் 94

[1] இந்தக் கட்டுரை ‘மௌனம்’ சஞ்சிகையில் 1994ல் பிரசுரிக்கப்பட்டது

நவதாராள உலகமயமாக்கலும் மூலதனத்தின் தொடர்ச்சியான நெருக்கடிகளும் [1]

2009 ம் ஆண்டில் Michael Moore  ´Capitalism a Love Story´ (முதலாளித்துவம் ஒரு காதல் கதை ) எனும் பெயரில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். அவரது மற்றைய தயாரிப்புக்கள் போலவே இந்தப் படமும் அவருக்கே உரிய விமர்சனப்பார்வையுடன் கிண்டலும், நகைச்சுவையும், துன்பியலும் கலந்த ஒரு சிறந்த வெளியீடாக இருந்தது. சமகாலத்தில் (2006-2009 ) இடம் பெற்ற நிதிரீதியான நெருக்கடியின் விளைவுகளால் அமெரிக்க நடுத்தர, தொழிலாள வர்க்கங்களைச் சார்ந்த கோடிக்கணக்கானோர் தமது வீடுகளை இழந்து தொழிலிழந்து, அடிப்படை வாழ் வசதிகளையிழந்து படும் அவலங்களையும் முதலாளித்துவ வர்க்கத்தினதும் அமெரிக்க ஆட்சியாளர்களினதும் மக்கள் விரோத ஜனநாயக விரோத போக்கினையும் உண்மையான சம்பவங்களையும் வைத்து மிக நுட்பமாகப் படம் பிடித்துள்ளார்.

அமெரிக்க அரசியலையும், அரசாங்கத்தையும் பெரு மூலதன நிறுவனங்கள் எப்படிக் கட்டியாளுகின்றன என்பதையும் தோலுரித்துக் காட்டுகிறது இந்தப்படம். Moore தரும் முக்கியமான செய்திகளில் ஒன்று என்னவெனில் இறுதி ஆய்வில் முதலாளித்துவம் ஒரு ஜனநாயக விரோத அமைப்பு. மூலதனத்தின் நலன்கள் பாதிக்கப்படும் போது மக்களின் நலன்களும் உரிமைகளும் – குறிப்பாக உழைப்புச்சக்தியை விற்று ஊதியம் பெறும் வர்க்கத்தின் நலன்களும் ஜனநாயக உரிமைகளும் பலவழிகளில் நசுக்கப்படுவது அனுபவரீதியான உண்மை எனலாம். போராட்டங்களுக்கூடாக நவீன ஜனநாயகம் பரவுவதற்குக் களம் அமைக்க உதவும் முதலாளித்துவம் அதை ஒதுக்கி வைக்கும் சக்திகளையும் கொண்டுள்ளது. இதுவும் அந்த அமைப்பின் முரண்பாடுகளில் ஒன்று எனலாம். சர்வாதிகாரம், பாசிசம், அதிகாரவர்க்கவாதம் போன்றவையும் ஏகாதிபத்தியப் போர்களும் மூலதனத்தின் வரலாற்றுப் போக்கின் அம்சங்கள் என்பது பலரும் அறிந்ததே.

பொருளாதார வளர்ச்சியும் நெருக்கடிகளும் முதலாளித்துவத்தின் விருத்திப்போக்க்கின் தன்மை சார் வெளிப்பாடுகள் என்பதும் இவை மூலதனக் குவியலின் இயக்கப்பாட்டிற்குரிய சுழற்சிப் போக்கின் (Cyclical) விளைவுகள் என்பதும் 19 ம் நூற்றாண்டிலிருந்தே மாக்சின் ஆய்வுக்கூடாக நன்கு அறியப்பட்ட விடயமாகும். ஆயினும் சமீப தசாப்தங்களில் மூலதனத்தின் நெருக்கடிகள் முன்னெப்போதையும் விட அடிக்கடி ஏற்படுவது வழமை ஆகிவிட்டது. 1973 லிருந்து நூற்றுக்கணக்கான நிதி ரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன எனும் தகவலைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் David Harvey (2010) அதற்கு முன்னர் உதராணத்துக்கு இரண்டாம் உலக யுத்ததிற்குப் பின் 1945- 1973 காலகட்டத்தில் இத்தகைய நெருக்கடிகள் மிகவும் குறைவாகவே இருந்தன என்னும் தகவலையும் ஒப்பீட்டிற்காகத் தெரியத் தருகிறார், இன்றைய காலகட்டத்தில் மூலதனம் அனுபவிக்கும் தொடர் நெருக்கடிகளும் அவற்றினால் மக்கள் படும் அல்லல்களும் முதலாளித்துவத்தின் குறிப்பிட்ட உலகமயமாக்கலின் தன்மைகளையும் காட்டுகின்றன.

மூலதனத்தின் தொடர் நெருக்கடிகள் பற்றிய விமர்சன ரீதியான விளக்கங்களைச் சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். இந்த ஆய்வுகள் நவதாராளவாதத்தின் மேலாட்சி, நிதி மூலதனத்தின் அபரிமிதமான எழுச்சியும் நகர்ச்சியும் , அதற்கும் உற்பத்தி மூலதனத்திற்கும் இடையிலான தொடர்பறுபாடு, ஊகத்திற்கூடாக இலாபம் தேடும் சூதாட்டப்போக்கு, உழைப்பின் உற்பத்தித்திறனின் வளரச்சி தொடரும் அதேவேளை தொழிலாளர்களின் மெய் ஊதியம் (Real wage ) பல்லாண்டுகளாக ஸ்தம்பித்திருந்தமை போன்றவற்றிற்கு நியாயமான முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை இவற்றுடன் இணைந்த அரசியல் மற்றும் சூழல்சார் அம்சங்களையும் ஆராய்ந்துள்ளன.

நவதாராள வாதம்

இப்பொழுது மேலாட்சி செலுத்தும் நவதாராளவாதத்தின் ஆரம்ப நிகழ்ச்சி மிகவும் பலாத்காரமான ஜனநாயக ஒழிப்பு நடவடிக்கையாக இருந்தது. அதுதான் 1973 ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் சிலியில் பினொச்செ (Pinochet) தலைமையில் அமெரிக்கவின் CIA மற்றும் அந்நாட்டின் பெரும் மூலதன நிறுவனங்களின் உதவியுடன் இடம் பெற்ற இராணுவச் சதியாகும். இடதுசாரி அரசியல்வாதி சல்வடோர் அயண்டே ( Salvador Allende)1970 ல் ஜனாதிபதியாகத் தெரியப்பட்டு ஒரு இடதுசாரி அரசாங்கத்தை அமைத்தார். அவருடைய அரசியலும் பொருளாதாரக் கொள்கைகளும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்கும் உள்நாட்டு உயர்வர்க்கத்தினருக்கும் சாதகமாக அமையவில்லை. அத்துடன் அயண்டே கியூபாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். சிலியில் இராணுவச் சதி வெற்றி பெற்று பினொச்செயின் சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டதும் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் நவதாராளவாதிகளின் தூய போட்டிச் சந்தைப் பொருளாதாரக் கொள்கையின் அமுலாக்கல் ஆரம்பமாகியது. அதன்பின் சிலியில் நடைபெற்றது வரலாறு என்பதைப் பலர் அறிவர்.

சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெறும் அடுத்த நிகழ்ச்சி 1978 ல் ( Deng Xiaoping) டெங் சியாஒபிங்கின் தலைமையில் சீனாவில் இடம் பெறுகிறது, டெங்கும் அவரது கட்சிக் குழுவினரும் சீனாவுக்கே உரிய முறையில் அந்த நாட்டின் பொருளாதார தாராளமயமாக்கலை ஆரம்பித்தனர். சீன அரசின் முனைப்பான பங்குடன் சீனாவின் பொருளாதாரம் துரிதமாக முதலாளித்துவப்பாதையில் முன்னேறியது. ஆனால் சீனா நவதாராளவாதத்தின் சிற்பியோ அல்லது தலைமை சக்தியோ ஆகவில்லை. சீனாவின் கொள்கை சிக்காக்கோ பல்கலைக்கழகம் வகுத்த நவதாரளவாதமல்ல.

உலக ரீதியில் மேலாட்சி செலுத்தும் நவதாராளவாதம் பிரித்தானியாவில் பிரதமராக வெற்றி பெற்ற மார்கரட் தச்சரின் ( 1979) வருகையுடனும் அமெரிக்காவில் ஜனாதிபதியான றோனால்ட் றேகனின் (Ronald Reagan ) (1980 ) வருகையுடனுமே பலமிக்க கருத்தியல் திட்டமாக உருப்பெறுகிறது. இங்கு மேலாட்சி எனும் பதத்தை கிராம்சியின் ( Gramsci) Hegemony எனும் கோட்பாட்டின் அர்த்ததிலேயே நான் பயன்படுத்துகிறேன். இதன்படி மேலாட்சி என்பது கருத்தியல் ரீதியில் அறிவு ரீதியில் மற்றும் ஒழுக்கமுறை கலாச்சாரம் போன்றவற்றிற்கு ஊடாகப் பரந்த செல்வாக்கினைப் பெற்று அதிகாரத்தை நிலைநிறுத்தும் திட்டமாகும். இந்த திட்டத்தில் அதிகாரத்திற்கு உதவும் பலாத்கார இயந்திரம் பின்ணனியிலேயே நிறுத்தப்படுகிறது. செல்வந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளிலும் வளர்முக நாடுகளிலும் இந்த மேலாட்சித்திட்டம் பலவழிகளுக் கூடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தச்சர், றேகன் ஆகியோரின் பார்வையில் 1970 களிலிருந்து மேற்கத்திய பொருளாதாரங்களையும் உலகப் பொருளாதாரத்தையும் பாதித்து வரும் நெருக்கடிகளுக்கான மாற்று வழி அதுவரை இருந்து வரும் கட்டுப்பாடுகளிலிருந்து சந்தைப்பொறிமுறையை விடுவிப்பதிலேயே தங்கியுள்ளது. சமூகப்பாதுகாப்பு, பூரண வேலைவாய்ப்பு போன்ற கெய்னீசிய (Keynesian)க் கொள்கைகளை அகற்றி சந்தைப்புலத்திலே தனிமனிதர்கள் தமது நலன்களை அடையும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாகியது. சுருங்கச் சொல்வதாயின் பலமான தனியுரிமை உடைமைகள், சுய போட்டிச்சந்தை, சுதந்திர வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நிறுவன ரீதியான சட்டகத்தினுள் தனிநபரின் முயற்சி ஆளுகையும் செயற்திறனும் விடுவிக்கப்படுவதன் மூலமே மனித நன்னிலையை மிக நன்றாக முன்னேற்ற முடியும் என்பதே நவதாராளவாதத்தின் தாரக மந்திரம். ஆயினும் இந்த சூத்திர மயமாக்கப்பட்ட கோட்பாட்டின் கொள்கையாக்கலும் நடைமுறைகளும் இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் வேறுபடுகின்றன.எல்லா நாடுகளும் இந்தக் கொள்கையைப் பூரணமாக ஏற்றுக் கொண்டன எனக் சொல்ல முடியாது. ஆயினும் இதன் செல்வாக்கு உலக ரீதியானது எனலாம். பிராசில், சீனா இந்தியா போன்ற நாடுகள் தமக்கே உரிய வழிகளில் உலக மயமாக்கலில் பங்கு பற்றுகின்றன. ஆயினும் இவற்றின் தேசியப் பொருளாதாரங்கள் உலக ரீதியான நெருக்கடிகளிலிருந்து முற்றாக ஒதுங்கியிருக்க முடியாது. நவதாராளவாதத்தின் உலக ரீதியான மேலாட்சி பூரணமானதல்ல- அதன் ‘மிருதுவான அதிகாரம்’ (soft power) செல்லுபடியாகாத சந்தர்ப்பங்களில் வல்லரசுகளின் ‘ வலிய அதிகாரம்’ ( Hard power) பயன் படுத்தப்படலாம்.

எது எப்படியானாலும் நவதாராளவாத மயமாக்கல் நிதிமூலதனத்தின் அபரிமிதமான எழுச்சிக்கு வழிவகுத்தது என்பது முக்கியமான உண்மையாகும். 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நிதி மூலதனம் உற்பத்தி மூலத்தனத்தைக் கீழ்படுத்தும் போக்கு ஆரம்பமாகியது. இந்தப் போக்கு 20 ம் நூற்றாண்டில் துரிதமடைந்தது ஆயினும் இந்தப் போக்குகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நவதாரளவாதம் இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி நிதிமயமாக்கலுக்குப் பூரண சுதந்திரத்தை வழங்கியது.

செல்வந்த நாடுகளில் குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் மேற்கு ஐரோப்பாவில் நடைமுறைக்கு வந்த சமூக நலக் கொள்கைகள் மற்றும் சொத்து வருமானம் போன்றவற்றின் மீதான வரிகள் சில உற்பத்தித் துறைகளுக்கு பாதுகாப்புகள் போன்றவை மூலதனத்தின் குவியலையும் தனிமனித சுயமுயற்சியையும் பாதிக்கின்றன எனும் அடிப்படையில் அவை எல்லாவற்றையும் அகற்றி மூலதனத்தை அரச கட்டுப்பாடுகளிலிருந்து முற்றாக விடுவிக்கும் திட்டம் அமுலாக்கப்பட்டது. அதேவேளை இந்தக் கொள்கை தொழிலாளர்களின் தொழிற்சங்க செயற்பாடுகளை நசுக்கி அவர்களின் மெய் ஊதியத்தையும் வளரவிடாது செய்ய வழிவகுத்தது.றேகன் காலத்திலிருந்து அமெரிக்க தொழிலாளர்களின் மற்றும் நடுத்தர ஊதிய உழைப்பாளர்களின் மெய் ஊதியம் ஸ்தம்பித்த நிலையிலேயே இருந்தது. அதேவேளை அவர்களின் உற்பத்தித்திறன் வளர்ந்தது. இது சுரண்டல் வீதத்தை அதிகரித்து உபரிப் பெறுமதியைப் பெருக்க உதவியது. இதன் விளைவு சமூக அசமத்துவமும் பிரச்சனைகளும் வளர்ந்த து மட்டுமன்று காலப்போக்கில் மூலதனத்தின் விரிவாக்கப்பட்ட மீள் உற்பத்திக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. இது உலக ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் நடந்தது என்ன?

‘2009 ஆண்டின் மத்திய கோடைகாலக்காலத்தில் அமெரிக்காவின் (USA) மூலதனச்சாதனங்களின் மூன்றில் ஒருபகுதி பயன்படுத்தப்படாத நிலையிலிருந்த அதேவேளை (அந்த நாட்டின்) தொழிற்படையின் 17 வீத த்தினர் வேலையற்றோ அல்லது நிர்ப்பந்தத்தால் பகுதிநேர வேலையாட்களாகவோ ” ஊக்கங்கெடுக்கப்பட்ட ” வேலையாட்களாவோ இருந்தனர். இதை விட பகுத்தறிவற்ற நிலை எதுவாக இருக்க முடியும்’- David Harvey 2010 ( The Enigma of capital and the crises of capitalism)

ஒரு புறம் பயன்படுத்தப்படாத உற்பத்திச்சாலைகளும் உற்பத்திக் கருவிகளும் மறுபுறம் ஒரு வேலையற்றோர் கூட்டம். முதலாளித்துவத்தின் நீண்ட வரலாற்றில் இந்தக் காட்சி இடம் பெறுவது இதுதான் முதற்தடவையல்ல. இதுதான் கடைசித் தடவையுமல்ல. இந்தக் காட்சி மூலதனத்தின் நெருக்கடியின் தத்ரூபமான வெளிப்பாடு.

2006- 2009 காலத்தில் அமெரிக்காவில் தோன்றிய நெருக்கடி ஒரு தொற்றுநோய் போல் உலகமயமானது. 2006 க்குமுன் சர்வதேச நிதி மூலதனம் – குறிப்பாக கிழக்காசிய மற்றும் எண்ணெய்ச் செல்வந்த நாடுகள் மேற்கத்திய நாடுகளிலிருந்து – அமெரிக்காவிற்குள் இலாபம் தேடி நுழைந்தது. அங்கு துரிதமாக ஊதி வந்த வீட்டு சந்தையிலும் கடன் சந்தையிலும் பலவிதமான முதலீடுகள் பெருகின. ஆனால் பருத்து வந்த இந்தச் சந்தைகளோ விரைவில் வெடிக்கப்போகும் குமிழிகள் என்பதை முதலீட்டாளர்கள் கணக்கிலெடுக்கவில்லை.

இந்த நெருக்கடி பற்றிய வர்க்க ரீதியான ஆய்வுகள் சிலவெளிவந்துள்ளன. குறிப்பாக, Resnick, Wolff, Harvey போன்றோரின் வெளியீடுகளைக் குறிப்பிடலாம் இத்தகைய ஆய்வுகளின் உதவியுடனும் வேறுசில கட்டுரைகளிலிருந்து பெறக்கூடிய அடிப்படைத் தகவல்களையும் வைத்து ஒரு சுருக்கமான விளக்கதைத் தர முற்படுகிறேன்.

1970 கள் வரை அமெரிக்க உழைப்பாளர்களின் மெய் ஊதியம் உற்பத்தித்திறனின் வளர்ச்சிக்கமைய ஓரளவு வளர்ந்து வந்தது.1970 களில் மெய் ஊதியத்தின் வளர்ச்சி ஸ்தம்பிதம் அடைந்தது. முதலாளித்துவ நிறுவனங்களின் முகாமையாளர்கள் தமது வருவாயையும் பங்குதாரர்களின் வருமானத்தையும் அதிகரித்த அதேவேளை தொழிலாளர்களின் அதிகரித்து வரும் ஊதிய உயர்வுக்கோரிக்கைகளை மதிக்கவில்லை. மேற்கு ஐரோப்பிய ஜப்பானிய முதலீட்டாளர்களின் போட்டிக்கு முகம் கொடுக்கும் நோக்கில் புதிய தொழில் நுட்பங்களில் முதலீடு செய்ய முற்பட்டனர். அதேவேளை அப்போதைய அரசாங்கம் விதித்த கொம்பனி வரி, உயர் வருமானம் பெறும் செல்வந்தர் மீதான வரிகள் போன்றவற்றையும் அமெரிக்க முதலாளிவர்க்கத்தினர் எதிர்த்தனர்.

இந்தக் கட்டத்திலேதான் றேகன் ஜனாதிபதியானார். முதலாளிவர்க்கத்தின் விருப்பத்திற்கமைந்த நவதாராளக் கொள்கை அமுலுக்கு வந்தது. மூலதனத்தின் இலாபத்தைக் குறைக்கும் வரிகள் அகற்றப்பட்டன. தொழிலாளர்களின் மெய் ஊதிய வளர்ச்சி மீது மேலும் தடைகள் போடப்பட்டன. தற்காலிக மயமாக்கல் போன்ற வழிகளால் தொழிலாளர்களின் தொழிற்சங்கப்பலம் உடைக்கப்பட்டது. றேகனின் கொள்கைகள் மூலதனக்குவியல் பெருக உதவின. அதேவேளை சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் மோசமாக்கின.

மெய் ஊதியத்தின் வளர்ச்சி நின்றுவிட்டதால் தொழிலாளர்கள் பல பிரச்சனைகளுக்குள்ளானார்கள். அவர்களின் நுகர்வுத் தேவைகள் வளர்ந்தன. பிள்ளைகளின் கல்விச் செலவுகள் மற்றய தேவைகள் அவர்களைப் படிப்படியாக கடனாளிகளாக்கின. அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலையைச் செய்வது போன்ற வழிகளையும் பயன்படுத்தினர். பொருளாதாரப் பிரச்சனைகள் குடும்ப உறவுகளையும் பாதிக்கத் தொடங்கின. வீட்டுக்கடன் வளர்ந்து கொண்டே சென்றது. கடன் பெறுவதற்கு அவர்களிடம் இருந்த ஒரே சொத்து வீடுதான். அதை அடமானம் வைத்தே பலர் கடன் பெற்றனர். அதேவேளை பலர் வீடு வாங்கிய கடனையும் திருப்பிக் கட்ட வேண்டிய நிலையில் இருந்தனர். இதே காலகட்டத்தில் வீடு வாங்குவதற்கான கடனைப் பெறுவதை வங்கிகள் சுலபமாக்கின. கடனைத்திருப்பிக் கட்ட வல்லமை குறைந்தவர்களும் கடன் பெறும் வாய்ப்புக்கள் இருந்தன. இதற்கான காரணத்தை விளக்குமுன் அமெரிக்காவின் வீட்டுக்குடும்பங்களின் மொத்தக் கடன்கள் பற்றிய புள்ளிகளைக் குறிப்பிடுதல் அவசியம். 1975 ல் USA இன் மொத்த வீட்டுக்கடன் 734 பில்லியன் டொலர்களாயிருந்தது. இது 2006 ல் 12.82 trillion (ட்ரில்யன்) களாக ஏறிவிட்டது. 1990 ல் ஒரு அமெரிக்க வீட்டுக்குடும்பத்தின் சராசரிக்கடன் அதன் செலவிடக் கூடிய வருமானத்தின் 77 வீதமாக இருந்தது. இது 2007 ல் 127 வீதமாக உயர்ந்து விட்டது.

மறுபுறம் மூலதன உடைமையாளர்களின் உபரி அதாவது இலாபம் பெருகியது. கிடைத்த இலாபத்தை மீண்டும் முதலீடு செய்து இலாபம் பெறும் வாய்ப்புக்களை அவர்கள் தேடினர். உபரியை மீண்டும் முதலீடு செய்யாவிட்டால் மூலதனம் மேலும் குவிய மாட்டாது. ஆகவே இவர்களின் உபரியின் ஒரு பகுதி வங்கிகளுக்கூடாக கடன் வழங்கவென ஒதுக்கப்பட்டது. இன்னொரு பகுதி குறுகிய காலத்தில் அதிக இலாபம் தரக்கூடிய பங்கு சந்தை மற்றய ஊகத்துறைகளில் முதலீடு செய்யப்பட்டது. பிறிதொரு பகுதி முதலாளிகளின் நிறுவனங்களின் முகாமையாளர்களின் பங்குதாரர்களின் வருமானங்களை அதிகரிக்கப் பயன்பட்டது.

இங்கு கவனத்தில் எடுக்கவேண்டிய ஒன்று கடன் வழங்கும் முறைகளில் ஏற்பட்ட சில மாற்றங்களாகும். முன்னர் கடன் பெற விரும்பும் ஒருவர் நேரடியாக வங்கியுடன் தொடர்பு கொள்வதே வழக்கம். ஆனால் இந்தக் காலகட்டத்தில் வங்கிகளுக்கும் கடன் பெறுவோருக்கும் இடையே தரகு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றின் ஊடாகவே கடன்கள் செலுத்தப்பட்டன. இந்தத் தரகுத்துறை ஒரு பெரிய இலாபத்துறையாக உருவெடுத்தது. வீடு வாங்கும் கடன் வசதிகள் இலகுவாக்கப்பட்டதால் குறைந்த வருமானம் பெறுவோரும் வீட்டுக்கடனைப் பெறமுடிந்தது. அவர்கள் வாங்கும் வீடுகளே அடைமானங்களாயின. இந்த அடைமானங்களை வைத்து அடைமான ஆவணச்சந்தையையும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உருவாக்கின. இவையெல்லாம் நிதி மூலதனத்தின் வளர்ச்சியையும் ஊகத்துறையின் வளர்ச்சியையும் காட்டின.

இந்தப் போக்கின் விளைவாக வீட்டுச்சந்தையும் கடன் சந்தையும் விரைவாக வளர்ந்தன. எல்லா வீடுகளின் சந்தைப் பெறுமதியும் ஏறிக் கொண்டே இருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்த துறைகளில் பங்கு பற்றினர். மெய் ஊதியம் வளராத போதும் வீட்டின் பெறுமதி உயர்ந்து சென்றதால் தொழிலாளர் குடும்பங்களுக்கும் தமது வீடுகளை மீண்டும் அடைமானம் வைத்துக் கடன் பெறும் வாய்ப்புக் கிடைத்து. தரகு நிறுவனங்கள் இவர்களைக் கடன் பெறும் வகையில் ஊக்கினர். கடன் பெறுவது முன்னெப்போதையும் விட சுலபமாகியது. ஆனால் கடனின் வட்டி அதிகரிக்கப்பட்டது. கடன்களின் வட்டி மாற்றப்படலாம் என்ற நிபந்தனை ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்ததால் வட்டி வீதம் உயர்த்தப்படுவதை கடன் பெற்றோரால் எதிர்க்க முடியவில்லை.

ஆனால் நிதி மூலத்தனத்தின் இந்தக் களியாட்டம் நீண்ட காலம் தொடரவில்லை. கடன் பட்ட பலரால் கடனைத் திருப்பிக் கட்ட முடியவில்லை. கடனைப் பெறுவது சுலபமாக இருந்தது. ஆனால் ஏறிச் செல்லும் செலவுகள் வருமானத்தை விட மிஞ்சியதால் கடனைத் திருப்பிக் கட்ட முடியவில்லை. இந்த நிலையில் இவர்கள் வீடுகளை இழந்தனர். இப்படி சுவீகரிக்கப்பட்ட வீடுகள் மீண்டும் வீட்டுச் சந்தைக்கு வந்தன. சந்தையில் வீடுகளின் நிரம்பல் அதிகரித்தது ஆனால் கேள்வி வளரவில்லை. வீடுகளின் சந்தைப் பெறுமதி துரிதமாக சரியத் தொடங்கியது. ஒருபுறம் வீடுகளை இழந்த குடும்பங்களின் தொகை அதிகரித்தது. 2009 ல் 30 இலட்சத்திற்கு மேலான வீடுகள் சுவீகரிக்கப்பட்டன. மறுபுறம் வீட்டுச்சந்தையிலும் கடன் சந்தையிலும் செய்த முதலீடுகள் நட்டத்திற்குள்ளாகும் போக்கும் அதிகரித்தது. இது உலக பங்குச் சந்தையையும் பாதித்தது. ஒரு தொடர் சங்கிலியாக நிதி மூலதனத்தின் நெருக்கடிகள் வளர்ந்தன. நுகர்வோரின் கேள்வி வளராமல் நிரம்பல் கூடுவது கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்தில் இடம்பெறுவது சாத்தியமே. வீட்டுச்சந்தை மாத்திரமல்ல வீடுகளை இழந்தோர் மற்றும் வருமானம் குறைந்தோரின் வாங்கும் சக்தியின் வீழ்ச்சியின் விளைவால் மற்றய சந்தைகளும் பாதிப்படைந்தன. இதன் தொடர்ச்சி பெரும் உற்பத்தித்துறைகளையும்- உதாரணமாக மோட்டார் வாகன உற்பத்தி – பாதித்தது. பெருந்தொகையானோர் வேலையிழந்தனர்.

தரகு நிறுவனங்கள் குறுகிய கால இலாபத்திற்காகப் போதிய வருமானம் இல்லாதோருக்கும் கடன் வழங்கும் வசதியைக் கொடுத்தது தவறெனும் விமர்சனங்கள் எழுந்தன. வங்கிகளும் காப்புறுதி நிறுவனங்களும் நொடிந்து வீழ்ந்தன. அடைமான ஆவணங்களில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்களில் வங்கிகளும் பலவித மான நிதியங்களும் அடங்கும். இந்த விளையாட்டில் பங்கு பற்றிய எல்லோரும் சொத்துக்களின் விலைகள் தொடர்ந்து ஏறிக் கொண்டேயிருக்கும் என ஏன் நம்பினர்கள்? அதனால் அவர்கள் எல்லோருமே அவ்வளவு விபரம் தெரியாதவர்களா என எண்ணத்தோன்றும். ஆனால் அதுதான் இந்த விளையாட்டின் தன்மை. நடைபெற்றதோ ஊக ரீதியான எதிர்பார்ப்பின் எதிர்மறையாக இருந்தது. Trillion கணக்கில் நிதி மூலதனம் கணப் பொழுதில் மாயமானது. நெருக்கடி மோசமான பின்னர்தான் விளக்கங்களைத் தேடுகின்றனர்.

சர்வதேச மட்டத்தில் நிதிமூலதனத்தின் பெரும் ஆதிக்கத்திற்குள்ளான பொருளாதாரங்கள் பெரிதும் பாதிப்படைந்தன. உதாரணமாக ஐஸ்லாந்தின் வங்கிகள் தமது பணத்தை ஊகத்துறையில் முதலீடு செய்ததின் விளைவாக முழுக்க முழுக்க வங்குரோத்து நிலை அடைந்தன. ஐஸ்லாந்தின் பொருளாதாரம் சுலபமாக உச்சத்துக்குச் சென்ற வேகத்தையும் விடத் துரிதமாக வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் வீழ்ச்சியடைந்த பல நிறுவனங்கள் நவதாராளவாதத்தின் விதிகளுக்கு மாறாக தேசிய மயமாக்கப்பட்டன. மேலும் அதே விதிகளுக்கு மாறாக தோல்வியடைந்த வங்கிகளுக்கு பில்லியன் கணக்கில் டொலர்களாக வழங்கி அரசு மீள் உயிர்கொடுத்தது. ஆனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் அத்தகைய பாதுகாப்பைப் பெறவில்லை. அரசு விதிகளை மாற்றி முதலாளித்துவ அமைப்பைப் பேணிக் காத்தது. அமைப்பு ரீதியான நெருக்கடி வரும் போது அமைப்பினை பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை என்பதை இது மீண்டும் படிப்பினையாகத் தந்துள்ளது.

நெருக்கடிகளுக்கு ஊடாக வாழும் முதலாளித்துவம்

நெருக்கடிகள் முதலாளித்துவத்தின் மரணத்தின் அறிவிப்புகள் அல்ல என்பதே இதுவரையிலான வரலாற்று அனுபவம். 1990 களில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடிகளிலிருந்து முதலாளித்துவத்தின் முகாமையாளர்கள் எவரும் எதையும் படிக்கவில்லை எனக்கருதுவோர் உண்டு. அது மட்டுமல்ல ஆசிய நிதி நெருக்கடியையோ இந்தக் கட்டுரையின் பொருளான சமீபத்திய நெருக்கடியையோ உலகப் புகழ்பெற்ற பிரதான நீரோட்ட பொருளிலாளர்களால் முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியவில்லை என்பதும் பலராலும் விமர்சிக்கப்படும் விடயமாகும். இந்த விமர்சனம் நியாயமானதே. ஆனால் முதலாளித்துவத்தின் நெருக்கடிகளின் கையாள்கை அரசியல் ரீதியானது. தேசிய, சர்வதேச அதிகார உறவுகளைப் பற்றியது. அடிப்படையில் வர்க்க நலன் சார்ந்தது என்பது ஒரு முக்கிய வரலாற்றுப்பாடமாகும். ஒடிந்து விழும் அமெரிக்க ஐரோப்பிய மூலதன நிறுவனங்களைப் தூக்கிவிட அந்தந்த அரசுகள் மட்டுமல்ல நெருக்கடிக்களுக்காளான முதலாளித்துவ அரசுகளுக்கு உதவ இன்றைய எழுந்து வரும் வல்லரசான சீனாவும் முன்வந்தது. கடந்த நிதி நெருக்கடிகளால் பெரிதும் சீனா பாதிக்கப்படவில்லை. இதற்கு காரணம் சீனா பின் பற்றிய பொருளாதாரக் கொள்கை. அதேவேளை அமெரிக்காவில் இடம்பெற்றுப் பரந்த நெருக்கடிகளில் இருந்து சீனா முற்றாக தப்பிக் கொள்ளவும் முடியாது. வட அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் சீனாவின் உயர் பெறுமதி ஏற்றுமதிகளின் முக்கிய சந்தைகளாகும். அத்துடன் அமெரிக்க அரசிற்கு சீனா பெருந்தொகையான கடனை வழங்கியுள்ளது. பெருங்கடனைக் கொடுத்தவர் அதைப் பெற்றவரை விட மனக்கலக்கமுறுவது இயல்பானதே. ஆகவே அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமல்ல ஐரோப்பிய பொருளாதாரங்களையும் முதலாளித்துவ நெருக்கடிகளிலிருந்து காப்பாற்ற சீனா முன்னிற்பது சீனாவின் தேசிய நலன்கள் உலக முதலாளித்துவத்தின் ஆரோக்கியத்துடன் இணைந்திருப்பதையே காட்டுகிறது.

முதலாளித்துவ சந்தை என்பது தனியே ஒரு பொருளாதாரப் புலம் மட்டுமல்ல அது ஒரு அரசியல் புலமும்தான். அங்கு வெறுமனே தெரிவுச் சுதந்திரம் மட்டுமல்ல வற்புறுத்தல் மிகு மேலாதிக்கம் மேலாட்சியுடன் கூடவே நிலவுகின்றது. மேற்கத்தய அனுபவத்தைப் பார்க்கும் போது முதலாளித்துவம் அனுமதிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தை அதன் குறுகிய எல்லைகளுக்கு அப்பால் செல்ல விடுவது என்பது அந்த அமைப்பிற்கே மாபெரும் சவாலாகும். இந்த மாற்றப்போக்கு தானாக வரப்போவதில்லை.இதற்கு மூலதனத்தின் அதிகார உறவுகள் போட்டுள்ள தடையை உணர்வு பூர்வமான அரசியல் கூட்டு செயற்பாடுகளுக் கூடாகவே அகற்ற முடியும். அத்தகைய போராட்டமே மாற்று சமூதாயத்திற்கான ஆரம்பம். இந்த வழியிலேயே எதிர்காலம் பற்றிய, சோசலிசம் பற்றிய மீள்கற்பிதம் இடம் பெற வேண்டும்.

ந. சண்முகரத்தினம்

[1] இந்தக்கட்டுரை சமகாலம் 2012 July 06-19 இதழில் பிரசுரிக்கப்பட்டது

செல்வந்த நாடுகளின் ஏறிச்செல்லும் ஏற்றத்தாழ்வுகளும் ஜனநாயகத்தின் சிதைவும்- முதலாளித்துவம் மீட்சியின்றி சீரழிகிறதா ?

நவீனத்துவத்தின் வரலாறு ஆக்கத்தையும் அழிவையும் பற்றியதென்றால் மிகையாகாது. அடிப்படையில் இந்த வரலாறு முதலாளித்துவத்தின் வரலாறே. ஆனால் இதைத் தனியே முதலாளித்துவத்தின் வெற்றியின் வரலாறெனப் பார்ப்பது தவறு. இது முதலாளித்துவ அமைப்பிற்கும் அதற்குள்ளேயே இருந்து பிறக்கும் முரண்பாடுகளினதும் அந்த அமைப்புக்கு எதிரான சக்திகளினதும் வரலாறும் தான் என்பதையும் மறந்துவிடலாகாது. ஆனால் இந்த அமைப்பிற்கு குறிப்பாக தனிமனித பொருளாதார சுதந்திரத்தை வலியுபறுத்தும் கொள்கைக்கு மாற்றுவழியில்லை எனும் கருத்தியல் 1970 களின் பிற்பகுதியிலிருந்து மேலாட்சி பெற்று தன் செல்வாக்கைக்காட்டி வருகிறது. மறுபுறும் இந்தப்போக்கில் பாதகமான விளைவுகள் மனித வாழ்வின் அர்த்தம் பற்றி மற்றும் மனித இனத்தின் அது வாழும் இந்தப் பூகோளத்தின் எதிர்காலம் பற்றிப் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

இன்றைய உலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செல்வம் பெருகியுள்ளது போல் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக-பொருளாதார அசமத்துவங்களும் வளர்ந்துள்ளன. அதேபோன்று முன்னெப்போதும் இல்லாதவகையில் இயற்கையின் அழிப்பும் சூழலின் சீரழிவும் மோசமடைந்துள்ளன. இந்த விடயங்கள் பற்றி பல ஆய்வுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமிருக்கின்றன. அதேவேளை உலக ரீதியில் ஜனநாயகம் பல வழிகளால் நசுக்கப்படுவதையும் காண்கிறோம். முதலாளித்துவமும் ஜனநாயகமும் பிரிக்கப்பட முடியாத இரட்டைக் குழந்தைகளெனும் பிரச்சாரத்தின் பொய்மையை மறைப்பதற்கு முதலாளித்துவ உலகின் ஆளும் வர்க்கங்களும் கூட்டுக்களும் பெரும்பாடுபடுகின்றன.

வறியோர்களின் நிலையை அறிய விரும்பினால் செல்வந்தர்கள் பற்றி ஆய்வு செய் என யாரோ ஒரு அறிஞர் கூறியது நினைவுக்கு வருகிறது. இந்தக் கட்டுரை இன்றைய முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஜனநாயகத்தின் நிலை பற்றியது. இந்த விடயங்களை முதலாளித்துவத்தின் மைய நாடுகளின் போக்குகள் பற்றிய ஆய்வுகளின் உதவியுடன் அணுக விரும்புகிறேன். முதலாளித்துவம் நீண்ட காலமாக நிலைபெற்று ஏகாதிபத்தியமாக வளர்ந்தது இந்த நாடுகளில் தான். நவீனத்துவத்தின் எழுச்சியையும் பரவலாக்கலையும் ஆழமாக்கலையும் இந்த நாடுகளிலேதான் முழுமையாகக் காண்கிறோம். நவீனத்துவத்தின் வரலாறு நவீனத்துவத்துக்குப் பின்னான (post- modern) கால கட்டத்தை அடைந்து விட்டது எனும் சிந்தனைப்போக்குகளும் இங்குதான் தோன்றிவளர்ந்துள்ளன. ஆகவே நவீனயுகத்தின் பிரதான விவாதப் பொருளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களின் நிலைமைகள் பற்றிப் பார்க்க இந்த நாடுகள் மிகவும் உகந்தவை என்பதில் சந்தேகமில்லை. இந்தவகையில் மேற்கு ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அசமத்துவத்தின் விலை – பிரதான நீரோட்டத்திலிருந்து எழும் விமர்சனங்கள்

நோபல் பரிசு பெற்ற பிரபல அமெரிக்க பொருளியலாளர் Joseph Stiglitz 2012 ல் எழுதிய ‘The Price of Inequality’ ( அசமத்துவத்தின்விலை ) என மகுடமிடப்பட்ட நூலில் அமெரிக்க சமூகத்தின் ‘பெரும்புதிர்’ என்பது பற்றி எழுப்பும் கேள்வியை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். ஒருவருக்கு ஒரு வாக்கு எனும் அடிப்படையில் அமைந்த ஒரு ஜனநாயத்தில் எப்படி ஒரு வீதத்தினர் மட்டுமே தமது நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கைகளை வகுக்குமளவிற்கு வெற்றி பெறுகிறார்கள்? இந்த புதிர் அமெரிக்காவிற்கு மாத்திரம் சொந்தமானதல்ல. ஆனால் அங்குதான் சமீபகாலங்களில் ‘ஒரு வீதம்- 99 வீதம்’ எனும் சமூகப்பிரிவினை அதாவது 99 வீதத்தினரின் நலன்களை ஒதுக்கி அவர்களின் செலவில் ஒருவீதத்தினர் அபரித செல்வந்தர்களாகியுள்ளனர் எனும் விமர்சனமும் அதையொட்டிய அரசியல் எதிர்ப்பலைகளும் எழுந்துள்ளன. செல்வந்த நாடுகளில் அமெரிக்காவிலேயே மிகவும் ஆழமான சமூக பொருளாதார அசமத்துவத்தைக் காண்கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டும் பேராசியர் Stiglitz அமெரிக்கா கடந்த நான்கு தசாப்தங்களாப் பின்பற்றிய நவதாராளக்கொள்கை ஒரு செயல்பிறழ்ந்த முதலாளித்துவத்திற்கே (Dysfunctional Capitlalism) இட்டுச்சென்றுள்ளது என வருத்தப்படுகிறார். இதையே நவதாராள உலகமயமாக்கல் உலக ரீதியில் செய்து வருகிறது என்பதும் அவரின் விவாதமாகும்.

Stiglitz தரும் தகவல்களும் எழுப்பும் கேள்விகளும் முற்றிலும் புதியவையல்ல. ஏற்கனவே பல இடதுசாரிகள் குறிப்பாக David Harvey போன்ற மாக்சிய ஆய்வாளர்கள் இதைப்பற்றி எழுதியுள்ளார்கள் ஆழ விமர்சித்துள்ளார்கள். (இத்தகைய ஆய்வுகள் பற்றி சமகாலம் 2012 July 06-19 இதழில் ‘தொடர்ச்சியான நெருக்கடிக்குள் மூலதனம்’ எனும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்) ஆனால் Stiglitz ன் விமர்சனங்களுக்குப் பலர் முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. முன்னாள் உலக வங்கியின் பிரதம பொருளியலாளராகவும் ஜனாதிபதி கிளின்டனின் ஆலோசகராகவும் இருந்த அவர் சமீபகாலங்களில் நவதாராளவாதத்தையும் அது சார்ந்த பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளையும் வன்மையாக விமர்சிக்கும் நூல்களையும் கட்டுரைகளையும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவர் முன்வைக்கும் விமர்சனம் முதலாளித்துவ அமைப்பிற்குச் சார்பான அறிவியல் முகாமிற்குள்ளிலிருந்து வரும் ஒரு முரண்படு குரலாகக் கருதப்படுகிறது. அவரது விமர்சனத்தின் நோக்கம் அவரே குறிப்பிடும் செயல்பிறழ்ந்த முதலாளித்துவத்தை எப்படி மக்களின் மனித நன்னிலைக்கு உதவும் முதலாளித்துவமாகச் சீர்திருத்துவது என்பதாகும்.

அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடாயிருந்த போதும் அந்த ஜனநாயகம் சமூகத்தின் பெரும்பான்மையினரின் நலன்களைப் பிரதிபலிப்பதாக இல்லை.அமெரிக்க வாக்காளர்களில் 50 வீதத்திற்கும் மேலானோர் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை. இளம் சந்ததியினரின் வாக்களிப்பு வீதம் இதை விடக்குறைவு. இந்த நிலைமைக்கு அமெரிக்காவின் ஒரு வீதத்தினரே காரணம் என்றும் அவர்களின் பேராசைத்தனம் பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்க வைத்துவிட்டது என வருந்தும் Stiglitz இந்த நிலை தொடர்ந்தால் அது உயர் மட்ட ஒரு வீதத்தினரின் சுயநலன்களுக்கு நீண்ட காலத்தில் ஆபத்தானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என அங்கலாய்க்கிறார். முதலாளித்துவம் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறதா? அது ஒரு சுய அழிவுப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறதா? போன்ற கேள்விகள் எழுகின்றன. அதேநேரம் முதலாளித்துவத்தை மீண்டும் சீர்திருத்தி சமூக நலன்களைப் பாதுகாக்க முடியும் என்னும் கருத்துக்குச் சார்பான வாதங்கள் நவதாராளவாதத்தின் மேலாட்சியுடன் போட்டி போடுகின்றன.

தோமஸ் பிக்கெட்டியின் ஆய்வு

இந்த விவாதத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாக அமைகிறது பிரெஞ்சுப் பொருளியலாளரான தோமஸ் பிக்கெட்டி (Thomas Piketty) எழுதியுள்ள ‘Capital in the Twenty First Century’ (இருபத்தி ஓராம் நூற்றாண்டில் மூலதனம் ) எனும் நூல். 2013 ல் பிரெஞ்சு மொழியிலும் 2014 ல் ஆங்கிலத்திலும் வெளிவந்த இந்த நூல் உலக ரீதியில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Piketty ஐ ‘பொருளியலின் றொக் தாரகை’ (Rock Star) எனச் சில பத்திரிகையாளர்கள் வர்ணித்தனர். Stiglitz இன் ஆய்வு அமெரிக்கா பற்றி எழுப்பிய பிரச்சனையை Piketty மேலும் பரந்த ஆழ்ந்த வரலாற்று ரீதியான அணுகுமுறையைப் பயன்படுத்தி ஆராய்ந்துள்ளார். ஏறக்குறைய 700 பக்கங்களைக் கொண்ட நூலில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் போக்குகளை இருக்க கூடிய தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து தனது விளக்கங்களைக் கொடுத்துள்ளார். தனது நூல் 18ம் நூற்றாண்டிலிருந்து இருபத்தி ஓராம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைப் பற்றிய தென்பதால் இது பொருளாதார வரலாறு பற்றியதென Piketty யே கூறுகிறார். அவரின் ஆய்வின் பிரதான கேள்வியை பின்வருமாறு கூறலாம். தனியார் மூலதனக்குவியலின் இயக்கப்போக்கானது 19 ம் நூற்றாண்டில் மாக்ஸ் கருதியது போல் தவிர்க்க முடியாதபடி ஒரு சிலரின் கைகளில் மூலதனம் திரளும் நிலைக்கு இட்டுச் செல்கிறதா அல்லது பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டி, தொழில் நுட்ப விருத்தி, அபிவிருத்திக் கொள்கைகள் போன்றவற்றின் விளைவாக அசமத்துவம் குறைக்கப்பட்டு வர்க்கங்களுக்கிடையே இணக்கநிலை உருவாகிறதா?

செல்வந்த நாடுகளில் (மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா ) மாக்சியவாதம் எதிர்பார்த்த முடிவு – அதாவது முதலாளித்துவத்தின் மரணம் – தவிர்க்கப்பட்ட போதும் அசமத்துவத்தை தோற்றுவிக்கும் ஆழ்ந்த அமைப்பு ரீதியான தன்மைகளில் போதியளவு சீர்திருத்தங்கள் இடம்பெறவில்லை என்பது Piketty ன் முடிவுகளில் ஒன்றாகும். அத்துடன் செல்வம் மற்றும் வருமானம் ஆகியவற்றின் ஏற்றத்தாழ்வுகளைத் தனியே பொருளாதாரக் கராணிகளால் விளக்கி விடமுடியாது – இவற்றின் பங்கீடு பற்றிய வரலாறு அரசியல் காரணிகளின் போக்குடன் ஆழமான தொடர்புடையது என்பதும் அவரது முடிவுகளில் ஒன்றாகும். மேலும் Piketty ன் ஆய்வின் படி 19 ம் நூற்றாண்டுடன் ஒப்பிடும் போது 20ம் நூற்றாண்டில் குறிப்பாக 1980 களுக்கு முந்திய தசாப்தங்களில் மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பியநாடுகளிலும் வட அமெரிக்காவிலும் ஏற்றத்தாழ்வுகள் குறைவடையும் போக்குகள் நிலவின. 1900-1950 கால கட்டத்தில் இந்த நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் குறைவடையக்காரணம் அங்கு காணப்பட்ட ஜனநாயகம் மட்டும்தான் எனக்கருதுவது தவறு. உண்மையில் இரண்டு உலக யுத்தங்களும் இதற்கு உதவியுள்ளன. போர்ச் செலவின் தேவைகளும் போரின் நிர்ப்பந்தங்களும் முன்னேறிச் செல்லும் வரி அமைப்பின் – அதாவது ஒருவரின் செல்வம் மற்றும் வருமானத்திற்கேற்ப ஏறிச்செல்லும் வரி அமைப்பின்- அமுலாக்கலுக்கு வழிகோலின. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பற்றி Piketty தரும் புள்ளிவிபரங்கள் இதைத் தெளிவாக காட்டுகின்றன. முன்னேறிச் செல்லும் வரி அமைப்பின் முக்கியத்துவம் பற்றி கூறும் Piketty 20 ம் நூற்றாண்டின் குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கம் பெற்ற ‘சமூக அரசு ‘ பற்றியும் கூறுகிறார். 1920-1980 காலகட்டத்தில் செல்வந்த நாடுகள் தமது தேசியவருமானத்தின் கணிசமான பகுதியை சமூக மேம்பாட்டிற்கு ஒதுக்கும் கொள்கைகளைக் கையாண்டன. அரசவருமானம் 1980 கள் வரை அதிகரித்த வண்ணம் இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் சமூக ஜனநாயக சீர்திருத்தங்கள் இடம்பெற்றன. இந்தவகையில் சுவீடன் தனது தேசியவருமானத்தின் 55 வீதத்தை வரியாகப் பெற்றுக் கொண்டது. இதே போன்று பிரான்ஸ் 45-50 வீதத்தையும் பிரித்தானியா 40 வீதத்தையும் வரிகளாக வசூலித்தன. இந்த அரச வருமானத்தின் கணிசமான பகுதி கல்வி, சுகாதாரம் மற்றும் ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு தேவைகளுக்குப் பயன்பட்டது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதன் வரி தேசியவருமானத்தின் 30 வீதத்திற்கும் அப்பால் செல்லவில்லை. ஐரோப்பிய முதலாளித்துவ சமூகநல அரசுகளுக்கும் அமெரிக்க முதலாளித்துவ அரசுக்குமிடையிலான வேறுபாட்டை இது வெளிப்படுத்துகிறது. வரியைப் பொறுத்தவரை ஜப்பானும் 30 வீதத்திற்கு அப்பால் செல்லவில்லை.

ஆயினும் 1980 களிலிருந்து செல்வந்த நாடுகளில் அசமத்துவம் அதிகரிக்கும் போக்கையே காணமுடிகிறது. இது நவதாராளவாதத்தின் வருகையுடன் தொடர்புடையது. தொடரும் ஏற்றத்தாழ்வுகளின் வளர்ச்சி அரசாங்கங்கள் பின்பற்றிய தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாகும். வரிக்கொள்கையில் அடிப்படை மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. சொத்து மற்றும் வருமானம் மீதான வரிகள் செல்வந்தர்களின் நலனைப் பேணும் வகையில் அகற்றப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரின் மீது வரிப்பளுக்கள் அதிகரித்துள்ளன. இந்த வரிகள் பெரும்பாலும் நுகர்பொருட்கள் மீதான வரிகளாகவே அறவிடப்படுகின்றன. மூலதனம் மீதான அதனால் கிடைக்கும் வருமானத்தின் மீதான வரிகள் அகற்றப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின் விளைவாக ஐரோப்பிய சமூகநல அரசுகள் படிப்படியாகப் பலவீனம் அடைந்து வருகின்றன. இந்த வரிக்கொள்கைகளுடன் சமூக சேவைகளின் தனியுடமையாக்கலும் இணையும் போது உழைக்கும் மக்கள் பெரிதாகப் பாதிக்கப்படுவதையும் சமூக ஏற்றதாழ்வுகள் வளர்வதையும் தடுக்க முடியாது. Piketty ன் ஆய்வின்படி செல்வந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ள அதேவேளை மூலதன உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளும் வருமானத்தின் வீதம் அதைவிட விகிதாசாரப்படி அதிகரித்துள்ளது. வளரும் அசமத்துவத்தின் போக்கு அமெரிக்காவில் மிகவும் தீவிரமடைந்துள்ள போதும் மற்றய நாடுகளிலும் அதே போக்குத் தொடர்வதையே Piketty ன் ஆய்வும் மற்றய ஆய்வுகளும் வெளிப்படுத்துகின்றன. Credit Suisse எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள 2014ம் ஆண்டு உலகச்செல்வம் பற்றிய அறிக்கையின் படி உலகின் அதியுயர் செல்வந்தர்களான ஒரு வீதத்தினர் ஏறக்குறைய 50 வீதமான சொத்துக்களின் உரிமையாளர்களாகவுள்ளனர்.

இந்தப்போக்கின் விளைவுகள் பலதரப்பட்டவை. இவற்றில் ஒன்று தனிமனிதரின் திறனை விட அவர்களின் செல்வந்தநிலையே சமூக நகர்ச்சியின் உந்துகோலாகிறது. தாராளவாதம் முன்வைக்கும் சமசந்தர்ப்பம், சமஉரிமை போன்ற சமத்துவ விழுமியங்களை அது முன்னுரிமை கொடுக்கும் பொருளாதார சுதந்திரத்தின் விளைவான போக்குகள் நடைமுறையில் அர்த்தமற்றவையாக்குகின்றன. ஒருவரின் திறனை விட அவரின் செல்வந்த அந்தஸ்தே பலரைப் பொறுத்தவரை சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த உதவுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை Piketty தருகிறார். அமெரிக்காவின் முதல்தரப் பல்கலைகழகங்கள் எனக் கருதப்படுபவைகளுக்கு அனுமதி பெறுவோரின் சமூக-பொருளாதார பின்னணியைப் பார்க்குமிடத்து பெற்றோரின் வருமானமே ஒரு பிள்ளை ஹாவாட் (Harvard) போன்ற பல்கலைக்கழகத்திற்குச் செல்வதை நிர்ணயிக்கிறது. இத்தகைய பிரபல்யம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகத்தில் தமது பிள்ளைகள் அனுமதி பெறுவதற்காகப் பெற்றோரும் அப்பல்கலைக்கழகத்திற்கு பெருந்தொகையான நன்கொடையை வழங்குகிறார்கள். அத்துடன் இத்தகைய பல்கலைகழகங்கள் அறவிடும் கட்டணங்களும் பெருந்தொகையாகும். இந்தப் பெற்றோர் அமெரிக்க சமூகத்தின் அதியுயர் வருமானம் பெறும் இரண்டு வீதத்தினரில் அடங்குவர். ஆகவே திறனுக்கு முதலிடம் எனும் முதலாளித்துவ ஜனநாயகக் கோட்பாடு நடைமுறையில் பல மட்டங்களில் மீறப்படுகிறது. திறன் எனப்படும் தகைமையைப் பெறுவதற்குப் பலவளங்களும் வசதிகளும் வேண்டும். அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

உயர்கல்வியைப் பொறுத்தவரை பிரித்தானியாவிலும் இந்த நிலையே. மற்றய ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்விக்கட்டணங்கள் குறைவாக உள்ளன அல்லது முற்றாக இலவசக்கல்வி வசதிகள் இன்னும் தொடர்கின்றன. உதாரணத்திற்கு ஸ்கண்டிநேவிய நாடுகளில் பல்கலைகழகம் வரை இலவசக்கல்வி நிலவுகிறது. ஆயினும் இந்த நாடுகளில் செல்வப் பங்கீட்டின் ஏற்றத்தாழ்வு தொடர்ந்து வளர்கிறது. வரிஅமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. செல்வந்தநாடுகளின் சிக்கலை தரவுகளுடன் வெளிக்காட்டும் Piketty முன் வைக்கும் தீர்வுதான் என்ன? 1930 களிலிருந்து 1970கள் வரை இந்த நாடுகளில் நிலவிய சமத்துவத்திற்கு சார்பான சிந்தனை, ஆர்வம் மற்றும் கொள்கை வகுப்புமுறை போன்றவற்றிலிருந்து விலகியதன் விளைவே இன்றைய அதீத அசமத்துவத்திற்கான காரணம். மீண்டும் அசமத்துவத்தைக் குறைக்கும் வரித்திட்டத்தின் அவசியத்தை முன்வைக்கிறார். அதியுயர் வருமானம் பெறும் 0.5-1 வீதத்தினருக்கு 80 வீத வருமானவரியை விதிப்பது பல வழிகளில் நியாயமானது அது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காது அதேவேளை ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கும் உதவும் எனக் கருதுகிறார் Piketty. அதியுயர் வருடாந்த வருமானம் எனும் போது அமெரிக்காவில் அது USD 500,000-1,000,000 க்கு மேற்பட்டதைக் குறிக்கும். இத்தகைய கொள்கை மாற்றம் ஏற்பட ஒரு அதிர்ச்சி அனுபவம் இடம் பெறவேண்டும் என அவர் கூறுகிறார். அவர் முன்மொழியும் இன்னுமொரு முக்கிய ஆலோசனை உலக ரீதியில் மூலதனத்தின் மீது 0.1 வீத வரிவிதிக்கப்பட வேண்டும் என்பதாகும். இதன் நடைமுறைச் சாத்தியப்பாடு பற்றிய சவால்களையும் அவர் குறிப்பிடுகிறார்.

சுருங்க கூறின் Piketty தரும் தீர்வு சமூக ஜனநாயகத்தின் (social democracy ன்) மீள் கண்டுபிடிப்பு எனலாம் – இதுவே உலக முதலாளித்துவத்தை மனிதநலனுக்கு உதவும் வகையில் சீரமைக்க உதவும் என்பது அவரது தீர்க்கமான முடிவு. இந்தப்பாதையை இப்போது வளர்ச்சி பெற்று வரும் தெற்கத்திய முதலாளித்துவ நாடுகள் தேர்ந்தெடுக்குமா என்ற கேள்வியும் அவரது நூலில் அடங்குகிறது. Piketty ன் நூல் பற்றிப் பல விமர்சனங்கள் உண்டு. விசேடமாக மாக்சிய ஆய்வாளர்கள் அவரின் ஆய்வின் பயன்பாட்டை வரவேற்கும் அதேவேளை மூலதனம் பற்றி அவர் கையாண்டுள்ள அணுகுமுறையையும் மாக்ஸ் தனது நூலில் (மூலதனம்) முன்வைத்து விளக்கியுள்ள இலாப வீதத்தின் வீழ்ச்சிப் போக்கு எனும் கோட்பாடு பற்றி Piketty கொண்டுள்ள தப்பான விளக்கம் பற்றியும் விமர்சித்துள்ளனர். அத்துடன் Piketty ன் ஆய்வில் முதலாளித்துவம் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் சிக்கல்கள் பற்றி எதுவும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். Stiglitz ம் Piketty யும் அவர்கள் ஆராய்ந்துள்ள சமூகங்களின் அதிகார உறவுகள் பற்றி ஆழமாகப் பார்க்கவில்லை என்பதையும் குறிப்பிடலாம். இவையெல்லாம் வேறாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.

முதலாளித்துவம் சுயஅழிவுப் பாதையில் செல்கிறதா? ஒரு குறிப்பு

இந்தக் கேள்வி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் இன்று உலக ரீதியில் பரந்து ஆழப்பதிந்து இயங்கும் ஒரே ஒரு அமைப்பாக இருக்கிறது முதலாளித்துவம். முன்னர் முதலாளித்துவத்தை நிராகரித்த சீனா இன்று முதலாளித்துவப் பாதையில் தீவிர வளர்ச்சியைக் கண்டுள்ளது மட்டுமன்றி பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் மேற்கத்தைய பொருளாதாரங்களை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்று அமைப்பு எனக்கருதக் கூடிய ஒரு நாடு கூட இல்லாத இன்றைய காலகட்டத்தில் இப்படியும் ஒரு கேள்வியா? இது நியாயமாகப் படலாம். ஆனால் கேள்வி மாற்று அமைப்போ புரட்சியின் சாத்தியப்பாடோ பற்றியதல்ல. இருக்கும் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான சிக்கல்கள் பற்றியது. மாற்று அமைப்புத் தோன்றாநிலையில் முதலாளித்துவம் ஒரு மீளமுடியாத நீண்ட கால வியாதிக்குள்ளான ஒரு நோயாளியின் நிலையில் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதற்கு ஆதாரங்கள் உண்டு. ஒருபுறம் இந்த ஆதாரங்கள் இயற்கையின் மிதமிஞ்சிய பண்டமயமாக்கலின் விளைவான இயற்கையின் அழிப்புடனும் அத்துடன் இணைந்த சூழலின் சீரழிவுடனும் தொடர்புள்ளன. இந்தப் பார்வையில் உலகின் எதிர்காலத்தை நோக்குமிடத்து துரித கதியில் வளர்ச்சி பெற்று செல்வத்தைக் குவித்து வரும் புதிய வல்லரசுகள் முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான வெற்றியின் சாத்தியப்பாட்டின் ஆதாரங்களா அல்லது முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் கட்டவிழ்த்து விடும் அழிப்பு சக்திகளின் துரிதமயமாக்கலின் உதாரணங்களா என்ற கேள்வி எழுகிறது. மாக்சியப்பார்வையில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஒரு ஆக்கரீதியான பரிமாணம் இருக்கும் அதேவேளை ஒரு அழிப்பு ரீதியான பரிமாணமும் உண்டு. இந்த இரண்டில் பின்னையதின் விளைவுகள் உலக ரீதியில் பல நூற்றாண்டுகளாகக் குவிந்துள்ளன. எழுந்து வரும் முதலாளித்துவ நாடுகள் பின்பற்றும் கொள்கைகள் இவற்றை மேலும் மோசமாக்கக் கூடும். இது ஒரு நியாயமான கணிப்பு.

மறுபுறம் செல்வந்தநாடுகளின் நிலைமைகள் முதலாளித்துவத்தின் மையமாகத்திகழ்ந்த பகுதியில் இடம் பெறும் தொடர்ச்சியான பொருளாதார சிக்கல்களுக்கு விடிவே இல்லைப்போலும் எனும் முடிவுக்கு இட்டுச்செல்கின்றன. இந்த வகையில் இந்தக் கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள விடயங்களுடன் தொடர்புடைய மூன்று பிரச்சனைகள் பற்றிய விமர்சன ரீதியான மாற்றுப் பார்வையைக் கணக்கிலெடுத்தல் அவசியம். செல்வந்த நாடுகளின் பொருளாதாரங்களின் தொடர்ச்சியான மந்தநிலை, இந்த நாடுகளின் அரசுகளின் முடிவின்றி ஏறிச் செல்லும் கடன்பளு மற்றும் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமிருக்கும் செல்வம் மற்றும் வருமானத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஆகிய மூன்றும் முதலாளித்துவத்தின் ஆழமான வியாதியின் வெளிப்பாடுகள். இந்தக் கருத்தை முன்வைப்பவர்களின் ஒருவரான Wolfgang Streek சமீபத்தில் New Left Review எனும் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இன்று முதலாளித்துவம் எதிர்கொள்ளும் சீர்கேடுகளுக்கு அந்த அமைப்பிடம் மாற்று மருந்துகள் இல்லை எனும் கருத்துப்பட வாதாடுகிறார். இந்த நோக்கில் Stigliz மற்றும் Piketty போன்றோர் முன்வைக்கும் சீர்திருத்தங்கள் நீண்ட காலப் பயன்தரவல்லவை அல்ல என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்.

அப்படியானால் சமூகமாற்றத்திற்கான தீர்க்கமான அரசியல் ரீதியான அறிகுறிகள் இல்லாத நிலையில் முதலாளித்துவத்திற்கு என்ன நடக்கும் ? இந்தக் கேள்வி 1848 ல் மாக்ஸ்- ஏங்கல்ஸ் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் வரும் ஒரு வசனத்தை நினைவூட்டுகிறது. இதுவரையிலான மனித சமூகத்தின் வரலாறு வர்க்கப்போராட்டங்களின் வரலாறே எனக்கூறும் அவர்கள் இந்தப் போராட்டங்களின் முடிவு பற்றிக் கூறும் கருத்தின் ஒரு பகுதியையே நம்மில் பலர் நினைவு வைத்திருக்கிறார்கள். அதன் மறுபகுதி இங்கு பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். வர்க்கப்போராட்டங்களின் முடிவு ஒன்றில் சமூகத்தின் புரட்சிகர மாற்றமாயிருக்கும் அல்லது முரண்படும் வர்க்கங்களின் பொதுவான அழிவாயிருக்கும் என மாக்ஸ்- ஏங்கல்ஸ் கூறுகிறார்கள். போராட்டங்கள் தனியே வர்க்கப்போராட்டங்கள் இல்லை எனும் கருத்தைக் கொண்டவன் நான். ஆயினும் இங்கு மாக்சும் ஏங்கல்சும் குறிப்பிடும் பொதுவான அழிவு (Common ruin) எனும் கருத்து இன்றைய உலக நிலைக்குப் பொருத்தமாக இருக்கலாம்- இந்தக் கூட்டான- சகல மக்களின்- அழிவு என்பதை அவர்களின் நலன்களின் தோல்வி எனும் அர்த்தத்தில் பார்ப்பது பயன்தரும். இதை தவிர்ப்பதற்கான வழி பற்றிய தேடல்களும் மாற்று அமைப்பு பற்றிய மீள்கற்பிதங்களும் பல மட்டங்களில் இடம் பெறுகின்றன. இவை புதிய பாதைகளைத் திறக்க உதவும் எனும் நம்பிக்கையை இழக்காதிருத்தல் வரலாற்றின் நிர்பந்தமெனலாம்.

 

இந்தியத் தேசியத்தை கேள்விக்குள்ளாக்கும் எஸ்.வி. இராஜதுரையின் இந்து இந்தி இந்தியா

இந்தியத் தேசியத்தை கேள்விக்குள்ளாக்கும் எஸ்.வி. இராஜதுரையின் இந்து இந்தி இந்தியா

நூல் விமர்சனம்[1]

S.V இராஜதுரையின் இந்து – இந்தி – இந்தியா

( மணிவாசகர் பதிப்பகம் சென்னை 1993 )

சமுத்திரன்

1995

I

S.V .இராஜதுரையின் இந்து – இந்தி – இந்தியா ( இஇஇ) பல காரணங்களால் முக்கியத்துவம் பெறும் நூலாகும். எனது அபிப்பிராயத்தில் இரண்டு காரணங்கள் அதி முக்கியம் பெறுகின்றன. ஒன்று, எனக்குத் தெரிந்த வரையில் சமகாலத்து இந்திய அரசியலைப் பலமாகப் பற்றியுள்ள இந்து அடிப்படைவாதம் (இந்துத்துவம்), அத்துடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் இந்திய தேசியவாதம், இவற்றின் ஆதிக்கத்தாலும் இவை நியாயப்பாடு வழங்கும் இந்திய அரசின் அதிகார மையப்படுத்தலாலும் பாதிக்கப்படும் அந்நாட்டில் வாழும் தேசிய இனங்களின், ஆதிவாசிகளின், தலித்துக்களின் உரிமைப்பிரச்சனைகள் போன்றவை பற்றி வரலாற்றுப்பார்வையில் விரிவாக ஆராய்ந்துள்ள முதல் தமிழ் நூல் இதுவே.

இரண்டு, S V R ன் இந்த நூல் தேசிய இனப்பிரச்சனை பற்றி தேசியவாதம் எனும் கருத்தமைவு (Ideology) பற்றி சமீபகாலங்களில் மார்க்சிய வட்டாரங்களில் இடம்பெற்றுவரும் புதியவிவாதங்கள் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ள ஒரளவு உதவலாம். தேசியவாதம் பற்றிய புரிந்துணர்வின் போதாமை, அதை தெளிவாக வரலாற்று ரீதியில் கோட்பாட்டு ரீதியில் எதிர்கொள்ளாமை மார்க்சியத்தின் பெரும் குறைபாடு எனக் கூறலாம். இந்தக் குறைபாடு மார்க்சியத்தின் மாபெரும் வரலாற்று ரீதியான தோல்வி என டொம் நாய்ன் (Tom Nairn) பதிநான்கு வருடங்களுக்கு முன் தனது நூலில் குறிப்பிட்டார். ஆயினும், இதற்கு முன்பும் இதைத் தொடர்ந்தும் தேசிய இனப்பிரச்சனை, தேசியவாதம்., சுயநிர்ணயம் பற்றிய விவாதங்கள் மார்க்சிய சமூக விஞ்ஞான வட்டாரங்களிலும் அரசியல் இயக்கங்கள் மத்தியிலும் இடம் பெற்று வந்துள்ளன. இவற்றின் விளைவாக மார்கஸ்- எங்கல்ஸ் கொண்டிருந்த கருத்துக்கள் முதல் லெனின், கெளட்ஸ்கி (Kautsky) லக்சம்பேர்க் (Luxemburg) போன்றோரின் கருத்துக்கள் வரை ஆழமான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இது மட்டுமன்றி இன்றைய விவாதங்கள் இதுவரை இடதுசாரிகள் மத்தியில் பிரபல்யம் பெற்றிராத ஆஸ்திரிய (Austrian) மார்க்சிஸ்டான ஒட்டோ பெளர் ( Otto Baur) போன்றோரின் அணுகுமுறை பற்றியும், பிரபல்யம் வாய்ந்த இத்தாலிய மார்க்சிய சிந்தனையாளரான கிராம்ஷி (Gramsci)யின் மேலாட்சி (Hegemony) கோட்பாட்டின் பயன்பாடுகள் பற்றியும் அறியத் தருகின்றன.

நடைமுறையில் சோவியத்யூனியன், கிழக்கு ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய இனப்பிரச்சனைகளைக் கையாண்ட விதங்கள் பற்றியும் இன்று நமக்கு முன்னர் மறைக்கப்பட்ட பல உண்மைகள் தெரிய வந்துள்ளன. மொத்தத்தில் சர்வதேசரீதியில் கொள்கை (Theory) நடைமுறை ஆகிய இருமட்டங்களின் குறைபாடுகளிலும் தோல்விகளிலும் இருந்து மார்க்சியவாதிகள் படித்துப்பயன் பெற பல பாடங்கள் உள்ளன. இந்தப் பின்னணியில் நமது சமூகங்களை இன்று ஆட்டிப்படைக்கும் தேசிய இனப்பிரச்சனைகளைப் பற்றிய நமது அனுபவங்களையும் அவசியத்தையும் நாம் உணர்கிறோம்.

இஇஇ இந்தியாவின் சிக்கல் மிகு தேசிய இனப்பிரச்சனை பற்றிய ஒரு ஆய்வுக் கூடாக நம்மை உபகண்டத்தின் தேசியவாதங்கள் பற்றிய ஒரு விவாதத்தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. தேசம் (தேசியஇனம்) தேசியவாதம் என்பவற்றை கோட்பாட்டு ரீதியில் கிரகிக்க SVR பயன்படுத்தும் அணுகுமுறைக்கு பெனடிக்ட் அண்டர்சன்( Benedict Anderson) என்பவர் ‘Imagined Communities’ எனும் நூலில் முன்வைத்த கருத்துக்கள் பயன்பட்டுள்ளன. நவீன தேசிய உருவாக்கத்தையும் பரவலாக்கலையும் பற்றிய அண்டர்சன் முன்வைத்திருந்த விளக்கம் தேசியஉணர்வு, தேச-அரசு (Nation State) ஆகியன பற்றி குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள உதவுகிறது. மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வரலாற்றுடன் இணைந்த தேசிய உருவாக்கத்திடமிருந்து வேறுபட்ட நிலைமைகளைக் கொண்ட காலனித்துவ நாடுகளின் தேசியவாதம் பற்றி ஆராயும் போது அங்குள்ள இரு மொழி அறிவாளிகளின் (Bilingual intellectuals) கருத்தமைவு ரீதியான பங்குபற்றி அண்டர்சன் விளக்குகிறார். மேற்கத்திய காலனித்துவ ஆட்சியாளர்களின் மொழியுடன் தமது தாய்மொழியிலும் பாண்டித்தியம் பெற்ற உயர்வர்க்க அறிவாளிகளே தேசியத்தின் கருத்துருவாக்கத்திற்கும் அதைத் தேசிய உணர்வாகப் பரவலாக்குவதற்கும் வேண்டிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகக்குழுவினர்தாம் மற்றய குழுவினரிடமிருந்து வேறுபட்டவர்களாய் தம்மை ஒரு விசேட கூட்டுணர்வின் அடிப்படையில் ஒரு இனமாக அடையாளப்படுத்தும் கற்பிதத்திற்கு (Imagining) ஊடாகவே தேசம் பிறக்கிறது. இந்தக் கற்பிதத்திற்கு அடிப்படையாக அமைவன அவர்களின் பிரதேசம், மொழி அம்மக்களுக்குரிய வரலாற்று ரீதியான நினைவுகள், அவர்களின் பாரம்பரிய இணைப்புப் பற்றிய கர்ண பரம்பரைக்கதைகள், பண்பாட்டு ஒருங்கிணைவும் அதன் அடையாளங்களும், ஒரு பொது எதிரிக்கு எதிராக வளரும் இனஉணர்வு போன்றவையாகும். வர்க்கங்களையும் வேறு சில வேறுபாடுகளையும் ஊடறுத்துச் செல்லும் இந்த தேசிய உணர்வு பரவவும் வளரவும் நவீன கல்வித் தொடர்புசாதனங்கள் உதவுகின்றன. இந்த ஊடகங்களின்றி நவீன தேசம் உருவாக முடியாது. தேசிய அறிவாளிகளும் அச்சு முதலாளித்துவமும் (print capitalism) தேசங்களின் உருவாக்கத்திற்கு இன்றியமையாதவை என்பதை அண்டர்சனின் நூல் தெளிவாக்குகிறது. தொலைக்காட்சி, சினிமா, மற்றய கலை இலக்கிய ஊடகங்கள், தேசியவிழாக்கள் போன்றவை ஒரு தேசமக்களைத் தாம் எல்லோரும் ஒரு தேசத்தின் அங்கத்தினர் என கற்பனை செய்யவும் அதே கற்பிதத்தைத் தொடர்ச்சியாக மீள்உற்பத்தி செய்யவும் உதவுகின்றன.

சகல காலனித்துவ நாடுகளின் தேசியவாதங்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிப் போக்குகளுக்கும் உள்ள ஒரு பொதுத்தன்மை என்னவெனில் அவை எல்லாமே காலனித்துவம் எனும் வெளிவாரி அதாவது விதேசிய பொது எதிரியை எதிர்க்கும் நோக்குடன் எழுந்தவை. இந்தப் பொது எதிரியின் இருப்பு அதனால் நசுக்கப்படும் மக்களிடையே இருக்கும் இனரீதியான வேறுபாடுகளையும் தாண்டிய ஒரு ஒருங்கிணைப்பிற்கு உதவலாம். அதுமட்டுமின்றி காலனித்துவ எதிர்ப்பு பொதுவாக காலனித்துவம் வரையறுத்த புவியியல் சட்டகத்தின் அடிப்படையிலேயே எழுகிறது. ஆனால் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் தலையாய சக்திகளின் வர்க்க, இனத்துவ ( இந்தியாவைப் பொறுத்தவரை சாதித்துவ) முரண்பாடுகளைப் பொறுத்தும் காலனித்துவம் தனது நலன்களைப் பாதுகாக்க கையாளும் வழிமுறைகளைப் பொறுத்தும் இந்த ஆரம்ப அடிப்படை மாற்றமடையலாம்.

வரலாற்று ரீதியில் நவீன இந்தியாவின் ஆரம்பம் ஒரு பிரிட்டிஷ் காலனித்துவத்திட்டமே. காலனித்துவமின்றி நவீன இந்தியாவைக் கற்பனை பண்ண முடியுமென நான் கருதவில்லை. ‘இந்தியா’ எனும் மையப்படுத்தப்பட்ட காலனித்துவ அரசே ‘சுதந்திர இந்தியா’ எனும் கோஷத்திற்கு உருவத்தைக் கொடுத்தது. அதுவே இந்தியா எனும் தேசத்தைக் கற்பனை செய்து இந்தியர்கள் எனும் பிரஜைகளை உருவாக்க உதவியது. ஆனால் ‘சுதந்திர இந்தியா’ எனும் போது காலனித்துவம் வெளியேறிய இந்தியா என்பது பொருள். இந்தச் சுதந்திர இந்தியாவின் தனித்துவம் என்ன ? இந்தக் கேள்வியை இந்திய தேசியவாதிகளும் அவர்களுக்குப் பின்னிருந்த வர்க்க, இனத்துவ சக்திகளும் எப்படிக் கையாண்டன, இதற்கு எத்தகைய கருத்தமைவுத் திட்டத்தைப் பயன்படுத்தின ? இதுவே SVR ன் இந்து- இந்தி- இந்தியாவின் பிரதான ஆய்வு நோக்காகும்.

II

SVR ஆராய்ந்து நிரூபிக்க முற்படும் கருதுகோளைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம் என நம்புகிறேன்: ‘இந்திய தேசம்’ ( The Indian Nation) ஆங்கிலமொழி மூலம் கல்வி கற்ற பார்ப்பனிய மற்றய உயர்சாதிகளைச் சேர்ந்த அறிவாளிகளால் கற்பிதம் செய்யப்பட்டு பார்ப்பனிய- பனியா கூட்டின் ஆதிக்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் கருத்தமைவு- கலாச்சார ரீதியான மேலாட்சித் திட்டம் பிரிட்டிஷ் காலனித்துவம் தந்த அரசியல்- புவியியல் சட்டகத்திற்குள் அமுலாக்கப்பட்டது. இந்திய தேசத்தைக் கற்பிதம் செய்வதில் பிராமணியம் முக்கிய பங்கினை வகித்தது. உப கண்டம் பூராவும் பல கூறுகளாக – இன, பிரதேச ரீதியில் – பிளவுண்டிருந்த இந்து மதம் சார்ந்த சகல சமூகங்கள் மீதும் மரபு ரீதியான மேலாட்சியைக் கொண்டிருந்த ஒரே ஒரு சாதி பார்ப்பனர்தான். இந்த மரபு ரீதியான செல்வாக்கு பார்ப்பனிய கருத்தமைவிற்கு இந்திய தேசியவாதத்தின் உருவாக்கத்தில் ஒரு விசேட அந்தஸ்தைக் கொடுத்தது. பார்ப்பனியம் அகில இந்திய ரீதியிலான ஒரு ஒருங்கிணைவிற்கு உதவியது. ஆனால் இது பரந்துபட்டிருந்த இந்து சமூகங்களை மட்டுமே உள்ளடக்கியது. இந்தத் தேசியவாதக் கருத்தமைவின் மைய சக்தியான ‘இந்து- இந்தி’ இணைவும் அதற்கு உந்து சக்தியாக விளங்கிய ( அதே நேரம் தனித்துவமான இயக்கப்பாட்டினையும் கொண்டிருந்த) இந்து அடிப்படைவாதமும் இந்து – முஸ்லீம் பிரிவினைக்கு வித்திட்டது. இந்தக் கருதுகோளை ஆராய்ந்து விளக்க முற்படும் போது இராஜதுரை இன்றைய ஆளும் கட்சியான காங்கிரசின் ‘மதச்சார்பின்மை’ போன்ற சுயவர்ணனைகளுக்குச் சவால் விடும் அதேவேளை காந்தி, நேரு, திலகர் போன்ற இந்திய தேசியத் தலைவர்களின் வர்க்க- இனத்துவ சார்புகளையும் வெளிப்படுத்துகிறார். இந்திய தலித்துக்களின் ஆபிரகாம் லிங்கன் எனப்படும் அம்பேத்கர் பற்றிய ஒரு மதிப்பீட்டினை முன்வைப்பதன் மூலம் SVR இதுவரை காந்தியத்திற்கு வழங்கப்பட்டு வந்த புனித அந்தஸ்தையும் ஆழ்ந்த விமர்சனத்திற்குள்ளாக்குகிறார். நூலாசிரியரின் பிரச்சனை இந்தியாவிற்கு காலனித்துவம் வகுத்த புவியியல் சட்டகத்தை ஏற்பதா நிராகரிப்பதா என்பதல்ல. பிரதான பிரச்சனை அந்தச் சட்டகத்தின் வழிவந்த இந்திய அமைப்பின அரசியல், பொருளாதார, கருத்தமைவு உள்ளடக்கங்கள் என்ன என்பதே. கடந்த நாற்பத்தாறு ஆண்டுகளாக இந்திய அமைப்பை ஆண்டுவரும் சக்திகள் எத்தகைய ஒரு இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பது அடிப்படைக் கேள்வியாகும். எனது அபிப்பிராயத்தில் இஇஇ ன் அணுகுமுறை இந்திய உபகண்டத்து யதார்த்தங்களை மனங்கொண்டு பார்க்கும் போது ஆரோக்கியமானதாகும். 1992ல் பாபர் மசூதியை இந்துத்துவவாதிகள் அழித்தனர். இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை இந்திய பொலிசார் பார்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்ல அதற்கு உதவியாகவும் இருந்தனர். இந்த வன்செயலின் விளைவாக பாகிஸ்தானிலும் பங்களாதேசத்திலும் இந்துக் குடும்பங்களும் இந்துக் கோயில்களும் தாக்கப்பட்டன. இவையெல்லாம் நமக்குப் போதிக்கும் அடிப்படைப் பாடமென்னவெனில் இந்திய – பாகிஸ்தான் பிரிவினை, பாகிஸ்தான் – பங்களாதேசப்பிரிவினை போன்றவை உபகண்டத்தின் இந்து – முஸ்லீம் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவில்லை. இந்திய – பாகிஸ்தான் பிரிவினை இந்தியாவின் இந்துத்துவ தேசியவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை அதற்கு மாறாக ஆட்சிசெய்யும் இந்திய தேசியவாதத்தில் இந்துத்துவ தன்மைகள் மேலும் வலுப்பெறவே உதவியுள்ளது எனலாம். இஇஇ வை வாசித்துக் கொண்டிருந்த போது இந்தச் சிந்தனைகள் என் மனதில் தோன்றின.

உப கண்டத்தின் ஆளும் தேசியவாதங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரிவினைவாதங்களாக அல்லது புதிய பிரிவினை வாதங்களுக்கு வித்திடுபவையாக மாறிப்போகும் பரிணாமப் போக்கினை கண்டு வந்துள்ளோம். ஆனால் அதே உப கண்டத்தில் ஒரு மொழி-ஒரு மதம் எனும் அடிப்படையில் ஒரு தேச – அரசு உருவாக்கம் பெறக்கூடிய பரிபூரணமான நிலைமைகள் இல்லை என்பதையும் காண்கிறோம். பாகிஸ்தானில் இந்துக்களும் பலமொழிகளைப் பேசுவோரும் உள்ளார்கள். அதேபோல் மொழி- கலாச்சார அடிப்படையில் பாகிஸ்தானிடமிருந்து பிரிந்த பங்களா தேசத்திலும் இந்துக்கள் உள்ளனர். இந்தியாவிலோ பலநூற்றுக்கணக்கான மொழிகளைப் பேசுவோரும் பல மதத்தவர்களும் வாழ்கின்றனர்.

ஆனால் நவீன இந்திய தேசியவாதத்தின் இந்திய தேசிய ஒருங்கிணைப்பிற்குப் பயன்பட்ட கருத்தமைவின் இந்துத்தன்மையும் அத்துடன் இணைந்த சாதியம் அது தழுவிக் கொண்ட இந்தி மொழி வாதமும் அந்த நாட்டின் பல இனங்களை, சமூகப் பிரிவுகளை (உதாரணமாக தலித்துக்கள்) பாதகமான வழிகளில் பாதித்தன.

SVR ன் பார்வையில் ‘இந்து- இந்தி’ எனும் இணைப்பு வெறும் மதம்- மொழி இணைப்பு மட்டுமல்ல. இவை இரண்டும் ஒன்றை மற்றையது பலப்படுத்தும் வகையில் இரண்டும் இந்தியாவின் தனித்துவ ஆளுமையின் பரிணாமத்தை நிர்ணயிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. இந்துஸ்தானியே இந்தியாவின் அரசமொழியாக இருக்க வேண்டும் எனக் காந்தி விரும்பினார். இந்துஸ்தானி இந்தியும் உருதுவும் கலந்த மொழியாக இருப்பதால் வட இந்தியாவில் வாழும் இந்து- முஸ்லீம் மக்களின் ஒருமைப்பாட்டின் சின்னமாக, ஊடகமாக விளங்க முடியும் என காந்தி கருதினார். ஆனால் இந்திய காங்கிரசிற்குள்ளிருந்த இந்து மதத் தேசியவாதிகள் உருது போன்ற வேற்றுமொழிக் கலப்பற்ற இந்தியே ஆட்சிமொழியாக வேண்டுமென விரும்பினர். அதுவும் ஆட்சிமொழியாகும் இந்தி சமஸ்கிருத மயப்படுத்தப்பட வேண்டுமெனவும் விரும்பினர். இவர்களின் கை ஓங்கியது. காந்தியின் கோரிக்கை படிப்படியாக ஒதுக்கப்பட்டது. இந்தியின் சமஸ்கிருத மயமாக்கல் என்பது அதன் பிராமணிய மயமாக்கல்தான். வேதங்களின் மொழியான சமஸ்கிருதமே இந்து மதத்தின் தேவமொழி. அந்த மொழியிலேயே பார்ப்பனர் ‘மக்கள் சார்பில்’ கடவுளிடம் பேசினர். சமஸ்கிருதம் வழக்கிழந்த மொழியாகிவிட்ட போதும் ‘இந்து- இந்தி’ திட்டத்திற்கூடாக அது முக்கியத்துவம் பெற்றது. இந்த இணைப்பிற்கு மேலும் புனிதத்துவத்தைக் கொடுக்க சமஸ்கிருத மயமாக்கல் கொள்கை உதவியது போலும்.

‘இந்து- இந்தி’ திட்டம் ஒரு புறம் பல இன மக்களை ஒரு அனைத்து இந்திய ஒருங்கிணைப்புக்குள் கொண்டு வந்தது. மறுபுறம் அது மத, சாதி, மொழி அடிப்படையில் பல சமூகங்களை வெளிவாரிப்படுத்தியது. ஆனால் அந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு பரந்துபட்ட அகில இந்திய ஒருங்கிணைப்பே. இந்தியாவின் பல்லினத்தன்மைகள் இந்த நோக்கத்திற்கு பல எதிர்ப்புகளை உருவாக்கியது. முஸ்லீம்கள் சீக்கியர்கள் மத அடிப்படையில் தமது தனித்துவத்திற்காகப் போராட முற்பட்டனர். அசாம், நாகலாந்து போன்ற பிரதேசத்தவர்கள் தமது பாரம்பரியங்களின் அடிப்படையில் இந்து-இந்தி- இந்தியாவை எதிர்க்க முற்பட்டனர். தமிழர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தனர். அதேநேரம் வட இந்தியாவிலும் தமிழ்நாடு தவிர்ந்த தென்னிந்திய மாநிலங்களிலும் இந்தி மயமாக்கலுக்கு எதிர்ப்பு எழவில்லை. வடக்கில் இந்து – இந்தி இணைவு இந்துக்களின் ஆதரவைப் பரவலாகப் பெற்றது. SVR எழுதுகிறார்:

‘இந்தியா பல்தேசிய இனநாடு, இங்கு ஆதிக்க தேசியஇனம் ஒடுக்கும் தேசியஇனம் என்பது இல்லைத்தான். அதேபோல ஆளும் வர்க்கங்களும் ஆதிக்க சக்திகளும் குறிப்பிட்டதொரு தேசிய இனத்தை மட்டும் சார்ந்தவை அல்ல என்பதும் உண்மைதான். வட இந்திய-பார்ப்பன-இந்தி- இந்து அடையாளத்தை ஆளும் வர்க்கங்களும் ஆதிக்க சக்திகளும் உருவாக்கிக் கொண்டுள்ளன. இந்தி பேசும் பகுதிகளிலுள்ள பரந்துபட்ட மக்களிடையே கூட வட்டார மொழித்தேசிய உணர்வு வளர்வதற்குப் பதிலாக அனைத்திந்திய இந்து- இந்திய தேசிய உணர்வே வளர்ந்திருப்பதைக் காணலாம்.’ ( பக்கம் 232 )

இந்து-இந்தி-இந்தியா எனும் கருத்தமைவு மேலாட்சித் திட்டம் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளதை இது காட்டுகிறது. சுதந்திர இந்திய ஒன்றியத்தின் மையப்படுத்தலுக்கு இந்தக் கருத்தமைவு மேலாட்சி இன்றியமையாத பங்கினை வகித்து வருகிறது. அரசின் அதிகார மையப்படுத்தலும் நாட்டின் ஒருங்கிணைப்பும் இந்திய பெருமுதலாளி வர்க்கத்தின் நலன்களுக்குச் சாதகமாய் இருக்கின்றன. இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பெருமுதலாளிகளும் இந்தி ஆட்சிமொழியாவதைத் தம்வர்க்க நலன் கருதி ஆதரித்தனர். இந்திய அமைப்பின் மையப்படுத்தலுக்கும் உள்நாட்டு சந்தையின் ஒருங்கிணைப்பிற்கும் அது உதவும் என்பதைக் கருத்தில் கொண்டே காந்தியின் சாதியான பனியா சாதியைச் சார்ந்த குஜராத்திய பெருமுதலாளிகள் இந்தி ஆட்சி மொழியாவதை ஆதரித்தனர் ( இது ஒரு உதாரணம்.) ஆகவே ‘இந்து சமய வண்ணம் பூசப்பட்ட இந்திய தேசியமும் இந்தி மொழியும்’ இந்திய பெருமுதலாளி வர்க்கத்தின் அனைத்திந்திய சந்தை ஒருங்கிணைப்பின் கருவியானதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அதேநேரம் இந்த இந்து முதலாளிகள் பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்க முடியாதது என வாதிட்டதிலும் ஆச்சர்யமில்லை. அந்தப்பிரிவினை அவர்களின் இந்து- இந்திய ஒருங்கிணைப்புத்திட்டத்தின் விளைவாக இருந்த போதும் அது அத்திட்டத்தின் பலப்பாட்டிற்கு உதவியது என அவர்கள் கணித்தனர். இத்தகைய கருத்துக்களைக் கொண்ட இந்து பெருமுதலாளிகளின் பிரதிநிதியே பிர்லா.

III

வடஇந்திய பெருமுதலாளிகளுக்கும் காங்கிரசுக்குமிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார் காந்தி. அதேநேரம் இந்திய தேசியப்போராட்டத்தை வெகுஜனப்படுத்துவதிலும் அவர் வெற்றி கண்டார். சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய பெருமுதலாளிகள், நிலவுடைமையாளர் ஆகிய இரு வர்க்கங்களின் நலன்களைக் காக்கவும் பலப்படுத்தவும் உதவிய காந்திய தேசியவாதம் அதே நேரம் நடுத்தர கீழ்மட்ட வர்க்கங்களையும் சாதிகளையும் அணிதிரட்ட உதவியது. சுதந்திரத்திற்கு முன் முரண்பட்ட நலன்களைக் கொண்ட வர்க்கங்களை சாதிகளை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைக்கும் கருத்தமைவின் பிரதான பிரதிநிதியாக கவர்ச்சியும் மதிப்பும் கொண்ட அடையாளமாக விளங்கிய காந்தியை சுதந்திரம் உறுதியாக்கப்பட்ட நிலை வந்த போது இந்திய பெருமுதலாளிகள் புறக்கணிக்கத் தொடங்கி விட்டனர். சுதந்திர இந்தியாவில் காந்தியின் செல்வாக்கு தொடர்வது தமது வர்க்க நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை அவர்கள் காணத்தவறவில்லை. உதாரணமாக காந்தியின் அரசியல் கருத்துக்கள் அரச அதிகாரத்தின் மையப்படுத்தலுக்குச் சாதகமானவையல்ல. அவரது பொருளாதாரக் கருத்துக்கள் முதலாளித்துவ நவீனமயமாக்கலுடன் முரண்பட்டன. அவரது இந்து-முஸ்லீம் ஒற்றுமை நிலைப்பாடு, பிரிவினைக்கு எதிரான போக்கு இந்துப் பெருமுதலாளிகளின் நலன்களுக்கும் இந்து அடிப்படைவாதிகளுக்கும் ஏற்றதாக இருக்கவில்லை. காந்தியின் கைத்தறி இராட்டினம் இந்திய பெருந்தொழில் உற்பத்தி முதலாளிகளின் நலன்களின் அவர்களின் எதிர்காலக் கனவுகளின் நிராகரணத்தின் அடையாளம் போன்றிருந்தது. ஆகவே 1946 க்குப் பின் காந்தியை ஓரப்படுத்துவதில் பெருமுதலாளிகள் ஈடுபட்டது ஆச்சர்யம் தரும் ஒன்றல்ல.

இந்து- இந்தி- இந்தியா எனும் வரலாற்றுத்திட்டத்தில் காந்தியின் ஆத்மீகவாதம் என்ன பங்கை வகித்தது என்பது ஆழ ஆராயப்பட வேண்டிய ஒன்றெனக் கருதுகிறேன். இடதுசாரிகள் விரும்பத்தகாத தாயினும் வியக்கத்தகு முரண்பாடுகள் மிகுந்த பரிணாமப் போக்குகளைக் கொண்ட பார்ப்பனியமெனும் கருத்தமைவின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஆத்மீகப் பேச்சாளராக காந்தியைக் கருதலாமா? பிராமணர் மட்டுமன்றி மற்றய உயர்சாதியினரதும் இசைவுடன் இயங்கி வந்த பார்ப்பனியத்தை (வெளியே இருந்து வந்த ) காலனித்துவ ஆட்சிக்கெதிரான வெகுஜனப்போராட்டத்திற்கு உதவும் வகையில் வளப்படுத்தியதில், நெறிப்படுத்தியதில் காந்தியின் பங்கு என்ன? இந்தக் கேள்விகள் மேலும் ஆய்வுக்குரியவை. காந்தியின் ஆத்மீக வாதத்துடன் இணைந்த அரசியல் பொருளாதாரக் கருத்துக்களை காங்கிரஸ் தலைமை நடைமுறையில் நிராகரித்தது. அதேநேரம் காந்தி சுதந்திர இந்தியாவின் இந்திய தேசத்தின் தந்தையாக புனிதமயப்படுத்தப்பட்டுள்ளார். இந்தியப் பெருமுதலாளிகளாலும் காங்கிரஸ் தலைமையினாலும் பயன்படுத்தப்பட்ட பின் ஒதுக்கப்பட்ட காந்தி இந்துமத அடிப்படைவாதி ஒருவனால் கொலை செய்யப்பட்ட பின் ஒரு புனித கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்திய மக்களை இந்தியர்களாக ஒன்றிணைக்க இன்றும் காந்தி பயன்படுகிறார். இன்று அரசோச்சும் இந்து- இந்தி- இந்தியாவில் காந்தீயம் தென்படவில்லை. ஆனால் அதே இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பிற்கு காந்தி எனும் இந்து ஆத்மீகவாதியும் இந்திய தேசிய போராளியும் அவசியம். அப்படியாயின் இன்றைய ‘இந்து – இந்தி- இந்தியா’   கருத்தமைவில் காந்தியத்தின் பங்கு என்ன? அம்பேத்கார் ஒரு தடவை காந்தி பற்றிக் கூறியதை இங்கு மனங்கொள்ளல் தகும்

‘ஒரு மகாத்மாவாக அவர் அரசியலை ஆத்மீகப்படுத்த முயற்சிக்கலாம். இதில் அவர் வெற்றி கண்டுள்ளாரோ என்னவோ நிச்சயமாக அரசியல் அவரை வர்த்தக மயப்படுத்திவிட்டது (Commercialised). … சாதியையும் வண்ணத்தையும் எப்போதுமே மகாத்மா ஆதரிப்பதற்கான காரணம் என்னவெனில், அவற்றை எதிர்த்தால் அரசியலில் தனக்கிருக்கும் இடத்தை இழந்து விடலாம் என அவர் பயப்படுவதே.’ (Ambedkar: Writings and speeches Vol I, 1979)

காந்தியின் வைதீகப்போக்கையும் ஆத்மீகவாதக் காரணங்களையும் குதர்க்கத்தையும் பயன்படுத்தி அவர் சாதி அமைப்பை வண்ணத்துக்கூடாக மறைமுகமாகவும் நேரடியாகவும் நியாயப்படுத்தியதையும் சமகாலத்திலேயே ஆழ விமர்சித்தவர் அம்பேத்கார். இஇஇ ல் காந்தி பற்றிய விமர்சனத்திற்கு அம்பேத்காரின் சிந்தனைகளைப் பயன்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.இந்து- இந்தி- இந்தியா வின் விமர்சனத்துக் கூடாக SVR முன்வைக்கும் மாற்றுவழி விவாதங்களுக்கு உதவலாம்

‘எனவே அதிகாரப் பரவலும், சோசலிசமும் மக்களின் பல்வேறு தேசிய, மொழி சமய பண்பாட்டு பிரதேச அடையாளங்களுக்கான பாதுகாப்பும் தன்னுரிமையும் சேர்ந்து நிலவுகிற ஒரு புதுவகையான இந்திய சமூகத்தையும் கற்பிதம் செய்து பார்ப்பது இன்றியமையாததாகிறது. இத்தகையதொரு இந்திய சமூதாயமே ஏகாதிபத்தியத்தையும் உலக பிற்போக்கு சக்திகளையும் எதிர்த்து நிற்கவல்லது;   இன்றைய ‘ஒன்றுபட்ட’ ‘ ஒருமைப்பாடு‘ உடைய இந்து – இந்தி- இந்தியா அத்தகையதன்று. இது ஏகாதிபத்தியத்தையும் பார்ப்பன- பனியா நலன்களையும் பாதுகாக்கவென எழுப்பப்பட்ட ஒரு கோட்டை.’   ( பக்கம் 239)

ஒரு மாற்று இந்தியாவைக் கற்பிதம் செய்தல் சுலபமானதல்ல. இந்தப் புதிய இந்தியாவை ஒன்றிணைக்கவல்ல அம்சங்கள் எவை ? ‘இந்து- இந்தி- இந்தியா’ வை விமர்சித்து அதன் உள்ளியக்கப்பாடுகளை விளக்குவதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுள்ள நூலூசிரியர் ‘மாற்று இந்தியா’   வின் சாத்தியப்பாடுகள் பற்றிக் குறிப்பிடவில்லை. ஒருங்கிணைப்பு சக்திகளும் பிரிவினை சக்திகளும் பலமட்டங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்து- இந்தி- இந்தியாவில் ஒரு புதிய ஒன்றிணைந்த இந்தியா பற்றிய கற்பிதத்திற்கு உதவக் கூடிய அம்சங்கள் எவை ? SVR ன் கட்டுரை இந்தக் கேள்வியை எழுப்புகிறது. ஒரு பல்தேசிய இன மக்கள்ஜனநாயக இந்தியாவைக் கற்பிதம் செய்தல் அத்தகைய இந்தியாவில் சோஷலிசத்திற்கான பரிணாமபோக்குகளின் சாத்தியப்பாடுகள் எத்தகையவை போன்ற விவாதங்கள் தோன்றி வளருதல் இந்திய மக்களுக்கு மாத்திரமன்றி உபகண்டத்தின் மற்றய மக்களுக்கும் பயன்தரமுடியும். இன்றைய இந்தியா மேலும் பிளவு படலாம் அல்லது அது தவிர்க்கப்படலாம். இன்றைய உலகின் பெருந்தொகையான நாடுகள் பல்லின நாடுகளே. ஒற்றை இனத்தேச அரசு என்பது ஒரு சர்வலோக விதி அல்ல என்ற உண்மையை மறுக்க முடியாது. தென் ஆசியாவில் பல் தேசிய இன அமைப்புகளின் சாத்தியப்பாடுகள் பற்றிய விவாதங்களே முதன்மை பெற வேண்டும்.

சரிநிகர்

யூன் 29 – யூலை 12 – 1995

யூலை 13- யூலை 26 – 1995

[1] சரிநிகர் யூன் 29 – யூலை 12 – 1995 யூலை 13- யூலை 26 – 1995